அத்தியாயம்: 55
தன் ரெட்டை சடையில் தன் உடைக்கு மேச்சாகத் துணியால் செய்த ரப்பர் பேண்டை மாட்டிக் கொண்டு, நெற்றியைத் தொட்டு நின்ற முடி கற்றையை சீப்பால் சீவினாள் ஜோஹிதா. கண்ணிற்கு மையை தன் விரல்களால் எடுத்துப் பூசியவள், மேஜையில் பரவிக்கிடந்த நோட் புத்தகங்களில் ஒன்றிரண்டை எடுத்துக் கொண்டு வேக வேகமாகத் தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
" எங்க டி மினுக்கிட்டு கிளம்பிட்ட?" என்றார் பெரியம்மா.
"பாத்தா தெரியல. படிக்கப் போறேன். அடுத்த வர்ஷம் +2. பப்ளிக் எக்ஸாம் எழுதப் போறதுனால உஷா வீட்டுக்குப் போய், இப்பருந்தே அதுக்கு படிக்குறேன். " என்றவள் காலை உணவை வேக வேகமாக உள்ளே தள்ளிக்கொண்டு கிளம்பினாள்.
" கண்ட மேனிக்கி ஊர் சுத்தாம காலாகாலத்துல வீடு வந்து சேரு. " என்று அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர் அன்னைமார்கள்.
"அந்த க்ரவுண்டு பக்கம் போகாம சுத்தி போடி. வர்றப்ப உன்னைக் கூட்டீட்டு வர உங்கண்ணே வருவான். சல்லி பயளுக மொத்தமும் அந்த க்ரவுண்டுல தான் குவிஞ்சி கடக்கானுங்க. "
" நம்ம வீட்டு பயலுகளும் சொன்ன பேச்ச கேக்காம கைல பேட்ட எடுத்துட்டு அங்க தான போறானுங்க. "
"எவெ நம்ம பேச்ச கேக்குறான். நேத்து கூட எவனோ எவெ மண்டையையோ உடைச்சிட்டான்னு பேசிக்கிட்டாங்க. " என வீட்டு பெண்கள் அவர்களுக்குள்ளேயே பேச, ஜோஹிதா சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
கையில் இருந்த நோட்டை சைக்கிளின் முன் இருந்த கூடையில் போட்டவள் அந்த விளையாட்டு மைதானம்வரை வேகமாக ஓட்டினாள். மைதானத்தைப் பார்த்ததும் சைக்கிளை விட்டுக் கீழே இறங்கி உருட்டத் தொடங்கி விட்டாள்.
அங்குத் தான் கார்த்திகேயன் ஃபீல்டிங்கில் நின்றுக் கொண்டிருந்தான்.
பெட் மேச்… பணத்தை வைத்து விளையாடுவர். தலைக்கு இவ்வளவு என அங்கிருக்கும் அனைவரும் விளையாண்டு கொண்டிருக்க,
யாரையும் பார்க்காது… ஏன் தூரத்தே தெரிந்த தர்ஷனை கூடக் கண்டு கொள்ளாது, ஜோஹிதாவின் விழிகள் ஆசையுடன் கார்த்திக்கேயனிடம் நிலைத்து நின்றன. அவன் தன்னைத் திரும்பிப் பார்ப்பானா என்ற ஆவலுடன் அவனைப் பார்க்க, அவனோ கருமமே கண்ணாக ‘மச்சி நீ ஆஃப் சைடு போ. நீ கீப்பர் பக்கத்துல நில்லு டா. ' என இருக்கும் ஆள்களை வைத்து ஃபீல்டை கவர் செய்துக் கொண்டிருந்தான்.
ஜோஹிதா அவனைப் பார்த்தபடியே ஒரு வீட்டின் வாசலில் சைக்கிளை நிறுத்தி, பெல்லடிக்கத் தொடங்கினாள். வீட்டுக் காலிங் பெல்லை இல்ல. அவளின் சைக்கிள் பெல்லை.
" ஏய் நானே வந்துட்டேன். இன்னும் பெல் அடிச்சிட்டு இருக்க. நிப்பாட்டுடி. " என்ற உஷா உடன் சிந்துஜாவும் வந்தாள்.
உஷாவின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். தாத்தா, பாட்டி, தாய், மகள் என நால்வர் மட்டுமே. உஷா மற்றும் சிந்துஜா, ஜோஹிதாவின் நெருங்கிய தோழிகள். சிந்து, அவளின் தாய் வழி உறவு முறையும் கூட, அது தொடர் விடுமுறை நாள்கள் என்பதால் தினமும் விளையாட வரும் கார்த்திக்கை உஷா வீட்டு மொட்டை மாடியில் நின்று ரசிப்பாள் ஜோஹிதா. அந்த வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் மைதானம் முழுவதும் தெரியும்.
"நீயுந்தான் ஒரு வர்ஷமா அவன பாத்துட்டே கிடக்க, அவெந்தா உன்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறானே… அப்பறம் ஏண்டி அவனயே பாத்திட்டு கெடக்க. வா." என உள்ளே அழைக்க, ஜோஹிதா கேட்பதாக இல்ல.
க்ரவுண்டில் இருந்த மற்ற அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். ஆனால் பாக்க வேண்டியவன் பார்க்க வில்லை. அந்த அலட்சியம் தான் கார்த்திக்கை திரும்பிப் பார்க்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது.
இப்போது மட்டுமல்ல ஒன்றரை ஆண்டுகளாக அவனை விடாது ஃபாலோ செய்கிறாள். பத்தாவது வரை வேறு பள்ளியில் படித்தவள் பிடிவாதம் செய்து கார்த்திக்கின் பள்ளியில் வந்து சேர்ந்துள்ளாள்.
அறிவியல்… அது தான் அவள் தேர்ந்தெடுத்திருக்கும் படிப்பு. அது கூடக் கார்த்திக்கிற்காகத்தான் எடுத்தாள். நல்ல மதிப்பெண் பெற்றாவிட்டாலும் அறிவியல் பாடப்பிரிவை அவள் எடுக்க வைத்தது அவளின் பிடிவாதம்.
தினமும் அவனைப் பார்க்க வேண்டும். அவன் குரல் கேட்க வேண்டும்.
அவனுடன் பேச முயற்சி செய்திருக்கிறாள் தான். ஆனால் அவன் கவனிப்பதாக இல்லை. முதலில் கண்டு கொள்ளாமல் இருந்தான் தான். ஆனால், பெண். அதுவும் அழகான பெண். தன்னை உற்று உற்று பார்க்கும்போது பதில் பார்வை பார்க்காமல் இருந்தால் எப்படி? அதனால் அவளைப் பார்க்கிறான். அந்தப் பார்வையும் சில நாள்களாகத்தான் பார்க்கிறான்.
காரணம்…
பள்ளி மைதானத்தில் விளையாட க்ரவுண்டு தராமல் கார்த்திக்கையும் அவனின் நண்பர்களையும், கேலியும், கிண்டலும் செய்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் கார்த்திக் கைக் கலப்பில் ஈடுபட்டான். பாவம் அந்த மாணவர்களுக்கு நல்ல அடி.
விடாது சண்டை போட்டுக் கொண்டு இருந்தவர்கள் தலைமை ஆசிரியர் வருகையால் அனைவரும் தெறித்து ஓட, அடி வாங்கிய +2 மாணவர்கள் கார்த்திக்கைக் காட்டிக் கொடுத்தனர்.
"இந்தண்ணா பொய் சொல்றாரு. கார்த்திக் க்ரவுண்டு பக்கமே வரல. அவெ இன்னைக்கி கெமிஸ்ட்ரி லாப்ல தா இருந்தான். நானும் உஷாவும் அவன பாத்தோம். " எனத் துணிந்து பொய் சாட்சி சொல்லிக் கார்த்திக்கை காப்பாற்றி விட, அன்றிலிருந்து அந்தப் பார்வை ஜோஹிதாவிற்குக் கிடைத்தது. பார்வை மட்டும் தான்.
அதுமட்டுமில்லை. அதை வரை இதை வரை, அதனுடைய பகுதியை சுட்டிக் காட்டுக, இதனுடைய பகுதிக்கு பெயரிடும் என்று உயிரை எடுக்கும் அறிவியல் டீச்சர்களிடமிருந்து தப்பிக்க, படம் வரைந்து கொடுக்க அவனுக்கு ஒரு ஆள் தேவைப்படுகிறது. அதான் அவ்வபோது ஜோஹிதாவைப் பார்வை பாத்து வைத்தான். பல நேரங்களில் கண்டு கொள்ள மாட்டான். இப்போது போல்…
"ஏய்… வாடி... விடாம அடிச்சிட்டு. " என உஷா எரிச்சலாக.
"ம்ச்... பாக்க வேண்டியவெ பார்க்கட்டும். அப்றம் வருவா. நீ அடி ஜோஹி. எப்படி அவெ உன்னைப் பாக்காம இருக்கான்னு நானும் பாக்குறேன். நீ அவனுக்காகத்தான பெல் அடிக்கிறன்னு அவனுக்குத் தெரியும் தான. அப்படி இருந்தும் கண்டுக்காம இருந்தா என்ன அர்த்தம்? " எனச் சிந்து, ஜோஹிதாவை ஊக்குவிக்க,
"அவனுக்கு இவ மேல ஆர்வம் இல்லன்னு அர்த்தம். உன்னால தான் அவ பிடிவாதம் நாளுக்கு நாள் கூட்டீட்டு போது. அவ அண்ணனுங்களுக்கு மட்டும் இது தெரியட்டும் அப்ப இருக்கு."
"அத அப்பப் பாத்துக்கலாம். நீ விடாம அடி டி. அவன் திரும்புற வரைக்கும் விடாத. "
"எனக்கு என்னமோ இது நல்லதா படல. இது எங்க போய் முடியப்போதோ." என்று பெருமூச்சி விட்டபடி உஷா சென்று விட, ஜோஹிதா விடாது அடித்தாள்.
"மச்சி, காது வலிக்கிது. கொஞ்ச திரும்பித்தான் பாரேன். " என அவனுடன் விளையாடுபவர்கள் சொல்ல, கார்த்திக் திரும்பி வில்லை. ஆனால் நான் விடமாட்டேன் என்பது போல் ஜோஹிதா செய்ய, கடைசியாகக் கார்த்திக் அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.
அது போதுமானதாக இருந்தது ஜோஹிதாவிற்கு. உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டே சிந்துவுடன் வீட்டிற்குள் செல்ல, தலையில் அடித்துக் கொண்டான் கார்த்திக்
"என்ன டா நடக்குது இங்க? காதலா!" என்றது முருகு தான்.
"ம்ச்…” என அவனைக் கார்த்திக் முறைக்க,
"இல்ல, அந்தப் பிள்ளையும் உன்னை ஒரு மார்க்கமா பாத்து வைக்கிது. நீயும் இதே மாதிரித் திருப்பி பாத்தேன்னு வை. மௌன ராகம் கார்த்திக் மாறி லவ்வர் பாயா மாறிடலாம்." எனக் கேலி செய்தான் முருகு..
"நீ வேற ஏன்டா… சும்மா இரு. ஏத்தி விடாத. அவ இவன பொழுது போகாம திரும்பிப் பாத்திட்டு இருக்கா. நெருங்கிப் போய் பழகுனா உடனே நாம தான் அவளுகள தொல்ல பண்ண மாதிரிக் கதையையே மாத்தி விட்டுவாளுக. கண்ணால ஜாடமாடையா பாத்து நம்ம மனசுல ஆசைய தூண்டி விட்டுட்டு. கடைசில அவளுக நல்லவளுகளா மாறிடுவாளுக. நம்ம நிலைமை பரமு அண்ணே மாதிரி மாறிடும். " என்றான் அப்சத்.
"பரமு யாரு? நம்ம ஸ்கூல்ல காமர்ஸ் க்ரூப்ல படிக்கிறானே. கபடி டீம் கேப்டன் அவனா. " முருகன்.
"ம்… அவனே தான். அவெ ஒரு வாரமா ஸ்கூல்லுக்கு வரல. அது ஏன்னு தெரியுமா? நம்ம பக்கத்து க்ளாஸ்ல படிக்கிதே நந்தினி. அதான் நம்ம டியூசன் சென்டருக்கு வருமே. அது அவெகிட்ட பாடத்துல சந்தேகம் கேக்குறேன்னு சொல்லி அவெ பின்னாடியே வந்தா. இவனும் பின்னாடியை நடந்து வந்தா கால் வலிக்கும்னு பைக்ல ஏத்திட்டு சுத்திருக்கான். " எனக் கதை சொன்னான் பரதன்.
"நம்ம முனுசாமி கோயில் பக்கத்துல வச்சி, என்ன பாடம் நடத்துனானோ தெரியாது. அந்தப் புள்ள முழுகாம இருக்குறதா பேச்சி. உடனே அந்தப் புள்ள வீட்டுல இருந்து ஆளாகத் திமுதிமுன்னு கிளம்பி வந்து பரமுவ கும்முகும்முன்னு கும்மி பரலோகத்துக்கு அனுப்பியிருப்பானுங்க. ஜஸ்ட் மிஸ்ஸு. " அப்சத்.
" அப்றம் என்னடா ஆச்சி. " முருகு. கதை கேட்கும் ஆவலில்,
"அப்றம் என்ன… போலிஸ்ஸு வந்து இழுத்துட்டு போச்சி. இன்னும் பஞ்சாயத்து நடந்துட்டு தான் இருக்காம். "
முருகு, "இப்ப அந்தப் புள்ளைய திருப்பிப் பாத்து சிரிச்சா… பரமு நிலம தான் நம்ம கார்த்திக்குக்கும் வரும்னு சொல்ற. சரியா. "
"வரும்னு சொல்லல வரலாம்னு தான் சொல்றோம். இந்தப் பொட்ட புள்ளைங்க பாக்குதுன்னு திரும்பி நாமலும் பாத்தோம்னு வை. பாடைல நம்மல ஏத்தி விட்டுப் படுக்க விட்டுடுவாளுக. கார்த்திகா உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம்." அப்சத்.
" ஏன்டா இல்லாததையும் பொல்லாததையும் பேசுறீங்க. அந்தப் பொண்ணு நம்ம தர்ஷன் அண்ணே தங்கச்சி. அதுனால தான் மச்சான் பாக்குறான். மத்தபடி ஒனனுமில்லைலடா. ஒரு வேள காதலிக்கலாம்னு நினைச்ச. அவளுக்குத் தர்ஷனோட சேத்து ஆறு உடன் பிறப்புக்கள். சும்மா லாம் விட்டுட மாட்டானுங்க." நவீன் மிரட்டலாக வந்தது அவனின் குரல். அவனுக்கு ஜோஹிதாவின் மேல் ஒரு விருப்பம். அதனால் 'நீ தள்ளியே இரு மச்சான்.' என்றான் வார்த்தையால்.
"அப்படிப் பாதுகாக்கிறவனுங்க ஜன்னல் கதவு இல்லாத வீட்டுக்குள்ள வச்சி வளக்க வேண்டியது தான. எதுக்கு ஸ்கூலுக்கெல்லாம் அனுப்புறானுங்க. " என்ற கார்த்திக்கின் முகத்தில் எரிச்சல்.
'அப்படி காதலிச்சா அந்த ஆறு பேரும் சேர்ந்து என்னத்த புடுங்கிடுவாங்கலாம். சும்மா சும்மா அண்ணே இருக்கு அண்ணே இருக்குன்னு பூச்சாண்டி காட்டுறானுங்க.' என்றிருந்தது.
"நான் அப்படிச் சொல்லலடா. " என அவன் மழுப்பும் போதே கார்த்திக் அவனை முறைத்தபடி சைக்கிளை எடுக்க, அதன் டயர் தரையோடு தரையாக ஒட்டிப் போய் இருந்தது.
"பன்சரா? இல்ல காத்து இறங்கிடுச்சா?. " முருகு.
"காத்தெல்லாம் அதுவா இறங்கல. இறங்கிடுச்சி. யாரோ வால்டியூப்ப திருடீட்டு போயிருக்காங்க. " என்றவனின் பார்வை உஷா வீட்டு மொட்டை மாடியில் இருந்தது.
"யாருடா அது?." என்ற கேள்விக்குப் பதிலாக ஜோஹிதா மொட்டை மாடியில் நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
"மச்சி, அவ தான் புடுங்கிருக்கா. " என அவனிடம் குற்றம் சாட்ட, கார்த்திக் அவளைப் பார்த்தபடியே நின்றான். நவீனுக்குக் காண்டாக இருந்தது.
மாலை வேளையில் ஒளி மங்கும் நேரம் முகம் கொள்ளா சிரிப்புடன் அவனைப் பார்த்து கை அசைத்தாள் அவள். அந்தக் காட்சி அவனுள் அவளை வரி வடிவமாக வார்த்தெடுத்தது உண்மை. அந்தப் புன்னகை. அவனையும் அவளுடன் சேர்ந்து புன்னகைக்க வைத்தது. குறுநகையுடன் அவன் நிற்க...
" என்னடா… நாங்க பாட்டிக்கி பேசிட்டு இருக்கோம். நீ அந்தப் பிள்ள கூட டான்ஸ் ஆடப் போய்ட்டியா. " பரத்.
"ம்ச்…." என உச்சிக் கொட்டினான் அவன்.
‘கனவுல கண்டுட்டு இருக்கும்போது குறுக்க பேசுனா.’
"டேய், அது நம்ம தர்ஷன் அண்ணனோட தங்கச்சி டா. அவர பாத்து கையாட்டுது. நீங்க தான் தப்பா புரிஞ்சிட்டு பேசுறீங்க. " நவீன்.
"டேய்… அது நம்ம டியூஷனுக்கும் வந்து சேந்திருக்கு. எதுக்கு? இவன பாக்கத்தான் " பரத்.
" அதுக்குப் படிப்பு வராம இருந்தா டியூஷன்னுக்கு வரத்தான் செய்யும். அத போய்ப் பெருசா பேசிட்டு. அது எதார்த்தமாத்தா இருக்கு நீங்க தான் கண்டத யோசிச்சி உங்கள நீங்களே குழப்பிங்கறீங்க." நவீன் பேசிக் கொண்டு இருக்கும்போது ஜோஹிதா தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்ல,
அவளின் பின்னாலேயே கார்த்திக்கும் சென்றான். " டேய், மச்சி என் சைக்கிள நீ எடுத்துட்டு போய்ட்டா… நான் எதை ஓட்ட. குடுத்துட்டு போடா. " எனக் கத்திக் கொண்டே ஓடிய முருகுவால் கார்த்திக்கைப் பிடிக்க முடியவில்லை.
சிறிது தூரம் சென்றிருப்பர். ஒரு பெரிய புளிய மரத்தின் நிழலில் ஜோஹிதா சைக்கிளை ஸ்டான்டு போட்டு விட்டு அதன் அருகிலேயே நிற்க, கார்த்திக் வந்தான். மெல்லிய கோபத்துடன்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..