அத்தியாயம்: 54
ஒருவரிடம் சொல்லி..
புரிய வைப்பதில் வருவதில்லை..
அன்பு...
மனதால் உணர்ந்து..
அடுத்தவர்களுக்கு அறிய..
வைப்பதில் தான்..
அடங்கியிருக்கிறது..
உண்மையான அன்பு..
ஜன்னலின் வழியே வீசிய குளிர்ந்த காற்றை கூட கௌதமிற்கு ரசிக்க தோன்ற வில்லை.. ஏனெனில் மனமானது குழம்பிய குட்டைபோல் சூடான எரிமலை போல் இருந்தது..
காரணம் ஹரிணி கூறிய சில வார்த்தைகள் அவனின் சிந்தனை எனும் ஒளியை தூண்டி விட்டது.. மனதை காயம் கொள்ளவும் செய்தது.. நினைவுகளில் இருதினங்களுக்கு முன் நடந்தவையே ஓடியது..
" சித்தி நீ தா எடுத்துக் குடுக்கனும்.. போ சித்தி.. " வருண் பிடிவாதமாக நிற்க..
" டேய் அது முள்ளு காட்டுக்குள்ள விழுந்திருக்கும் போல.. நா உனக்கு வேற வாங்கித்தாறேன்.. அத தேடாதடா.. விட்டுடு வா போலாம்.. " சுதா சமாதானமாக..
விளையாண்டு கொண்டிருந்த வருணின் பந்து காம்பௌண்டை தாண்டி சென்றதால் தேடிக்கொண்டு இருக்கின்றனர் சுதாவும் வருணும்..
" நீ வாங்கித்தந்தா அது எப்பிடி என்னோட பந்தா இருக்கும்.. எனக்கு அதுதா வேணும்.. தேடு சித்தி.. எனக்காக.. " தன் கண்களை கசக்கியபடி கூறினான் சிறுவன்..
" அது உனக்கு கண்டிப்பா வேணுமா.. " என்றவள் அவன் ஆம் என பிடிவாதம் இருப்பதை கண்டு...
" சரி கொஞ்ச நேரம் மட்டும் தா.. அப்றமும் கிடைக்கலைன்னா வேற வாங்கிக்கிவோம்.. சரியா.. " சுதா..
" ம்.. " என இருவரும் தேடிக் கொண்டிருந்தனர்..
மலரும் நாச்சியம்மாளும் இவர்களின் செயலை கவனித்து விட்டு கவனமாக இருக்க சொல்லி சென்றனர்.. வீட்டில் ஆண்கள் அனைவருமே வேலை காரணமாக டவுனுக்கு சென்றிருந்தனர்..
பந்து அங்கிருந்த மரத்தின் கிளையில் மாட்டி இருந்தது.. சுதா நீள குச்சியை எடுத்து வரச்சென்றாள்.. செல்லும் முன்
" நா திரும்பி வர்ர வர நீ இங்கேயே தா நிக்கனும்.. சரியா.. " சுதா..
" ம்.... நீ போ சித்தி.. சீக்கிரம் கம்ப எடுத்துட்டு வா.. " என்றவனின் பார்வை முழுவதும் பந்தின் மீதே இருந்தது..
மரத்தை சுற்றி சுற்றி வந்த வருண் அங்கிருந்த கிணற்றின் மீது ஏறினான்.. கிணறு இரும்பு கம்பி போட்டு யாரும் தடுக்கி உள்ளே விழுந்து விடாத படி பாதுகாப்பாய் மூடப் பட்டிருந்தது.. ஆனால் அது சரியாக பூட்டப் பட வில்லை..
கம்பியின் மீது ஏறியவன் பந்தை எடுக்க குதிக்க மூடி திறந்து கொண்டதால் உள்ளே விழுந்தான்...
" அம்மா.. " என அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர்..
வேலையாட்களின் உதவியோடு வருண் பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டான்...
அபி மிகவும் பயந்து விட்டாள்.. வருணனை விட்டு நகரவே இல்லை அவள்... தன் அணைப்பிலேயே வைத்திருந்தாள்... மழையில் நனைந்த தன் குஞ்சை பாதுகாக்கும் குருவி போல்..
கௌதம் தான் முதலில் வீடு வந்தவன்.. முதல் வேலையாக அந்த கிணற்றின் மூடி மாற்றப்பட்டது..
இன்று நடந்த அசம்பாவிதத்திற்கு சுதா தான் காரணம் என திட்ட தொடங்கி விட்டான்.. கலியபெருமாளின் மகன் அல்லாவா.. நடந்த எதையும் காதில் வாங்காது கத்த தொடங்கிவிட்டான்..
" காலேஜ் போற பெரிய பொண்ணு நீ இப்படியா அஜாக்கிரதையாவா இருப்ப.. கொஞ்சம் அறிவோட நடந்துக்க மாட்டியா.. " என கோபமாக கத்தியதோடு நில்லாமல்..
"இல்லண்ணா நா ஜாக்கிரதையாத்தா இருந்தேன்.. " என அவளின் பதிலுக்கு பதில் பேச்சில்ல அடிக்க கையையே ஓங்கி விட்டான்..
இதுவரை தங்களிடம் அன்பாக மட்டுமே பழகி வந்த அண்ணன் இன்று கோபமாக திட்டவும் அரண்டு போனவள் ஆழ ஆரம்பித்து விட்டாள்..
" ஆனா ஊனா அழ வேண்டியது.. ச்ச.. பொறுப்பில்லாம நடந்துட்டு அழுது சாதிக்க வேண்டியது.. என்ன பழக்கமோ.. " என திட்டிக் கொண்டே போனவனை தடுக்கத்தா ஆள் இல்லை..
" போது நிறுத்தடா.. பொறுப்பு வந்து இப்ப என்ன பண்ணப் போறா அவ.. அதெல்லாம் வரும்போது வரட்டும்.. நீ போய் உன்னோட வேலையப் பாரு.. அழாத சுதா.. " ஹரிணி சமாதானம் செய்ய..
" ம்ச்.. இப்பருந்தே வரனும்ல ஹரிணி.. ஏற்கனவே ரெண்டு உயிரு போயிருச்சு.. இதுக்கப்புறமும் போகவிட்டா அது யாரோட தப்பு.. சுதா வருண கிணத்தும் பக்கம் கூட்டீட்டு போனதுனால தா இதெல்லாம் நடந்தது.. "
" விட்டா உன்னோட அண்ணே மகெ கூட விளையாடுனதே தப்புன்னு சொல்லுவ போலையே.. நடந்ததுக்கு யாரையும் குத்தம் சொல்ல முடியாது.. போதும் டா.. பாவம் அழுறா பாரேன்.. " என சுதா மேல் எந்த தவறும் இல்லை என கூறியவளின் பேச்சு கௌதமிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை...
கௌதமின் கோபம் தான் அதிகமானது.. " இதுல நீ தலையிடாத.. ஒரு அண்ணனா என்னோட தங்கச்சிய நா கண்டிக்கிறேன் நீ உ வேலய மட்டும் பாரு.. " என்றான் கோபமாக .
" ஓகேங்க மிஸ்டர் பிதர்.. நீங்க இப்ப திட்டுனீங்களே அது யார சுதாவையா? இல்ல உங்கள நீங்களே திட்டிக்கிட்டீங்களா?.. எனக்கு சந்தேகமாக இருக்கு.. " ஹரிணி..
" என்ன சொல்ற நீ.. "
" புரியலையா.. நீ சுதாவ திட்டுறதும்.. அன்னைக்கு பார்கவி இறந்ததுக்கு நீ தா காரணம்னு மிஸ்டர் கலியபெருமாள் உன்ன தண்டிச்சதும் ஒன்னு தான்னு சொல்றேன்.. " ஹரிணி
" போதும் ஹரிணி.. " என கத்தினான் கௌதம்..
எந்த ஒரு சூழ்நிலையிலும் ஹிட்லரை போல் இருக்கக் கூடாது என்று நினைத்தவனை இன்று ஹரிணி ' நீ இன்னொரு கலியபெருமாள்..' என வார்த்தைகளால் கூறாது கூறியது.. அவன் மனதை புண்படுத்தியது..
இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது கௌதம் ஹரிணியிடம் பேசி.. சுதாவிடம் கூட பழம் விட்டு விட்டான் ஆனால் ஹரிணியிடம் தான் பேசாது தவிர்த்தான்..
" டேய் உனக்கே இது நியாயமா.. நாந்தா உம்மேல கோபப்படனும்.. எனக்கு முன்னாடி நீ கோபமா பேசுனா நீ பண்ணது சரியாகிடுமா.. நம்ம தோஸ்த்து ங்கிறதுனால உன்ன சும்மா விட்டேன்.. இல்லைன்னா.. " என அவனின் பின்னாலேயே சென்றாள்..
அவளை முறைத்து விட்டு சென்று விட்டான் கௌதம்..
" இந்து எனக்கு எனர்ஜி டிரிங்க எதாச்சும் இருந்தா தா.. உம் புருஷனா சமாதனா படுத்துறதுக்குள்ள என்னோட தொண்ட வறண்டு போச்சு.. " ஹரிணி..
" சித்தா உங்கூட இன்னும் பேசலையா.. " வருண்.
" ஆமாண்டா.."
"ஆனா கூட சித்தி கூடலாம் பேசுவாறே.. "
" உன்னோட சித்தாவ கரெக்ட் பண்ண எனக்கு வழி சொல்லேன்.. "
" தரன் சித்தாவையா.. கௌதம் சித்தாவையா.. " வருண் சந்தேகமாக கேட்க..
"ஏன்னா நீங்க ரெண்டு சித்தா கூடயும் சண்ட போட்டிருக்கிங்க.. அதா கேட்டேன்.. "
அவனை முறைத்தவள் " வாயி.. வாயி.. உன்னைய இன்னும் ரெண்டு தடவ அந்த கிணத்துல முக்கி எடுத்திருக்கனும் டா.. " ஹரிணி என வருணின் தலையில் வலிக்காமல் கொட்டினாள்..
" ஸாரி டா.. " என்றாள் கௌதமின் வழியை மறித்து..
" ...... " .
" ப்ளீஸ் பேசாம இருக்காத டா.. கஷ்டமா இருக்கு.. " என்றவளை விட்டு நகராது நின்றான்.. எங்கே அன்று கையை அறுத்து கொண்டது போல் இன்றும் விபரீதமாக ஏதாவது செய்து விட்டாள்..
" பயப்படாத எதுவும் பண்ணிக்க மாட்டேன்.. பண்ணனும்னா இனி என்ன டார்ச்சர் பண்ணுற உன்னோட கழுத்த தா அறுக்கனும்.. ஹிம்.. "
கௌதமிற்கும் அவளுடன் பேசாது இருப்பது கடினமாக இருந்தது.. சோர்வுடன் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்..
" கௌதம்.. " என அவனின் அருகில் அமர்ந்தாள் ஹரிணி..
" ஒரு குழந்த பெத்தவங்க இல்லாம வளர்ரது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா ஹரிணி.. அதுலயும் குற்றவாளிங்கிற பேர சுமந்திட்டு இந்த சமூகத்துல வாழ்றதுங்கிறது சாதாரண விசயம் கிடையாது.. இந்த சமூகம் ரொம்ப மோசமானது.. அது தா ஒரு மனுசனோட குணத்தயே தீர்மானிக்குது.. அந்த பயங்கரத்துக்கு மத்தியில பாதுகாக்க ஆள் இல்லாம தனியா ஒரு குழந்த ஆணோ பொண்ணோ அநாதையா வளர்ரது ரொம்ப கொடுமானது ஹரிணி..
நா அப்படி தா வளந்தேன்.. சின்ன வயசுலயே ஜெயில்.. நிறைய பேரோட கேலி கிண்டல் குத்தல் கண்ணீர்ன்னு என்னோட அனுபவத்த வார்த்தையாள சொல்லிட முடியாது ஹரிணி.. ரவுடி, கஞ்சா குடிக்கி, பொம்பள பொறுக்கிங்கிறது எல்லாம் எனக்கு கிடைச்ச பேரு.. நா அப்படி இல்லன்னாலும் அந்த பேரு என்ன துரத்தீட்டு வருது.. எங்க போனாலும்.. இப்ப வர.. அதுக்கு எல்லாத்துக்கும் காரணம் யாருன்னு உனக்கு தெரியும்..
என்னால நினைச்சு கூட பாக்க முடியல ஹரிணி நீயா என்ன இன்னோரு ஹிட்லர்னு சொன்னனு.. எங்க பார்கவி மாறி வருண இழந்திடுவோமோங்கிற பயத்துல தா சுதாவ திட்டுனேன்.. அதுக்குப் போய் என்ன நீ.. அந்தாளு கூட.. ச்ச.. " கௌதம் வேதனையோடு..
" இனி சொல்ல மாட்டேன் கௌதம்.
ப்ராமிஸ்.. மன்னிச்சிடேன்.. ப்ளீஸ்.." என்றவள் சிறு மௌனத்திற்கு பிறகு..
" நானும் யாரும் இல்லாம வளந்தவ தா கௌதம்.. உனக்கு ஒரு அனுபவம்னா எனக்கு வேற மாறி ஒன்னு.. அப்பா அம்மா என்னோட எட்டு வயசுல இறந்துட்டாங்க.. எப்படின்னா அம்மாக்கு வைத்தியம் பிடிச்சிடுச்சி அம்மாவ கவனிக்க அப்பான்னு எனக்கும் அடைக்கலம் குடுத்து அன்பா பாத்துக்க யாரும் பக்கத்துல கிடையாது.. என்ன பெத்த ரெண்டு பேருமே ரொம்ப மோசம்.. என்ன பத்தி கவலப்படாமா போய்டாங்கன்னு.. ரொம்ப கோபம் வந்தது..
ஆனா அந்த கோபத்துல நியாயம் இல்ல எனக்கு புரிய வச்சது எங்குழந்தையோட இழப்பு..
தாய்க்கும் குழந்தைக்கும் இடைல இருக்குறது தொப்புள் கொடி உறவு மட்டும் கிடையாது.. ஒரு பொண்ணு தன்னையோ அல்லது தன்னோட இணையயோ தன்னோட வயித்துக்குள் சுமக்குறதா நினைச்சிக்கிவா..
உருவமே இல்லாத அதோட எதிர் காலத்த பத்தி கனவு காண ஆரம்பிச்சுடுவா.. சிசு வளர வளர தானும் அது கூடவே வளர ஆரம்பிச்சுடுவா.. எல்லாமே அவளுக்கு அது தா.. திடீர்னு ஒரு நாள் எல்லாமே காணம போயிடுச்சுன்னா.. அந்த தாயோட நிலமய நீ என்னைக்காச்சு யோசிச்சு பாத்திருப்பியா.. பைத்தியம் பிடிச்ச மாறி இருக்கும்.. அப்படி தா இருந்தது எனக்கு..
ஒரு வேல எங்கம்மாக்கும் அப்படி தா இருந்திருக்குமோன்னு தோனுச்சி.. ஆனா என்ன இந்த உலகத்துல தனியா விட்டுடுட்டு போய் தப்பு பண்ண மாறி நானும் பண்ணக்கூடாதுங்கிற எண்ணம் தா என்ன அதுல இருந்து மீட்டு வந்தது.. " வேதனை ததும்பும் குரலில்..
" நீ என்ன தா சொல்ல வர்ற " கௌதம்..
" இழப்புங்கிறது எல்லாருக்கும் பொதுவானது கௌதம்.. அம்மா பிள்ளைய இழந்தாலும் சரி.. பிள்ளைங்க அம்மா இழந்தாலும் சரி.. அதுல யாரோட இழப்பு அதிகம்னு போட்டி போட முடியாது.. எங்க வருண இழந்துடக் கூடாதுன்னு சுதாவ திட்டுணியோ.. அதே மாறி தா பார்கவிய பெத்தவங்க தன்னோட மகளுக்காக உன்ன திட்டிருக்கலாம்ல..
அதுக்காக நீ அவங்கள இத்தன வர்ஷமா தண்டிக்கிறது தப்பில்லையா.. நா யாரப்பத்தி சொல்றேன்னு உனக்கு புரியுதா.. உன்னோட அப்பா பண்ணது பண்றது சரின்னு சொல்ல.. ஆனா நீ ஜோதி அத்த கூட பேசாம இருக்குறது தப்புன்னு சொல்ல வர்றேன்.. “
கௌதமிற்கு ஜோதி பட்டுக் கொண்டிருக்கும் இத்தனை ஆண்டுகளா வேதனையை புரிய வைக்கும் நோக்குடன் பேச...
" அம்மாவோட அன்பு எல்லா வயசுலையும் தேவ கௌதம்.. தாமதமா கிடைச்சாலும் அதுக்கு வேல்யூ ஜாஸ்தி தா.. யோசி.. நீ என்னைக்குமே உங்கப்பா கிடையாது கௌதம்.. நீ என்னோட ஃப்ரெண்ட்.. எனக்கு அம்மா அப்பான்னு எல்லா உறவு நீதா.. பொறுக்கியோ ரவுடின்னு எந்த பெயரையும் உனக்கு தா வைக்க விட மாட்டேன்.. ” என அவனின் தலை வருடிச் சென்றாள் ஹரிணி..
வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மகனை இழந்து ஹரிணி படும் வேதனையும் பார்கவியை இழந்த அன்று தன் தாய் பட்ட துன்பமும் ஒன்றாக பட்டது கௌதமிற்கு..
தன் தாய் தன்னை புறக்கணிப்பதாக இத்தனை நாட்கள் எண்ணியிருந்தவனுக்கு.. இப்போது ஜோதியை பார்க்கையில் தான் தான் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறோம் என்ற உண்மை புரிந்தது.. சுதாவை திட்டிய பிறகுதான் கலியபெருமாளின் கோபமும் புரிந்தது.. அது நியாயமானதும் தான்.. அந்த ஒன்று மட்டுமே நியாயமானது..
கலியபெருமாள் ஜோதி இருவரும் தான் செய்யாத தவறுக்கு தண்டனை குடுக்கிறார்கள் என்று நினைத்தவனுக்கு இத்தனை வருடம் தானும் தான் அவர்களை தண்டித்து கொண்டிருப்பது புரிந்தது..
இவர்களின் உரையாடல் கௌதமை மட்டும் அல்ல கனகவள்ளியையும் சிந்திக்க வைத்தது.. கௌதமின் வேதனை நிறைந்த குரல் அவனை வளர்த்த தாயான கனகவள்ளியின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது... கூடவே உறவுகளுக்கா ஏங்கும் இவளா தன் கணவன் இறப்பிற்கு காரணமாக இருப்பாள் என்ற சிந்தனையும் வந்தது..
தரனிடம் இருக்கும் நிமிர்வும் திமிரும் கனகவள்ளியிடம் இருந்து வந்தது.. தவறென்று பட்டால் உடனே அதை சரி செய்வதும் கனகவள்ளியின் குணமே.. படாத வரை வீம்பாகத்தான் இருப்பார்..
அன்றில் இருந்து கௌதமிற்கு இரு தாயாரின் அன்பும் கிடைக்க ஆரம்பித்தது..
" மச்சான் ஸார்.. " பிரகாஷ்..
" ம்.. " சம்பத்..
" மச்சான் ஸார்.. " பிரகாஷ் உரக்க..
" எனக்கு நல்லாவே காது கேக்குது.. என்ன.. "
" இப்ப எதுக்கு காப்பி பிஸ்கட் சமோசா இப்படி எதுவுமே இல்லாம வட்ட மேச மாநாடு நடக்குது.. " சந்தேகமாக..
" தெரியல டா.. நானும் தெரிஞ்சுக்க தா உக்காந்திருக்கேன்.. அரைமணி நேரமாகியும் உன்னோட அண்ணனுங்க அசையக்கூட இல்ல.. " எதிரில் இருந்த கௌதமையும் தரனையும் பார்த்தபடி சொன்னான் சம்பத்..
முதலில் ரிஷி தரன் தா அமர்ந்திருந்தான்.. ஏதோ சிந்தனை போலும் அருகில் சில சிகிரெட் துண்டுகள்.. நாற்காலியின் கைபிடியில் கை வைத்து தன் கன்னம் தாங்கி அமர்ந்திருந்தான் ரிஷி..
அங்கு வந்த கௌதம்.. 'நீ மட்டும் தா இப்படி உக்காருவியா.. நாங்களும் உக்காருவோம்.. சேரும் கொண்டாந்திருக்கோம்.. கையையும் கன்னத்துல வச்சிக்குவோம்.. ' என ரிஷியின் எதிரிலேயே அமர்ந்தான்..
இருவரையும் பார்த்து சம்பத் பிரகாஷ் என வரிசையாக உட்கார்ந்திருந்தனர்..
" மாப்ள.. மாப்ள.. " என சம்பத் ரிஷியை உலுக்க..
" என்னா டா.. " என்றான் காட்டமாக..
' இவந்தங்கச்சிய கட்டிக்கிட்டதுனால ஊருக்குள்ளையும் மரியாத இல்ல வீட்டுலையும் இல்ல.. ' என புலம்பினான் சம்பத்..
" மச்சான் ஸார் இதுக்கு தா என்ன மாறி அமைதியா இருக்கனும்.. நா எதாவது கேட்டேன்னா பிழைக்க தெரியாத ஆளாய் இருக்கிங்களே மச்சான் ஸார்.. " பிரகாஷ்..
" என்னனு நா கேட்டேன்.. நீ என்னடான்னா அவன்ட்ட பேசிட்டு இருக்க.. " ரிஷி..
" இல்ல என்ன காரணம் நீ ரெண்டு பேரும் பார்க்ல லவ்வர்ஸ் கோய்ச்சுட்டு உக்காந்திருக்குற மாறி உக்காந்திருக்கிங்க.. ஏன்.. "..
" நீ ஏன்டா உக்காந்த.. " ரிஷி கௌதமிடம்..
" அத நீ கேக்க கூடாது.. இது என்னோட வீடு.. நா இங்க உக்காருவேன்.. அங்க உக்காருவேன்.. ஏ.. அப்பத்தா மடில கூட உக்காருவேன்.. உனக்கென்ன.. " கௌதம் நக்கலாக..
" ம்ச்ச்.. ஏன்டா சும்மா கூட உக்கார விட மாடேங்கிறிங்க.. "
" உக்காரு யாரு வேணாம்னா.. நா மட்டும் சொன்னத செஞ்சுட்டு உக்காரு.. உன்னைய யாரு கேக்கப் போறா.. " கௌதம்..
" இந்து ஓட புருஷங்கிற ஒரே காரணத்துக்காக தா உன்னைய இன்னும் உயிரோடவே விட்டு வச்சிருக்கேன்.. ஹரிணிக்கும் எனக்கும் நடுவுல வராத.. " என்றான் எச்சரிக்கும் விதமாய்..
" என்ன பிரச்சினை மாப்ள.. " சம்பத் .
" ஹாங்.. டைவர்ஸ் குடுக்கனுமாம்.. நா ஹரிணிக்கு.. "
' ஆஹா.. நம்ம பேச நினைச்சத கௌதம் பேசிட்டான் போலையே.. சூப்பர்.. சூப்பர்... ' சம்பத் மனதிற்குள்..
" அதெல்லாம் பண்ண முடியாது.. " பிரகாஷ் பொங்கி எழுந்தான்.
" டேய் ஹரிணி அவனோட பொண்டாட்டிடா.. " கௌதம்..
" யாரோட பொண்டாட்டியா இருந்தா எனக்கென்.. டைவர்ஸ் ங்கிற பேச்சே இந்த வீட்டுல யாரும் எடுக்க கூடாது.. சொல்லிட்டேன்.. " பிரகாஷ் .
" இவரு பெரிய நாட்டாம.. தீர்ப்ப சொல்லிட்டு துண்ட உதறிட்டு போனா நா கேக்கனுமாடா.. " என கௌதமும் பிரகாஷும் சண்டையிட அவர்களை ராக்கெட் ஒன்று தாக்கியது..
பேப்பர் ராக்கெட்..
" யார்டா அது.. " என பார்க்க அங்கு அபி , சுதா , பவி , வருண் என இளையவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்..
எதேச்சையாக அந்த பேப்பர்களை பிரித்து படித்தான் தரன்..
அந்த காகிதத்தில் இருந்தவை..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..