அத்தியாயம்: 36
டம்... டமார்...
பாத்திரங்கள் உருளும் சத்தம் அது. அந்த வீட்டின் மூத்த மருமகள் மலர்மங்கை கோபமாக உள்ளார் என்று அர்த்தம்.
'பின்ன மகன் பொண்ண கூட்டீட்டு வர்றேன்னு சொல்லிட்டு பொண்டாட்டியா கூட்டிட்டு வந்தா! ' வாடா மகனேன்னு.' வரவேற்பாங்களா என்ன?. கோபத்துல சமக்கட்டையே தொம்சம் பண்ணிட்டு இருக்காங்க.'
"டேய்!. உங்கிட்ட நேத்தே என்ன சொன்னேன். உம்பக்கம் பேச ஆளுகள சேருன்னு சொன்னேனா இல்லயா?."
"நா ஃபோன் பண்ணேண்ணே."
"அப்ப எங்கடா நம்ம நட்சத்திர பேச்சாளர்கள். ஒருத்தரையும் காணுமே!. நாம வர்ற தகவல சரியா சொன்னியா இல்லையா?."
"அது நா ஃபோன் பண்ணேனா! ஆனா, யாருமே எடுக்கல. சரி வந்து பேசிக்கிவோம்னு விட்டுட்டேன். எங்காத்தா வாயிமேலையே நாலு போடு போட்டு, பேச விடாம ஓரமா ஒதுக்கி வச்சிடு வாங்கன்னு யாரு கண்டா!." என்றவனை முறைத்தான் கௌதம்.
"கௌதம், வீட்டுல இப்போதைக்கி சிக்குன ஆடு நாம நாலு பேர் மட்டும் தான். மத்த ஆம்பளைங்க யாரும் வீட்டுல இல்ல." சம்பத், உடன் வேல்ராஜிம் இருந்தான்.
பிரகாஷிற்கு நாளை மறுநாள் திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுவதால் சொந்தங்கள் அனைத்தும் ஒன்று கூடிவிட்டனர். அசோக் குடும்பம் மட்டும் மிஸ்ஸிங். நாளைக்கி வந்திடுவாங்க.
"நமக்குன்னே உயிர குடுக்க இங்க ஒரு ஜீவன் இருக்கனுமே. தம்பி அங்க பாரு. நம்ம சித்தப்பு நமக்காகத் தல தெறிக்க ஓடியாதத." என வாசலைக் காட்ட, அங்குக் கவியரசனும் மூர்த்தியும் வந்து கொண்டிருந்தனர்.
"நல்ல வேல சித்தப்பா வந்திங்க. நா பயந்தே போய்டேன். வாங்க வந்து அம்மாட்ட என்ன பத்தி நல்ல விதமாக எடுத்துச் சொல்லிச் சேத்து வைங்க." என வேகவேகமாக அவர்களின் அருகில் சென்று ஆதரவை பெற நினைத்தான் பிரகாஷ்.
"உன்னய பத்தி நல்லவிதமா சொல்லுறதுக்கு என்ன டா இருக்கு. முட்டாபயளே. உன்னயெல்லாம் கால உடச்சி வீட்ட விட்டு வெளில தொரத்தி விட்டிருக்கனும்." எனக் கவியரசன் கோபமாகக் கத்த, காப்பாற்றுங்கள் என்பது போல் மூர்த்தியைப் பார்த்தான் பிரகாஷ். நா பாத்துக்கிறேன் என்றவரால் தம்பியை மட்டுமே தடுக்க முடிந்தது. மலரை அல்ல.
"எல்லாம் கலிகாலமாகிப் போச்சி. ஒருத்தனும் பொத்தவங்கள மதிக்கிறதே இல்ல. இந்த வீட்டுல ஆம்பள்ள பசங்களுக்கு சாபமோ என்னமோ!. ஒருத்தனுக்கு கூட வீட்டுல பொண்ணு பாத்து பேசி முடிவாகமாட்டேங்கிது. எல்லா பயலும் யாரையாது கூட்டீட்டு வந்திடுறானுங்க. இதோ இவெ அதுக்கும் மேல. எல்லாம் காதலிக்கிறேன் சொன்னா, இவெ மட்டும் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியோட வர்றான். கொஞ்சம் விட்டிருந்தா புள்ள குட்டியோட தா நின்னிருப்பான். வெளங்காதவே." எனப் பிரகாஷை தான் குறிவைத்து திட்டினார் மலர்.
'பின்னே ஒரு பையனுக்காது பொண்ணுன்னு ஒருத்திய பாத்து, சம்மந்தம் பேசி, பரிசம், நிச்சயம் கல்யாணம்ன்னு ஊர் மெச்ச நிதானமா கல்யாணம் பண்ணி வைக்க அவருக்கும் ஆச இருக்காத என்ன!. எவனுக்குமே மலர் பெண் பாக்கவில்லை. அவெ அவெனுக்கு பிடிச்சவள அவெ அவெ கல்யாணம் பண்ணிக்கிட்டான்.'
அவரின் மூத்த மகன் வேல்ராஜில் ஆரம்பித்து ரிஷி, அசோக், ஏன் இந்து, பவி கூட அவர்களுக்குப் பிடித்தவர்களைத் தான் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் இப்போது பிரகாஷ். அதான் கோபத்திற்கு காரணம்.
"நீங்கக் கவலப் படாதிங்க பெரிம்மா. எங்க ரெண்டு பேருக்கும், நீங்கச் சொல்லுற ஆளு தா மாப்பிள்ள. லவ்வு கிவ்வுன்னு யார் பின்னாடியும் நாங்க போகமாட்டோம். என்ன லதா?." கவியரசன் மகள் சுதா சொல்ல…
"ஆமா, பெரிம்மா. நீங்க யார சொன்னாலும் நாங்க கட்டிப்போம்." என்ற லதாவின் தலையில் வலிக்காமல் குட்டினான் கௌதம்.
"சுண்டாக்கா சைஸ்ல இருந்துட்டு. இப்பவே கல்யாணமா இதுக்கு. போ, முதல்ல +2 பாஸ் பண்ற வழிய பாரு." என இருவரையும் துரத்தி விட்டான் கௌதம்.
"என்னோட சார்பா இன்னும் ரெண்டு போட்டிருக்கலாம்ல ண்ணே. மொலைக்கிறதுக்கு முன்னாடியே கல்யாணமா இதுகளுக்கு." பிரகாஷ்.
"எங்களையா தொரத்துறிங்க. கடைசி வரைக்கும் பெரிமாவ சமாளிக்கவே முடியாம திணறப் போறிங்க. வாடி, ஓரமா நின்னு நம்ம அண்ணனுக்க பெரிமா கால்ல விழுந்து கெஞ்சிறத வேடிக்க பாக்கலாம்." என இவர்களை முறைத்துக் கொண்டே சென்றனர் இருவரும்.
"டேய் எங்கடா அவன்?." சம்பத்.
"யாரு மச்சான் ஸார்?." பிரகாஷ்
"ஹாங்!. இதுக்கெல்லாம் ஐடியா குடுத்து மாட்டி விட்டானே அவெ. உங்கொண்ணே." கௌதம்.
"உங்களுக்கு ஒன்னு தெரியுமா மச்சான் ஸார்!. எங்கம்மா எம்பொண்டாட்டிய விட்டுக்குள்ளையே விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க."
"டேய்!. நா என்ன கேட்டா நீ என்ன சொல்ற."
"பொறும மச்சான் ஸார், பொறும. பொறும எருமைய விடப் பெருசுன்னு உங்களுக்குத் தெரியுமா?."
"டேய் அறுக்காம ரிஷி எங்கன்னு சொல்லு டா." வேல்ராஜ்.
"அண்ணே எங்கன்னு தெரியனும்னா என்னோட அறுவைய நீங்கக் கேட்டுத்தா ஆகனும். அதுவும் கடைசி வரைக்கும். அப்பதா சொல்ல முடியும்." பிரகாஷ் சொல்ல, 'சொல்லித் தொல' என்பது போல் மற்றவர்கள் பார்த்தனர்.
"ஹாங்!. எங்க விட்டேன்?."
"ஜெனிய வீட்டுக்குள்ள விடல. அதுல விட்ட." சம்பத்.
"தப்பு, ஜெனி இல்ல மை வைஃப்."
என்றான் பிரகாஷ்.
"தம்பி நீங்கப் பண்ணதுக்கு பேரு கல்யாணாமா என்ன?. அது சைல்ட் மேரேஜி. எதுக்கும் முன் ஜாமின் எடுத்து வச்சிக்கிறது நல்லது. ஏன்னா வக்கிலுக்கே இன்னொரு வழக்கில் உதவி பண்ற மாறி ஆகிடக் கூடாதுல்ல." கௌதம்.
"அண்ணே ஜெனி மேஜர் ண்ணே. பதினெட்டு முடிஞ்சி, அவளுக்கு இருபத்திரெண்டு ஆகப்போது."
"பதினெட்டுக்கு அடுத்து பத்தொன்பது தான.?" வேல்ராஜ்.
"அந்தக் கணக்கு தெரியாததுனால தா அண்ணி உன்ன பந்துறாங்கன்னு நினைக்கிறேன்." பிரகாஷ்.
"டேய். அவன் ஜெனிய சொல்லல. உன்ன தா சொன்னான் சின்னப் பையன்னு. நீயும் அதுக்கு ஏத்த மாறித்தா நடந்துகிற." சம்பத் கேலி செய்ய அவர்களை முறைத்தான் பிரகாஷ்
"நானே எம்பொண்டாட்டிய பாக்க முடியலன்னு சோகமா இருக்கேன். இதுல எல்லாரும் சேந்து கிண்டல் வேற பண்றிங்கள்ளா."
"சரி இப்ப ஜெனி எங்க?. வீட்டுக்குள்ள விடலன்னதும் திரும்பி மும்பைக்கே தொரத்தி விட்டுட்டியா." சம்பத்.
"அந்தப் பொண்ண வீட்டுக்குள்ள விட்டிருந்தா! 'கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம்'ங்கிற கதையின்னு ஊரு பேசும். அப்படி பேசக் கூடாதுங்கிறதுக்காக வீட்டுல தங்க விடல." நாச்சியம்மாள்.
"என்னடா பழமொழி கிழவிய காணும்னு நினைச்சேன். இதோ வந்துட்டேல்ல. அப்படி என்னத்த பேசிடும் ஊரு." பிரகாஷ்.
"ப்யூட்டி, நீ இவன திருடனு சொல்றியா இல்ல தோட்டக்காரன்னு சொல்லுறியா?." கௌதம்.
"யாரு இவனா.? இவெ ஒன்னத்துக்கும் ஆகாத வெட்டிப் பயனென். இத்தன வர்ஷமா பாதுகாத்து வச்சிருந்த மானம் காத்துல பறந்தா ஊரு கைத்தட்டி சிரிக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி கல்யாணப் பொண்ணையும் பையனையும் ஒரே வீட்டுலையா வச்சிருப்பாங்க?. அதா இவெ அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுற வரத் தோட்டத்து வீட்டுல இருக்கட்டும்னு எம்மருமக சொல்லிருக்கா."
"ப்யூட்டி, எனக்கு ஒரு சந்தேகம். இந்த வீட்டுல நீ மாமியார் தான. நீ இருக்கும்போது உம்மருமக உனக்கு எதிரா அதிகாரம் பண்ணிட்டு இருக்குறத பாத்துட்டு இருக்க. இப்படியே விட்டேன்னா உம்மருமகள்களுக்கு குளிர் விட்டுப் போய்டும். உன்ன மதிக்கவே மாட்டாங்க. பாத்துக்க." கௌதம் நாச்சியம்மாள் ஏற்றி விட்டு மலருடன் சண்டைக்கி செல்லத் தூண்டிவிட்டான்.
"அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் மட்டும் தா இலாபம். அந்தக் கத தா எனக்கும்." நாச்சியம்மாள்.
"இது அடுத்தவெ வீடு இல்ல அப்பத்தா!. உ வீடு. அதுல வேற யாரையும் அதிகாரம் பண்ண விடக் கூடாது நீ. போய்ப் பேரனுக்குச் சப்போட்டா பேசி உம்மருமகள அடக்கு பாப்போம்." பிரகாஷ்.
"கனிந்த பழம் தானே விழுந்து தான ஆகனும்." நாச்சியம்மாள்.
"அப்படின்னா!."
"நா மாமியாரா இருந்த காலம் முடிஞ்சி போச்சி, இனி அவா தா மாமியார்னு அர்த்தம்." எனத் தன் பதவி பறிபோனதை பற்றிச் சொல்ல,
"புரியல அப்பதா நீ சொல்றது." பிரகாஷ்.
"எனக்குப் புரிஞ்சிடுச்சி. இனி ப்யூட்டி காலியா போன பெருங்காய டப்பா மாறி, வாசம் வரும். ஆனா, சமையலுக்கு யூஸ் பண்ண முடியாது. கரெக்ட்டா ப்யூட்டி." என்க, நாச்சியம்மாள் புன்னகைத்தார்.
தான் உயிருடன் இருக்கும் வரை வீட்டின் அதிகாரம் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று நினைக்காத பெண்மணி அவர்.
"அப்பக் கடைசி வரைக்கும் என்னோட கேள்விக்குப் பதில் வராது." சம்பத்
"என்ன கேள்வி மச்சான் ஸார்.?" என்ற பிரகாஷை முறைக்க,
"ஹிம், அவெ இவ்வளவு சொன்னதுக்கு அப்றமும் இதே கேள்விய கேட்டிங்கன்னா நீங்க ஒரு முட்டாப் பீஸின்னு உலகம் கண்டு பிடிச்சிடும்." கௌதம் கேலியாகச் சொல்ல, சம்பத் புன்னகைத்தான்.
ரிஷியும் ஹரிணியும் ஜெனியுடன் தோட்டத்து வீட்டில் தங்கியிருக்கச் சொல்லிவிட்டார் மலர். நாளை நிச்சயத்தின்போது ஜெனி வீட்டாரின் சார்பில் நிற்கப் போவதும் அவர்களே. இதோ, ரிஷி உள்ளே வரப் பிரகாஷ் சென்று தன் அன்னை கோபமாக இருப்பதாகக் கூறினான். தரன் உதடுகளில் உறைந்து புன்சிரிப்புடன் தன் மலரம்மாவை காணச் சென்றான்.
"மலரம்மா, இன்னுமா உங்க கோபம் போகல?."
"நீ எதுக்கு சமக்கட்டுக்குள்ள வந்த. போ அங்கிட்டு. இந்த வீட்டுல நிம்மதியா பொலம்பக் கூட எனக்கு உரிம இல்லாம போச்சு." என்றார் சிறு வருத்தத்துடன்.
"ஏ மலரம்மா உங்களுக்கு ஜெனிய பிடிக்கலையா?."
"நா சொன்னேனா!. ம்... பிடிக்கலன்னு நா சொன்னேனா?. இல்ல எனக்குப் பிடிக்காம மட்டும் என்ன ஆகப்போது?. நானா குடும்பம் நடத்த போறேன்." என்றவரை உற்றுப்பார்த்து கொண்டு நின்றான் தரன். 'பின்னென்ன.' என்பது போல்
"ஆனா, இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா இருப்பாளான்னு தா கவலப்படுறேன்." என்றார் அவர்.
ஏனெனில் முதல் மகனைப் பல காலமா பிரிந்து இருக்கிறார் அவர். விசேஷ நேரங்களில் மட்டும் வந்து செல்லும் விசேஷ மகன் வேல்ராஜ். தொடக்கத்தில் அபிநயா வீட்டுடன் வீட்டோட மருமகனாக மகன் சென்றது பிடிக்கவில்லை. அதன் பின் அபிநயாவின் தந்தையின் செயலான சொத்தைப் பிரிப்பது குறித்த பஞ்சாயத்து, அதன் பின் மகன் தன் பேரனைக் கூடக் காட்டாது வெளி ஊரிலேயே தங்கியது. அவருக்கு இப்போது இருக்கும் ஒரு நம்பிக்கை பிரகாஷ் மட்டுமே. கடைசி வரை தன்னுடன் இருப்பானா என்ற கவலையும் வந்துவிட்டது.
தங்கள் வீட்டில் வளர்ந்த குழந்தைபோல் சுற்றிவரும் செல்ல மகனும் தனிக் குடித்தனம் என்ற பெயரில் சென்று விடுவானோ என்ற பயம் தான். அவரின் கோபத்திற்கு காரணம்.
"ஜெனி நல்ல பொண்ணு மலரம்மா. அப்பாம்மா கிடையாது. நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகளா இருப்பா. சிட்டில பிறந்த பொண்ணுன்னு நினைச்சிடாதிங்க. நம்ம ஊரையும் நம்ம குடும்பத்தையும் அவளுக்குப் பிடிக்கும். ஹரிணி மாறி. " என ஜெனியை பற்றிச் சொல்ல, மலரின் முகம் தெளியவில்லை.
"நா இந்த வீட்டுக்கு மருமகளா வந்து கொஞ்ச வர்ஷத்துலேயே உங்கத்தை பட்ட மரமா தனிச்சி நின்னுட்டா. உங்கப்பனும் சித்தப்பனும் வீட்ட விட்டுப் போய்டானுங்க. அது எல்லாத்துக்கும் என்னோட ராசி தாங்காரணம்னு ஊரு சொல்லும். ஆனா, எதையும் நா காதுல வாங்கிகிட்டது இல்ல. அப்றம் நீ வந்த, உங்கப்பா அத்தாலோட. அப்றம் பெருமாளு வந்தான் குடும்பத்தோட. மறுபடியும் குடும்பம் சேந்தத நினச்சி சந்தோஷமா இருந்துச்சிய்யா.
இப்ப எனக்கு என்ன கவலன்னா, இதுவர உங்கப்பா சித்தப்பாங்களாம் சொத்துக்காகச் சண்ட போடமா ஒத்துமையா இருந்த மாறி, அடுத்த தலைமுறையான நீங்க நாலு பேரும் சண்ட போட்டுட கூடாது. அவங்க ஒரு தாய் வயித்து பிள்ளைங்க. ஒருத்தர் பேச்ச இன்னொருத்தர் கேட்டாங்க. அத்தையோட வளர்ப்பு அப்படி. ஆனா நீங்க நாலு பேரும் ஒத்துமையா இருந்தா அது எனக்குக் கிடைக்கிற பேரா இருக்கும். கூடப் பொறந்ததுகள விட்டுடக் கூடாதுய்யா. பொம்பளப்பிள்ளைங்க நம்ம வீட்டு லெட்சுமி." என்றவரின் குரல் தழுதழுத்து இருந்தது.
ஏனெனில், அவர் காதுகளுக்கு வரும் சேதி அப்படி. சொத்திற்காக அங்காளி பங்காளிகள் அடித்துக் கொள்வது. கோர்ட் கேஸ் என அழைந்து திரிவதையும் பலரை அறிந்தவர். ஜெனியின் அக்காவையும் மாமாவையும் பற்றி அறிந்ததிலிருந்து, பணம் என்ற ஒன்றை வைத்துக் குடும்பம் சிதைந்து விடுமோ என்ற கவலையே அவரின் பேச்சிற்கு காரணம். மேலும் பவித்ராவின் சில செயல்களில் அவருக்குப் பிடித்தமில்ல. இந்துவின் வளைகாப்பிற்கு பின் எப்பொழுது வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் சண்டையிடுவது போலே பேசி வருகிறாள்.
அவருக்குப் பிரகாஷின் விளையாட்டுத்தனத்தையும் பவித்ராவின் பேச்சையும் நினைத்துப் பயம் வந்து விட்டது. அதான் கலக்கம் அவரிடத்தில். ரிஷி அவரின் கரம்பற்றி அழுத்திப் புன்னகையுடன் கண்களை மூடித் திறந்தான். அது நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் இருந்தது.
அவன் பேசத் தொடங்கும் முன். ஹரிணி சமயலறையில் தன் தலையை நீட்டி, "பூவத்த, மே ஐ கம் இன்." என்க,
"இங்க வந்து என்னத்த பண்ணப்போறவ. சமக்கப் போறியா என்ன?."
"ம்மா, உங்க பிள்ளங்களுக்கு என்ன தண்டன வேணும்னாலும் குடும்மா!. ஆனா, இவா சமயல சாப்பிடுடச் சொல்லி எங்கள கொன்னுடாதம்மா. நான் வாழ வேண்டும்." பிரகாஷ், வந்து தன் அன்னையை அணைத்துக் கொண்டான்.
"குறிச்சி வச்சிக்க பிரகாஷ். ஒரு நாள் நா நல்லா சமைக்க கத்துப்பேன். அத இந்த வீட்ல இருக்குறவங்க உக்காந்து சாப்பிடுவாங்க."
"நீ ரெண்டாவதா சொன்னியே அது நடக்கும். உக்காந்து சாப்பிடுறது. ஆனா, முதல்ல சொன்னது. வாய்ப்பில்லமா. வாய்ப்பில்லை." கௌதம் சொல்ல, சம்பத் ஹரிணிக்கு ஆதரவாகப் பேசினான்.
"எங்க ராணிம்மா ஒன்னு சொன்னா அத செஞ்சு காட்டுவங்க."
"அப்ப ஹரிணி காலைல போட்டாளே காஃபி. அத எடுத்துக் குடு. மாட்டுக்கு ஊத்துனது போக மீதி இருக்குமே அது." வேல்ராஜ்.
"ஓ!! அது காஃபியா.! நா நீச்சுத்தண்ணணீன்ல நினைச்சி குடிச்சிட்டேனே. உசுருக்கு ஆபத்தாச்சே." பிரகாஷ் கேலி செய்ய, மலருக்கு மனம் நிறைந்திருந்தது. மூர்த்தியும் கவியரசனும் வந்து தன் அண்ணியிடம் பேசினர். மலர் ஒரு கின்னத்தை ஹரிணியின் கையில் கொடுத்தார்.
"இந்தா, இத கொண்டு போயி என்னோட மருமக விரல்ல வை. நடுவுலால கண்டமேனிக்கி கிறுக்கி வச்சது போக மீதி இருக்குற இடத்துல இதையும் வக்கச் சொல்லு. நம்ம வீட்டுல பறிச்சது. நல்லா செவப்பா பிடிக்கும்." என மருதாணியை மையாய் அறைத்து ஜெனிபருக்காகக் கொடுத்தார்.
"இதுல மீந்து போனத நா போட்டுக்கிட்டா திட்டுவிங்களா பூவத்த?."
"இத வச்சி நாலு யானை கால் விரலுக்கே போடலாம். போடி வந்துட்டா எவ்வேலைய கெடுக்குறதுக்குன்னே. எல்லாரும் போங்க அங்கிட்டு." எனத் துரத்தி விட்டார் அவர்.
"யானைக்கி எத்தன விரலு இருக்கும் கௌதம்." என ஹரிணி முக்கியமான சந்தேகத்தைக் கேட்க,
"யானைக்கி விரலு இருக்கா என்ன.?" என்று கௌதம் திருப்பிக் கேட்க, இருவரும் தோளைக் குளுக்கிக் கொண்டு வெளியைச் சென்றனர்.
இன்றும் பல வீடுகளின் மூத்த மருமகள்கள் அந்த வீட்டின் அன்னைக்கு நிகராகத்தான் கருதப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் ஒற்றுமைக்கு அந்த வீட்டின் மருமகள்களே காரணம். அந்த வகையில் நாச்சியம்மாள் கொடுத்து வைத்தவர். மலராகட்டும், கனகவள்ளியாகட்டும், ஜோதி, கிருபாவதியென யாவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பொறுமையுடன் நடந்து கொள்வர்.
அடுத்த தலைமுறையும் அப்படி இருக்க வேண்டும் என மூத்த மருமளாக மலர் நினைக்கிறான். அவருக்குச் சாதியோ மதமோ பெரிதாகத் தெரிவதில்லை. அந்த வீட்டின் ஒற்றுமையே பெரிதாகத் தெரிந்தது.
நிலைக்கட்டுமே அந்த ஒற்றுமை.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..