அத்தியாயம்: 40
நட்ட நடுஞ்சாலை...
இரவு நேர நடை...
நன்றாகத்தான் இருக்கிறது. அன்ன நடை போட்டுச் சுற்றி சுற்றி பார்த்தவண்ணம் இவள் நடந்தாள் என்றால், இவளின் அருகில் வந்தவனோ காலை வேளையில் மெரினா பீச்சில் நடை பயிற்சி செய்பவன் போல் எதையும் கவனியாது வேக வேகமாக நடந்தான்.
நண்பன் ஒருவன் வந்தபிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே.
என ஹரிணி பாட, இல்லை கத்தினாள். கடுப்பான அவன், "வாய மூடிட்டு வா. உன்னால தா நடு ரோட்டுல நிக்கறோம். அந்தக் கண்டெக்ட்டர்ட்ட நீ வாயாடாம இருந்தா இன்னேரம் அந்தாளு ஃபோனையாது வாங்கி யாரையாது உதவிக்கி கூப்டிருக்கலாம்." எனச் சலித்துக் கொள்ள,
"ஹாங்!... எனக்கு ஃப்ரெண்டா இருந்துட்டு, நீ அந்தாளு கூடச் சண்டைக்கி போவன்னு பாத்தா! எங்கிட்ட சத்தம் போடுற. நீயே பாத்தேல அந்தாளு எப்படி பேசுனாருன்னு. நாங்கம்ப்ளைண்ட் பண்ண போறேன். பஸ் நம்பர நோட் பண்ணியா நீ?."
"உன்ன இத்தன கீலோமீட்டர் ஓசில பயணம் பண்ண விட்டதே அந்தாளோட தப்பு தா. அதுக்கு சேத்து குடு." எனச் சொல்லி முன்னே செல்ல, புஸ் புஸ் எனப் பெருமூச்சு வாங்க நின்றாள் ஹரிணி. பின் தன் இரு கைகளையும் வயிற்றில் வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள்.
"என்ன மெடிட்டேஷனா!. அதெல்லாம் அப்றமா பண்ணிக்கலாம். இப்ப இந்தத் தார் ரோட்ட தாண்டி, மண்ரோட்ட பிடிச்சி போனாத்தா ஊர் வரும். பாரு கண்ணுக்கு எட்டுன தூரம் வர, மக்க மனுஷன்னு யாரையுமே காணும். ஒரு பைக்கி, காருன்னு வந்தா லிஃப்ட் கேட்டு ஏறிடலாம். காணுமே ஒன்னையும். ச்ச... நிக்காம நடந்தாத்தா வீட்டுக்குப் போய்ப் பிள்ளகுட்டிகள பாக்க முடியும். வா." என அவளின் கரம்பற்ற,
"முடியாது கௌதம். வண்டிக்கி பெட்ரோல் போடுற மாறி எனக்கும் பெட்ரோல் வேணும். அப்பதா என்னால நடக்க முடியும்." எனப் பசிக்கிறது என்று மறைமுகமாகச் சொல்ல, அது தெரிந்தாலும்.
"அங்க பாரு பாரத் பங்க். அங்க போய் நாலு லிட்டர வாய்க்குள்ள ஊத்திக்கோ. காசு கேட்டான்னா அவெ மேலையும் ஒரு கம்ப்ளைண்ட்ட குடுத்திடுவோம். அவெ உனக்கு ஓசிக்கு குடுக்க மாட்டான் தா. அதுனால அதோட டியூப்ல வாய வச்சி உறிஞ்சி எடுத்துரு. சரியா." கௌதம் கேலியாக.
"ம்... அப்பத்தா என்ன கொளுத்திட்டு நீ நிம்மதியா இருப்ப. அப்படி தான. விடமாட்டேன். நாஞ்செத்தாலும் பேயா வந்து உன்ன சுத்திக்கிட்டேத்தா இருப்பேன். ஹா... எனக்குப் பசிக்கிது கௌதம். சாப்பாடு வேணும்."
"உனக்கு இங்க யாரு ஓசில சாப்பாடு தருவா?. துட்டு வேணும்மா துட்டு. காசு வச்சிருக்கியா." என்றான் கௌதம்.
அங்குத் தூரத்தில் பங்கிற்கு அருகில் ஒரு சிறிய பெரிய சாப்பாட்டு கடைகள் இருந்தன. அதில் சிறிய கடைக்குள் செல்லத் திட்டமிட்டனர் இருவரும்.
"ஏ பெரிய கடைக்கி போகக் கூடாது?."கௌதம்.
"கட தா பெருசா இருக்கும். ஆனா மனசு ரொம்ப சின்னது. காசில்லன்னா கருண காட்ட மாட்டாங்க. மாவாட்டச் சொன்னா கூடப் பரவாயில்ல. எச்சி பாத்திரத்த எடுத்துப் போட்டு, டேபிள்ஸ்ஸ க்ளீன் பண்ணச் சொல்லி நம்மள கொடும படுத்துவாங்க. ஆனா அந்தச் சின்னக் கடைய பாத்தியா!. இருக்குறதே ஒரு டேபிள், நாலு சேரு. அந்தச் சின்னக் கடைல கருணை உள்ளம் கொண்ட மகராசியா ஒரு அம்மா இருக்காங்க. முக்கியமா மாவாட்டுற கல்லு இல்ல. வா நமக்குக் கண்டிப்பா உதவுவாங்க." என ஹரிணி கடைக்குச் சென்றாள்.
'மொத்தத்துல அந்த அம்மா முகத்துல இன்றைய இளிச்சவாயின்னு எழுதிருக்கு போல. அத இவா படிச்சிட்டா போல. ஹிம்...' எனப் பெருமூச்சி விட்டபடி ஹரிணியை பின் தொடர்ந்தான்.
அந்தப் பெண்மணியின் வயது நிச்சயம் ஐம்பதுக்கு மேல் இருக்கும். குண்டா நிறைய இட்லி, சட்டியில் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பச்சக் கலரில் ரெண்டு சட்னி பின் ஒரு அடுப்பு. அதில் தோசைக்கல் மட்டுமே இருந்தது. வெங்காய தோசை, நெய் தோசை, முட்டை தோசையென மெனு போர்ட் போட்டிருந்த அது, ஒரு சிறிய தள்ளு வண்டிக் கடை.
உடன் அவரின் வயோதிக கணவர் இருந்தாலும் அந்தப் பெண் தான் அனைவருக்கும் பரிமாறுவார். அடுப்பில் நிற்பது கணவரின் வேலை.
வேகவேகமாகச் சென்ற ஹரிணி அந்தப் பெண்ணிடம் எதுவோ சொல்ல, அவரும் பரிதாபப்பட்டு தட்டில் தோசை வகைறாக்களை எடுத்து வந்து பரிமாறினார். இது எப்படி சாத்தியம்? என யோசித்துக் கொண்டே கௌதம் அவளின் அருகில் வந்தான்.
"இது தா நீ சொன்ன தம்பியாம்மா." என்றவரின் முகத்தில் சிறு கோபம் தெரிந்தது.
"ச்சச்ச... இவெ என்னோட புருஷன் இல்லம்மா. இவனோட அண்ணேதா எனக்குத் தாலி கட்டுனவரு." என்றாள் இரண்டாவது தோசையை சாம்பாரில் குளிக்க ஊற்றியபடி,
"இந்தாப்பா உங்கண்ணனுக்கு புத்தில்லாம் சொல்ல மாட்டியா?. கட்டுன பொண்டாட்டிய அடிச்சி கொடும படுத்திருக்கான். அத பாத்துட்டு சும்மா வா இருப்ப. போக்கத்தபயென் தான் பொண்டாட்டிய அடிப்பான். வெளங்காத பயென் எப்படி அடிச்சிருக்கான்?." என வாய்க்கு வந்த படி ஹரிணியின் கணவனைத் திட்ட, கௌதம் திருதிருவென முழித்தான்.
"அடிச்சானா! யாரு ரிஷியா!. நீ தாம்மா அவனோட கன்னத்துல கார்ப்பரேஷன்காரெ மாறி ரோடு போட்டு விட்ட, இப்ப அவெ அடிச்சான்னு சொல்லிருக்க. எங்க காட்டு கன்னத்த?." என முகம் பார்க்க, அது எந்த ஒரு கரையும் இல்லாமல் அன்றில் பூத்த பூபோல் இருந்தது.
"எத காட்டி அந்தம்மாவா ஏமாத்துன." எனக் குரல் தாழ்த்தி கேட்க,
முழு நீள ஸ்கெட்டை லேசாக விலக்கித் தன் முட்டியை காட்டினாள் அவள்.
"என்னாச்சு ஹரிணி?."
"நேத்து அகில் கூட ஓடிப்பிடிச்சி விளையாண்டேன். நல்லாத்தா ஓடீட்டு இருந்தேன். அப்பத் திடீர்னு கீழ விழுந்துட்டேன். எப்படின்னு பாத்தா!. டீப்பாய்ல இடிச்சிருக்கேன். ஹால்ல இருக்க வேண்டியது எப்படி எங்க ரூம்ல வந்திருக்கும். ம்... அத அவெந்தான கொண்டு வந்து வச்சிருப்பான். பாரு எப்படி கண்ணிப் போயிருக்கு. நாங்கீழ விழனுங்கிறதுக்காகவே பண்றான். வலிக்கிது தெரியுமா?. " என்றாள் சோகமாக,
'கண்ணு தெரியாம எதுலையாது மோதிட்டு. புருஷன கொற சொல்லுறியேம்மா. நீயெல்லாம் நல்லா வருவ.' என நினைத்தாலும் அதை வெளியே சொல்லாது,
"ஓ!. இத பாத்துட்டு தா அந்தம்மா புருஷென் அடிச்சான்னு தப்பா நினைச்சிடுசா!." என ஹரிணியின் தட்டில் இருந்த தோசையை எடுக்க வர, அவள் விலகி அமர்ந்தாள்.
"டேய்!. நானே எனக்குத் தெரிஞ்ச கோகக் கதையெல்லாம் சொல்லி அந்தம்மா மனச மெழுகா உருக்கி வச்சிருக்கேன். உனக்கு வேணும்னா நீயும் ஒரு கத ரெடி பண்ணி சொல்லிச் சோறு சாப்பிடு. எங்கிட்ட எடுக்காத." என எழுந்து சென்றுவிட,
"ஏ ம்மா... க்ளோஸ் ஃப்ரெண்டுங்கிற. ஆனா சோத்துல ஒரு வாய் பங்கு தர மாட்டேங்கிற." எனப் புலம்ப, அந்தக் கடைக்காரம்மா நல்லவர் போலும். இவனுக்குப் பரிமாற்றினார். இருவரும் நன்கு உண்ட பின் காசு எனப் பேச்சு வர, இருவரும் அந்தம்மாவிடம் உண்மையைச் சொல்லிச் சரணடைந்தனர்.
"அம்மா நீங்கக் கவலப்படாதீங்க. நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கி நீங்கக் கட மூடுற வரக் கூடவே இருந்து எல்லா வேலையையும் பாத்துக்கிறோம். பாத்திரங்கழுவனுமா! இல்ல தோச சுடனுமா.! எதுவா இருந்தாலும் நாங்க பாத்து தர்றோம்." என்க, அந்த அம்மா சிரித்தார்.
"அம்மா உங்களுக்கு அரசியல் செல்வாக்கான ஆளுங்க, போலிஸ்ஸுன்னு யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?." என்றான் கௌதம்.
"இல்லப்பா. நீ சொல்லுற மாறி யாரையும் தெரியாது. அப்பப்ப ஒரு ஏட்டு தா வருவாப்ள, மாமுல் கேட்டு. ஏம்பா?."
"இந்த அநியாயம் பண்ற ஏட்டுகல, மரத்துல கட்டி வச்சி கண்ணுல பெரிய வெங்காயத்த எடுத்து நல்லா தேக்கனும். அப்பதா இந்தம்மா படுற கஷ்டம் புரியும். நம்ம வீட்டுக்குப் போனதும் முதல் வேளையா உன்னோட வக்கில்லாத வக்கீல் கிட்ட இதப் பத்தி பேசுவோம்." என ஹரணி வீராப்பாய் பேச,
"டார்லிங்!. நிஜம்மாவே பாவம் தா இவங்க. கொல கேஸ்ல உள்ள போனா ஜாமின் எடுக்கக் கூட ஆள் இல்லன்னா பாரேன். அதுனால, ப்ளீஸ் விட்டுடு." என்றான் மொட்டையாக. அவள் புரியாமல் முழிக்க,
"நீ தோச சுட்டா சாப்பிடுறவெ கண்டிப்பா பொத குழில போய்ப் படுத்துக்கிவியான். அதா... நீ அடுப்புப் பக்கம் போக வேண்டாம்னு சொல்ல வர்றேன். புள்ள குட்டிக்காரங்க. வாழனும் இல்லையா." என்றவனை துரத்த, இருவரும் நள்ளிரவு வரை அங்கேயே இருந்தனர். வீட்டில் நடந்தவை தெரியாமல்.
அந்த அம்மாவை வேலை செய்ய விடாது வந்த கஸ்டமர்களுக்கு இருவரும் சேர்ந்தே உணவைச் சப்ளை செய்ய, ஒரு வழியாக மணி பன்னிரெண்டை தொட்டது. அந்த அம்மாவின் பாத்திரங்களை அவர்களின் டிரை சைக்கிளில் ஏற்றி அவர்களின் வீட்டை அடைந்தவர்கள். அங்கிருந்து நடந்தே இவர்களின் வீட்டையும் அடைந்தனர்.
வீடு நிசப்தமாக இருந்தது. நடு இரவு என்பதால் இல்லை. ஆட்கள் கம்மியாக இருப்பதால். இந்து, நங்கை, மலர் எனப் பெண்கள் மட்டுமே இருந்தனர். ஆண்கள் யாருமே காணும். என்னானது என நினைத்தபடி உள்ளே வர, இந்து வேகமாக ஓடி வந்து கௌதமை அணைத்துக் கொண்டாள், கண்ணீருடன்.
"எங்கங்க போயிருங்திங்க?. மாமாக்கு ஹாட் அட்டாக்காம். ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போயிருக்காங்க. பயம்மா இருக்குங்குங்க." என்றாள் தெளிவில்லாத குரலில். இருவரும் புரியாமல் முழித்தனர்.
"கௌதம்!. பெருமாள ஹாஸ்பிட்டல் சேத்திருக்கு. நீ வந்தா உன்னையும் வரச் சொல்லி அண்ணே சென்னாரு." நங்கை. கௌதம் அதைக் கேட்டு அசையாது நின்றான்.
"என்னாச்சும்மா மாமாக்கு?."
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தா, நல்லா ஹைய் பிச்சுல சண்ட போட்டுட்டு இருந்த மனுஷனாச்சே. திடீர்னு ஹார்ட் இல்லாத ஹிட்லருக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னா எப்படி நம்புறது!. ஆனா வீடு இருக்குற சூழ்நிலையப் பாத்தா நம்பித்தா ஆகனும் போலையே.
"அதெல்லாம் அப்றமா சொல்றேன். நீ போய்ப் பாரு?." எனக் கௌதமை சொல்ல, ஹரிணியும் கௌதமுடன் சென்றாள். காரை ரிஷி எடுத்துச் சென்றதால் கௌதம் அவனின் பைக்கை எடுத்தான். ஏனோ அவனின் கைகளில் சிறு நடுக்கம்.
அவன் அறிவான். இது கலியபெருமாளுக்கு வரும் இரண்டாவது அட்டாக். அதனால் தான் அவருக்கு எதுவும் ஆகி விடுமோ எனப் பயந்து விட்டான் போலும். அவனின் தோளில் கை வைத்து அழுத்திய ஹரிணி,
"எதுவும் ஆகிருக்காது டா. Be positive. நா டிரைவ் பண்ணவா." எனக் கேட்க. வேண்டாமெனத் தலையசைத்து அவனே ஓட்டினான்.
அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து மகனேயென அவனை அவர் தூக்கி கொஞ்சியது இல்லை. அவனுக்கு வேண்டிய எதையும் அவர் வாங்கி தந்தது இல்லை. பாசமான ஒரு வார்த்தை கூடப் பேசியது இல்லை. வாய், அது அவனைத் திட்டுவதற்கு மட்டுமே திறக்கும். இதுவரை தன்னை வஞ்சித்ததாக நினைத்து அவரை வெறுத்து வந்தவன், தந்தை என்ற நிலையை அடைந்த பின் அவரை வெறுப்பதில்லை.
தமையனாய் தங்கையின் இழப்பின் வலியைக் காட்டிலும். தந்தையாய் பெற்றெடுத்த பிள்ளையின் இழப்பு மிகவும் கொடியதாகப்பட்டது. எனவே அவரிடம் சிறு மதிப்பு வந்தது. இன்று அவருக்கு என்ன ஆனதோ என்ற பதட்டம் அவனிடம் அதிகமாகவே இருந்தது. விழியோரம் நீர் சுரக்க, மருத்துவமனை வந்தடைந்தான் அவன்.
ரிசப்ஷனில் ஒரு பெண் அமர்ந்திருக்க, "கலியபெருமாள் எந்த ரூம்ல இருக்காரு.?" என்றான் அவசர அவசரமாக. அந்தப் பெண் வாயைத் திறக்கும் முன் ரிஷி வந்துகொண்டிருந்தான், படிகளில் இறங்கி. வேகமாக அவனிடம் சென்றவன்.
"அப்பா எங்க.? எப்படி இருக்காரு?. நல்லா இருக்காருல்ல?. எந்த ரூம்ல இருக்காரு?."
"அப்பாவா!. யாரது?. உனக்கு அப்பா இருக்கா என்ன?." என ரிஷி நேரங்காலம் பார்க்காமல் நக்கலாகப் பேச, அவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துச் சுவற்றில் சாய்த்து உளுக்கியவன்.
"ஒழுங்கா சொல்லப் போறியா இல்லையா?. என்னோட அப்பா எங்க டா?. அவருக்குத் திடீர்னு அட்டாக் வர நீ தான் காரணமா இருப்ப. அவர்ட்ட என்ன சொன்ன?. என்ன பண்ண அவர?." எனக் கேட்க,
ஹரிணி, "கௌதம் இது ஹாஸ்பிட்டல் கொஞ்சம் அமைதியா இரு." என விலக்கி விட்டாள். ஆனால், ரிஷி விடுவதாக இல்லை போலும், நக்கலாகப் பார்த்தபடி,
"ம்... என்ன சொன்னேன்னா!. உன்னோட அரும பெருமைய பேசுனேன். உடனே மனுஷன் நெஞ்ச புடிச்சிட்டாப்ல. அதுனால நீ தான் காரணம், அவரு படுக்கைல கிடக்க. கண் காதுன்னு எல்லா உறுப்பும் பீஸ் போயிடுச்சாம். இப்பத்தா சொல்லிட்டு தூங்க போனாரு டாக்டரு." என்றவனை எது கொண்டு அடிக்கலாமென அவனின் மனைவி தேடவே தொடங்கிவிட்டாள்.
"மேல ஐசியூல இருக்குறதா ரிசப்ஷனிஸ்ட் சொன்னாங்க. இவன அப்பறமா பாத்துக்கலாம் வா." எனக் கோபமாக முறைத்துக் கொண்டு இருந்தவனை இழுத்துச் சென்றாள் ஹரிணி.
"அவர இப்பத்தா ரூம் நம்பர் 56 க்கு மாத்தினாங்க. ஏசி ரூம் தா. நல்லா குளுகுளுன்னு காத்து வரும். இப்ப விட்டா கூட வயக்காட்டுல இறங்கி மூணு வேளையும் வேல செய்ற அளவுக்கு நல்லாத்தா இருக்காரு. ரெண்டாது மாடி. படிக்கட்டெல்லாம் ஏறத் தேவையில்ல. லிஃப்ட் வசதி இருக்கு. உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணக்கூடாதுல்ல அதா சொல்றேன்." என நக்கலாகச் சொல்ல, ஹரிணி அவனின் அருகில் வந்தாள்.
"நீ மனுஷந்தானான்னு எனக்கு அப்பப்ப டவுட் வருது. ச்ச..." என ரிஷியை ஏற இறங்க பார்த்து விட்டுச் செல்ல,
"ஏ இவா திட்டிட்டு போற!. ஏசி இருக்கு, லிஃப்ட் இருக்குன்னு, இவங்க நல்லதுக்கு தான சொன்னேன். ச்ச... இனி யாருக்கும் நல்லதே செய்யக் கூடாதுப்பா." எனப் புலம்பிய படி ஹாஸ்பிட்டல் பில்லை கட்டச் சென்றான்.
ஜோதியை தவிர மற்ற அனைவரும் வெளியே நிற்க, கௌதம் அவர்களிடம் எதுவும் பேசாது அறையின் உள்ளே சென்றான். அவனைக் கண்ட ஜோதி வாய் மூடி அழ, சில பல வயர்கள் கலியபெருமாளின் உடலில் பொருத்தப்பட்டிருந்ததை பார்த்தான். தன் தந்தையின் இதயத்துடிப்பை அருகில் உள்ள மானிட்டர் மெல்லிய சத்தத்துடன் காட்ட, மனம் வலித்தது. கோபமாகத் திட்டினாலும் கண்முன்னே நடமாடிய தந்தை கட்டிலில் தோய்ந்து போய்க் கிடக்கையில் வேதனைகள் தன்னை சூழ்வது போல் உணர்ந்தவன். வேகவேகமாக வெளியே சென்றான், ஹரிணியை 'பின் வராதே' என்றுவிட்டு. அவனுக்கு அழ வேண்டும் போல் இருந்தது.
ஹாஸ்பிட்டலுக்கு வெளியவே வந்துவிட்டான். அங்கிருந்து பெஞ்சில் அமர்ந்து அழத் தொடங்கினான். நேரம் செல்ல. அவனின் முன் நிழலாடியது.
நிமிர்ந்து பார்த்தவன், மீண்டும் குனிந்து கொள்ள, வந்தது யார் என்று சொல்லத் தேவை இல்லை.
ரிஷி தரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..