நின்னை - 22
ஒரு இனம் தெரியாத நபர் ஒருத்தியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்கிறான்.
அவளை கட்டிய கணவன் மலை போல் அவள் பக்கத்தில் தான் இருக்கிறான்.
குறித்த பெண்ணுக்கு கணவனிடம் ஒரு வாரத்தை சொல்லத் தேவையில்லை.
என்ன ஏதாவது சிக்கலா? என அவனாக எதையோ ஊகித்து விசாரித்தும் அவள் எதையும் வாய் திறந்து வெளிப்படுத்தவில்லை.
சிறிதோ பெரிதோ, 'ஊசியால் குத்தி விட்டேன். இனி தொல்லை இருக்காது' என அவளே ஆயுதம் ஏந்தி எதிரியைத் தனித்துத் தாக்கி விட்டு சாதாரணமாக இருக்கிறாள்!!!
என்ன மாதிரியான பெண் இவள்!! புதுமைப் பெண்ணா??
சில வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் சில மேல் எழுவதை தவிர்க்க முடியவில்லை வாமனால்.
தனியாக எங்கும் சென்றதில்லை அவள். ஸ்கூல் முடிக்கும் வரை அப்பன் காரன் துணை நின்றான் அவளுக்கு. கைக்குள் வைத்து பார்த்துக் கொண்டான் அவளை.
அதை முடித்ததும் வாமனின் துணை வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவன் படித்த அதே பல்கலைக்கழகத்திற்கே அப்ளை செய்து நுழைகிறாள் அவள்.
அவள் எடுத்த zscore வெட்டுப் புள்ளியும் அதே யூனிவர்சிட்டி கிடைக்க உதவுகிறது.
அங்கே அவள் இணைந்த நாளில் இருந்து ஆரம்பிக்கிறது அவனது பாதுகாப்புப் பணி.
பீடம் இருந்து ஹொஸ்டல் வரை அவளை அவனே கூட்டிப் போய் விடுவதும், ஒவ்வொரு வார இறுதியில் ஊருக்கு அழைத்து வருவதும், திருப்பி கூட்டி போவதும், பரீட்சைக்கு படிப்பதற்காக விடுதியிலேயை தங்கி விட்டால், அவளுக்கான உணவை விடுதிக்கே வாங்கி போய் கொடுப்பதும் அவள் தேவைகளை கவனிப்பதுமாக அவன் அவளுடன் இருந்தான்.
டவுனுக்கு போக, ஷொப்பிங் செய்ய, கோயில் போக, சினிமா தியேட்டர் செல்ல என அவனும் கூட வராமல் எதுவும் நடக்காது அவளுக்கு.
முதல் இரண்டு வருடங்கள் அவன் இல்லாமல் அவள் இருந்தது ஹொஸ்டல் ரூமிலும் லெக்சர் ஹாலிலும் மாத்திரம் தான்.
இரண்டு வருடங்கள் அமேரிக்கா போனதற்கு எத்தனை படம் போட்டாள், நீங்க இல்லாமல் உலகமே இருண்டு போனதாக கதை சொன்னாள்.
திரும்பி வந்ததும் பழைய கதை தொடர்ந்தது..
அவன் விஞ்ஞான பீடமா கலைப் பீடமா என்ற சந்தேகம் அவனுக்கே வருவது போல் அவனுடனேயே அட்டை போல் ஒட்டிக் கொண்டு சுற்றினாள்.
சீனியர் பாக்குறான்... ஜூனியர் சைட் அடிக்கிறான்.. பெச் போய் ப்ரபோஸ் பண்ணிட்டான்..
அப்பப்பா!! எத்தனை எத்தனை புகார்கள், அழுகைகள், சிணுங்கல்கள்...
பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் பக்கமாக அமர்பவள் அவன் கை கோர்த்து உரிமையாக தோளில் சாய்ந்து உறங்கி விடுவாள்.
அந்த நாள் நினைவு முள்ளாக குத்த, கையை குறுக்கே கட்டி அமர்ந்து இருந்த வாமனுக்கு நெடு மூச்சு ஒன்று மெதுவாக வெளிவந்தது.
அவன் ஓர விழி பார்வை வட்டத்துள் புலப்படும் சாத்வி, கணவன் என்று அவரிடம் எந்த சலுகையும் வேண்டாமல் நேராக அமர்ந்து இருக்கிறாள்.
காதில் மாட்டி இருந்த ஹெட்செட்டை எப்போதோ கழட்டி விட்டவள் இமை மூடி இருந்தாள்.
உறங்குகிறாளோ??
மூச்சு சீராக தான் வருகிறது.
எப்படி இப்படி சில பாகை கூட சரியாமல் குலுங்கும் பேருந்தில் அவன் தோளில் விழாமல் சீட்டில் சாய்ந்தே தூங்குகிறாள்?
சற்று முன்பு வரை விழித்து தான் இருந்தாள்..
தொந்தரவு நீங்கியதும் நிம்மதி உற்றாளோ?
தொந்தரவு.....
விருட் என ஆசனம் விட்டு எழுந்த வாமன் சாத்வியின் சீட்டிற்கு பின்னால் இருந்தவனை பார்த்தான்.
பின் நாற்பதுகளில் ஒருவன் அவன். டெனிம் ஜீன்ஸ் சிவப்பு டீஷர்டில் அப்பாவியான தோற்றம் கொண்டுள்ளான்.
இவன் பார்ப்பதை உணர்ந்து அவன் முகம் பதட்டத்தை தத்தெடுக்கிறது.
ராஸ்கல்.. நான் மலை போல் பக்கத்தில் இருக்கும் போதே விளையாடி இருக்கிறான்.
இருக்கையில் அமர்ந்தவனுக்கு கை முஷ்டி இறுகியது. திரும்பி சாத்வியை பார்த்தான்.
என்ன ஒரு சாந்தமான முகம். மனதில் தான் எத்துணை உறுதி.
ஏனோ அவனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது!
அப்பா அம்மா இல்லாதவள். கூடப் பிறந்தவர் எவர் துணையும் இல்லாதவள். அவளும் பட்டதாரி தானே.. அதுவும் உள்வாரி என்று நினைக்கிறான். பஸ் ஏறி கார் ஏறி பல்கலைக்கழகம் சென்று இருப்பாள். அத்தனை வருடங்களில் பலதையும் கடந்து இருப்பாள்..
அந்த அனுபவ படிப்பா இந்த அசௌகரியத்தை சாதாரணமாக கையாள உதவி இருக்கிறது?
அன்று அசிங்கமாக பேசிய மச்சான் காரன் வாயை உடைத்தாள். வேலி தாண்டி வசை சொன்ன சொர்ணத்துக்கு கட்டையைப் பிடுங்கி ஓங்கினாள். பஸ்சில் வந்த பொறிக்கியை சத்தம் இல்லாமல் காயம் செய்து இருக்கிறாள்.
நந்தினி அக்கா நிவேதா போல இவள் கடந்த கால வாழ்க்கை சுகமானது இல்லை. இலகுவானதும் இல்லை.
இதை இன்று அல்ல, திருமணமான மூன்றாவது நாளே புரிந்து கொண்டான் வாமன்.
கழிசடை சியானையும் அவன் தாய் சொர்ணத்தையும் வைத்தே தெரிந்து கொண்டான்.
அம்மாவின் புருஷன் என்ற ஒற்றை வார்த்தையில் பலதையும் உணர்ந்து கொண்டான்.
மிக மென்மையான, கலகலப்பான பெண்கள் சூழ் அவன் உலகத்தில் புகுந்த இந்த அழுத்தக் காரியை; தைரியசாலியை அநியாயத்துக்கு பிடிக்கிறது அவனுக்கு... இன்னும் இன்னும் பிடிக்கிறது.
வியப்புடன் கூடிய ஈர்ப்பு இது.
கெட்டிக்காரிகளை காதலனுக்கு பிடிக்கும் கணவர்களுக்கு பிடிக்காது.
வாமன் அவளை இப்போது தான் அவளை காதலிக்க தொடங்கி இருக்கிறான்.
நல்லது!
ஆனால், அவள் அவனை கணக்கே எடுக்கவில்லையே..
அதிகம் வேண்டாம். ஒரு துன்பம் நேரும் போது பக்கத்தில் இருக்கும் புருஷனை நாட வேண்டும் என்று கூடத் தோன்றவே இல்லையே அவளுக்கு!!
ஒரு ஓரமாக வலித்தது வாமனுக்கு!!
ஒன்பது மணி போல பேருந்து காலை உணவுக்காக ஹோட்டல் ஒன்றின் முன் தரித்தது.
சிவப்பு டீஷர்டை கடக்க விட்டு, எல்லோரையும் இறங்க விட்டு எழுந்தவன் சாத்வியை மென்மையாக தட்டினான்.
இரண்டு மணிக்கு எழுந்ததால் கண் சொக்கித் தான் போயிருந்தாள். விழித்து, கலைந்த தலைமுடியை அள்ளி சுற்றி க்ளச் அடித்து, "எந்த இடம் இது?" என ஜன்னல் வெளியே பார்த்தாள்.
"பதுள வரல்ல ஹாசினி.. கடையில நிப்பாட்டி இருக்கிறான். ரெஃப்ரஷ் ஆகலாம்.."
பொது போக்குவரத்து பயணிகள் உணவு கொள்ள பொதுவாக நிறுத்தும் ஹொட்டலே அது என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது.
சனங்களை விலக்கிச் சென்று சிங்கில் கை கழுவி வந்து ஒரு மூலை டேபிளில் சாத்வியை அமர்த்தியதும் "இருங்க ஹாசினி வாரன்" என அவன் நகர்ந்தான்.
"எங்க போறிங்க.. நான் சாப்பாடு கட்டி வந்து இருக்கிறன்" என்றவள், அவள் சொன்னதை நம்பாமல் அவன் உணவு வாங்க போகிறானோ என்று நினைக்க,
"சரி.. பார்சல பிரியுங்களன் வாரன்" என்றவன் ஹொட்டலுக்கு வெளியே வந்து கண்ணை சுழட்டினான்.
கடையின் பின்னால் கழிப்பறைக்கு செல்லும் ஓடையில் சுவரில் ஒரு கையை ஊன்றி காலை குறுக்காக வைத்து ஸ்டைலாக ஃபோன் பேசிக் கொண்டு நின்றான் சிவப்பு சட்டை.
நேரே போய் அவன் முதுகு சட்டையை பற்றித் திருப்பி வாயில் ஒரு குத்து விட்டான் வாமன்.
"ஆஆஆ" அலறியன் கையில் இருந்த அலைபேசி மண்ணில் தெறிக்க,
அவன் வலது கையை மடக்கி இடது கையை முறுக்கித் திருப்பினான் வாமன்.
"ஆஆஆஆ... அம்மேஏஏஏஏஏ"
சுதாரித்து எதிர் தாக்குதல் செய்ய முடியாதபடி கை இரண்டும் வசம் இழந்து போன வலியில் முகம் சுருக்கி அலறினான் சிவப்பு சட்டை.
துவந்த யுத்தத்தில் அவர்களை சுற்றி கூட்டம் கூடி விட, வாமனை ரவுடியை போல் பார்த்தனர் பயணிகள்.
எதற்கு வம்பு என இருவரையும் பிரிக்க பயர, சாப்பிட அமர்ந்த பேருந்து நடத்துனர் ஓட்டுனர் தான் ஓடி வந்து வாமனை விலக்கினர்.
கை எலும்பு விலகிப் போன மரண வேதனையில் கூட்டத்தை நோக்கி கத்தினான் சிவப்பு டீ ஷர்ட்.
"என்னத்துக்கு அடிக்கிறாய்.. என்ன நடந்த??" வாமனை கேள்வி கேட்டனர்.
"என்ர ப்ரேஸ்லட்ட களவெடுத்துட்டான்.. ஹொரா (ஹொரா - சிங்களத்தில் திருடன் என பொருள்)"
எதற்காக அடி வாங்குகிறோம் என தெரிந்தே வாங்கிய சிவப்பு சட்டை இந்தப் பழிச் சொல்லில் திகைக்க,
"யேய்.. இல்ல இல்ல நான் இல்ல.. என்னப் பாத்து கள்ளன் என்றாய்.. பொய் இது பொய் நான் ஒண்டும் களவெடுக்கல்ல" இப்போது தைரியமாகவே மறுத்துக் கத்தினான்.
"இல்லயா.. அப்ப யோக்கியனாடா நீ?"
பளார் பளார் பளார் என கன்னத்தில் மாற்றி மாற்றி அடி வாங்கி உதடு வெடித்து இரத்தம் சிந்த, வீதியில் சரிந்தவனை ஓங்கி மிதித்தான்.
விட்டால் செத்து விடுவானோ என வாமன் மீது ஆத்திரப்பட்டது சனம்.
"சும்மா களவெடுத்துட்டான் எண்டு போட்டு அடிச்சா சரியா.. சாட்சி இருக்கா??"
"இருக்கு"
சிவப்பு சட்டையை பிரட்டிப் போட்டு அவன் பேண்ட் பைக்குள் கை விட்டு நந்தினி அவனுக்கு போட்டு விட்ட இரண்டு பவுன் கைச்சங்கிலியை வெளியே எடுத்து கூட்டத்திற்கு காட்டினான்.
"கன நேரமா பஸ்ல என்ன உரசித்து உரசித்து போனான். எனக்கு அப்பவே டவுட்.. பஸ்ல இருந்து இறங்கிப் பாக்குறன் கையில கிடந்ததக் காணல்ல"
இன்னும் ஒரு மிதி வைத்தான்.
"கள்ளன் தான்!"
"இவனுக்கு இந்த அடி தேவ தான்.."
"எல்லாரும் அவங்க அவங்க நகைகள பாருங்கப்பா... இன்னும் எத்தினய ஆட்டய போட்டானோ..."
"பொலிஸ்ல புடிச்சி குடுக்கணும் இவன எல்லாம்.. பாக்க டீசன்டா இருக்கான்..பாக்குற வேலைய பாரு.."
"இந்த காலத்தில எவன நம்ப ஏலுது.. நல்லா தான் இருக்கானுகள். உள்ளுக்குள்ள கள்ளப் புத்தி.."
"வாங்கின அடிக்கு இந்த ஜென்மத்துக்கும் இனி களவெடுக்க மாட்டான்"
தாங்களும் கை வைத்தால் செத்துப் போவானோ என்ற பயத்தில் காரி உமிழ்ந்து விட்டு கூட்டம் கலைய,
குருதி கசிந்த வாயை துடைத்துக் கொண்டு எழுந்த சிவப்பு சட்டை தாக்கித் தாங்கி நடந்து இடத்தை காலி செய்யும் அவசரத்தில் ஓட,
கைச் சங்கிலியை இடது கை மணிக்கட்டில் மாட்டியவனுக்கு அத்தோடும் அந்த ஜந்துவை விட்டு விடும் எண்ணம் இல்லை.
எட்டி அவனை மிதிக்கப் போனவன் கையை யாரோ பிடித்தனர்.
திரும்ப,
சாத்வி தான் அவனை அசைய விடாமல் இறுக்கி இருந்தாள்.
"ஹாசினி.. அது.. நந்தினி அக்கா ஆசயா போட்டு விட்ட ப்ரேஸ்லட்ட அவன் ஈசியா ஆட்டய போடப் பாக்குறான்.. அதான்..." என தோளை குலுக்கினான்.
இதை நான் நம்ப வேண்டுமா? என்பது போலயே கண் இடுக்கி அவனைப் பார்த்து வைத்தாள் சாத்வி!!
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

enakum sathuvay romba pidikuthu vaathi
பதிலளிநீக்கு🤣🤣🤣🤣🤣🤣
நீக்கு