அத்தியாயம்: 70
வசுந்தரா தேவி..
ஹரிணியின் அன்னை.. மனைவியை இழந்த ரெட்டிக்கு மகள் மட்டுமே எல்லாம் என நினைத்து பாசம் கொட்டி வளர்த்தார்.. கண்ணில் படும் எல்லாம் தன் மகள் வாயை திறந்து கேட்கும் முன்னே வாங்கி நிறைத்துவிடுவார் வீட்டில்..
உயிரற்ற பொருட்களை வாங்கலாம் ஆனால் உயிருள்ள மனிதன் என்றால்.. அதுவும் திருமணம் முடிந்த இரு குழந்தைகளின் தந்தையை காதல் என்ற பெயரில் வாங்க முடியுமா என்ன?..
வசுந்தராவின் பிடிவாதம் வாங்கியது.. சிறிய வியாபாரம் பார்த்து வந்து தேவேந்திரனை பார்த்த முதலே அவரின் மனம் காதல் வயப்பட்டுவிட்டது..
தேவேந்திரன் அமைதியான குணம் கொண்ட அவருக்கு பணத்தின் பின்னால் அலையும் மனைவி கற்பகம்.. நிம்மதியின்றி வாழ்ந்த தேவேந்திரனுக்கு வசுந்தராவின் காதல் பெரும் ஆறுதலாய் இருந்தது..
இருவரின் திருமணத்தையும் கற்பகமே நடத்தி வைத்தார்.. ரெட்டியின் வீட்டில் ஆடம்பரமாக தானும் தன் பிள்ளைகளும் நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்தை முன் நின்று செய்தார்..
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது.. கற்பகமும் குழந்தைகளும் ரெட்டி வீட்டில் உரிமையுடன் வளம் வரத் தொடங்கினர்..ஓம் தீப்தியுடன் சேர்த்து தேவேந்திரன் வசுந்தராவின் அரவிந்த் என்ற ஐந்து வயது மகனும் , ஹரிணி மூன்று வயது மகளும் ஒன்றாகவே வளர்த்தனர்.. இந்நிலையில் மீண்டும் கருவுற்றார் வசுந்தரா..
கற்பகத்தின் அண்ணன் ரங்காராவ்..
" நீ இப்படியே பணம்.. பணம்ன்னு.. இன்னைக்கு இருக்குறதையே கைல வச்சுட்டு சந்தோஷப்படு அவனுங்க உங்கிட்ட சின்ன சைசுல இருக்குற கலாக்காய குடுத்துட்டு பெரிய சைசு பலாப்பழத்த அனுபவிக்குறானுங்க.. " என்க..
" என்னண்ணே சொல்லுற புரியலையே.. " கற்பகம்..
" உனக்கப்புறம் உன்னோட பிள்ளைகளுக்கு பணம் வேணுமா இல்லையா.. "
" ஆமா.. பணம் வேணும்.. அது இல்லாம வாழ முடியுமா.. அது தான எல்லாமே.. " கற்பகம் கண் நிறைய ஆசையுடன் கூறினார்..
" அப்ப நா சொல்லுறத கேளு அப்பத்தா நம்ம வீட்டு வாரிசு ஓம்ம இந்த ரெட்டி சொத்துக்கு வாரிசாக்க முடியும்.. அவா அடுத்தடுத்து பெத்துக்கிட்டே போனானா நமக்கு ஒன்னுமே கிடைக்காது.. பாத்துக்க..” என கற்பகம் மனதில் மட்டுமல்லாது இந்த சொத்துக்களின் அதிபதியாகும் தகுதி உனக்கு தான் உள்ளது என பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சிலும் நஞ்சை விதைத்தார்..
அது விருட்சமாக வளர்ந்தது.. விளைவு.. வசுந்தராவின் ஆண் வாரிசுகள் விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டது.. முதலில் அரவிந்த் பின் பிறந்து சில மணி நேரமே ஆன இரண்டாவது மகன்.. இப்படி அடுத்தடுத்து பெற்ற பிள்ளைகளை உயிரற்ற ஜடமாய் காண்கையில் அன்னையாய் அதை ஏற்க முடியாத வசுந்தராவின் சித்தம் கலங்கியது.. அவரின் வைத்தியத்திற்கு என தேவேந்திரன் ஊர் ஊராய் சுற்றியும் பலன் இல்லை..
தன் அண்ணன் மற்றும் தம்பியின் இறப்பிற்கு காரணம் யார் என்று ஹரிணி உரக்க கூறிய போது.. நான்கு வயது சிறுமியின் பேச்சு பைத்தியக்காரத்தனமான தெரிந்தது பலருக்கு.. யாரும் நம்பவில்லை.. தந்தை தாய் உட்பட அனைவருமே ஹரிணி நம்பவில்லை.. ரெட்டியை தவிர..
மனவலிமை கொண்ட ரெட்டியால் தன் குடும்பம் சிதைவதை பார்க்க முடியவில்லை.. இருக்கும் தன் ஒரே வாரிசான ஹரிணியை காக்கும் பொருட்டு அவளின் பேரில் சில சொத்துக்களை மட்டுமே எழுதி வைத்துவிட்டு மீதியை அரசிற்கும் கற்பகத்தின் பிள்ளைகளுக்குமே கொடுத்து விட்டார்..
சொத்திற்காக தன் பேத்தியை அவர்கள் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதால் ஹரிணிக்கு உரிய வயது வரும் வரை அவளை பாதுகாக்கும் பொறுப்பை அந்த திருட்டு கும்பலிடமே ஒப்படைத்தார்.. அவர்கள் ஹரிணியை உயிருடன் வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பாலுக்கு பூனையை காவல் வைத்தார்.. அதே நேரம் ஹரிணியை பயமற்ற தைரியமிக்க பெண்ணாக வளர்த்தார் ரெட்டி..
ராகவ் சம்பத் தன் உற்ற நண்பனின் பேரன்.. தாய் தந்தையற்ற அவனை ஹரிணிக்கு காவலாக இருக்க சொல்லி உயிர் நீத்தார் கோவிந்தராய ரெட்டி..
தன்னைச் சுற்றி இருந்த பாசமான உறவுகள் எல்லாம் திடீரென கானல் நீராய் மாறியதால் ஹரிணி தன் சிறு வயதிலேயே அனாதையாக உணர்ந்தாள்.. உறவிற்காக பாசத்திற்காக ஏங்கும் ஓர் அனாதை..
அதனாலோ என்னவோ நாச்சியம்மாளின் கூட்டுக்குடும்பம் அவளை கவர்ந்தது.. அந்த குடும்பத்தை விட்டு பிரிய அவள் என்றும் நினைத்தே இல்லை.. சொல்லப் போனால் அந்த குடும்பம் தான ரிஷியின் மீது காதல் வர காரணம்.. ஆனால் இப்போது..
நடு இரவை தாண்டும் நேரம் அது..
அறையின் கதவு வெகு நேரமாக தட்டப்பட்டு கொண்டிருந்தது..
கதவை தட்டியவன் கலைந்த கேசம், கலையிழந்த முகம், வாடிய தேகம் என கண்களில் சிவப்புடன் நின்றான் ரிஷி தரன்..
விவாகரத்து நோட்டீஸ் வந்த இந்த நாட்களில் உறக்கம் என்பது அறவே இல்லை.. எங்கே ஹரிணியை இழந்து விடுவோமோ என்ற ஒரு பயம் விவரிக்க இயலாத அச்சம் அவன் மனதை வியாபித்தது.. இதுவரை எந்த விசயத்திலும் தோல்வி என்பதை காண விரும்பிடாத ரிஷி முதல் முதலில் தன் தோல்வியை உணர்கிறான்.. அதுவும் ஒரு பெண் அளித்த தோல்வி.. அவனின் ஆண் என்ற கர்வம் என்ன ஆவது.. அதிலும் அவன் மனகவர்ந்தவள் தந்த காயம்..
இதயத்தில் உண்டாகும் வலியை நீக்க வழி தெரியவில்லை அவனுக்கு.. அடிப்பட்டுப்போன தன் கர்வத்தை சரி செய்ய யாரேனும் ஒருவர் வேண்டும்.. எனவே தந்தையை தேடி வந்துள்ளான்..
கதவை திறந்தார் மூர்த்தி..
" ப்.....பா..... " என அவரின் மார்பில் சாய்ந்தான் தரன்..
சிறு வயதில் ஏதேனும் தவறு செய்யும் போது மட்டுமே தரன் அவரின் தோலில் சாய்வது வழக்கம்.. அப்போதும் தவறு அவன் மீது இல்லை எதிரில் இருப்பவர்களிடம் தான் தவறு உள்ளது என வாதிடுவான்.. இன்று அந்த சிறுவனை மீண்டும் பார்ப்பது போல் உணர்ந்தார் மூர்த்தி..
முதுகில் தடவிக் கொடுத்தவர.. அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார் மடியில் மகனை படுக்க வைத்துக் கொண்டு..
" என்னப்பா ஆச்சு.. ஏ இப்படி இடிஞ்சு போய் இருக்க.. இதுக்கு முன்னாடி நா உன்ன இப்படி பாத்ததில்லையேப்பா.. " மூர்த்தி நிதானமாக..
" ப்பா.. " என்றானே தவிர வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு..
" என்ன ரிஷி.. "
" இங்க ரொம்ப பெயின் இருக்குற மாறி ஃபீல் பண்றேன்ப்பா.. " என தன் நெஞ்சில் கை வைத்து கூறினான்..
அவனின் சிகையை நீவி விட்டவர் ஏன் என்று கேட்கவில்லை.. அவனே வாயை திறக்கும் வரை மௌனமாகவே நேரம் சென்றது..
" ப்பா.. அவா என்ன டிவர்ஸ் பண்ணப்போறாளாம்பா.. நோட்டீஸ் வந்திருக்கு .. " என்றான் உடைந்த குரலில்..
" யாருப்பா.. நம்ம ஹரிணியா..” ஆச்சரியமாக..
" ஆமா ப்பா..”
" இத்தன நாளா இல்லாம இப்ப அந்த முடிவு எடுத்திருக்கான்னா என்ன காரணமா இருக்கும்.. " என்றார் யோசனையோடு..
" எதுவும் உங்களுக்குள்ள பிரச்சனையா..? " மூர்த்தி..
எதை சொல்வான்.. ஒன்றா இரண்டா அவன் செய்ததை ஔவையார் பாடல் போல அடுக்கிக் கொண்டே போகலாம்.. அதில் எதை சொல்வது சரி கடைசியா நடந்ததை சொல்லலாம் என முடிவெடுத்து.. ஓம் காரனை காப்பாற்ற அவள் முயன்றதை குற்றமாக கூறினான்..
" நா உயிரோடு இருக்குற மாறி அவனும் உயிரோட இருக்கனுமாம்.. நானும் அவனும் ஒன்னாப்பா...” சிறு குழந்தை போல் அவள் கூறிய அதே வார்த்தையிலேயே நின்றான்..
" ஓ.. அப்படியா சொன்னா.. ஆனா சரியாத்தானப்பா சொல்லிருக்கா.. " என மருமகளுக்கு ஆதரவாக பேச வெகுண்டெழுந்தான் தரன்..
" எப்படி ப்பா.. எப்படி நானும் அவனும் ஒன்றாக முடியும்.. எத்தன கொல பண்ணிருக்கான்னு தெரியுமா ப்பா.. அந்த கிரிமினல்க்கு போய் சப்போட் பண்ணி என்ன.. ச்ச.. "
" ம்.. அப்றம்.. " கதை சொல்ல தூண்டினார்..
" நா ஒன்னும் கத சொல்லல நடந்தத சொல்லுறேன்.. உங்களுக்கு ஒன்னு தெரியுமாப்பா அவள நா பத்து வருஷமா காதலிக்குறேன்.. என்னோட காதல புரிஞ்சுக்காமா.. " என அவளுடனான முதல் சந்திப்பில் இருந்து இப்போது வரை அவளுக்காகவே துடிக்கும் இதயத்தை பற்றி மூர்த்தியிடம் உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தான் ரிஷி..
"இப்ப எங்கிட்ட சொன்னியே அத ஏம்ப்பா நா டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணச் சொல்லும் போது சொல்லல.. "
".... "
" நீ ஹரிணிய காதலிக்குறது எனக்கு தெரியும் பா.. என்னோட மகென் யாருக்காகவும் தன்னோட விருப்பத்த மாத்திக்க மாட்டான்.. அந்த இடத்துல ஆ
அதாவது ரெட்டியோட பேத்தியா ஹரிணிக்கு பதிலா வேற எந்த பொண்ணு இருந்தாலும் நீ கல்யாணம் பண்ணிருக்க மாட்ட.. சரியா.. என்னைக்காது ஹரிணி கிட்ட சொல்லிருக்கியா இத.. " சந்தேகமாக..
"எத.. "
" உன்னோட காதல.. "
" ம்ச்.. அவளுக்கு அது தெரியும்.. "
" தெரியும்னா எப்படி.. நீ அவட்ட
அது என்ன சொல்லுவானுங்க ஹாங் பிரப்போஸ் அது பண்ணியா என்ன.. "
" ம்ச்.. இப்ப எதுக்கு தேவையில்லாதத பேசுறீங்க.. " எரிச்சலாக தன்னை கேள்வி மேல் கேள்வியாக கேட்கும் காண்டில் பேச..
" சரிப்பா.. ஹரிணிய கல்யாணம் பண்ணிக்கும் போது உனக்கு அவா அந்த கிரிமினல்லோட தங்கச்சின்னு தெரியும் தான.. அப்ப உனக்கு இந்த மாறி ஒரு எமோஷனல் சுட்சுவேஷன் வரும்னு தெரிஞ்சிருக்கும்.. நீ இத எதிர்பாத்திருக்கனும்ல..”
" தெரியும்.. ஆனா ஹரிணி என்ன புரிஞ்சுட்டு எனக்கு சப்போட் பண்ணுவான்னு நெனைச்சேன்.. அவன் பண்ண தப்புக்கு அவளே தண்டன குடுப்பான்னு நினைச்சேன்.. இப்படி ஹாஸ்பிடல்ல உக்கார்ந்து அவனுக்கு சேவ செய்வான்னு நா எதிர்பாக்கல.. " சின்ன குரலில்..
"எப்படி உங்கள புரிஞ்சுட்டு.. அந்த பொண்ணு இவரு வாயக் கூட திறக்கலன்னாலும் இவர புரிஞ்சிக்கனுமாம்... இவரு மட்டும் யாரையும் புரிஞ்சுக்காம எப்பையும் போல அதிகாரம் பண்ணீகிட்டே திரிவாராம்.. என்ன நியாயம் டா இது.. எப்படி பட்ட கொடுமகாரனா இருந்தாலும் காயம் பட்டு உயிருக்கு துடிக்குறப்ப உதவி செய்றது தா மனிதாபிமானம்.. அதத் தா ஹரிணி செஞ்சிருக்கா.. அத நீ தா புரிஞ்சுக்கல..
முதல்ல உன்னோட கல்யாண வாழ்க்க ஹரிணி கூட சந்தோஷமா அமையனும்னா.. நீ அவள முழுசா ஏத்துக்க.. இப்டி இருக்கனும் அப்படி இருக்கனும்னு கண்டிஷன் எதுவும் போடாம.. முழுசா அக்செப்ட் பண்ணனும்..
கணவன் மனைவிங்கிற உறவு ஒரு போட்டி கிடையாது.. யாரு ஃபஸ்ட் யாரு நெக்ஸ்டுன்னு சண்ட போட்டுக்க.. அது ஒரு அற்புதமான பயணம்.. ரெண்டு பேருமே ஒன்னுபோல அடி எடுத்து வச்சு நடக்கனும்.. எனக்கு கீழ நீ அடிபணிஞ்சு தா இருக்கனும்னு கட்டள போடுறதுல இல்ல தாம்பத்தியம்.. அது யாரு முதல்ல விட்டுக் குடுத்து போறாங்கிறதுல்ல இருக்கு.. அவளுக்காக நீயும் உனக்காக அவளும் விட்டு குடுக்கனும்.. அப்படி இறங்கிப் போறது தோல்வின்னா பொண்டாட்டிட்ட தோத்துப் போறது தப்பில்ல.. வாழ்க்கைல ஜெயிக்கனும்னா.. நீ உன்னோட ஆண் அப்படீங்கிற கர்வத்துல இருந்து இறங்கிதா வரனும்.. " என அவர் பல வாழ்வியல் சம்மந்தமான அறிவுரைகளை வழங்க.. தோலில் யாரோ சுரண்டுவது போல் இருந்தது..
‘ஹு இஸ் த டிஸ்டபென்ஸ்.. யார்ரா அது குறுக்க சுரண்டுவது..’ என்பது போல் அவர் திரும்பி பார்க்க..
" பெரிப்பா தூக்கத்துல நடக்குற வியாதியத்தா நா கேள்வி பட்டுருக்கேன்.. நீங்க என்ன புதுசா தூக்கத்துல அட்வைஸ் பண்ணுறீங்க.. யாருக்கு இந்த உபதேசம்னு.. நா தெரிஞ்சுக்கலாமா.. " கௌதம் போர்வையால் தலையில் முக்காடு போட்டபடி நின்றிருந்தான்
" நீயா.. எங்கடா எம்மகன.. " என சுற்றி முற்றி தன் மகனை தேட ....
" நீங்க தேடுற ஆள் டிஸ்அப்பியர் ஆகி அரமணி நேரமாச்சு.. இவ்ளோ நேரம் நீங்க தனியாத்தா பேசீட்டு இருந்தீங்க.. பாவமாச்சேன்னு நா தா இவ்வளோ நேரம் நீங்க பேசுனத கேட்டுட்டு இருந்தேன்.. ஆனாலும் நீங்க அட்வெஸ்ஸ இப்படி ஆசிட் மழையா பொழியாம இருந்திருக்கலாம்.. அதா கண்டாகி கிளம்பி போய்ட்டான் போல.. " கௌதம் கேலியாக..
" அடச்ச என்ன பைத்தியக்காரனா மாத்திட்டானே.. எப்ப போயிருப்பான்.. எங்க போயிருப்பான.. அதுவும் இந்த நேரத்துல.. " மகன் எங்கே என்ற கேட்க..
" நா ஜோசியக்காரனும் கிடையாது.. உங்க சீமந்த புத்திரன் ஒன்னும் சின்ன குழந்தையும் கிடையாது.. எங்க போய்ருக்கான்னு யாருக்கு தெரியும்.. போங்க.. உடம்பு முழுக்க வியாதிய வச்சுக்கிட்டு.. ராத்திரில தூங்காம கண்ணு முழிக்குறது தப்பு.. குட் நைட்.. " என கௌதம் மூர்த்தியை அனுப்பி வைத்து விட்டு சிந்தனைக்கு ஆளானான்..
அப்பா பேச்சைக் கூட கேட்காம எங்கே சென்றிருப்பான்.. ஒரு வேல தன்னோடு பொண்டாட்டிய சமாதானப் படுத்தி கூட்டிட்டு வர போயிருப்பானோ.. ச்சச.. அப்படி ஒரு நல்ல காரியத்த அவென் செய்யவே மாட்டான்.. திமிரு பிடிச்சவன்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..