அத்தியாயம்: 30
அது இந்தியாவில் மிகச் சிறிய மாநிலம். உள் நாட்டிற்குள் இருக்கும் வெளி நாடு. பீச், ரிசார்ட், வாட்டர் அட்வெஞ்சர்ஸ், கேசினோ, மியூசியம், தேவாலயங்கள், இரவு நேர பார்ட்டியென நாம் கற்பனை செய்து பார்க்கும் அத்தனை விசயங்களும் இங்கு உண்டு. சிங்கிளாக வருபவர் முதல் குடும்பமாக, ஜோடியாக வருபவர்கள்வரை அனைவரும் கண்டு களிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு எல்லாம் இப்போது நாம் செல்லவில்லை. நாம் இருப்பது ஒரு பீச் டெஸ்டாரெண்ட். இரவு நேர பார்ட்டி காரணமாக அனைவரும் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
நேற்று நடந்த ஃபேஷன் சோ ஹரிணியின் கேரியரில் மிகப் பெரிய ஒரு மைல் கல் எனலாம். அது அவளின் கனவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. புதிய ஆர்டர், புதிய கஸ்டமர் என இரண்டு வருடங்களுக்கு அவளைப் பிஸியாக வைத்திருக்குமளவிற்கு வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன. அவள் ஒருவளால் மட்டும் இது சாத்தியம் இல்லையே. அதான் தன் உடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, கோவாவில் நான்கு நாட்கள் தங்கி இருந்து, சுற்றிப் பார்க்க வசதிகளைச் செய்து குடுத்துள்ளாள். அவளின் செலவில்.
ப்யூட்டிஸ்யன், மாடல்ஸ், பார்ட்னர்ஸ், கேமரா மேன் என அனைவரும் குதுகலித்துக் கொண்டிருக்க, ஹரிணி மட்டும் கடுப்புடன் தன் முன் இருந்தவனை முறைத்துக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அவளின் எதிரில் இருந்தவனோ அவளை ஒரு பொருட்டாக நினையாது, தன் முன்னே இருக்கும் பாவ் பஜ்ஜியின் பன்னை நிதானமாகப் பிட்டு அதன் குழம்பில் முக்கி எடுத்துத் தன் வாயிக்குள் போட்டு மெதுவா அசை போட்டு ரசித்து உண்டு கொண்டிருந்தான்.
ரிஷி தரன்...
"பா...வா..." என்றாள் கடுப்புடன். அவன் புருவம் உயர்த்தி என்ன என்றானே தவிர சாப்பிடுவதை நிறுத்த வில்லை. ஆழ தன் மூச்சு எடுத்து விட்டவள்,
"எப்ப அங்க வந்த? எப்படி வந்த?. அதுவும் கரெக்ட்டான நேரத்துக்கு. காலைல இருந்து கேக்குறேன். எதாவது பேசு பாவா. பதில் சொல்லு. ச்ச... உன்னால எனக்குச் சீக்கிரமே ஹார்ட் அட்டாக் வந்திடும். இந்தச் சின்ன வயசுல என்ன அல்பாயுஸ்ல சாகடிக்க போற, உங்கிட்ட தாம்பேசுறேன். பாவா..." எனக் கத்தியவளுக்கு பதிலாக, உண்ணும் உணவிலிருந்து ஒரு வாய் பிட்டு உனக்கு வேண்டுமா? எனக் கேட்டு நீட்ட, கடுப்பாகி போனது அவளுக்கு.
சரி இவன்தான் வாயைத் திறக்காமல் கடுப்பேற்றுகிறான் என்றால், தன் அருகில் இருக்கும் இரு ஜீவன்கள் திறந்த வாயை மூடவே இல்லை. ஒரு மணி நேரம் முடிந்து விட்டது ஆனாலும் பேச்சு ஓயவில்லை. அது பிரகாஷ் மற்றும் கௌதம்.
"ம்... அப்றம்..." கௌதம் ஆவலாகக் கதை கேட்க,
"எல்லாரும் ஆலமரத்துல பஞ்சாயத்துக்கு உக்காருற மாறிப் பாய் விரிச்சி நடு வீட்டுல உக்காந்துட்டாங்க. எனக்குன்னா பயம். ஆனாலும் நா அத காட்டிக்காமா அப்பாட்ட ஜெனிய பத்தி சொல்ல, நாட்டாம அப்ஷட் ஆகிட்டாரு. அது பத்தாதுன்னு நம்ம கிழவி வேற வில்லு பாட்டு பாடுற மாறிச் சொலவடையா சுட்டு தள்ள."
"ப்யூட்டி எனக்கு மட்டும் தா பழமொழி தெரியுங்கிற கணக்கா எல்லாத்தையும் எடுத்து விட்டுருக்குமே."
"கரெக்ட்டுண்ணே. எக்கச்சக்கமா சொல்லுச்சி. ஆனா எனக்கு எதுவுமே புரியவும் இல்ல நியாபகமும் இல்ல. ஹாங். எலி, ஏ அம்மனமா ஓடுதுன்னு பூனைக்கி தெரியாதாக்கும்னு ஒன்னு. அப்றம் கத்திரிக்க முத்தினா கட தெருவுக்கு வந்து தான தீரனும்னு ஒன்னு. இப்படி பல பழமொழிய எடுத்து விட்டுச்சு."
"ப்யூட்டி பேச ஆரம்பிச்சா. அதோட வாய் நிப்பாட்டவே முடியாதே. எப்படி சமாளிச்ச."
"நா எங்க சமாளிக்க. நா ஜெனிய லவ் பண்றேன்னு மட்டும் தா சொன்னேன். தரன் அண்ணே தா பக்கம் பக்கமா சென்டிமென்ட் டயலாக் பேசி, அப்பாவையும் மத்தவங்களையும் சம்மதிக்க வச்சாரு. எவ்ளோ அக்கற தம்பிமேல்." என வராத கண்ணீரை துடைக்க,
"ரொம்பத்தா குப்பற பாயுது. சரி அப்றம் எப்ப பஸ் ஏறுனீங்க. எப்படி கரெக்ட் டயத்துக்கு வந்திங்க.?"
"என்னண்ணே கேணத்தானமா பேசுற. பஸ்ல வந்தா ரொம்ப நேரம் ஆகும்ண்ணே. அதுனால கார்ல வந்தோம். அதுவும் ஜெட்டு வேகத்துல. சர்... சர்ருன்னு."என ஆக்ஷன் செய்ய,
"காரா!. அவெங்கிட்ட சொந்தமா காரு கிடையாதே. அப்றம் வேற யாரோட காருல வந்திருப்பான்." என யோசிக்க,
"உன்னோட காரு தாண்ணே. இங்க பாரு சாவி." என அவனின் ஆடிக் காரைக் காட்ட, கௌதம் ஷாக் ஆனான்.
"அடப்பாவி!. என்னோட கார்லயா டா வந்த!. நா அதுல அறுபது கிலோமீட்டருக்கு மேல போனதே இல்லடா. ஆனா நீ."
"ஒரு மணி நேரத்துக்கு அதுல 240 கிலோமீட்டர் வேகத்துல போலாமாண்ணே. தரன் அண்ணே சொன்னாரு. அதா செக் பண்ணோம். பரவாயில்ல. நீ ஏமாறாம நல்லதா தா வாங்கிருக்க." எனத் தன் முன் இருந்த ஃபிஷ் பிரியாணியை காலி செய்தவன் கௌதமின் தட்டில் இருப்பதையும் சேத்து எடுத்துக் கொண்டான்.
சோகமா இருக்குறவனுக்கு சோறு எதுக்கு? என்பது போல்.
"இதுக்கு நீ பிளைட்ல டிக்கெட் புக் பண்ணி வந்திருக்கலாம்ல. சொல்லிருந்தா நானே டிக்கெட் போட்டுக் குடுத்திருப்பேன்." என்றவனுக்கு தரனின் கையில் தன் கார் சிக்கியது பிடிக்கவில்லை.
'கார காருன்னு நினைச்சி ஓட்டனும். ஆனா அவெ அப்படி ஓட்டமாட்டான். பல கோடிப்பு பல கோடி. அத எப்படி இவெ எங்கிட்ட கேக்காம எடுத்துட்டு வரலாம். எந்த நிலமைல இருக்கோ எங்காரு.' கௌதமின் மைண்ட் வாய்ஸ்.
"லூசாண்ணே நீ. லேண்ட் ஆனதுக்கு அப்றம் இங்க வர்றதுக்கு டாக்ஸி. ஆட்டோன்னு புடிக்கனும். டிராஃபிக் இருந்தா அதுக்கு வேற டயம் ஆகும். அதுமட்டுமில்லாம ஊர் சுத்தி பாக்கனும்னா நமக்குன்னு ஒரு கார் நம்ம கூடவே இருக்கனும்ண்ணே. அப்றம் ஜெனிய கூட்டீட்டு ரிட்டன் போறப்ப பஸ்லையோ டிரைனுலயோ கூட்ட நெரிசல்ல போனா நல்லாவா இருக்கும். சொல்லுங்க!. அதா ஒரே கல்லுல மூனு மாங்கா அடிச்சிருக்கோம்." என இருவரும் தங்களுக்குள்ளேயே பேச.
தன்னை பற்றிக் கண்டு கொள்ளாது அவரவர் வேலையிலேயே முழ்கி இருக்கும் மூவரையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு எரிச்சல் தான் வந்தது. எழுந்து சென்றாள் ஹரிணி.
அங்கு விறகு கட்டைகளை எறித்து நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி சுற்றி நடனம் ஆடிக் கொண்டு இருந்தனர் சிலர். வயசு வித்தியாசம் ஏதுமின்றி அந்த நாளின் முடிவை இனிதே கொண்டாடி மகிழ, அமைதியாக அங்கிருந்த பீச் சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கலானாள். யாரோ அருகில் இருக்கும் சேரில் அமரும் ஆரவாரம் கேட்டது.
வேற யாரும் இல்ல. அவளின் தலைவலிகளில் பெரிய தலைவலி. நான்காவது எரிச்சல். சுனில் ஷர்மா.
"பை தா வே நா உனக்கு வாழ்த்துக்கள் சொல்லத்தா வந்தேன். உன்னோட ரெண்டு காஸ்ட்யூம் டாப் டென்ல செலக்ட் ஆகிருக்கு. பெஸ்ட் டிசைனரா நீ செலக்ட் ஆனதுக்கு. அப்றம் சென்னைல நீ ஸ்டார்ட் பண்ண போற உன்னோட புது ஹவுஸ் அண்ட் பெட்டிக்குக்கு. ஷீ... உன்னோட ஃப்யூச்சர் இன்னும் நல்லா இருக்கனும்னா உனக்கு என்ன மாறி ஆளோட தேவ அதிகமா இருக்கு. நா ஃபேஷன் இன்டெஸ்ட்டீல ஒன் ஆஃப் தா மெம்பர். அதுனால எனக்காக நீ வேர்க் பண்ணும்போது, நல்ல அனுபவம் கிடைக்கும். என்ன சொல்லுற." என்பதற்குள் எழுந்து விட்டாள் ஹரிணி.
"நா உங்ககிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன் ஸார். என்னோட வழிய நானே பாத்துக்கிறேன்னு. ஏ திரும்பத் திரும்ப வந்து பேசுறீங்க. எனக்குப் பிடிக்கல உங்களுக்காக வேல பாக்க." எனக் கனிந்த குரலிலேயே மறுத்தவள், அவனை இதழ் திறக்காது மனதிற்குள் திட்டினாள்.
"ஒரு நாள் நாங்குடுத்த ஆஃபர ஏத்துக்காம போய்டோமேன்னு நீ ஃபீல் பண்ண கூடாது. அதா திரும்பத் திரும்ப வர்றேன். கேக்குறதுக்கு உனக்குக் கூச்சமா இருக்கலாம். ஆனா உன்ன வரவேற்க நா என்னைக்குமே தயாராத்தா இருக்கேன். என்னோட கம்பேனியும் உன்னோட வருகைக்காகத் திறந்தே இருக்கும்." என்றவனின் பேச்சு தூரத்தே கேட்டது அவளுக்கு. அவள் தான் நகர்ந்து சென்று விட்டாளே.
'திறந்த கதவு வழிய கண்டதும் உள்ள போய்டபோது. ஆல்ரெடி பல விச ஜந்துக்கள உன்னோட கம்பெனில வச்சிருக்க. இதுல நானும் சேந்துக்கனுமாம். இவனுக்குச் சூடு சொரணையே கிடையாது போல.' என முணுமுணுத்தாள் ஹரிணி.
நிச்சயமாக அவனுக்குக் கிடையாது தான். அது இருந்திருந்தால் இரண்டு ஆண்டுகளால ஹரிணியின் பின்னாலேயே வருவானா என்ன. அவள் அவனை மதித்துக் கூடப் பேசியது இல்லை எனும்போதும் வந்தான்.
"ச்ச... இன்னைக்கி எந்த இடத்துலையும் நமக்கு நிம்மதியே இல்ல. எரும மாடுகளா வந்து முன்னாடி நிக்கிது. ஸாரி இவங்கூட கம்பேர் பண்ணி நா மாடுங்கள கேவலப்படுத்திருக்க கூடாது. வெரி ஸாரி." எனப் புலம்பிய படி நடந்தவள் எதிரில் நின்றிருந்த ரிஷியின் மீது மோதி நின்றாள்.
"உனக்குக் கண்ணே தெரியாதா கிட்?. எதுக்க யாரு நிக்கிறான்னு கூடப் பாக்காம, கனவு கண்டுட்டு வாரியா என்ன." ரிஷி வாயைத் திறக்கும் முன், ஹரிணியே அவனின் குரலாய் மாறி அவளைத் திட்டிக் கொண்டாள்.
அவளின் புலம்பலில் புன்முறுவல் பூத்தவன், "கிட், என்னாச்சு உனக்கு. உனக்கு நீயே பேசிட்டு இருக்க."
"என்னோட தலையெழுத்து. சிஸ்க் பேக் வச்ச புருஷன் இருக்கான்னு நா பேரு. ஆனா பொண்டாட்டிக்கி ஒரு உதவி பண்ண பக்கத்துலையே வரமாட்டேன்கிறான்." எனச் சலித்தது கொண்டு நடக்க, அவனும் அவளுடன் நடந்தான்.
"பட், என்னோட கிட் காகத்தா நா நேத்தே வந்தேன். எனக்கு மேச்சே ஆகாத அவா குடுத்த டிரஸ்ஸ போட்டுடுட்டு நாம்பட்ட கஷ்டம் இருக்கே. ஹப்பா." என எதோ விண்வெளிக்கு சென்று செடி நட்டு வைத்து வந்தவன் போல் அலுத்துக் கொள்ள, ஹரிணி முறைத்தாள்.
"உனக்காக நா பாத்து பாத்து டிசைன் பண்ணா! மேச்சாகாத காஸ்ட்யூம்னு சொல்லுற. உன்ன." என அவனை அடிக்க அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.
இருவரும் கடற்கரையில் சிறிது தூரம் நடந்து செல்ல முடிவெடுத்து நடந்தனர்.
செல்லும் முன்னே ஹரிணி அந்தச் சுனிலை முறைத்துக் கொண்டே வந்தாள். சுனில் தன் நடனத்திறமையை காட்ட, அங்கிருந்த பெண்களுடன் உல்லாசமாக ஆடுகிறேன் என்ற பெயரில் கண்டதையும் செய்துகொண்டிருந்தான்.
"கிட், அவெ என்ன அவ்வளவு அழகாவா ஆடுறான். முட்டிச் செத்தவெ மாறி ஆடிட்டு இருக்கான். அவன போய் வச்ச கண்ணு வாங்காம பாக்குற." ரிஷி அவளின் கரம் கோர்த்து நடந்தபடி.
"ச்சீ... பாவா, அவெ ஆடுறதுக்கு பேரு டான்ஸ்ஸு. அந்தக் கதவிடுக்குள மாட்டுன மூஞ்செலிய நா பாக்கவேற செய்யனுமா!. ஆனா அந்த ஷீ கிரியேச்சர் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது பாவா." என நேற்றும் அதற்கு முன்னும்னு சுனிலுடன் நடந்த உரையாடல்களைச் சொல்ல,
"எனக்கு என்ன ஆத்திரம்னா. என்னால அவன ஒன்னுமே பண்ண முடியலங்கிறது தா. அவெ ஃபேஷன் கமிட்டில முக்கியமான போஸ்ட்ல இருக்கான். எதுவும் செய்ய முடியாத சூழ்நிலைல தவிக்கிறேன்." என அவள் இதழுடன் காற்றில் கைகளும் கவி பாட, அவளின் கன்னம் உரசும் காதணியும், நெற்றியை முத்தமிட்ட முடி கற்றையையும் சேர்ந்தே கதை சொல்லியது. அதை ஒற்றை விரலால் தீண்டச் சொல்லும் நேரம்,
"பாவா, உன்னால அவன எதுவும் பண்ண முடியுமா?. எனக்காகப் பண்ணு. அடுத்து அவெ என்னோட முகத்த நிமிந்து கூடப் பாக்க கூடாது. அந்த மாறி உன்னால பண்ண முடியுமா?. ம்..." என அவனின் கரம்பற்றிக் கேட்க, அவன் சிரித்தான். அதுவும் சத்தமாக.
"இப்ப எதுக்கு நீ சிரிக்கிற பாவா?."
"நா எதுவும் பண்ணலாப்பா. அப்றம் அனைத்து உயிர்களும் சமம்ன்னு, போதி தர்மர் மாறி வேதாந்தம் பேச ஆரம்பிச்சி சண்ட போடுவ. தேவையா எனக்கு இது?."
"சொல்லமாட்டேன். அப்படி எதுவும் சொல்லுறமாறி அவன நீ பண்ணாதா. கைய உடைச்சிடாத. கால பதம் பாத்திடாத. உடம்புல எந்தப் பார்ட்ஸ்ஸும் டேமேஜ் ஆகக் கூடாது. ஆனா எதாவது பண்ணனும்."
"இது உனக்கே அநியாயமா தெரியல."
"ம்ச்... நாம அவன டேமேஜ் பண்ணா! ஸ்கூல் ஸ்டுடெண்ஸ் டீச்சர் கிட்ட போட்டுக் குடுக்குற மாறி அவெ போலிஸ் ஸ்டேஷனுக்கு போய்டுவான். எனக்கு ஐஜிய தெரியும், காண்ஸ்டபுல்ல தெரியும், கவர்னர தெரியும்னு யாரையாது கூட்டீட்டு வந்து உக்கார வச்சிட்டுவான். அது புதுசா நா ஸ்டார்ட் பண்ண போற என்னோட ஃபேஷன் ஹவுஸ்க்கு ஆபத்து. அதுனால செய்யனும். ஆனா அவனால வெளில சொல்ல முடியாத அளவுக்குச் செய்யனும். இந்தத் திருடனுக்கு தேள் கொட்டுன மாறி, கத்தவும் முடியாம, பொறுத்துக்கவும் முடியாம, அவெ திணறனும். அத நா பாத்து ஹப்பியாகனும். உன்னால பண்ண முடியுமா. ம்..." என ஆவலாகக் கேட்க,
அவன் தன் புருவங்கள் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றி இறக்கி புன்னகையை பதிலாகத் தந்தான்.
"ஒன்னு பண்றேனு சொல்லு. இல்ல முடியாதுன்னு சொல்லு. எதுவுமே சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம் பாவா." எனச் சண்டைக்குச் செல்ல, கொஞ்சம் ஊடலும், கொஞ்சம் சீண்டலுமாக இருவரும் வெகுநேரம் அந்தக் கடற்கரையில் தங்கள் பொழுதைக் கழித்தனர்.
திரும்பி வரும்போது அந்த ரிசாட்டில் கூட்டமாக இருந்தது. ஒரு நாற்காலியில் சுனில் ஷர்மா அமர்ந்திருந்தான். அவனின் பாடிகார்ட் அவனைச் சுற்றி பாதுகாப்பிற்கு நிற்க, நான்கைந்து மருத்துவர்கள் வந்து அவனின் பஞ்சரான மூக்கை பட்டி டிங்கரின் பார்த்துக் கொண்டு இருந்தனர். யாரிடமோ பலத்த அடி வாங்கி உள்ளான். யாராக இருக்கும்.
ரிஷியையும் ஹரிணியையும் கண்டவன் வேகமாக எழுந்து வந்து, "என்ன ஆள் வச்சி அடிக்கிறியா?. இனி நீ எப்படி இந்த ஃபில்டுல இருக்கன்னு பாக்குறேன். சும்மா விடமாட்டேன். கால் தா போலிஸ். அவிங்க ரெண்டு பேர் மேலையும் கேஸ் குடுக்குறேன். என்ன அவமானப்படுத்துன அவனுங்கள உள்ளையே வச்சி." எனச் சம்பந்தம் இல்லாமல் ஹரிணியிடம் பேச. இருவரும் குழம்பித்தான் போயினர்.
'எதுக்கு இவ தண்ணீல விழுந்த கரப்பாம் பூச்சியாட்டம் துடிக்கிறான். ஆனாலும் இவனோட பேஸ் கட்டுக்கு மூக்குல போட்டுருக்குற பிளாஸ்த்திரி நல்லாத்தா இருக்கு. இத கொஞ்சம் இறக்கி வாய்ல போட்டிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்.' என நினைக்காமல் இருக்க முடியவில்லை ஹரிணிக்கு.
எனக்கு இவனத் தெரியும்.அவனத் தெரியும்ன்னு கச் மூச்சான்னு மூச்சி விடாமல் கத்தியவனை ரிசார்ட்டின் மேனேஜர் வந்து சமாதானம செய்ய. சற்று அமைதியானான் அவன். ரிசாட்டின் உதவியாட்கள் இவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.
அங்குக் கௌதமும் பிரகாஷ் அமர்ந்திருந்தனர். அவர்கள் முகத்திலும் சிறு காயம். இருவருக்கும் முதலுதவி செய்து அமர வைத்துள்ளனர்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..