அத்தியாயம்: 23
"அக்கா நீ கூட என்ன புரிஞ்சிக்களன்னா எப்படிக்கா?. என்னால முடியாது. இனியும் நா உம்பேச்ச கேக்க விரும்பல. உனக்கு எம்மேல பாசம்ன்னு ஒன்னு இருந்தா, நா சொன்னத கேளு. இல்லன்னா நா செத்துட்டேன்னு என்ன தல முழுகி விட்டு." என ஃபோனில் ஹிந்தியில் கத்திக் கொண்டு இருந்தாள் ஜெனி.
அந்தப் பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ, இவள் கண்ணீல் நீருடன் கட்டிலில் அமர்ந்தாள். தான் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சுழலிலிருந்து தன்னை மீட்க யாருமே இல்லையா என்றிருந்தது அவளுக்கு. அந்தச் சுழலில் மாட்டி முழ்குவது ஒன்றை தவிர வேறு மார்க்கம் தெரியவில்லையென வேதனை கொண்டது அவளின் மனம்.
டக்... டக்...
"உள்ள வரலாங்களா.?" பிரகாஷ். இவள் கத்தும் சத்தம் கேட்டதால் என்ன செய்கிறாள் என்பதை அறிய கதவைத் தட்டினான்.
"ஹாங்... வாங்க பிரகாஷ்." என்றவள் அழுந்தித் தன் விரலால் முகத்தைத் துடைத்துக் கண்ணீரை காணாமல் ஆக்கினாள்.
"எதாவது பிரச்சனையா?. காச் பூச்சின்னு கத்திட்டு இருந்திங்க."
"நத்திங்." என்றாள் ஒற்றை வரியில்.
அவளுக்குத் தன்னிடம் பகிர விருப்பம் இல்லை என்பதை அறிந்த பிரகாஷ், "இந்த டிராயிங் எல்லாம் நல்லா இருக்கு. படம் வரைய யாரு சொல்லித் தந்தா."
"என்னோட அப்பா. அவரு ஒரு பத்திரிக்கைல கார்ட்டூன் ஆர்டிஸ்ட்டா வேல பாத்தாரு. சின்ன வயசுல இருந்து அவர பாத்து பாத்து வளந்ததுனால எனக்கும் வரைய வரும். சுமாரா இருந்தது. அப்றம் வரைய வரைய சூப்பரா இருக்குன்னு சிலர் சொன்னாங்க. அதுனால Bachelor of Art மும்பைல பண்ணேன். இப்ப மூணு வர்ஷமா ஒரு ஃபேஷன் டிசைனர் கிட்ட அசிஸ்டன்ட்டா வேல பாக்குறேன்." எனத் தன்னைப் பற்றிச் சொல்ல,
"உங்க டிராயிங்க அமேசான் மாறி ஆஃப் ல விக்கலாம்ல. இல்லன்னா ஆர்ட் கேலரில வச்சா நல்லா சேல் ஆகும்ல. ஏ கொறஞ்ச சம்பளத்துக்கு ஹரிணிட்ட வொர்க் பண்ணனும்."
"ஹரிணி எனக்குக் கொறஞ்ச சம்பளம் தர்றது இல்ல. அப்றம் நீங்கச் சொன்ன மாறிப் பண்ணலாம். ஆனா ஆன்லையன்ல நிறைய ஃபிராடு வேல தா நடக்குது. அதுனால அத ட்ரெய் பண்ணல. கேலரி மாறி வச்சா ஊடால இருக்குறவங்களே நம்மல ஏமாத்தி காச பிடிங்கிடுறாங்க. ஏமாந்து போய்ட்டு தா அத பண்ணல. இந்த உலகத்துல ஒன்ன இழந்தாத்தா இன்னொன்னு கிடைக்கிது. ஆனா எங்கிட்ட இருக்குற எதையும் நா இழக்கவும் விரும்பல. புதுசா ஒன்னு கிடைக்கனும்னும் விரும்பல. இருக்குறது போதும்னு வாழ்ந்துட்டு இருக்கேன்." எனத் தான் பணி புரியும் ஃபீல்டில் தன்னை குறி வைக்கும் சில மிருகங்களைப் பற்றி வருந்திப் பேச,
"நீங்க வருத்தப்படுறீங்கன்னு தெரியுது. ஆனா ஏன்னனு தா எனக்குப் புரியலங்க."
"எது பண்ணாலும் நமக்குச் சப்போட் வேணும்னு சொல்றேன். ஃப்ரெண்ஸ் ஃபேமிலின்னு. எனக்கு அப்படி யாரும் இல்ல. அதா கஷ்டமா இருக்கு."
"எதுக்குங்க யாரும் இல்லன்னு ஃபீல் பண்றீங்க. நா...ங்க இருக்கோம்." என இழுத்து சொல்ல, அவள் முகத்தில் வெட்கப் புன்னகை தோன்றியது. ஒரு நொடி மெய் மறந்து நின்றவன் தன்னை சமாளிக்கும் விதமாக.,
"இந்த ஸ்கெட்ச் பெயின்ட் எல்லாம்." என அதைத் தொடச் செல்ல, அது சிதறி விழுந்து தரையில் வண்ணக் கோலம் போட்டது.
"ஸாரிங்க... நா வேணும்னு பண்ணல, எல்லாமே வேஸ்ட் ஆகிடுச்சு." என அவற்றை எடுக்கக் குனிய, அவளும் குனிந்தாள். இருவரும் சேர்ந்தே எடுத்து வைத்தனர். வெகு அருகில் தெரிந்த அவளின் மதி முகம் விட்டு விழிகள் நகர மறுத்தன.
"இட்ஸ் ஓகே..."எனக் கையில் எடுத்துவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அவனின் பார்வையில் தன் தேகம் சிலிர்ப்பதை உணர்ந்தாள்.
விழிகள் தான் நகர வில்லை. ஆனால் கரம் உயர்ந்தது, அவளின் கன்னம் நோக்கி. ஏனென்றால் அவளின் கன்னத்தில் வண்ணக் கலர் ஒட்டி இருந்தது. அதைத் துடைக்கத்தான். ஆனால் உயர்த்திய கரம் தான் கன்னம் பற்றவில்லை. மாறாக அவளின் கரம்பற்றி அவளின் விரல்களாலே அதைத் துடைத்து விட்டான். அவனின் இந்தச் செயலால் ஜெனிபரின் மனதில் சேர் போட்டு அமர்ந்து விட்டான் பிரகாஷ்.
இன்றைய ஃபேஷன் உலகில் பார்த்ததும் கட்டி பிடிப்பது, முத்தம் குடுப்பது என நவீன கலாச்சாரத்தைப் பார்த்துப் பழகியவளுக்கு. தன்னை தீண்டத் தயங்கும் ஆண்மகனை எப்படி பிடிக்காமல் போகும்.
இன்று மட்டுமல்ல. அவனை முதல் முதலில் பார்த்ததிலிருந்தே அவன் தன் மேல் காட்டும் மரியாதை கலந்த அன்பு ரசிக்க வைத்தது. தந்தையின் இறப்பிற்கு பின் தன்னை அவர்போல் பார்த்துக் கொள்ளும் ஆடவன் அவளின் மனதில் கலந்து விட்டான்.
தைரியம், ஆண்மை நிறைந்த பேச்சு, விளையாட்டுத்தனமென எதை எப்போழுது காட்ட வேண்டுமோ அதை அப்படியே வெளிப்படுத்திய அவனின் குணம். அனைத்தும் பிடித்திருந்தது அவளுக்கு.
இருவரின் மோன நிலையைக் கலைத்தது செல் பேசியின் சத்தம். யாரென எடுத்துப் பார்த்தவள். முகம் வாட கட் செய்தாள். ஆனால் அது மீண்டும் இசைத்தது.
"ப்ளீஸ். இத பத்தி எங்கிட்ட பேசாதன்னு உங்கிட்ட சொன்னேன்ல. விட்டுடேன்." என மெல்லிய குரலில் ஹிந்தியில் கெஞ்சினாள். சில நொடிகள் நீடித்த உரையாடல் அவளை மீண்டும் சோர்வுற செய்தது.
"ஏங்க சம்பளம் குடுக்குறாங்ககிறதுக்காகக் கண்டபடி திட்டு வாங்கனும்னு அவசியம் இல்லங்க. உங்கள யாராது திட்டுனா திருப்பித் திட்டுங்க." என்றான் அவளின் சோர்ந்த முகம் கண்டு,
ஹரிணி தான் அவளின் கண்ணீருக்கு காரணம் என நினைத்து அக்கறையுடன் பேச, இவன் ஏன் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறானென புரியாமல் முழித்தாள்.
"நேத்து ஹரிணிட்ட திட்டு வாங்குனிங்கள்ள. அத தா சொன்னே. ரொம்ப தா திட்டுறா அவா. திருப்பித் திட்டலன்னாலும் பதிலுக்கு ஏதாவது நீங்கப் பேசிருக்கனும்ங்க. உங்களுக்குக் கோபம் வருமா வராதா. நீங்கச் சாப்பாட்டுல உப்பு போடுவிங்களா மாட்டிங்களா." என முக்கியமான சந்தேகத்தைக் கேட்க, அவள் சத்தமாகச் சிரித்தாள். அது ரசிக்கும் படி இருந்து.
"ஹரிணி திட்டலங்க. நா பண்ண தப்பு சுட்டி காட்டிருப்பாங்க. தேவை இல்லாம என்ன திட்டமாட்டாங்க."
"எங்களுக்கும் கண்ணு இருக்கு. காதும் இருக்கு. நாந்தா பாத்திருக்கேன்ல. இப்ப கூட அவாகிட்ட தான பேசுனீங்க. எனக்குத் தெரியும்." எனப் போட்டு வாங்க பார்க்க, அவள் சிரித்தாள்.
"நா ஹரிணி கிட்ட பேசலங்க. என்னோட அக்கா கிட்ட பேசீட்டு இருந்தேன். நா என்ன பேசுனேனு உங்களுக்குப் புரியலையா."
"எனக்கு ஹிந்தி தெரியாதுங்க."
"ஏ... நாலாம் தமிழ் எழுதத் தெரியலன்னாலும் பேசக் கத்துக்கிட்டேன். அதே மாறி நீங்கப் பேச மட்டுமாது கத்துக்கலாம்ல."
"ம்ச்... பிடிக்கலாங்க. அவ்ளோ தா."
"ஹிந்தி கத்துக்கலன்னாலும் பரவாயில்ல. மலையாளம் கத்துக்கங்க. உங்களுக்கு அவசியம் தேவப்படும்." எனக் கள்ளத்தனமாகச் சிரித்தபடி சொல்லி வெளியே சென்றாள் அவள்.
"மலையாளமா... அது நமக்குப் புரியும். ஆனா பதில் தா பேச வராது. ஆமா நா எதுக்கு அத கத்துக்கணும்." எனக் கேள்வி கேட்கப் பதில் தராது வெளியே சென்றிருந்தாள் அவள். அவளைத் தொடர்ந்து சென்றான் அவன்.
பாவம் பிரகாஷிற்கு ஒரு பெண்ணின் ஜாடை பேச்சைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மூளை வளரவில்லை. என்ன செய்தால் வளரும்.
"ஜெனி, இப்ப ஏதோ சொன்னியே. அதுக்கு என்ன அர்த்தம்." எனக் கேட்க,
"அர்த்தம் சொல்றதுக்கு அக்கா என்ன டிஸ்னரியா. இல்ல கூகுள் சாமியாரா." நந்து.
"டேய் நா உங்கிட்ட கேக்கல. ஜெனி."
"ஆனா நா உங்ககிட்ட தா பேசுறேன் மாமா. பிரகாஷு மாமா. அதென்ன அக்காவ செல்லப் பேர் வச்சி சுருக்கி கூப்பிடுறீங்க. அதெல்லாம் கூடாது. முழு பேர் சொல்லி மரியாதையா பேசுங்க."
"அவளே ஒன்னும் சொல்லல. நீ ஏண்டா வீணா கூவுற."
"அக்காவுக்குக் குரல் குடுக்க நா மட்டும் தா இருக்கேன். அவங்க என்னோட அக்கா இல்லையா. பத்திரமா பாத்துக்கணும் இல்லையா." என மல்லுக்கு நிற்க,
"உனக்கு வேற வேலை இல்லையா. போய்ச் சுதா லதா சித்தி கூட விளையாடு."
"நீங்கப் படிச்சிருக்கிங்கலா."நந்து சந்தேகமாக,
"நா ஒரு வக்கீலு டா." எனப் பெருமையாக ஜெனியை பார்த்தபடி சொல்ல,
"காலேஜ்லாம் போயிருக்கிங்களா." என அடுத்த கேள்வி கேட்டான் அவன்.
"அடிங்க... காலேஜ் போகாம எப்படிடா டிகிரி வாங்க முடியும். உன்னோட மாமா வருங்கால ஹைக்கோர்ட் ஜர்ஜ்."
"இந்த ஊருக்குக் கோர்ட்டு வந்தா கண்டிப்பா அதுக்கு நீங்கத் தா ஜர்ஜ். என்ன ஜெனிக்கா சரியா." என்க, ஜெனி சிரித்தாள்.
'ச்ச... இப்ப தா ஒரு ஹீரோ மாறிப் பில்டப் லாம் குடுத்து ரொமான்ஸ் பண்ணலாம்னு பாத்தா. இந்த டிக்கெட் வாங்காத வித்தவுட் வந்து மானத்த வாங்குதே.' எனக் கடுப்புடன் நந்துவை பார்க்க, ஜெனி இன்னும் தன் சிரிப்பை நிறுத்தவில்லை.
"அப்படி என்ன நடந்துச்சின்னு விழுந்து விழுந்து சிரிக்கிற."
"இல்ல, சுதாவும் லதாவும் இப்ப ஸ்கூலுக்கும் காலேஜ்கும் போயிருப்பாங்க. இது கூடத் தெரியலையான்னு தா உங்கள அவெ கிண்டல் பண்றான். இவ்வளோ பெரிய ஆளாக எதுவும் தெரியாம வளந்துருக்கிங்களேன்னு சொல்றான்."
"ஓ... பட், கடைசியா சொன்னது அவெ நினைச்ச மாறித் தெரியலையே." என அவளை உற்றுப்பார்த்து கேட்க,
"உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நா நினச்சதே கிடையாது."
"அப்ப எனக்கு என்ன தெரியும்னு உங்களுக்குத் தெரியுமா." என ஆவலுடன் கேட்க, அவளுக்குக் கன்னம் லேசாகச் சிவந்தது.
"ஹலோ! இங்க தா ஒருத்தன் இருக்கேங்கிறத மறந்துட்டு பேசிட்டு இருக்கிங்க."
"எங்கடா பேசவிட்ட. அதா சரியா நடுவுல நடுவுல வந்து கட்டைய போட்டுடுறியே. இப்ப உனக்கு என்ன வேணும்."
"எனக்குப் போர் அடிக்குது. என்னால அத திருப்பி அடிக்க முடியல. அதுனால."
"அதனால நா அத அடிக்கனுமா."
"தேவையில்லாத ஆணியொல்லாம் நீங்கப் புடுங்க வேண்டாம். அதுக்கு எங்க நைனா இருக்காரு. வந்து எங்கூட விளையாடுங்க. இல்ல வெளில கூட்டீட்டு போங்க." எனக் கேட்கச் சற்று யோசித்த பிரகாஷ்.
"வெளியிலயே போவோம்மே. பைக்ல. நாம மூணு பேரும்." எனச் சைக்கிள் கேப்பில் அவளையும் அழைக்க, அவள் சரியெனத் தலையசைத்து சென்றாள்.
"மூணு பேரா!. எதுக்கு.? நாம ரெண்டு பேர் மட்டும் போவோம்."
"டேய், இன்னைக்கி நீயும் ஜெனியும் ஊருக்குப் போறிங்கள்ள. அதா ரெண்டு பேத்துக்கும் எதாவது வாங்கித் தரலாம்னு. உனக்குப் பிடிச்ச சின்ஷன் பொம்ம கூட ஒரு கடைல இருக்கு டா. மாமா வாங்கித்தாரேன்." என ஐஸ் வைக்க,
"இந்த லஞ்சம் பத்தாது. கூடவே டைனாசர் பொம்ம வேணும். அதுவும் உங்கள மாறியே." என்றவனை இழுத்துக் கொண்டு வெளியே செல்லத் தயாரானான்.
எப்படியும் சென்னைக்கு சென்றால் அவளைப் பார்த்துப் பேசலாம் தான். ஆனால் இங்கு வந்ததன் அடையாளமாகவும் தங்களின் சந்திப்பின் நினைவாகவும் இருக்க அவளுக்கு கிஃப்ட் வாங்கி தர எண்ணினான். என்ன வாங்கலாமென யோசித்தபடி பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்ப, சரியாக ஜெனி அவனின் பின்னால் அமரும் நேரம் ஹரிணி வந்தாள்.
"எங்க போறிங்க நீங்க?."
"போகும்போது எங்க போறன்னு கிழவி மாறிக் கேள்வி கேக்கக் கூடாது ஹரிணி. போய் அகிலனுக்கு தேவையானத பாரு. போ. " எனப் பிரகாஷ் விரட்ட,
"மாமா ஜெனி அக்காவுக்கு கிஃப்ட் வாங்க கூட்டீட்டு போறாரு. அடியேன் தேர்ந்தெடுக்க போறேன். கவலப்படாதிங்க எல்லாத்தையும் நா பாத்துப்பேன். " நந்து, சொல்ல ஜெனி முழித்தாள்.
"ஓ.! மேடம்க்கு என்ன கிஃப்ட் வாங்கி குடுத்தா பிடிக்கும்." ஹரிணி நக்கலாக.
"ஐய்யோ!. ஹரிணி அப்படில்லாம் எதுவும் இல்ல. நந்து தா போர் அடிக்குதுன்னு சொன்னான். அதா சும்மா ஒரு ரவுண்டு போலாம்னு." என இழுக்க, அவளைப் பேச விடாது ஹரிணி முறைத்தாள்.
"ஸாரி." என்றாள் சிறிய குரலில்.
"இவங்கூட ஊர் சுத்த ஒன்னும் நா உன்ன கூட்டீட்டு வரல. போய் வேற வேலைய பாரு." எனத் திட்ட அவள் பிரகாஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். கூடவே நந்துவும் சென்றான்.
"ஹரிணி திஸ் இஸ் டூ மச். தேவை இல்லாம அவள நீ திட்டுற." என ரோசமாகப் பொங்கி எழுந்தான் பிரகாஷ்.
"திட்டக் கூடாதாக்கும். என்னோட ஸ்டாஃப் அவ. அவள நா காரணத்தோட திட்டுவேன். காரணம் இல்லாமலும் திட்டுவேன். உனக்கென்னடா."
"இதுவரைக்கும் எப்படியோ. ஆனா இனி நீ திட்டக் கூடாது."
"ஏ..."
"அது உனக்குத் தெரியும்போது தெரியும். இப்ப எதுக்கு திட்டுன அவள."
"காரணத்தோட தா திட்டுனேன்."
"என்ன காரணம்."
"இன்னும் பத்து நாள்ல கல்யாணம் ஆகப்போற பொண்ணு அடுத்தவெங்கூட பைக்ல போனா. ஊர் என்ன சொல்லும். உனக்கும் நாளைக்கு பொண்ணு கிடைக்கிறது கஷ்டமா போய்டும். அதா திட்டுனேன்." என சொல்லப் பிரகாஷ் ஒரு நொடி மௌனமானான். பின்,
"ஹரிணி விளையாடாத. நா அவள விரும்புறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுறேன். என்ன காயப்படுத்தனும்னு எதுவும் சொல்லாத." பிரகாஷ். நம்பாத தன்மையும் அவளை எச்சரிக்கும் விதமாகவும் இருந்தது அவனின் குரல்.
"உங்கிட்ட ஃபேஸ் புக் இருக்குல்ல. அதுல பாரு. அவளோட எங்கேஜ்மெண்ட் ஃபோட்டோஸ் இருக்கும். நா பொய் சொல்லனும்னு அவசியமில்ல. நீ ரொம்ப டீப்பா போய்டக்கூடாதுன்னு தா சொல்றேன். எனக்கும் உம்மேல அக்கற இருக்கு. " எனச் சொல்லிச் செல்ல, அவன் தன் ஃபோனில் இருந்த முகநூலை எடுத்துப் பார்த்தான்.
பார்த்தான்.
பார்த்தவன் அப்படியே அமர்ந்து விட்டான். வலி, தன் இதயத்தைக் கூரான ஆயுதம் பிளப்பது போல் இருந்தது. பாவம் பிரகாஷ். ஹரிணி இப்படியொரு குண்டைப் போடாமல் இருந்திருக்கலாம்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..