அத்தியாயம்: 39
இரவு நேரம்...
பேருந்து நிலையம்...
ஊருக்குச் சற்று தள்ளி உள்ளது. அங்கு யாருமே இல்லை, ஹரிணியையும் கௌதமையும் தவிர. ஹரிணி ஏதாவது பஸ் வருகிறதா! என இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டு நிற்க, கௌதமின் முகம் வாடி இருந்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை தீயில் அவனின் உள்ளம் கொதித்துக் கொண்டு இருந்தது. அதை அடுப்பிலிருந்து இறக்கி குளிர்விக்கத் தான் ஹரிணி வெளியே அழைத்து வந்துள்ளார்.
எங்குச் செல்கிறது என்று பேருந்தின் முன் இருந்த பலகையைக் கூடக் கவனியாது வந்த ஒரே பஸ்ஸில் கௌதமை தக்காளி மூட்டையை ஏற்றுவது போல் ஏற்றி விட்டு விட்டு, தானும் ஏறிக் கொண்டாள். ஜன்னல் சீட்டில் கௌதமை அமர வைத்தவள், அவனின் அருகில் அமர்ந்து கொண்டு அவனுக்குத் தன் வார்த்தைகளால் மருந்திட,
டிக்கெட்... டிக்கெட்... என வந்த கண்டெக்டர், இவர்களைப் பார்த்து விட்டு 'படிச்ச பயபக்கிகளா இருக்கும் போல. சந்திராயன் 3ய எப்போ ஏவலாம்னு தீவிரமாக ஆலோசனை செய்யிறானுங்க. மத்த எல்லார்கிட்டையும் டிக்கெட்ட வாங்கிட்டு கடைசியாக வருவோம்.' என நினைத்து நகர்ந்து சென்றார். பேருந்தும் நெடுஞ்சாலையை நோக்கிச் சென்றது. அது சேலம் செல்லவிருக்கும் பேருந்து.
ஹரிணியின் பேச்சு கௌதமின் காதில் விழுந்தாலும் இதயத்தைச் சென்றடையவில்லை. உலகம், ஒருவன் ஆயிரம் நல்லது செய்தாலும், அவன் செய்யும் சிறு பிழையைத்தான் பூத கண்ணாடி கொண்டு தேடி, அதைச் சுட்டிக் காட்டியே உள்ளத்தை நோகடிக்க வைக்கும். இறுதி மூச்சு உள்ளவரைத் தான் இந்தக் குற்ற உணர்ச்சியில் தவிக்கத்தான் வேண்டுமோ! என்றிருந்தது கௌதமிற்கு.
"எங்கம்மா போணும்?."கண்டெக்டர். டிக்கெட் வாங்க சொல்ல,
"இந்தப் பஸ் எங்கெல்லாம் போது?." ஹரிணி.
"அது எங்க வேண்ணாலும் போகும். நீ எந்த இடத்துக்குப் போகனும். அத சொல்லும்மா டிக்கெட் போட."
"ஓ!. இந்தப் பஸ் நிக்கிற கடைசி ஸ்டாப் எது?."
"எந்த ஊருக்குப் போகும்னே தெரியாமத்தா ஏறுனீங்களாக்கும். இது சேலம் போப்போது. உங்கள எங்க இறக்கி விடனும், அத மொத சொல்லி டிக்கெட் எடு. இல்லன்னா இப்பவே இறங்கீடு. தண்டத்துக்கு பஸ்ல ஏறிகிட்டு." கண்டெக்டர்.
யாரோ அவரைக் கடுப்பேற்றி விட்டார்கள் போலும், வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எல்லாம் சூடாகவும் நக்கலாகவும் வந்தது.
"சேலமா.! நல்ல வேல சொன்னிங்க. நாங்கூட விண்வெளிக்கி சுற்றுப்பயணம் போப்போது போல, நம்மல நிலாவுல இறக்கி விட்டுட்டு போகச் சொல்லலாம்னு நினைச்சேன்." என்றாள் நக்கலாக.
யாருக்கிட்ட! ஹரிணிட்டையா?. கவனம்ய்யா... கவனம்...
"எந்த ஊரும்மா நீயி?. ராத்திரி நேரத்துல கோட்டான் மாறிச் சத்தங்குடுத்துட்டு இருக்க.! உனக்கு டிக்கெட் வேணுமா இல்ல இறக்கி விட்டுட்டு போவா." என அவரும் பேச, ஹரிணியும் பேச, இதைக் கேட்ட கௌதமின் உதடுகளில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.
'ஏந்தா! இந்த வயசான காலத்துல என்ன கதற விடுறாய்ங்களோ.!' என நினைத்த அந்தக் கண்டெக்டர், கௌதமை பார்த்து "எங்கப்பா போனும்?." என்க,
"அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கிறோம்." எனத் தன் பேன்ட் பாக்கெட்டிற்குள் கையைவிட, 'அடுத்த ஸ்டாப்ல இறங்கத்தா இத்தன பேச்சி பேசினியாக்கும்.' என இருவரையும் பற்றி முணுமுணுத்துக் கொண்டே அவர் டிக்கெட்டை கொடுத்தார் ஹரிணியிடம். ஆனால் டிக்கெட்டிற்கு பதிலாக வர வேண்டியா காசு மட்டும் வரவில்லை.
"என்னய்யா பஸ்குள்ள டான்ஸ் ஆடுற. காசெங்க?." என்க,
"அது... அது... ஹரிணி உங்கிட்ட காசு இருக்கா?." கௌதம்.
"நா எதுக்கு எடுத்துட்டு வரனும். அதா நீ இருக்கேல்ல."
"எங்கிட்ட இல்லையே.!"
"அதுக்கு என்னால என்ன பண்ண முடியும்?."
"என்னப்பா டிக்கெட் வாங்க காசிருக்கா இல்லையா?. அப்றம் எதுக்கு பஸ்ல ஏறுனீங்க.? " நடத்துனர் காட்டமாக,
'இவர் வேற குறுக்க குறுக்க என்னத்தையாது சொல்லிக்கிட்டு.' என நினைத்தவன், "ஒரு நிமிஷம் ஸார்." என மீண்டும் பாக்கெட்டுக்குள் கையைவிட அதில் அவனின் பர்ஸ் ஃபோன் உட்பட எதுவுமே இல்லை.
"சிட்!..." எனத் தலையில் கையை வைத்தவன்,
"எதையுமே நீ எடுத்துட்டு வரலையா கௌதம்?."
"நாந்தா சண்ட போட்டுக் கோபமா வீட்ட விட்டு வந்தேனே. எங்கிட்ட எப்படி இருக்கும்?."
"நானும் தா சண்ட போட்டுட்டு போன உன்ன சமாதானம் செய்யப் பின்னாடியே வந்துட்டேனே. எங்கிட்ட மட்டும் எப்படி இருக்கும்?. சொல்லு." என ஹரிணி சொல்ல, மொத்ததில் இருவரின் கையிலும் காசும் இல்லை, உதவி கேட்க ஃபோனும் இல்லை, அடமானம் வைக்கக் கையில் வாட்சும் இல்லை.
'காசில்லாமத்தா நீ விண்வெளி பயணம் பொறப்டியா ம்மா!. போய்க் கால்நடையாக நடந்து நிலாவுக்கு பாத யாத்திர போ.' என அந்த நடத்துனர் அவர்களை இறக்கிவிட்டு விட்டுச் சென்றார். அது பேருந்து நிறுத்தம் கூட இல்லை. நடு ரோட்டி இறக்கி விட்டுவிட்டுவேன் என்று சொல்வார்களே! அதே போல் தான் செய்துவிட்டு சென்றார் அவர்.
அடுத்த ஸ்டாப்பில்லாவது நிறுத்திருக்கலாம். ஏன்? ஆள் நடமாட்டம் இருக்கும் இடமாகப் பார்த்து நிறுத்தியிருக்கலாம். நடத்துனருக்கு அந்த எண்ணம் இருக்கத் தான் செய்தது. ஆனால், நம் ஹரிணி கொஞ்சம் ஓவராக அவரிடம் பேசியதால் இறக்கி விட்டுட்டு சென்று விட்டார். இனி நடைவண்டி பயணம் தான்.
'இடியட்... ஃபூல்... மனசாட்சியே இல்லாத ஆளு.' என ஹரிணி உதடுகளைப் பிரிக்காது அந்தக் கண்டெக்ட்டரை திட்டிக் கொண்டே வர, கௌதம் காண்டானான்.
"உன்ன யாரு எம்பின்னாடி வரச்சொன்னா?. அறிவே இல்லையா ஹரிணி உனக்கு.?" என்றான் கோபமாக.
"உன்ன யாரு நா கூப்பிட கூப்பிட திரும்பிப் பாக்காம போச்சொன்னா. ம்... தெரு முக்குவர போய்ட்டு திரும்பிடுவன்னு பாத்தா, கீ குடுத்த பொம்ம மாறி நீ ஊர் எல்ல வரப் போய்ட்ட. அதா நானும் பின்னாடியே வந்தேன். இந்தா இதுல சைன் போட்டுட்டு நீ போ. நா உம்பின்னாடி வரமாட்டேன்." என்றாள் ஹரிணி. அவனின் கோபத்தைக் கண்டு பயப்படாமல்.
என்ன நீட்டுறா? என அந்தப் பேப்பரை வாங்கி பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனாலும், "என்ன ஹரிணி இது?."
"இது உன்னோட ஆஃபீஸ்ஸ என்னோட பேருக்கு முழுசா எழுதிக் குடுக்குறதுக்கு. அப்பறம் இது உன்னோட பேர்ல இருக்குற நிலத்த எல்லாம் உன்னோட செல்லத் தம்பி பிரகாஷ் பேர்ல மாத்த எழுதி வாங்குறதுக்கு.
அவந்தா ஐடியா குடுத்தான். அண்ணே இல்லன்னா. பங்க நாலா பிரிக்கிறதுக்கு பதிலா மூனா பிரிச்சுக்கலாம். காசும் நிறைய கிடைக்கும்னு சொன்னான். வக்கீலா அவெ சொல்றது சரினு தோனுச்சி. அப்றம் இது."
"ஏய்!. கோபமாத்தான வெளில வந்தேன். அது குறையையும் திரும்பி வீட்டுக்கு வருவேன்ல. அப்படியேவ்வா போய்டுவேன். மனுஷென் கொஞ்ச நேரம் கண்ண மூடுனா போதும், உடனே செத்துட்டான்னு முடிவு பண்ணி வாய்ல ஊத்த பால் சொம்போடையா நிக்கிறது. "
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வீட்ட விட்டுப் போய்டேல்ல. 'எனக்கும் இந்தச் சொத்துக்கும் சம்மந்தம் இல்ல. நீங்களே வச்சிக்கங்க'ன்னு உன்னோட கைப்பட எழுதுற மாறி நானே எழுதி வச்சிருக்கேன். நீ உன்னோட பேர இதுல அடித்தல் திருத்துதல் இல்லாம எழுதுனா மட்டும் போதும். சிம்பிள்." எனக் கூறியவளின் தோரணை அவனை வெகுவாகக் கவர, அவளின் உச்சந்தலையில் கை வைத்து அவளின் தலைமுடியை கலைத்தவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான், கண்ணீருடன்.
தன்னை நம்பும் ஒரு பெண். ஸாரி இரு பெண்கள். இந்து இப்போது இருக்கும் நிலையில் அவளால் வர இயலாது. ஆனபோதும் அவளின் மனம் தன்னை சுற்றுவதை உணர முடிந்தது கௌதமால். மனம் மகிழ்ந்து போனது, தன் வேதனைக்கான மருந்தை ஹரிணியால் மட்டுமே தர இயலும் என்று.
அது மாலையில் தனக்கு கிடைத்த அனுபவத்தை நினைத்துப் பார்த்தது.
எந்த ஒரு மாத்திரைகளையும் உட்கொள்ளும் முன் மருத்துவரின் பரிந்துரை சீட்டு அவசியம். அது எப்போது தயாரிக்கப்பட்டது. அதன் காலாவதி காலம். அதை யார் தயாரிக்கிறார்கள். அதில் என்னென்ன உள்ளது போன்றவற்றை செக் செய்வது அவசியமாகிறது. இங்குப் பவித்ராவிற்கு வழங்கப்படும் மாத்திரைகளில் மேலே சொன்ன எதுவுமே இல்லை. ஏன் என்று தெரிய, அவளுக்கு மாத்திரையைக் கொரியரில் அனுப்பிய தருணீயை காண சென்னை சென்றான் கௌதம்.
கௌதம் எத்தனை கேட்டும் அவள் 'தர இயலாது. இது எங்கள் மருத்துவமனை விதிமுறைகளில் ஒன்று. எங்களிடம் வரும் பேஷண்ட்களின் தகவல்களை வெளி ஆட்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்வதில்லை. நீங்கள் செல்லலாம்.' என்று விட்டாள்.
ஒரு கட்டத்தில் கௌதமிற்கு கோபம் வர, "அதெப்படிங்க போ முடியும். என்ன மருந்து மாத்திர தர்றீங்கன்னு கேக்க அவளோட அண்ணனா எனக்கு உரிம இருக்கு. நீங்கப் பதில் சொல்லித்தா ஆகனும். இல்லன்னா நா போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி வரும். ஒரு டெப்லெட்டோட Manufacturing date டும். expire date டும் இல்லாம விக்கிறது சட்டப்படி தப்பு. நாளைக்குள்ள எனக்கு டீட்டைல்ஸ் வேணும். இல்லனா ஸ்டேஷன்ல மீட் பண்ணுவோம்." என அவளை மிரட்டி விட்டுச் செல்ல, அவள் பயத்தில் போலிஸிடம் செல்லாது. பவித்ராவிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள்.
இன்னும் நான்கு தினங்களுக்குப் பின் வரும் தன் மகனின் பெயர் சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்னால் கோபமாக வந்து நின்றாள் பவித்ரா.
பயங்கர கோபமாக...
"டாக்டர் தருணீய போய்ப் பாத்தியா நீ?." என்றவளை உற்றுப் பார்த்தவன்.
"ஆமா. அவங்க தான உனக்கு இப்ப ட்ரீட்மெண்ட் பாத்துட்டு இருக்காங்க. அதான் போய் விசாரிச்சேன். என்ன தப்பா?."
"தப்பு தா. உனக்கு எது வேணும்னாலும் எங்கிட்ட கேட்டிருக்கனும். அத விட்டுட்டு அவங்கள போய் மிரட்டிருக்க. அவங்க இனி வேற ஹாஸ்பிடல்ல பாத்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே ராகவ் கிட்ட கண்டதையும் பேசி அவரோட மனச மாத்தி ட்ரீட்மெண்ட்டுக்கு வர விடாம பண்ணிட்ட. இப்ப என்னையும்... ச்ச... எனக்குக் குழந்த பிறக்குறது உனக்குப் பிடிக்கலையா." எனக் கத்த,
"அங்க பாக்கலைன்னா பரவாயில்லை பவி. வேற நல்ல ஹாஸ்பிடலுக்கு போவோம். எதுக்கு Priscription இல்லாம மருந்து வாங்கி சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்கனும்." சற்றும் குரல் உயர்த்தாது நிதானமாகப் பேசினான் அவன். இந்தச் சண்டையை எதிர்ப்பாத்திருப்பான் போலும். தங்கையின் குணம் தெரியும் அல்லவா.
"நல்ல ஹாஸ்பிடல். இவங்கள விட நல்ல ஹாஸ்பிடலுக்கு கூட்டீட்டு போவ. நீ.? உனக்குத் தெரியுமா அவங்க இதுவரைக்கும் ஃபெல்லியரையே பாத்தது இல்லையாம். அங்கிட்ட வந்தாலே ஆறே மாசத்துல குழந்த உண்டாகிடலாம். அதுக்கு அவங்க கேரண்டி தர்றாங்க. நானே ராகவ்வோட ஹெல்ப் இல்லாமா தனியா என்னோட குழந்தைக்காகப் போராட்டீட்டு இருக்கேன். ஏ இப்படிலாம் பண்ணி என்னோட வாழ்க்கைய கெடுக்குற. நா நல்லா இருக்குறது உனக்குப் பொறுக்கலையா." என ஆவேசமாகக் கத்த,
அது வீட்டினர் அனைவரின் காதுகளிலும் விழுந்து, ஹாலில் நின்று சண்டை போடும் இவர்களை வேடிக்கைப் பார்க்க வைத்தது. அந்த அனைவரில் அவளின் கணவன் சம்பத்தும் ஒருவன்.
"என்னால புரிஞ்சிக்க முடியுது பவி, ஒரு குழந்தைக்காக ஏங்குற உன்னோட கவலையையும் வருத்தத்தையும். ஆனா என்ன பண்றோம்னு சொல்லாம ட்ரீட்மெண்ட்ங்கிற பேர்ல அவங்க பண்றது தப்பு பவி. வேற ஹாஸ்பிடல்ல பாக்கலாம். ராகவ் வருவான். நா பேசுறேன் அவன்ட்ட." என்றபோதே சம்பத்திற்கு புரிந்துவிட்டது. அவளில் ட்ரீட்மெண்ட்டுக்காகத் தான் கௌதம் பேசுகிறான் என்று. எனவே மனைவியைச் சமாதானம் செய்து அமைதியாக்க முயன்றான்.
"போதும். நீ அவர்ட்ட பேசிப் பேசி என்னோட லைஃப்ப ஸ்பாயில் பண்ணது எல்லாமே போதும். இனி என்னோட விசயத்துல தலையிடாத." என எச்சரிக்க, கௌதம் முடியாது என்று நின்றான்.
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை உன் சுற்றத்திடம் கூட வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை எனில் நீ செய்து கொண்டிருப்பது மிகப் பெரிய தவறு. அதை நீ உணர்ந்து தான் செய்கிறாய் என்று அர்த்தம் என்று கௌதம் சொல்லியதோடு மட்டுமில்லாமல்,
சம்பத்திற்கு தெரியாமல் அவனுக்கு நீ மாத்திரைகளைப் பாலில் கலந்து குடுத்து தவறு எனக் கௌதம் சொல்ல, அது சம்பத் கேட்க நேர்ந்தது. அவன் கோபமாகப் பவியை திட்ட, அதில் ஆங்காரம் ஏறியது பவிக்கு.
இதுவரை பவித்ராவிடம் தன் குரலுயரத்தி கோபமாகத் திட்டிடாத சம்பத்தால் தனக்கு தெரியாமல் மாத்திரைகளைத் தந்ததை அறிந்த பின் அமைதியாக இருக்க முடியவில்லை. கௌதமுடன் சேர்ந்து பவியிடம் நீ செய்தது தவறு என்று சொல்ல, கலியபெருமாள் வந்தார் தன் மகளுக்கு ஆதரவாக. ஆனால் அவரின் பேச்சை இருவருமே கேட்பதாக இல்லை. மற்ற அனைவரும் அமைதியாக இருக்க, நால்வருக்குள்ளும் வாதங்கள் வலுத்தன.
ஒரு கட்டத்தில் சம்பத் 'என்னமும் செய்ய... ச்சீ...' என்றுரைத்து விட்டுக் கோபமாக இடத்தைக் காலி செய்ய, பவிக்கு அவமானமாக இருந்தது. அனைவர் முன்னிலையிலும் தன்னை ஆதரிக்க வேண்டிய கணவன் தன்னை அலட்சியப்படுத்தியது.
கௌதம் மட்டும் விடாது தன் வாதத்தை முன் வைக்க, பதில் பேச முடியாது இருக்கும் தன் நிலையே அறவே வெறுத்தாள் பவி. எனவே பேசிக்கொண்டிருப்பவனின் பேச்ச நிறுத்த முடிவு செய்தாள்.
கௌதமின் பேச்சை நிறுத்துவது ஒன்றும் கடினமல்ல. மிகவும் சுலபம். என்ன வார்த்தைகளைச் சொன்னால் அவன் அமைதியாகி விடுவான் என்று அவளுக்குத் தான் நன்கு தெரியுமே. எனவே கலியபெருமாள் எப்பொழுதும் சொல்லும் வார்த்தைகளை இன்று அவள் உதிர்த்தாள்.
"இதுக்கு முன்னாடி நா பாத்துக்கிறேன்னு சொன்ன ஒருத்தியத்தா நீ கொன்னுட்ட. இப்ப என்னையும் நீ கொல்ல பாக்குறியா?. நாளைக்கி இந்த வீட்டுல நா பிணமாக்கிடந்தா அதுக்கு காரணம் நீயாத்தா இருப்ப. கூடப் பிறந்த தங்கச்சிகள கொன்ன கொலகாரப் பாவி நீ." எனக் கத்த. கௌதம் இடிந்து போய்விட்டான்.
நாக்கு என்ற மூன்றெழுத்திலிருந்து வரும் வார்த்தைகள், கத்தி என்ற மூன்றெழுத்தை விட எத்தனை கூர்மையாக உள்ளது என்பதை கௌதம் உணர்ந்தான். முதல் முறை பவியின் வாயில் கேட்கிறான். ஹிட்லர் என்று அழைக்கப்படும் கலியபெருமாளை தவிர வேறு யார் கண்களுக்கும் இதுவரை அவன் கொலைகாரனாகத் தெரியவில்லை. இன்று தன் தங்கைக்கி தெரிகிறான்.
அவ்வளவு தான், அவள் எதிர்பார்த்தது போல் அவன் அமைதியாகி வீட்டைவிட்டு வெளியே சொல்ல, ஹரிணி மட்டும் அவனின் பின்னாலேயே ஓடினாள், கத்திக் கொண்டே.
ஐந்து வயது சிறுமியின் மரணத்திற்கு காரணம் அவனாக இல்லாத போதும், அவளைப் பாதுக்காக்க தவறியதாக அவனுள் எழும் குற்ற உணர்ச்சி தான் அவனின் அமைதிக்கு காரணம். கலியபெருமாள் சொல்லியிருந்தால் கூட 'இருபது வர்ஷத்துக்கும் மேல இதையே தா சொல்லுறாரு. கேட்டுக் கேட்டுச் சலிச்சிப் போச்சி.' எனக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பான். ஆனால் சொன்னது பவித்ரா. இப்போது அவளைப் பாதுக்காக்க நினைக்கிறான். அதற்கு அவனுக்குக் கிடைத்தது கொலைகாரன். வாழ்வை கெடுக்க வந்தவன் என்ற பேச்சு மட்டுமே.
எட்டு வயது சிறுவனான கௌதம் தன் நண்பர்களுடன் விளையாடும் ஆர்வத்தில் பார்கவியை பத்திரமாய் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதும், நண்பனின் வீட்டிற்கு செல்லும் மும்மரத்தில் தங்கை தன்னை பின் தொடர்வதை கவனியாது விட்டதும் அவனின் தவறே. அப்படி கவனித்திருந்தால் பார்கவி பாதை மாறிக் காட்டிற்குள் சென்றிருக்க மாட்டாள். சில சமூக விரோதிகளின் கையில் சிக்கி தன் உயிரையும் இழந்திருக்க மாட்டாள்.
எல்லாம் என் தவறு தான். நான் தான் காரணம். நான் மட்டுமே காரணம் எனப் பல இரவுகள் உறங்காது கழித்த நாட்களும் உண்டு கௌதமின் வாழ்வில்.
இன்று பவியின் வார்த்தைகள் அவனின் மனதை கீறியன. அதை மறக்கக் கால் நோகும் வரை நடந்தான் ஊர் எல்லைவரை. உடன் வந்த ஹரிணியின் குரல் காதிற்கு எட்டும் வரை நடந்தான். இப்போது அவனுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்பது அவள் மட்டுமே.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..