அத்தியாயம்: 10
ஓர்
காலைப் பொழுது…
விடியும் முன்னே எழ வைத்தது…
உன் அழகை ரசிக்க வைத்தது…
மீண்டும் புதிதாய் பிறக்கும்
ஆசை தந்தது…
ஜெனிபர்… பூர்வீகம் கேரளா மாநிலம். ஆனால் இப்போது வாசம் செய்வதோ மும்பை. சில ஆண்டுகளாகத் தான் அந்த நகரத்தில் வசிக்கிறாள். வெகுநாட்களுக்குப் பின் கிடைக்கும் இனிய காலைப்பொழுதில் சூரிய உதயத்தை காண ஆவலாக இருப்பதால் விடிகாலையிலேயே எழுந்து விட்டாள்.
கீழே கேட்ட பேச்சுக்குரலின் சத்தம், மனித நடமாட்டத்தை சொல்ல. தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவளை மலர் காஃபியுடன் வரவேற்றார். புன்னகையுடன் நங்கை, இந்து, கிருபாவதியென வீட்டு பெண்களிடம் உரையாடிக் கொண்டிருந்தாள் ஜெனி. வாயாடி இல்லை என்றாலும் சகஜமாக அனைவரிடமும் பேசிப் பழகும் குணம் அவளுடையது.
" கொல்லப்புறத்துல மாட்டுக்குத் தண்ணி காட்ட போறேன். நீயும் வர்றியா. " என இந்து, ஜெனியை அழைக்க, அவளுடன் சென்றாள் ஜெனி.
சேந்தன், உத்ரன் என மூன்று காளைகளும். நான்கு பசுக்களும் இருந்தது. உடன் சிறியதும் பெரியதுமான ஐந்து கன்றுக்குட்டிகள். கோழி சேவல் என அனைத்தையும் பார்த்தவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. தன் சிறு பிராயத்தில் இதோ போல் மாடு ஒன்று தங்களிடம் இருந்ததால் அச்சம் என்பது இல்லாது அங்கிருந்த வைக்கோலை எடுத்து மாட்டிற்கு வைத்து அதன் தலையைத் தடவிக் கொடுக்க,
" நா உள்ள போப்போறேன். நீ வர்றியா என்ன.?"
" கொஞ்ச நேரம் இந்து. இந்தத் தொழுவம், மாடு எல்லாம் பாக்கும்போது, நா சின்ன வயசுல அப்பா கூட இருந்தது நியாபகம் வருது. நீ போ. நா அப்றமா வர்றேன். " எனத் துரத்திவிட்டு கன்றுக்குட்டியுடன் விளையாடிக் கெண்டிருந்தாள்.
வெகுநேரம் சென்றதால் உள்ளே செல்ல நினைத்தவளின் பாதையை மறித்து நின்றது அவை. சுமார் இரண்டரை அடி உயரத்திற்கு இருக்கும் அத்தனை பற்களையும் கூர் தீட்டி வைத்தது போல் நீட்டிக் கொண்டு. நாக்கை அந்தப் பற்களுக்குள் மடித்து வைத்திருந்தது. கண்கள் பெரிதாக, அந்தப் பகல் வேளையில் லேசாக மின்னியது போல் இருந்தது. வெள்ளை நிறத்தில் மூக்கு பகுதி மட்டும் சிவந்து போய் இருந்தது. அதுவும் இரண்டு நின்று கொண்டிருந்தது.
ராஜபாளையத்து நாய்கள். வேட்டை நாய்கள். அவர்களிடம் ஏற்கனவே நாய் ஒன்று இருந்தது. சில மாதங்களுக்கு முன் தான் மற்றொரு நாய் வாங்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இரண்டாகிப் போனது எண்ணிக்கை.
உர்… என்ற சத்தத்துடன் இவளை அவைகள் முறைத்து பார்க்க, ஜெனி பயத்தில்நின்றுகொண்டிருந்தாள். எப்படி இவைகளை தாண்டி உள்ளே செல்வது என்று தெரியாது.
" டிம்… டெய்ஸி… வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட பயமுறுத்தாதிங்க. " என உள்ளிருந்து ஒரு குரல் வர, தன் எஜமானனின் குரலுக்குக் கட்டப்பட்டு அவைகள் பாதையை விட்டு வேகமாக நகர, மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்துச் சென்றாள் ஜெனிபர்.
தண்ணீருக்கு, செல்லும் வழியில் வரும் அத்தனை பொருட்களையும் அடித்துச் செல்லும் பழக்கம் உண்டு. அதே போல் தான் ஜெனியும், எதிரில் இருந்தவனை இடித்து விட்டுச் சென்றாள். இடித்து என்று சொல்ல முடியாது. தள்ளி விட்டு விட்டுச் சென்றாள். பாவம் அவளை நாயிடமிருந்து காப்பாற்றலாமென ஹீரோ ரேஜ்ஜிக்கு வந்தவனை காமெடியன் ஆக்கிக் கட்டாந்தரையில் உருட்டி விட்டு விட்டுச் சென்றுவிட்டாள். இப்போது தெரிந்திருக்கும் விழுந்தது யார் என்று.
பிரகாஷ்…
பாவம் கைப்புள்ளையின் கால் உடைந்து விட்டதோ.
" எது… உடஞ்சிடுச்சா… இல்லங்க சுளுக்கு தா பிடிச்சிருக்கும். அப்பத்தாட்ட சொன்னா எண்ண போட்டு நீவி விடும். எந்நேரம், ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகிடலாம்னு பார்த்தா, அந்தப் பிள்ள என்ன நிமிந்து கூடப் பாக்காம தள்ளி விட்டுப் போயிடுச்சு. டிம்ம பாத்து இன்னும் கொஞ்ச நேரம் கதறட்டும்னு விட்டிருக்கனும். மாஸ் ஹீரோ மாறி என்ரி குடுக்கலாம்னு பாத்தா. கால டேமேஜ் பண்ணிட்டாளே. " எனப் புலம்பித் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றான்.
" உள்ள உண்டியல் சத்தத்த கேட்டா, உடைஞ்சி தா போயிருக்குமோ. " என வலது காலை ஊன, வலி எடுத்தது. ஆனால் அது பொறுத்துக் கொள்ளும்படி இருந்ததால்.
" நல்ல வேள... தலைக்கி வந்தது தலப்பா வோட போச்சி. எங்க திறப்பு விழால நடக்குற போட்டில கலந்துக்க முடியாத அளவுக்கு அடிபட்டுடுச்சோன்னு நினைச்சி பயந்துட்டேன். " பிரகாஷ்.
பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லாமல் புலம்பிய படியே சுவரைப் பிடித்துக் கொண்டு தரையை பார்த்த படி நடந்தான். திடீரெனத் தரையில் ஆரஞ்சு நிற பாவாடை தெரிய தன் தலையை உயர்த்தி, தனக்கு உதவிக்கரம் நீட்ட வந்த அந்த ஜீவனை பார்த்தான்.
" ஸாரி. நாங்கவனிக்கல தெரியாம… " என ஜெனிபர் இழுக்க,
" கவனிக்கலையா?. ஆறு அடிக்கி இல்லனாலும், உங்கள விட உயரமாத்தா இருக்கேன். இம்மாம் பெரிய உருவம் கண்ணு தெரியாம பேச்சாக்கும். " சிடு சிடுப்பாக.
'இப்படில்லாம் பேசுனா எப்படி உனக்கு அவா கரெக்ட் ஆவா. ' எனக் கேட்ட மனசாட்சிக்கு அவனின் கால் வலி பதில் சொல்லியது. ' வாயை மூடு… ' என்று.
" ஸாரி… ரொம்ப வலிக்குதா… " என்றவளின் கவலையும் அக்கறையும் எதிரே இருந்தவனுக்கே புரியவில்லை போலும்,
" ஹிம். நீங்க அங்க வந்து நில்லுங்க. நா உங்கள இடிச்சி தள்ளி விட்டுப் போறேன். கீழ விழுந்து கிடந்தாத்தா எனக்கு எப்படி வலிக்கிதுன்னு உங்களுக்குத் தெரியும். " எனத் தன் கோபத்தை மறைக்காது அவளிடம் காட்ட, முகம் வாடிப்போனது அவளுக்கு.
எதுவும் பேசாது நின்றவளை பிரகாஷ் தாண்டிச் செல்லப் பார்க்க, ஜெனி கரம் நீட்டினாள். " நீங்க நடக்க நா ஹெல்ப் பண்றேன். " எனக் கவலை தோய்ந்த சிறிய குரலில்,
அவளின் குரல் மாறுபாட்டை உணர்ந்தவன். அவளை ஆராயும் பார்வை ஒன்றை அவளின் மீது செலுத்தினான். எலும்பு கூட்டிற்கு மேல் சில இன்ச் தசை மட்டும் தான் இருக்கும் போலும், அத்தனை ஒல்லியாக இருந்தாள் பெண். சுண்டினால் ரத்தம் வரும் என்று சொல்லும் அளவுக்கு வெள்ளை நிறம். நீளக் கூந்தல், காலை வேளை என்பதால் அதை அள்ளி அழகாய் கொண்டையிட்டிருந்தாலும் ஆங்காங்கே சில முடிகள் சுருண்டு நின்றது அவளின் கழுத்தில்.
கோலிகுண்டு கண் என்பது இவளுக்குப் பொருந்தும். உருண்டையான கருமணிகள் ஓரிடத்தில் நிற்காது சுழண்டு கொண்டே இருந்தது. டிரிம் செய்யப்பட்ட புருவம். அடர்த்தியான இமை முடிகள் என அவளின் கண்கள் பார்ப்பவரை வசீகரிக்கும். இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் ஆரஞ்சு நிற ஃபேண்ட். இல்லை ஸ்கெட். என்னவென்று சரியாகச் சொல்ல முடியாத வகையில் அவளின் காலை மூடிப் பாதம் தொடும் வண்ணம் நீளமாக இருந்தது அது. விரல்களைப் பிசைந்தவண்ணம் தவறு செய்த குழந்தைபோல் நிற்க, பிரகாஷின் கோபம் மறைந்து போனது.
" இருக்கட்டுங்க. நா சமாளிப்பேன். ஆமா நேத்து நைட் சரியா தூங்கலையா என்ன. கண்ணு சிவந்திருக்கு. புது இடங்கிறதுனால தூக்கம் வரலையா. இல்ல ரூம் சிறுசா இருக்கா." என்க,
" ஐய்யைய்யோ… அதெல்லாம் இல்லங்க. நா இப்ப இருக்குற மும்பை அப்பார்ட்மெண்ட்ட காட்டிலும், எனக்குத் தந்திருக்குற ரூம் பெருசு தா. ரொம்ப நாளைக்கி அப்றம் பச்ச பசேல்னு இருக்குற கிராமத்துல தங்கப்போறேக்கிற excitement டே தூங்க விடல. அவ்ளோதா." என்றாள் பெண்.
" அப்ப நீங்க மும்பை வாசி கிடையாதா. "
" இல்ல. நா கேரளால திருவனந்தபுரம். பத்து வரப் படிச்சது எல்லாம் நாகர்கோயில்ல தா. அங்க என்னோட பாட்டி வீடு இருந்தது. " என்றாள்.
" ஓ… அதா தமிழ் நல்லாவே பேசுறீங்க. அப்பார்ட்மெண்ட் வீடு எப்படி. "
" ஹால்… ஒரு கிச்சன்… ஒரு பெட் ரூம்… அவ்ளோ தா. நல்லா போனா நாலு பேர் அதுல தாராளமா படுத்துத் தூங்குறதே சிரமம் தா. "
" அப்ப உங்க வீட்டுக்கு வந்தா அப்பாம்மால்லாம் எப்படி தங்குவாங்க. கண்ணுல பாத்த உடனை அனுப்பி வைச்சிடுவீங்களா என்ன. " எனக் கேலியாகக் கேட்க,
" எனக்கு அப்படி யாரும் இல்ல. " என்றபோது அவளின் விழி கலங்கியது. சிறு மௌனத்திற்கு பின்.
" ஸாரி… எனக்குத் தெரியாது. கேட்கக் கூடாதத கேட்டு உங்கள காலங்காத்தாலையே அழ வச்சிட்டேன். "
" அதெல்லாம் இல்ல. ஒரு அக்கா இருக்கா. கல்யாணம் ஆகி மும்பைலையே வேற எரியால இருக்கா. ஹரிணி ஆஃபீஸ் பக்கம் கிறதுனால தா அங்க இருக்கேன். இப்ப சென்னைக்கி மாறிக் வந்துட்டாங்க. வேற இடம் வேற வேலன்னு எல்லாம் தேடனும். ம்ச்…" சலிப்பாக வந்தது வார்த்தைகள்.
" ஏ வேற வேல பாக்கனும். இப்ப சென்னைல தான இருக்கிங்க. அங்கையே இருந்து ஹரிணிட்ட வெர்க் பண்ணுங்க. "
"அதுவந்து… " என அவள் ஆரம்பிக்கும் முன்னே
"சித்தாக்கு என்னமோ ஆச்சி. "
"கொல்லபுறத்துல புதையல் இருக்குன்னு ஒத்தகால்ல அத எடுத்துட்டு வந்திருக்காரு மாமா. " என வருணும் நந்துவும் கத்த, ஜெனி ஓடி விட்டாள். பின்ன அவனைத் தள்ளி விட்டதற்கு யாராவது திட்டுவார்களோ என்ற பயத்தில் உள்ளே சென்று விட்டாள்.
வீட்டார் யாரும் எட்டி பார்க்க வில்லை. அருகில் இருந்த ஒரே காரணத்தினால் கௌதம் வந்து பிரகாஷை கையில் தூக்கிச் சென்றான். இரு கரங்களுக்கு நடுவில் குழந்தைபோல்.
" அண்ணே… இந்த மாறி நம்மல ஒருத்தர் தூக்கிட்டு போறதும் நல்லாதா இருக்கு. காத்துல மிதக்கும் மாறி. " எனக் கைகள் இரண்டையும் விரிக்க, காண்டான கௌதம் அவனின் காலைச் சுவற்றில் மோதுவது போல் சென்றான்.
" அண்ணே… அண்ணே… பாத்துண்ணே… என்ன இந்துவா நினைச்சி தூக்கிட்டு போண்ணே. "
" நீ… இந்துவா டா… கற்பன பண்ணி கூடப் பாக்க முடியல. அதுமட்டுமில்ல எம்பொண்டாட்டிய கூட நா இப்படி தூக்குனது இல்லடா. உன்னைய போய்த் தூக்குறேன் பாரேன். " எனச் சலித்துக் கொள்ள,
" பிறை தேயாத சந்திரனான உன்னோட தம்பிக்கு. நீ என்ன வேண்ணாலும் செய்யலாம்ண்ணே. "
" காலங்காத்தால உனக்குக் கொல்லப்புறத்துல என்ன டா வேல. " எனக் கேட்டபடியே மாடியில் அவனின் அறைக்குத் தூக்கிச் சென்றான்.
" கதிரவனை பார்க்க வந்த கன்னியை ரசிக்க வந்தது இந்தக் காளை. அண்ணே கவிதையா கொட்டுதுண்ணே. " பிரகாஷ்.
" டேய் வேணாம்டா. உனக்காக அண்ணே பேச்சிட்ட பேசி வச்சிருக்கேன்டா. இந்த மாநகர மங்கை நமக்கு வேணாம்டா. "
" எனக்கு வேணும் ண்ணே. பேரு ஜெனிபர் ண்ணே. ஊரு கேரளாவாண்ணே. " என இதுவரை அவன் கண்டுபிடித்ததை கௌதமிடம் பெருமையாகச் சொல்ல,
" அட முட்டாப்பயளே. அந்த விசயம் எல்லாம் ஃபேஸ்புக்லையே இருக்கே, அதுட்ட கேட்டா இன்னேரம் அவளுக்குப் பாய் ஃப்ரண்டு இருக்கா இல்லையாங்கிறதையும் சேத்தே சொல்லிருக்கும். இதுக்கு போய்ப் பக்கம் பக்கமா டயலாக்கு. நீ இன்னும் வளர வேண்டிய இருக்கு தம்பி. "
" வளந்தது போதும்ண்ணே. ஆமா மாமனார் மாமியார் இல்லாத வீட்டுல பொண்ணு எடுத்தா, எதாவது சிக்கல் இருக்குமா. அண்ணே நாளைக்கி எங்கூட வாண்ணே."
"எங்கடா. "
" பக்கத்தூர்ல ராசியான ஜோசியக்காரெ ஒருத்தேன் இருக்கான். எனக்கும் ஜெனிக்கும் பொருத்தம் பாத்துட்டு வந்திடுவோம். "
" பொருத்தம் தான. அத பாக்குறதுக்கு ஜோசியக்காரென் வேணாம். எனக்குப் பின்னாடி ஒருத்தவங்க வாராங்க. அவங்க போதும் உனக்கு. " எனக் கையில் எண்ணெய் கிண்ணத்துடன் வந்து கொண்டிருந்த மலரைக் காட்டினான் கௌதம்.
" மேரி மாதா… " என அலறினான் அவன்.
" பனி பெஞ்சா மழை இருக்காது, பழம் இருந்தா பூ வராதுங்கிறது கணக்கால இருக்கு உங்கத… " மலர். மகனின் வலிக்கி தோதாய் பழமொழி சொல்ல,
" ம்மா… வரவர நீயும் உன்னோட மாமியார் மாறியே மாறிட்டு வர்ற. புரியாத பழமொழில்லாம் பேசாதம்மா. " பிரகாஷ்.
" டேய் பெரியம்மா சொல்ல வர்றதுக்கு அர்த்தம். நா பெரிய வீரன்னு ஊருக்குள்ள பந்தா மட்டும் தா காட்டத்த தெரியும். ஆனா ஒரு பொண்ணு தள்ளி விட்டா, கீழ் விழுந்து சில்லறைய அள்ளிருக்கிற, வெறும் வாய் பேச்சு மட்டும் தா. வேற எதுக்கும் நீ ஆக மாட்டேன்னு சொல்றாங்க. " கௌதம் அவனின் பாணியில் அர்த்தம் சொன்னான்.
" ம்மா… இந்த ஒரு செயல வச்சி உம்மகன தப்பா எட போடுறிங்க. நாளான்ணைக்கி நடக்கப்போற போட்டில வந்து பாருங்க. என்னோட வீரத்த இந்த ஊரோ சொல்லும். " ஜாம்பமாகப் பேச, அவனின் தாடையில் குத்தினார் அவர்.
"வீட்டுல பத்தாதுன்னு ஊர்லையும் எம்புருஷெ மானத்த வாங்கப்போறியாக்கும். நீ எல்லாம் எதுக்குடா இவ்வளோ பெரிய மீசய வளத்து வச்சிருக்க. போய் ஒட்டா வெட்டிக்க. எனக்குன்னு வந்து பிள்ளையா பிறந்துருக்க பாரு. வெட்டிக் கழுத. " மலர் மகனை வசைபாடிய படியே காலில் எண்ணெய் விட்டு நீவி விட்டுச் சென்றார்.
" இந்தக் காலுதா வீங்கிருக்கு. அப்ப இங்க தா வலிபோல. " என வருண். வலது காலை நீவ,
" நோ… நோ… ஆச்சி இங்க தா எண்ணைய கொட்டிருக்காங்க. அப்ப இந்தக் காலுல தா வலி. " என நந்து இடது காலைக் குத்த,
" இந்தக் கால் தா. " வருண்
" இல்ல இந்தக் கால் தா. " நந்து… இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. கூடவே பிரகாஷின் காலும் பந்துபோல் உருட்டி விளையாடப் பட்டது.
" ஆ… பாத்துட்டே இருக்கியேண்ணே. இவனுங்கள தொரத்தி விடேண்ணே. " பிரகாஷ் அலற
" வலி அதிகமா இருக்கு போல. நா போய் ஆக்ஷா பிளேட எடுத்துட்டு வாறேன். காலுன்னு ஒன்னு இருந்ததா தான வலின்னு ஒன்னு இருக்கும். " நந்து சொல்லிக் கொண்டே எழுந்து சென்றான்.
" டேய் வருணு. சித்தா உசுரு வேணும்னா அவன என்னோட ரூம் பக்கமே வர விடாம பாத்துக்க டா. எந்தங்கம்ல. உன்ன மட்டும் பைக்ல வச்சி ஒரு ரவுண்டு கூட்டீட்டு போறேன் டா. சித்தாக்காக… " எனக் கெஞ்ச, அவன் சரியெனத் தலையசைத்து விட்டுச் சென்றான்.
" நீ சொன்னத உண்மன்னு நம்பிட்டு போறான். அந்தச் சின்னப் பையன ஏமாத்துறியே, நியாயமா இது. " ஹரிணி. கூடவே ஜெனியும் வந்தாள், நலம் விசாரிக்க எனக் கையில் சில பழங்களுடன்.
" நா பண்றத விட உம்பின்னாடி இருக்குறஅந்தப் பொண்ணு எனக்குப் பண்ணது தா அநியாயம். யாராவது வீட்டுல வளக்குற நாயப் பாத்து பயப்படுவாங்களா. " பிரகாஷ் ஜெனியை முறைத்துக் கொண்டே கூறினான். பின்னே செய்வதை எல்லாம் செய்து விட்டு முகத்தை அப்பாவிபோல் வைத்துக் கொண்டு ஆப்பிளுடன் வந்தால் கடுப்பு வரத்தான செய்யும்.
" வீட்டுல வளக்குறதுன்னா சங்கிலி போட்டுக் கட்டிலாம் வைக்கமாட்டிங்களா. எம்முன்னாடி என்ன மொறைச்சி பாத்துட்டே நின்னுச்சி. இவ்வளோ பெரிய டாக்க நா பாத்தே இல்ல. அதா பயந்துட்டேன்." என விளக்கம் தர,
" உன்ன நல்லி எலும்புன்னு நினைச்சி பாத்திருக்குமோ. " கௌதம் கேலியாகச் சொல்லப் பிரகாஷ் கைஃபை கொடுத்தான்.
" ஏய்… அது டாக் இல்ல. டெய்ஸி… டிம்… கட்டி வக்கனுமா வேணாமான்னு நாங்க முடிவு பண்ணிப்போம். நீ பேசாத அதப்பத்தி. " ஹரிணி சூடாக வந்தது வார்த்தை.
" ஆமா… எங்களுக்குப் பரிசா வந்தத நாங்க சங்கிலில கட்டுவோம். இல்ல ஏசி ரூம்ல வாட்டர் பெட்ல படுக்க வைப்போம். யாரும் கேக்க கூடாது. என்ன ஹரிணி. " எனக் கௌதம் கேலி செய்ய அவனை முறைத்தாள் அவள்.
"கிஃப்ட் டா யாராது டாக்க வாங்கி தருவாங்களா? பப்பிய தான வாங்கி தருவாங்க. அது தா புஸ்புஸ்னனு ஷாப்ட்டா, குட்டியா, கைகுள்ளயே வச்சி கொஞ்சிக்கிட்ட இருக்க நல்லா இருக்கும். இத பாத்தா பயந்தா வரும். " என்றாள் ஜெனி
"ஷட்டாப்… உன்ன எதுக்கு இங்க கூட்டீட்டு வந்தேன். போய் வேலைய பாரு டி. சும்மா நின்னு கத பேசிட்டு. " என ஹரிணி சிடுசிடுக்க,
" அந்தப் பரிசு. வெறும் காதல் பரிசு இல்லம்மா…" கௌதம்.
" அது கல்யா…ணப்பரிசு. " எனச் சொல்லி ஆண்கள் இருவரும் சிரிக்க, ஜெனி திருதிருவென முழித்தபடியே வெளியே சென்றாள்.
இருவரையும் முறைத்துக் கொண்டு கோபமாக நிற்கும் ஹரிணியை பார்த்தாள் அது அவளின் ஆசை கணவன் ரிஷிதரன் வாங்கி தந்ததாக இருக்குமோ…

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..