சாத்வி "நான் அங்க வர மாட்டன்" என்றதும் வாமன் முகத்தில் முதல் முறையாக ஏமாற்றம் தெரிந்தது.
"வர மாட்டிங்களா.. ஏன்?"
"நான் அங்க வந்து என்ன செய்றது?"
புன்னகைத்த வாமன் பழக் கிண்ணத்தை மேசையில் வைத்து இரண்டு கையையும் விரித்து தோளை குலுக்கினான்.
என்ன மாதிரியான பாடி லாங்குவேஜ் இது!!? என்ன சொல்ல வருகிறான்?
"வெடிங் முடிஞ்சா ஹஸ்பன்ட் அன்ட் வைஃப் சேர்ந்து தானே இருப்பாங்க. என்னோட வந்து என்ன செய்ய எண்டு கேக்குறிங்க. என்னிட்ட இதுக்கு ஆன்சர் இல்ல ஹாசினி.."
"உங்களுக்கு குக்கிங் தெரிஞ்சிருக்கும் எண்டு தான் நினச்சன்.. ஆனா, இவ்வளோ நல்லா சமைப்பிங்க எண்டு எதிர்பார்க்கல்ல. பதுளைக்கு நீங்க வர மாட்டன் எண்டா நான் தனிய தான் போகணும். மெஸ் தான் என்ர தலை எழுத்து எண்டா என்ன செய்றது?" தோளை குலுக்கி விட்டு கிண்ணத்தை எடுத்து சாலட்டை சாப்பிட்டான். நறுக்கிய பழத் துண்டுகளில் ஒவ்வொன்றாக கரண்டியில் எடுத்து வாயில் போட்டான்.
அவன் இத்துணை இலகுவாக விட்டுத் தந்தது உருத்தியது சாத்விக்கு.
அவன் இதற்கு முன் விட்டு தந்த தன் உரிமைகளை அவள் கணக்கில் எடுக்கவில்லை என்பதே நிஜம்.
"அப்ப சமைச்சு தரத் தான் என்ன கூப்பிடுறிங்களா?" யோசித்தவள் வெடுக்கென கேட்டு வைத்தாள்.
புரை ஏறியது வாமனுக்கு..
"என்ன பாத்து இப்டி கேட்டுட்டிங்களே.. எங்கட வீட்ட அம்மாவ விட அப்பா தான் நல்லா சமைப்பார் தெரியுமா! அத பாத்து வளர்ந்தவன் நான். என்ர அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் படிக்கிறம் படிக்கிறம் எண்டு கல்யாணம் கட்டும் வரை ஒரு சின்ன வீட்டு வேல செய்ததில்ல. அப்பா மட்டும் தான் அம்மாக்கு சப்போர்ட் குடுப்பார்"
"சமைக்கிறது ஜென்டர் பேஸ்ட் வேல எண்டு நான் ஒரு நாளும் நினைக்க இல்ல ஹாசினி. எனக்கு அது வராது. அதான் உண்ம. எனக்கு குக்கிங் கை வந்த கலை எண்டா, கண்டிப்பா உங்கள எதிர்ப்பாக்க மாட்டன்.."
"நீங்க ஏன் இப்டி கதைக்கிறிங்க எண்டு எனக்கு விளங்குது.. இங்க அம்மம்மா சித்தி அக்ஷி நம்சி எல்லாரோடவும் இருந்து பழகிட்டிங்க. இப்ப சடனா அவங்கள விட்டுட்டு என்னோட பதுள வர யோசிக்கிறிங்க. ஐ கேன் அன்டஸ்டான்ட்.." என அருகில் வந்தவன்,
"நான் உங்கள எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ண மாட்டன்" என புன்னகையுடனே பாதி ஃப்ரூட் சாலட் உடன் கிண்ணத்தை அவளிடம் கொடுத்தான்.
கிண்ணத்துடன் சமையலறை வந்த சாத்விக்கு வேலை ஓடவில்லை.
இன்னும் இரண்டு நாட்களில் மாமியார் வீட்டுக்கு கால் மாறி செல்ல வேண்டும் புருஷனுடன். அதன் பிறகு வாமன் பதுளை செல்வான் போல..
அப்போது அவளும் அவனுடன் செல்ல வேண்டுமா.. அல்லது அவனை தனியாக விடலாமா??
"சாத்வி நான் கொஞ்ச நேரம் படுத்து எழும்பிறன்.. ஆரும் வந்தா என்ன எழுப்பு.." என சாத்வியிடம் சொல்லி விட்டு இரண்டு பிள்ளைகளையும் அழைத்து சென்றாள் புனிதா. செல்லம்மாவும் குட்டித் தூக்கம் போட தனது அறைக்கு சென்று விட்டார்.
நேற்றைய தினம் திருமணத்துக்கு நேரில் வர முடியாத சொந்தகாரர்கள் எவரேனும் இன்று சாயங்காலம் வரலாம் என்று தான் புனிதா இப்படி சொன்னாள்.
சாத்வி சமையல் கட்டில் இருந்த மிச்சம் சொச்சம் வேலைகளை முடித்து விட்டு அறையில் எட்டிப் பார்த்தாள். கூரை ஃபேனை சுழல விட்டு, காதில் ஹெட் செட் அடித்து கட்டிலில் படுத்திருந்தான் வாமன்.
விடியச் சாமம் நான்கு மணிக்கே எழுந்து விட்டதாக சித்தி சொன்னார்.. முந்தைய தினமும் நேரத்திற்கே எழுந்திருப்பார்.. தூங்கட்டும் என சத்தம் இல்லாமல் கதவை சாத்தி விட்டு வந்தவள் அலைபேசியுடன் வராண்டாவில் அமர்ந்தாள்.
நான்கு மணி போல எழுந்து வந்தான் வாமன்.
"குட் ஈவினிங் ஹாசினி.." என அவள் அருகில் இயல்பாக அமர்ந்தான். தூங்கி எழுந்தவனிடமும் வந்த வாசனை நாசி துழைக்க,
"நான் தூங்கக்குள்ள ரூமுக்கு வந்திங்களா?" என சந்தேகம் கேட்டான்.
"இல்ல.."
"நல்லா யோசிச்சு சொல்லுங்க.. வரல்லயா?"
"இல்ல.. நான் அப்ப இருந்து இதுல தான் இருக்கிறன்"
"நினச்சன். சொரி ஹாசினி! நான் படுத்து இருந்ததால தானே நீங்க வரல.. உங்கட தூக்கம் கெட்டுப் பொயிட்டுது என?"
"இல்ல. நான் பின்னேரத்துல நித்திர கொள்ற இல்ல"
"ஓ!"
அவன் முக பாவனை அவள் சொன்னதை நம்பவில்லையோ என யோசிக்க வைத்தது.
"என்ன யோசிக்கிறிங்க? ஏதாவது கேக்கணுமா"
அந்த காந்த கண்களும் அவன் அண்மையும் ஏதோ செய்ய,
"ஒண்டும் இல்ல" என எழுந்தவள் மாலைத் தேநீர் வைக்கப் போய் விட்டாள்.
பலகாரங்களுடன் பால் தேநீர் ஊற்றி வந்து தட்டை வைக்க, டீயை மாத்திரம் எடுத்தவன், "எங்கையாவது வெளில போய் வருவமா ஹாசினி?" எனக் கேட்க, சாத்வி வெறுமனே அவனை ஏறிட்டாள்.
"என்ன.. ஓமா இல்லயா?"
"எங்க போறது??"
"இது உங்கட ஊர். இங்க என்ன ஸ்பெஷல் எங்க போகலாம்.. என்ன பார்க்கலாம்.. எல்லாம் நீங்க தான் சொல்லணும்" என புருவம் உயர்த்த,
"அப்டி எங்கட ஊருல ஒரு ஸ்பெஷலும் இல்ல.. பார்க்கிறதுக்கும் ஒண்டும் இல்ல.."
"என்ன இப்டி சொல்லிட்டிங்க.. சரி ஓகே பரவால்ல.. சும்மா அப்படியே ஒரு ரவுண்டு பொயிட்டு வருவம்.. பைக் ரைட்.."
"எங்க அத்தா போ போறிங்க நாங்களும் வருவம். நாங்களும் வருவம்" அவள் பதில் தரும் முன்பே கத்திக் கொண்டு வந்தனர் அக்ஷியும் நம்சியும். அவர்கள் பின்னோடு புனிதாவும் வந்தாள்.
"ஏஞ்சல்ஸ்!! நீங்க வாறிங்களா என்னோட.. உங்களுக்கு ஊருல இருக்குற இடம் எல்லாம் தெரியுமா?"
"ஓம் தெரியுமே!"
"பீச் இருக்கு.. கோயில் இருக்கு.. க்ரவுண்ட் இருக்கு"
சரி தான்...
பொடிசுகளுடன் அவன் அளவளாவ சாத்வி அறைக்கு சென்று முகம் கழுவி சுடிதார் மாற்றி தலை வாரி முகத்திற்கு க்ரீம் பூசி நெற்றியில் குங்குமம் வைக்கும் போது கதவைத் தட்டினாள் புனிதா.
"உடுப்பு மாத்திட்டியா சாத்வி? ஆக்கள் வருவாங்க, மாத்த சொல்லுவம் எண்டு தான் கூப்பிட்டன் நான். நல்லம். நீயே வெளிக்கிட்டுட்டாய்" சாத்வி கழுத்தில் பிரண்டு கிடந்த தாலிக்கொடியை நேர்த்தி ஆக்கி விட்டு போனாள் புனிதா.
அவள் எதிர்பார்த்ததை போல சொந்தத்தில் சில பெண்கள் வந்தனர். சாத்வியை அவர்களுடன் உட்கார வைத்து, பிஸ்கட் கேக் வாழைப்பழம் தேநீர் தந்து உபசரித்தாள் புனிதா.
விடைபெறும் போது சாத்வி கையில் பணம் வைத்த என்வெலப் தந்தவர்கள்,
"உங்கட மாப்பிள்ள எங்க?" என்று தான் கேட்டனர்.
சாத்வி புனிதாவை பார்க்க,
"இப்ப தான் என்ர பிள்ளைகள பைக்ல ஏத்திட்டு அப்டியே ஊர சுத்தி பாத்துட்டு வாறன் எண்டு போறார்.." என்றாள் புனிதா பெருமையாக.
அந்தப் பெண்கள் சாத்விஹாசினியின் மாப்பிள்ளையை காணவே ஆர்வமாக வந்திருந்தனர்.
டவுன் பெடியனாம்.. யூனிவர்சிட்டியில் லெக்சரராக வேலை செய்கிறானாம் என ஊருக்குள் பரவி இருந்தது சாத்வியின் கல்யாணக் கதை.
"டக் எண்டு ஒரு பிள்ளைய பெத்து அம்மம்மாட கையில குடுங்க மகள்.." என சாத்வியை வாழ்த்தி விட்டு சென்றார் வந்த சொந்த காரர்களில் மூத்தவர்.
"எங்க போறாங்க சித்தி?" வந்தவர்கள் கலைந்த பிறகு சாத்வி கேட்டாள்.
"யாருக்கு தெரியும்.. ரெண்டு கிழம லீவுல வார அப்பாவ போட்டு அந்த பாடு படுத்தும்கள். அதே மாதிரி இந்த பெடியன போட்டு கரைச்சல் படுத்துதுகள். அவரும் அதுகளுக்கு ஏத்த மாதிரி செல்லம் குடுக்கிறார்.."
காலையில் போகும் போது பை சொல்லி விட்டாவது சென்றான். இப்போது அதுவும் இல்லை. அவள் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் கிளம்பி விட்டான்.
சாத்வி உடை மாற்ற, "என்ன சாத்வி.. அதுக்குள்ள என்ன? இப்டியே இரு.. வேற யாரும் வந்தாலும்" என புனிதா தடுத்து விட்டாள்.
பொழுது சாயும் போது தான் வாமன் வண்டி வீடு திரும்பியது. சாத்வி அறையில் உட்கார்ந்து ஃபோன் பார்த்துக் கொண்டிருக்க, மூவரும் களைத்து ஓய்ந்து வந்து அமர்ந்தனர்.
"தண்ணி எடுத்து வாங்க ஏஞ்சல்!" என அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்.
சற்று நேரத்தில் உள்ளே வந்தவன் பாத்ரூமை பயன்படுத்தி புத்துணர்வு அடைந்து, "ஹாசினி! உங்க லெப்டொப் யூஸ் பண்ணலாமா?" என அனுமதி கேட்டு அவளுடைய மடிக்கணினியை எடுத்துப் போனான்.
ஹாலில் உட்கார்ந்து சிறுவர் விருப்பம் கேட்டு படம் தரவிறக்கம் செய்து ஓட விட்டவன் அவர்களுடனே அமர்ந்து கொண்டான்.
அவர்களை கவனித்துக் கொண்டே ஃபோன் நோண்டிய சாத்வி இரவுணவு தயாரிப்பில் இறங்கிய புனிதாவுக்கு உதவச் சென்றாள்.
என்ன சாப்பிட வேண்டும் என விசாரித்த புனிதாவிடம், "லைட்டா இருந்தா நல்லம் சி.எம்.." என்று விட்டான்.
இடிப்பம் அவித்து காரல் மீன் பால் சொதியும் வைத்தனர்.
சாப்பிட்டதும் வீட்டு ஆட்களுடன் ஃபோன் பேசியவன், பிள்ளைகளுடனே அமர்ந்து விட, சாத்வி முகம் கழுவி ஆடை மாற்றி படுத்துக் கொண்டாள்.
சாத்வியை தவிர எல்லோரும் சாயங்காலம் உறங்கியதால் இரவு நித்திரைக்கு செல்ல வெகு நேரம் எடுத்தது.
படம் பார்த்து கதை பேசி நேரம் கழித்து பதினொரு மணிக்கு பிறகே அறைக்கு வந்தவன் விளக்கை அணைத்து படுக்கைக்கு வந்தான்.
போர்வையை உதறி போர்த்த முன் "குட் நைட் ஹாசினி" என்றான் மிக மெல்லிய குரலில்.
"குட் நைட்!" பதில் வந்தது சாத்வியிடம் இருந்து.
"இன்னும் தூங்கல்லயா நீங்க?!! தூங்கிட்டிங்க எண்டு நினச்சன்.."
"நீங்களும் அக்ஷி நம்சியோடவே தூங்கிட்டிங்களாக்கும் எண்டு நான் நினச்சன்.."
"ஏஞ்சல்ஸ் ஓடவா.. அவங்களோட தூங்கினா நல்லா தான் இருக்கும். இந்த சின்ன ஏஞ்சல் கொஞ்சம் டேஞ்சர். ஹோரர் கதை எல்லாம் அவுத்து விடுது. நைட் டைம்ல சொல்லாத எண்டு சி.எம் அடிச்சாலும் கேக்கிறா இல்ல.. ஒரு பேய் கத சொன்னா ஹாசினி.. அதுல.."
"எனக்கு சொல்ல வேணாம்.."
"உங்களுக்கும் பேய் பயமா??"
"குட் நைட்!!"
சத்தமாக சிரித்த வாமன், "ஷைல்டிஷா இருக்கு ஹாசினி! அவங்க சின்ன ஆக்கள்.. அவங்களோட ஜெலஸ் ஆகுறிங்க.."
போர்வையை விலக்கி வெடுக்கென அவன் புறம் திரும்பிய சாத்வி, "யாரு ஜெலஸ் ஆகின?"
"நீங்க தான்.."
"நானா?"
"யெஸ்!"
"நான் யாருல ஜெலஸ் ஆகினன்?"
"உங்கட தங்கச்சிகள்ள.."
சாத்வி பதில் சொல்லவில்லை. அவளுக்கே தெரியவில்லை அவள் பொறாமை படுகிறாளா இல்லையா என்று.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..