நின்னை - 17
காலையில் சாத்வி எழும் போது வாமன் பால்கனியில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
ஜன்னல் வழியாக அவன் அசைவு கண்டு 'வராத தொப்பைய குறைக்கிறார் போல..' என நினைத்தவள் காலைக் கடன் முடித்து கீழே இறங்கினாள்.
நகர நிலப் பெறுமதிக்கு ஏற்ப மேலே இரண்டு அறைகளும், கீழே ஒரு படுக்கையறை சமையலறை பூஜை அறை, ஹால், போர்டிகோ என அமைந்த சிறிய வீடுதான் வாமனின் பிறந்தகம்.
கதவு ஜன்னல்கள் திறக்கப்படாது வீடே இருளாய் இருந்தது.
சாத்வியின் மாமனார் மாமியார் இன்னும் எழவில்லை. ஆறுதலாக எழுந்து ஆறுதலாக செய்யபடும் அவர்களின் பழக்க வழக்கம் இவளுக்கு தெரியாதே.
சாத்விக்கு உறக்கம் கலைந்த பிறகு புரண்டு படுக்க வராது. எழுந்து பல் துலக்கியதும் டீ குடிக்க வேண்டும். வீட்டு வேலைகளை முடித்து காலை ஆகாரமும் செய்த பிறகு குளிக்கச் செல்வாள். இது செல்லம்மா பழக்கிய பழக்கம்.
இங்கே அவள் யாரிடம் தேநீர் கேட்பது?
எந்த தயக்கமும் இன்றி சமையல் கட்டிற்கு சென்று மின்விளக்கை போட்டவள், அடுப்பில் தண்ணி வைத்து, தேயிலை தூள், சீனி, பால் மா கொள்கலன்களைத் தேடினாள்.
இரவே சாத்வி கவனித்தது அந்த சிறிய சமையல் அறை கஜ கஜா என சுத்தம் குறைவாக கிடப்பதை தான்.
தலை திருப்பி திருப்பி பார்த்தவள், ஸ்டவ்வை நிறுத்தி விட்டு, கதவு ஜன்னலை திறந்து வைத்தவள் தும்புத் தடியை (விளக்குமாறு) கையில் எடுத்தாள்.
அரை மணி நேரம் கழித்து, வியர்த்து வழிந்த நெற்றியை துப்பட்டாவால் துடைத்த சாத்விக்கு இப்போது அந்த அடுப்பங்கரையை பார்க்க திருப்தியாக இருந்தது.
குளாய் திறந்து கையை அலம்பியவள், அடுப்பை ஒன் செய்து தண்ணீர் கொதித்ததும் டீ தயாரித்தாள்.
கை கணக்கில் தான் ஊற்றினாள். நான்கு பேருக்கு அளவாக வந்தது. இரண்டு கோப்பையை எடுத்து கொண்டு அவள் வெளியே வருகையில், நடராசா எதிர்ப்பட்டார், நெற்றியில் திருநீற்று கீற்றுடன்.
இவளை கண்டு புன்னகைத்தவர், "நீ தானாம்மா... குசினிக்குள்ள சத்தம் கேட்டதும் ஜெயந்தியோ எண்டு நினச்சன். அதானே பாத்தன். ஜெயந்தி இந்நேரத்துக்கு எழும்ப மாட்டா.." என்றவர்,
"சின்னவள் நிவேதா பிறந்த பிறகு ஆளுக்கு உடம்புக்கு ஏலாது.. ஆடி ஓடி வேலைகள் செய்றது கஸ்டம். இனி நீ வந்து நிக்கிற படியால நேரத்தோட எழும்பிட்டா போல எண்டு நினச்சன்.." என்றார் நெடு நாள் பழகியவர் போல விளக்கமாக.
"நான் எனக்கு டீ போட்டன்.. அப்டியே எல்லாருக்கும் சேர்த்து ஊத்திட்டன்.." சாத்வி சொல்ல,
"அதுக்கு என்னம்மா நல்ல விஷயம் தானே. தாவன் எனக்கும் ஒரு கப்.."
இதை அவர்களுக்காக அவள் எடுத்து வரவில்லை. உறங்குபவர்களை தட்டி தொந்தரவு செய்யும் எண்ணமும் இல்லை. அவராகவே கேட்டதும் இதம் பரவியது மனதில்.
தனது கையில் இருந்த ஒரு கப்பை கொடுத்தவள், "இது.." என நிறுத்த,
"உங்கட மாமிக்கு தானே.. தாம்மா நான் குடுக்கிறன்.." என வாங்கிக் கொண்டு அவர்கள் அறைக்கு நடந்தார்.
நடராசா மறையும் மட்டும் அவரையே பார்த்தாள் சாத்வி.
'எங்க வீட்ட அம்மாவ விட அப்பா தான் நல்லா சமைப்பார்.. அம்மாக்கு அப்படி சப்போட்ட குடுப்பார்.. அத பார்த்து வளர்ந்தவன் நான்' என்று வாமன் அவளிடம் முதல் நாள் சொன்னது நினைவு வந்தது.
மனைவியுடன் அனுசரணையாக நடந்து கொள்ளும் கணவன் மார்களும் இருக்கிறார்களா?
இருக்கிறார் தானோ!
அவளுடைய மாமியார் வீட்டிலேயே காணுகிறாளே!
மனைவி மீது அனுசரணையையும் பாசமும் தெரிந்தது நடராசாவில்.
மறுபடியும் கிச்சன் வந்து மீதி தேநீரை இரண்டு கப்பில் ஊற்றிக் கொண்டு மாடி ஏறினாள்.
பொழுது புலர்ந்த ஆறு மணி வெளிச்சத்தில், வியர்த்து வழிய புஷ் அப் செய்து கொண்டிருந்தான் வாமன்.
"டீ" சாத்வி கோப்பையை காட்டினாள்.
இறுதி ஐந்து பஷ் அப்களை முடித்தவன் மூச்சு வாங்க எழுந்தான்.
"வேணாமா?"
"நல்ல கேள்வி.. யாரும் மோர்னிங் டீ வேணாம் எண்டு சொல்லுவாங்களா? இருங்க வாறன்..." என்றவன் முகம் கழுவி வந்து வாங்கினான்.
"எப்ப எழும்பினிங்க?" பிரம்ம முகூர்த்தத்தில் எழும் பழக்கம் போல இவருக்கு என்ற எண்ணத்தில் கேட்டாள்.
"அஞ்சி மணி இருக்கும்.. ஏன்?"
"இரவு நீங்க நிலத்தில படுத்தது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. நீங்களும் பெட்ல படுத்து இருக்கலாம். இல்லாட்டி சொல்லி இருந்தா நான் கீழ வந்திருப்பன். எனக்கு நிலத்தில படுத்துப் பழக்கம் தான்.." அவன் தரையில் உறங்கியது இப்போது வரை நெருடியது அவள் மனதில்.
பால்கனி கட்டில் சாய்ந்து கீழே ஃபோர்டிகோவில் அடுக்கி வைத்திருந்த பூந் தொட்டிகளை கண்களால் மேய்ந்தவன், "எனக்கும் பழக்கம் தான் ஹாசினி.." என்றான்.
"டயர்டா இருக்கு எண்டிங்க.."
"யா!! அதுக்கு தான் நிலத்தில படுத்தன்.. நல்லா இருந்தது.."
வாய்க்கு கொண்டு போன கப்பை கீழே இறக்கிய சாத்வி, "சரியான டயர்டா இருக்கு. கீழ படுக்க ஏலாது. பெட்ல எனக்கும் இடம் தாரிங்களா எண்டு முதல் நாள் என்னிட்ட கேட்டிங்க.." ஞாபகப்படுத்தினாள் அவனுக்கு.
"எப்ப?"
"முதல் நாள் இரவு"
'ஆ.. அது.. அது அண்டைக்கு பெட்ல படுக்கணும் போல இருந்தது.. அன்ட் உங்கட பெட்ரூம்ல கிடக்க பெட் நல்ல முதுர மரத்தில செய்த பெரிய கட்டில். கம்பர்டபிளா இருக்கும். கூட யோசிக்காதிங்க ஹாசினி. நேற்று கீழ படுத்ததால தான் நான் கொஞ்சமாவது தூங்கினன்.. நீங்களும் நிம்மதியா படுத்திங்க" என அவள் முகம் பார்த்தவன்,
"நீங்களும் எக்சர்சைஸ் செஞ்சிங்களா?" என்று கேட்டான்.
அவள் ஏன் என பார்க்க,
"என்ன விட உங்களுக்கு ஸ்வெட் ஆகி இருக்கு.." என்று, வியர்வை பூத்திருந்த அவளது நெற்றி நாசி நாடி கழுத்து என ஊர்ந்தது அவன் பார்வை.
அதற்கும் கீழே இறங்க அவசியம் இன்றி துப்பட்டா மூடி இருக்க,
"கிச்சன்ல சின்ன வேல.." என்றாள் சாத்வி முகத்தை துடைத்து விட்டு.
"டீ போட்டிங்களா.. அதுக்கா இப்டி வேர்க்குதா??"
அவனை பார்த்தாள். அது முறைப்பது போலத் தான்!
சிரித்தவன், "கோபிக்காதிங்க ஹாசினி.. வட் எவர்.. எக்சர்சைஸ் தான் செய்யணும் எண்டு இல்ல.. இந்த மாதிரி ஃபிசிகல் அக்டிவிடிசால உடம்பு வேர்த்தாலும் ஹெல்த்துக்கு நல்லம் தான்.." என்றான்.
சாத்வி எதுவும் பேசவில்லை. டீ குடித்ததும் குளிக்க போனாள். வாமன் கப்புடன் கீழே இறங்கினான்.
ஜெயந்தியும் நடராசாவும் ஹாலில் உட்கார்ந்திருந்தனர்.
இவனைக் கண்டு "தம்பி கடைக்கு போய் வாறியா?" எனக் கேட்டார் ஜெயந்தி.
பொதுவாக மதியம் மாத்திரமே ஜெயந்தி சமையல் செய்வார். அதுவும் கணவரின் ஒத்தாசையுடன். காலை இரவு இரண்டு வேளைக்கும் கடையில் இடியப்பம் பிட்டு என வாங்கிப் கொள்வர்.
நேற்று இரவு பகல் மீந்த கோழிக் கறி, நந்தினி அவித்த இடியப்பத்துடன் சமாளித்து இருந்தனர்.
"கடைலயா வாங்குறம்.. ஹாசினி நல்லா குக் பண்ணுவாம்மா..." என்றான் வாமன்.
வீட்டில் இருக்கும் தினங்களிலாவது கடை உணவை தவிர்க்கும் எண்ணத்திலும் சாத்வி கை பக்குவத்தில் ருசிக்கும் ஆசையிலும்.
நடராசா சிரிக்க,
"என்னப்பா?" என்றான்.
"அங்க போன நாள்ள இருந்து இத தான் தம்பி மந்திரம் மாதிரி சொல்றா.."
"இல்லப்பா.. கடையில எடுக்கிறத விட அவ செய்து தந்தா பதுள போகும் வர கொஞ்சம் நிம்மதியா சாப்பிடலாம்.. அங்க போயும் மெஸ்ல தானே விழணும்.."
"ஏன் தம்பி, நீ மட்டுமா போறாய்.. அந்த பிள்ளய கூட்டி போகலயா?" தாயார் கேட்க,
வாமன் பதில் சொல்ல தயங்கினான்.
"அது அவங்களுக்குள்ள பேசி கதச்சி முடிவு எடுத்து செய்வாங்க ஜெயந்தி.. நாங்க தலையிட கூடாது.." நடராசா அவனுக்கு உதவ,
"என்னவோ செய்யுங்க.." என விட்டுக் கொடுத்த ஜெயந்தி, "வந்த பிள்ளய அடுத்த நாளே அடுப்படியில ஆக்கி போட சொல்றதா தம்பி? நீ கடையில வாங்கிட்டு வா" என்று முடித்தார்.
வாமன் கையில் இருந்த டீ கோப்பையை வாங்கிக் கொண்டு சமையல் கட்டிற்கு சென்றவர் ஒரு நிமிடம் இது நம் வீட்டு கிச்சன் தானா என திகைத்தார்.
'டீ மருமகள் தான் போட்டா ஜெயந்தி.. நேரத்துக்கே எழும்பி கிச்சன்ல உருட்டினா.. அது கிடந்த கோலத்துக்கு தேயில சீனி தேடினா போல..' என நடராசா சொல்லி இருந்தார் தேநீர் தந்து.
சமையல் அறையில் இப்படி ஒரு சுத்த புரட்சியை எதிர்பார்க்கவில்லை ஜெயந்தி.
பெட்டி கப்போர்டில் இருந்து இறங்கி பரப்பிப் போட்ட போத்தல்களை அவைக்குரிய இடத்தில் குடியேற்றி, பாத்திரங்களை கழுவி உரிய ஸ்டான்டில் அடுக்கி தரையும் மோப் போட்டு படு சுத்தமாக காட்சி அளித்தது.
எங்கோ தொலைவில் அறியாத ஊரில் தெரியாத குடும்பத்தில் மகனுக்கு பெண் எடுக்கிறோம்.. அம்மா அப்பா இல்லாமல் வளர்ந்த பெண் வேறு.. சிரிக்க கூட யோசிக்கிறது.. என்ற கவலை ஜெயந்தி மனதில் இருந்தது.
வாமன் திருமணமான நாளில் இருந்து மகிழ்ச்சியாக தான் தெரிகிறான்.. அது போதும்.. அவன் நல்லா இருந்தா சரி தான் என நினைத்து இருந்தார்.
நேற்று இரவு சாத்வியாக வந்து நானும் ஏதேனும் ஒத்தாசை புரியவா என கேட்டது பிடித்தும் இருந்தது.
காலையில் முதல் வேலையாக அவள் இந்த வேலை செய்தது கொஞ்சம் சங்கோஜமும் தந்தது ஜெயந்திக்கு. மாமியார் குப்பையாக போட்டு வைக்க புது மருமகள் நேர்த்தி ஆக்கி இருக்கிறாளே.
தாய் சொன்னபடி சந்திக் கடையில் டிபன் வாங்கி வந்த வாமன் அதை டைனிங் டேபிளில் வைத்து விட்டு குளிக்கச் சென்றான்.
ரூமிற்குள் நுழைந்தவனை ஷாம்பூ வாசம் வரவேற்றது. தலைக் குளித்து கூந்தலை துவட்டிக் கொண்டிருந்தாள் சாத்வி.
அப்போது தான் குளித்து இருக்கிறாள். அணிந்திருந்த சட்டையை குட்டைக் கூந்தல் துளிகள் நனைத்து இருக்க, அவளைப் பார்த்துக் கொண்டே டவல் தேடினான்.
"பாத்ரூம் ஃப்ரீ தானே.. நான் போகவா?" என கேட்டு குளியலறை புகுந்தவனை அவள் துவைத்துப் போட்டு எடுக்க மறந்த ஆடைகள் வரவேற்றன.
தங்கள் வீட்டில் என்றால் துவைத்ததை வாளியில் போட்டு கொடியில் விரித்த பிறகே குளிப்பாள்.
இங்கே எங்கே விரிப்பது என தெரியாமல் வைத்தவள் எடுக்க மறந்து போனாள்.
இடுப்பில் கை குத்திய வாமன், "இது வேறயா வாமா.. எத்தின டிஸ்ரபன்ஸ் உனக்கு.. ஒரு பேச்சுலர்ட பாத்ரூம்ல லேடீஸ் இன்னர்ஸ்..." என்று புலம்பினான்.
நீ பேச்சுலரா?
இல்லையா பின்ன.. கல்யாணம் கட்டினாலும் ஸ்டில் அயம் பேச்சுலர்.
அது யாருட பிழ?
பிழையா?
இதற்கு பதில் தெரியவில்லை வாமனுக்கு.
"மனிசன வதைக்கிறிங்க ஹாசினி" என புலம்பலைத் தொடர்ந்தான்.
"கூப்பிட்டு இத இப்ப எடுக்க சொல்றது எல்லாத்தையும் விட எம்பாரசிங்.."
"என்ன செய்றது?"
நீர் வடிந்து தொங்கிய துப்பட்டாவை எடுத்தவன் உள்ளாடைகளை மறைத்து அதை விரித்து விட்டு நிம்மதியாக குளித்தான்.
வாமன் வெளியே வரும் போது சாத்வி பால்கனியில் கூந்தல் உலர விட்டு நின்றிருந்தாள். உடை மாற்றிய வேகத்தில் கீழே இறங்கி விட்டான்.
பிரம்மச்சரியத்தில இருந்து சம்சாரியா மாறும் வரை சிலது உன்ன டிஸ்டர்ப் பண்ண தான் செய்யும் வாமா..
ஹாசினிட கண்ணுல க்ரீன் சிக்னல் கிடைக்கிற வரை வெயிட் பண்றது பெட்டர்.
அது எப்ப நடக்கிறது.. இதெல்லாம் ஒண்டும் இல்லாத மாதிரி சாதாரணமா கடக்கிறது எப்ப?
அவ தள்ளி வச்சே பாக்குறாளே.. யாரோ மாதிரியே டிஸ்ரன்ஸ் கீப் அப் பண்றா..
மனதுக்குள் புலம்பிக் கொண்டு கீழே வந்தவனை காலை உணவு உண்ண கூப்பிட்டார் ஜெயந்தி.
வாமன் மேசையில் அமர,
"அந்தப் பிள்ள எங்க.. நீ தனிய வந்தா சரியா தம்பி?"
"ஓ.. இருங்க" என இங்கிருந்தே சாத்விக்கு குரல் கொடுத்தான்.
சட்டையில் இருந்து சுடிதாருக்கு மாறி இருந்தவள் இறங்கி வந்தாள்.
உணவு மேசையை நெருங்கியதும் வீசிய வாசமே ஹோட்டலில் வாங்கிய உணவு என காட்டித் தந்தது.
புளித்த தோசை, தண்ணி போல் சாம்பார், தடிப்பமான இடியப்பம், பிழிந்த தேங்காய் பூவில் சம்பல்.
நடராசா ஜெயந்திக்கு இந்த சுவை பழகி விட்டது. பேசாமல் சாப்பிட்டனர். சாத்விக்கு தொண்டைக்கு கீழே இறங்க மாட்டேன் என்றது. பெயருக்கு உண்ட வாமன் கை கழுவி எழுந்ததும் பைக்கை மிதித்து குரொசரிக்கு தான் கிளம்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுடைய தாய் மாமாவும் அத்தையும் அவனுக்காக காத்திருந்தனர்.
வண்டியில் கொழுவிய பைகளை எடுத்து வந்து டைனிங் டேபிளில் போட்டவன், அவர்களை கண்டு கொள்ளாமல் மாடிப் படி ஏறினான்.
வந்திருந்தவர்களுக்கு பழச்சாறு கரைத்து வந்து கொடுத்த சாத்வி, வந்தவனையோ, அவன் முக மாற்றத்தையோ கவனிக்கவில்லை!
"இது தான் என்ர மருமகள்" என அவளை அருகில் அமர்த்தி அவர்களுக்கு அறிமுகம் செய்தார் ஜெயந்தி.
பதிலுக்கு அவர்கள் எதுவும் அலட்டிக் கொள்ளாமல்,
"தேவா அத்தான்ர கல்யாணத்துக்கு தார கிஃப்ட் இது. நீங்களே நேர்ல போய் குடுங்க அம்மா எண்டு மகள் தான் சொன்னா" என, ஒரு சிறிய நகை பேழையை திறந்து உள்ளிருந்த தங்க மோதிரத்தை எடுத்து சாத்வி கையில் அணிவித்து விட்டனர்.
"கல்யாணத்துக்கும் மகள் வர விரும்பின.. வீசா கிடைக்க இல்லயாம்.."
"நீங்க ஒண்டும் மனசுல வச்சிக் கொள்ளாதிங்க.. ஏலும் எண்டா வாமன ஒருக்கா பிரஷாந்தியோட கதைக்க சொல்லுங்க.." என்றனர் உதிரியாக.
'பிரஷாந்தி' என்ற ஒரு வாரத்தையில் விலுக் என நிமிர்ந்த சாத்விஹாசினிக்கு விரலில் அவர்கள் அணிவித்து விட்ட புத்தம் புதிய தங்க ஆபரணம் இரும்பு குண்டாக கனக்க, அதுவரை இருந்த இயல்பு நிலை குலைந்து மனமும் குழம்பியது.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

nice twist
பதிலளிநீக்கு🥰🥰🥰🥰🥰🥰
நீக்கு