அத்தியாயம்: 43
ஒரு முறைதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத கொடுத்தா
அட பீஸ்டு நீதாண்டா
ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
கேக்குதா என் கானா
ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
சொன்னது சர்தானா
சர்தானா
சர்தாம்பா
ஜாலி ஓ ஜிம்கானா
கையில் பியருடன், இளைய தளபதி பாடல் வரிகளை அனுபவித்து ரசித்துப் பாடிக் கொண்டே வந்தான் கௌதம். தேசிய நெடுஞ்சாலை ஆன போதிலும் அவன் பயணிக்கும் காரின் வேகம் 30 ஐ தாண்டவில்லை. கோயில் தேர் போல் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இத்தனை மெதுவாக அவன் ஓட்டவில்லை. ஓட்டுவது ஹரிணி.
என்ன! ஹரிணியின் கையில் கார் இருந்தும். அது மெதுவாகச் செல்கிறதா என ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம், அவளின் மனமானது வேகமாகச் செல்லும்போது உடலானது மெதுவாகத்தானே செல்ல வேண்டும். இரண்டுமே வேகம் எடுத்தால் ஏதாவது ஒன்றிற்கு ஆபத்து வந்து விடும் இல்லையா!. அதனால் தான் நிதானமாக ஓட்டிச் செல்கிறாள்.
ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வாரமாகப் பார்க்கிறாள் ரிஷியை. அவன் சரி இல்லை என்பதை உணர முடிந்த அவளால். அவனுக்கு என்ன ஆனது என்பதை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடன் அவன் என்னென்ன செய்கிறான் என்பதையும் தான். கலியபெருமாளை ஹாஸ்பிட்டலில் சேர்த்ததிலிருந்து ரிஷி சரி இல்லை. கௌதமின் குற்றம் சாட்டும் பேச்சு, பவியின் வாடிய முகம், தன் தந்தையின் கோபம் எனச் சில விசயங்கள் அவனைப் பாதித்திருக்கலாம்.
வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்பதால் அவனுக்கு வலி என்பதில்லை என்றாகி விடாதே. அவனுக்குள்ளும் சில வலிகள் உண்டு என்பதை அவனின் நடவடிக்கைகளை வைத்துத் தான் புரிந்து கொள்ள முடியும். ஹரிணிக்கு புரிந்தது.
அனைவரிடமும் கலகலவெனப் பேசிச் சிரிக்கும் ரகம் அல்ல ரிஷி. அவன் தேர்ந்தெடுத்து தான் பேசுவான். வார்த்தைகளை மட்டுமல்ல ஆட்களையும் தான். இப்போது அவன் பேசும் நபர்களும், வார்த்தைகளும் குறைந்து போனது. சம்பத் ஒருவன் மட்டுமே ரிஷியைப் பற்றி முழுதாக அறிந்தவன். ஆனால் அவனும் ரிஷி வாயைத் திறக்காமல் எதுவும் சொல்ல இயலாது என்றுவிட்டான். ரிஷியின் அதிகபட்ச நேரத்தை அந்த ஜீம் ரூம் ஆக்கிரமித்துக் கொண்டது.
உறங்கும் நேரம் மட்டுமே ஹரிணியுடனான பேச்சு இருக்கும். அதிலும், "கிட், நமக்குக் கிடைக்கிற இந்தக் கொஞ்ச நேரத்தையும் கண்டத பேசி என்னோட மூட ஸ்பாயில் பண்ண வேண்டாமே. ப்ளீஸ்." என்னும்போது பெண்ணவளுக்கு அவனின் சோர்வும், மன நிலையும் புரிந்தது. அவனின் செயல்கள் எதற்கும் தடை சொல்லவில்லை அவள்.
கேள்விகள்... கேள்விகள்... விடை சொல்லத் தயாராக இல்லாதவனிடம் கேட்கப் பட வேண்டிய கேள்விகள். பாதி பதில்களை வேண்டிக் கடத்தி செல்கிறாள் கௌதமை.
"டார்லிங், நீ ஓட்டீட்டு வர்ற கட்ட வண்டிய கொஞ்சம் ஓரமா நிப்பாட்டுனேனா! நா ஒரு ஓரமா ஒதுங்கிக்கிவேன்." என்றான் கௌதம். முழுதாக ஒரு பாட்டிலை காலி செய்த அவனுக்கு இயற்கை அழைப்பு வந்து விட்டது போலும்.
"ஏய், ச்சீ... அறிவில்லையா டா உனக்கு?. ஒரு பாட்டில் பியர காலி பண்ணிட்டு மூச்சா வருது கீச்சா வருதுன்னு முட்டாத்தானமா பேசீட்டு. காரல்லாம் நிப்பாட்ட முடியாது. அடுத்த டோல் கேட்ல நிப்பாட்டுறேன். ஓப்பன்ல போகாம பாத்ரூம்ல போ. அதுவர கொஞ்சம் அடக்கிக்க." என்றவளுக்கு காரை நிப்பாட்டும் எண்ணம் என்பதே இல்லை.
"ஓகே... ஓகே... டோல் கேட் எப்ப வரும்?."
"ஐஞ்சி நிமிசத்திக்கு முன்னாடி தா ஒன்னு போச்சி. அடுத்தது வரக் குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகலாம்."
"என்ன!!. ஒரு மணி நேரமா!. நீ உருட்டுற வேகத்துக்கு நாலு மணி நேரங்கூட ஆகலாம் போலவே. அதுவர நா அடக்கிக்கனுமா என்ன?."
"எஸ்... அஃப்கோஸ்."
"நீ எனக்காகல்லாம் நிப்பாட்ட வேண்டாந்தாயே. நீ கொஞ்சம் பின்னாடி பாக்காம மட்டும் ஓட்டு. நாஞ்செய்ய வேண்டியத செஞ்சிப்பேன்." எனக் காரின் பின் புறம் செல்லப் பார்க்க,
"டேய்!. என்ன டா பண்ணப் போற. வண்டிய பப்ளிக் பாத்ரூமா மாத்த போறியா என்ன.?"
"ச்சச்ச... நா இந்த." என்பதற்குள் காரை நிறுத்தியவள், "போய்த் தொல." என்றாள் ஹரிணி.
"ஒரு மனுஷெ அவசரத்துக்கு ஒதுங்குறதுக்கு கூட நாலு சுவரு வேணுமாய்யா. ச்சீச்சீச்சீசீ... மனுஷெ குரங்காவே இருந்திருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அப்டேட் ஆகுறேங்கிற பேர்ல டென்ஷன் பண்றானுங்க." எனப் புலம்பிபடியே சென்றவன் வந்து பார்க்கையில் ஹரிணி இல்லை.
"டார்லிங், டார்லிங்." என வண்டியைச் சுற்றி சுற்றி பார்த்தவன் அவள் காணாது போனதால், "ஹரிணி!! ஹரிணி!!"எனக் கத்திக் கொண்டு தேடிச் செல்ல, ஹரிணி தூரத்தில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு இருந்தாள், கையில் சிறிய கவர்.
"டார்லிங் சொல்லிட்டு வரமாட்ட. நா பயந்துட்டேன். கொண்டா... இது நல்லா இருக்கா?. பவிக்காக வாங்குனேன்." என அவனின் தங்கையின் பிறந்த நாளுக்கு என வாங்கிய புதிய உடையை எடுத்துக் காட்டினான். மாம்பழ மஞ்சள் நிறத்தில் சிறு சிறு கற்கள் பதித்து அந்த இரவு நேரத்தில் அழகாய் மின்னியது அந்தப் புடவை.
"டார்லிங், இதுல எம்ராய்டரி போட்டிருக்கே, இதெல்லாம் என்ன ஒர்க்குனு உனக்குத் தெரியுமா?. நம்ம நாட்டுல தா எக்கச்சக்கமா எம்பிராய்டரி ஓர்க் இருக்கே. குந்தன், ஜர்தோஷி, இந்தமாறி, இந்தச் சேரி அதுல எந்தக் கேட்டகரி." என ஆசையாய் எடுத்து வருடினான் கௌதம். ஹரிணி அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.
"டார்லிங், டார்லிங்." பதில் இல்லாததால், "உன்னையெல்லாம் ஒரு டிசைனர்னு மதிச்சி கேட்டேன் பாரு என்னைய சொல்லனும். வா போலாம்." எனப் புலம்பியபடி காருக்குச் செல்ல,
"உனக்குச் சூடு சொரணன்னு எதுவுமே கிடையாதா கௌதம்?. அன்னைக்கி அவா பேசுன பேச்ச கேட்ட எனக்கே அவ்ளோ கோபம் வந்தது. உன்னால எப்படி டக்குன்னு அவா கூடப் பேச முடியுது. நாக்குல எலும்பே இல்லாம அவா பேசுனத எப்படி உன்னால மன்னிக்க முடிஞ்சது.?" என்றவளின் கோபம் நியாயமே.
கலியபெருமாளும் தான் நாக்கில் விஷம் வைத்துப் பேசுவார். ஆனால் அவர் கௌதமிற்கு உயிரும் உடலும் தந்தவர் என்பதால் எதுவும் சொல்லமாட்டாள் ஹரிணி. ஆனால் பவி விசயத்தில் அப்படி இருக்க அவளால் முடியவில்லை.
"டார்லிங், நா ஸ்கூல் படிக்கும் போதிருந்தே இந்த மாறிப் பேச்ச கேட்டுப் பழகிருச்சி. அடுத்தாள் பேசுனதையே மறந்து மன்னிக்கும்போது. கூடப் பிறந்த தங்கச்சி அவ மேல எனக்கு எப்படி கோபம் வரும். சொல்லு?. அதுவும் எனக்கு இருக்குற ஒரே சிஸ்டர். ஒன் அண்டு ஒன்லி ஓன் சிஸ்டர்." என்றவனை என்ன சொல்வது.
'ஸாரி கௌதம்ண்ணா. நா தப்பு பண்ணிட்டேன். என்ன மன்னிச்சிடுண்ணா.' எனச் சொல்லி அழும் தங்கையிடம் முடியாது என்று விறைத்து வீம்பு பண்ணும் அளவுக்குக் கௌதமின் குணம் இல்லை. எனவே அவளுடன் பழைய படி பேச, உடன் கலியபெருமாளும் ஜோதியும் சேர்ந்து கொள்வதால் கௌதமிற்கு இப்போது தான் குடும்பமாக வாழும் ஓர் நிறைவான உணர்வு வந்தது.
எந்த ஒரு உறவும் நிலைக்க வேண்டும் என்றால் சில விசயங்களை மறக்க வேண்டும், பல விசயங்களை மன்னிக்க வேண்டும். அதைத்தான் கௌதம் செய்தான். ஹரிணிக்கு அது புரிந்தாலும் தன் நண்பனின் கண்ணீருக்கு அவளும் காரணம் என்பது தான் ஆத்திரத்தை தந்தது. அதை மறைக்காது கௌதமிடம் கூறினாள்.
"நீ என்ன சொன்னாலும் எனக்கு அவ பேசுனது பிடிக்கல. ஸாரின்னு சொன்னா, சொன்ன எல்லாத்தையும் மாத்திட முடியுமா என்ன.? அவா மனசுல எந்த அளவுக்கு வன்மம் இருந்தா உன்ன அப்படி பேசுவா." எனப் பவியை திட்ட,
"ரொம்ப சூடா இருக்க போல. நா உனக்காக ஒன்னு வச்சிருக்கேன். வா. அட வாம்மா." எனக் கரம்பற்றி இழுத்துச் சென்றவன், உள்ளிருந்து மேலும் இரு பியர் பாட்டிலை எடுக்க, ஹரிணி முறைத்தாள்.
"சில் பியர் மா இது. உனக்காகத் தா வாங்கிட்டு வந்தேன். இன்னும் கூலிங் குறையாம இருக்கு. இந்தா உனக்கு." என ஒன்றை அவளின் கரத்தில் திணித்தவன் மற்றொன்றை ஓப்பன் செய்து காரின் முன் பக்கத்தின் மீதேறி அமர்ந்து கொண்டு குடிக்களானான்.
ஒரு சில நொடிகள் அவனை அமைதியாகப் பார்த்தவளின் இதழ்களில் கள்ளச் சிரிப்பானது வந்தன, "சோ. நீங்க மறப்போம் மன்னிப்போம்ங்கிற சங்கத்தோட தலைவன்." என்றாள் புருவம் உயர்த்தி.
"எஸ், மனுஷன மனுஷனா வச்சிருக்கிறதே இந்த மறதிங்கிற வியாதி தானாம். முந்தா நேத்து என்னோட கிளைட் ஒருத்தர் சொன்னாரு. சோ நீயும் உன்னோட அண்ணனுக்காகப் பவிய மன்னிச்சிடு. ராகவ் பாவம்… நீ அவா கூடப் பேசலன்னு ஃபில் பண்ணான்."
"ம்ச்... அப்ப நீ மனுஷென். நா மிருகம். அப்படி தான.?"
"அதில் என்ன சந்தேகம் உனக்கு?."
"நீயும் மிருகம் தான் கௌதம். என்னோட பாவா விசயத்துல." என்க, அவளை உற்றுப்பார்த்தான் கௌதம்.
"உம்புருஷென் ஒன்னும் எங்கிட்ட மன்னிப்பு கேக்கல. அவனுக்குத் தா ஸாரின்னு ஒரு வார்த்த இருக்குறதே தெரியாதே. அத எப்படி எங்கிட்ட கேட்பான்."
"ஒரு வேல கேட்டா!. நீ என்ன பண்ணுவ."
"ம்… வெறும் வாய் வார்த்தையால்லாம் கேட்டா பாத்தாது என்னோட கால்ல விழுந்து கேளுன்னு சொல்லுவேன். அதுவும் அழுது புரண்டு கண்ணீராலையே எனக்குப் பாதாபிஷேகம் செய்யனும். அப்பத் தா மன்னிக்கனுமா வேண்டாமான்னு யோசிப்பேன். எனக்கு நம்பிக்க இருக்கு உம்புருஷென் என்னைக்கும் தன்னோட ஈகோவ விட்டுக் குடுத்து இறங்கி வரமாட்டான். அப்படியே வந்தாலும் நா மன்னிக்கத் தயாரா இல்ல." என்றவன் முகத்தில் கசந்த புன்னகை ஒன்று தோன்றியது.
"அப்படி என்ன பண்ணிட்டான் என்னோட பாவா?. ம்... "
"என்ன பண்ணலன்னு கேளு. ஒன்னா ரெண்டா நிறைய இருக்கு. ஒரு எப்பிஷோடு பத்தாது."
"பரவாயில்ல. ரெண்டு அத்தியாயம் மூணு அத்தியாயம் ஆனாலும் நா கேக்குறேன். உனக்கு என்னென்ன அநியாயம் பண்ணான் என்னோட பாவா. கால்ல வேற விலச் சொல்லுற அளவுக்கு. ம்..." என்க, சில நிமிடங்கள் யோசித்தவன்.
"சொல்றேன் டார்லிங், சொல்றேன், என்னோட மினி ஏஜ் ஸ்டோரிய. பட் இதெல்லாம் ஒரு மேட்டரான்னு கலாய்க்க கூடாது. ஓகே வா."
"ம்... மாட்டேன்." ஹரிணி வேகவேகமாகத் தலையசைத்தாள். நீ சொன்னா மட்டும் போதும் என்பது போல்.
"ஹிட்லர் ங்கிற பேர நா சும்மா வைக்கல. அந்த ஹிட்லர் அளவுக்கு அவரு என்ன கொடுமபடுத்துனதுனால தா வச்சேன். என்ன ஹிட்லர் கிட்ட போட்டுக்குடுக்குற அவரோட படை தளபதியே உம்புருஷெந்தா. தெரியுமா?. நா என்ன பண்றேன். யார் கூட எப்படி என்னென்னென்ன பேசுகிறேங்கிறது வரைக்கும் திருவாளர் ஹிட்லர் காதுல போட்டு, பெல்ட்டால அடிவாங்கிக் குடுத்திருக்கான். சில நேரம் நா செய்யாததையும் சொல்லி அடி வாங்க வப்பான்.
எனக்கு, நாலு வயசுக்கு முன்னாடி நடந்தது எதுவுமே நியாபகத்துல இல்ல. ஆனா, அப்பையும் அவெ என்ன அழ வச்சிட்டேத்தா இருந்திருப்பான். இடியட்."
"டேய், நீ அவெ என்ன பண்ணான்னு இன்னும் சொல்லவே இல்ல. ஹிட்லர் உன்ன அடிக்கிறது வழக்கமான விசயம் தான. அவெ என்ன போட்டுக் குடுத்தான். உன்ன எதுக்கு அடிச்சாரு. அத சொல்லு."
"அப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும். செக்கேண்ட் ஸ்டாண்டர்டு படிச்சிட்டு இருந்தேன். நீ சின்ன வயசுல வீடியோ கேம் விளையாண்டுருக்கியா?. கம்ப்யூட்டர் மாறியே கீ போர்டுலாம் வச்சி, ஜாய் ஸ்டிக் ரெண்டு குடுத்து, அதுல கேசெட் மாறி ஒன்ன சொருகி வச்சி விளையாடுவோம். எனக்கு அதுமேல் ஒரு ஆச. மூர்த்தி பெரிப்பா வாங்கிட்டு வந்து குடுத்தாரு தான். ஆனா அத உம்புருஷென் எனக்குக் குடுக்க மாட்டான்.
'எங்கப்பா எனக்கு வாங்கி தந்தது. உனக்கு வேணும்னா உங்கப்பாட்ட கேளு.'ன்னு சொல்லிக் கண்ணு முன்னாடியே அஸ்காட்டி குடுக்காம விளையாடுவான். அவனுக்குத் தெரியும் அந்தாளு எனக்கு ஒரு பென்சில் கூட வாங்கி தரமாட்டாருன்னு. அவர்ட்ட போய் வீடியோ கேம் வாங்கி குடுங்கன்னு கேட்டா உடனே செஞ்சிடுவாரா என்ன. அதுனால கேக்கல.
டெய்லி மூர்த்தி அப்பா எனக்கு ரெண்டு ரூபா குடுப்பாரு. அத சேத்து வச்சி ப்ரவுஸிங் சென்டருக்கு போய் ஒரு மணி நேரம் விளையாடுவேன். அப்ப எம் ஃப்ரண்டு 'நீ சேத்து வச்சி ஒரு மணி நேரம் விளையாடுறதுக்கு பாதிலா, கூடக் கொஞ்ச நாள் சேத்து வச்சா. புது வீடியோ கேமே வாங்கிடலாம். 'னு சொல்லி ஒரு கடைக்கி கூட்டீட்டு போனான். விலை எல்லாம் கேட்டுட்டு வந்திட்டோம்.
எங்க எல்லாருக்கும் உண்டியல் உண்டு. நாலு மாசம் எதுவுமே வாங்காம நா பணம் சேத்து வச்சேன். பாப்புடுவும் அவளோட காச எனக்குத் தந்திடுவா. ஆனா, அது ஐநூறு ரூபாய கூடத் தொடல. மூர்த்தி பெரிப்பா மீதி காச போட்டு வீடியோ கேம் வாங்கி தந்ததாரு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. நானும் பாப்புடுவும் மட்டுமே விளையாடுவோம். அது உம்புருஷனுக்கு பொறுக்கல.
என்ன சொல்லிப் போட்டுக் குடுத்தான்னு எனக்குத் தெரியல. ஹிட்லர் கையாலயே அத தூக்கிப் போட்டு உடைக்க வச்சிட்டான். என்னோட ஐஞ்சி மாச சேமிப்பு!. சுக்கு சுக்கா உடஞ்சி போச்சி. அன்னைக்கி நா எப்படி அழுந்தேங்கிறது எனக்கு மட்டும் தா தெரியும். காய்ச்சலே வந்துடுச்சி. அந்தாளு அடிச்ச அடில." எனக் கௌதம் உருக்கமாகச் சொல்ல ஹரிணி விழுந்து விழுந்து சிரித்தாள்.
"இங்க ஒருத்தே முதுகு வீங்குற அளவுக்கு அடி வாங்குனேன்னு சொல்லி வருத்தப்பட்டு இருக்கேன். நீ என்னடான்னா கெக்கபிக்கன்னு சிரிக்கிற லூசு. நிப்பாடு சிரிப்ப." எனக் கத்த,
"ஓகே... ஓகே... சிரிக்கல. ரிஷிய பொறுத்த வர அவன யாரும் சீண்டாத வர அமைதியாத்தா இருப்பான். அவன கடுப்பேத்துற மாறி யாராது நடந்து கிட்டா, அவெ செத்தான்ங்கிற மாறி எதையாது செஞ்சிடுவான். கொஞ்ச வர்ஷமா நா அவனுக்குப் பொண்டாட்டியா இருக்குறேங்கிற ஒரே காரணத்துனால இத கேக்குறேன். நீ என்ன பண்ண?." எனப் பதிலுக்குக் கௌதமிடம் கேள்வி கேட்க, அவன் வேகவேகமாகக் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
"ஏய், கௌதம்... கௌதம்..." என அவளும் பின்னாலேயே சென்று அமர,
"இதோ பாரு உம்புருஷனுக்கு சப்போட் பண்றதா இருந்தா எங்கிட்ட பேசாத. சொல்டேன்." எனச் சொல்லிக் காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட,
"சரி... சரி அவனுக்குச் சப்போட்லாம் பண்ணல. ஆனா நடந்ததுன்னு ஒன்னு இருக்குள்ள. அத மறைக்கக் கூடாதுல்ல." என்க, அவளை முறைத்தான் கௌதம்.
ஆமாங்க, அந்த வீடியோ கேம்க்கு விதவிதமான கேசட்கள் கிடைக்கும். அவனிடம் இருந்தது இரண்டு மட்டுமே. அதை விளையாடி விளையாடி ஃபோர் அடித்து விட்டதால் வேறு வாங்க நினைத்தவனுக்கு கையில் காசு இல்லை. எனவே உண்டியலில் கை வைத்து விட்டான். அவனுடையதில் இல்லை. தரனுடையதில். ‘சும்மாத்தான வச்சிருக்கான். அத எடுத்து நாம ஆதரவு தரலாம்.’ன்னு எடுத்து வாங்கிட்டான். விடுவானா தரன்.
நேரே சென்று கலியபெருமாளிடம் சொல்லவில்லை அவன். அவரின் சட்டை பாக்கெட்டிலிருந்து கௌதம் எடுத்த காசிற்கு பதில் சில ரூபாய் நோட்டுக்களை எடுத்துவிட்டான் ரிஷி. பணத்தை காணாது தேடிய கலியபெருமாள் மகன் புதிதாகக் கேசட் வாங்கியதை பார்த்ததும் முடிவு செய்து விட்டார். தன் மகன் தான் திருடி விட்டான் என்று. அவரின் பெல்ட்டிற்கு வேலை கொடுத்துக் கௌதமின் முதுகையும் காலையும் பதம் பார்த்து விட்டார் ஹிட்லர்.
ரிஷி போட்டுக் கொடுக்கவில்லை தான். ஆனால், வசமாகச் சிக்க வைத்து விட்டு வேடிக்கை பார்த்து நின்று சிரித்தான். பதிலுக்குக் கௌதமும் சும்மா இருக்கவில்லை. தரனுக்கு பிடித்த ஒரு பொருளை அவன் கண்முன்னே உடைத்து எரிந்தான்.
"அந்தாள்ட்ட போய் இதையும் போட்டுக் குடு. பத்தடி வாங்கி பழகுன எனக்கு, கூட நாலடி அடிச்சாலும் வலிக்காது. தாங்கிப்பேன்." என்பான் கௌதம்.
பதிலுக்கு அவன் ஒன்று செய்ய இவன் ஒன்று செய்ய என இருவருக்கும் இடையே பெரிய பழி வாங்கும் படலமே நிகழும். சில நேரம் ஆர்பாட்டமாய் கத்தி சண்டை போடுவர். பல நேரம் மௌனமாய் யுத்தம் நிகழும். அதில் அதிக பாதிப்பு என்னவோ கௌதமிற்கு தான்.
"ஹஹ்ஹஹ்ஹா... அவ்ளோ தானா!. இல்ல இன்னும் இருக்கா.!" ஹரிணி சிரித்துக் கொண்டே கேட்டாள்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..