அத்தியாயம்: 102
ஆயிரம் வாசல் இதயம்..
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்…
யாரோ வருவார்…
யாரோ இருப்பார்…
வருவதும் போவதும் தெரியாது..
ஒருவர் மட்டும் குடியிருத்தல்…
துன்பம் ஏதுமில்லை…
ஒன்றிருக்க ஒன்று வந்ததால்…
என்றும் அமைதியில்லை…
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகள் இவை. எத்தனை அழகாய் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்கிறார் அவர். மனமெனும் அறையில் ஒன்றிற்கு மேற்பட்டவரை நிறுத்தி காதல் செய்யும் போது நிம்மதி என்பது கிடைக்காது.
அதை இங்கு நாம் கார்த்திகேயனுக்கு சமர்பணம் செய்யலாம். ஏனெனில் அவனின் மனம் தான் இரு பெண்களுக்கு இடையே ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் கிடக்கும் தன் முதல் காதலி ஸாரி மனைவியை ஜோஹிதா, அவளையும் விட முடியவில்லை.
தன்னை மட்டும் நம்பி இருக்கும் ஜோதிவாணியையும் விட முடியவில்லை. உலகம் அறியாத பெண்ணிற்கு நம்பிக்கை தந்து நடுக்கடலில் விட்டுவதா?. எப்படியாவது ஸ்டேஷனுக்குச் சென்று விட வேண்டும். சென்று ஜோதியிடம் நிகழ்ந்ததை சொல்ல வேண்டும். பின்… பின்…
நடந்த எதையும் மாற்ற முடியாது. ஆனால் புதிதாக ஒன்று உருவாக்கலாம். இல்லை நடந்ததை மாற்றி நடக்காதது போல் காட்ட முடியுமா!.
இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் இக்கட்டான சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை அவனுக்கு. ‘இப்போது ஜோதியை நேரில் பார்க்க வேண்டும். அவளிடம் தன்னை விளங்க வேண்டும். அதன் பின் எதையும் முடிவு செய்யலாம்.’ என ஸ்டேஷனுக்கு கிளம்ப,
" கார்த்திக்… sorry… தப்பு பண்ணிட்டேன். லைப்ரரில வச்சி நீ பேசுனப்பவே உம்மேல் எனக்குக் கோபம் இல்லைன்னு சொல்லி உன்னை நான் ஏத்துட்டு இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு கார்த்திக். இனி அது மாதிரி பண்ண மாட்டேன். உன்னை நான் எந்த சூழ்நிலையிலும் இழக்க விரும்பல கார்த்திக். ப்ளீஸ்... என்னை மன்னிச்சிடு. " என முணங்கிக் கொண்டே உறங்கி கொண்டிருந்தாள் ஜோஹிதா.
தூக்க மாத்திரையின் விளைவாகத்தான் விழிகள் மூடி இருக்கின்றன என்று கார்த்திக்கிற்கு நன்கு தெரியும். திறந்திருந்தால் அவளை விட்டு செல்ல நினைப்பது தெரிந்து மீண்டும் கத்தியை கையில் எடுத்துவிடுவாள்.
ஒரு மணி நேரத்திற்கு முன் நடந்தது இது...
மருத்துவமனைக்கு வந்தபோதே ஜோஹிதாவின் தாய் வாசலிலேயே அவனை எதிர்கொண்டு, மோகன் கூறிய அதே வார்த்தைகளைச் சொல்லி அழுதபடியே அழைத்து சென்றார்.
ஒரு சக்கர நாற்காலியில் உடலில் தெம்பின்றி அமர்ந்திருந்தாள் ஜோஹிதா. நாடகம் போடுகின்றனரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை கார்த்திக்கிற்கு. இவர்கள் எப்பொழுது டில்லி வந்தனர்?. அதுவும் குடும்பமாக!. நான் ஸ்டேஷனில் இருப்பது இவர்களுக்கு எப்படி தெரியும்?
என் வாழ்க்கையில் வாணியின் வருகையை அறிந்து நாடகம் போடுகின்றனர் என்றால் அதில் இவர்களுக்கு என்ன லாபம்? அவர்கள் வீட்டு பெண்ணுடன் இருந்த உறவு முறிந்து விட்டதே!. பின் ஏன் என்னைத் தேடி வருகின்றனர்? எனப் பல கேள்விகள் இருந்தாலும், ஜோஹிதாவைப் பார்த்து விட்டு செல்ல நினைத்து அவர்களுடன் வந்தான்.
வந்த பின் தான் தெரிந்தது பொய்ல்லாம் சொல்லவில்லை அவர்கள் என்று. உண்மையிலேயே மணிக்கட்டில் அறுத்திருக்கிறாள். ரத்தம் அதிகம் சென்று கொண்டிருந்தது. அருகிலேயே டாக்டர்ஸ் நின்றனர்.
ஆனால், ட்ரீட்மெண்ட் பார்க்கவில்லை. இன்னும் கத்தியை கையில் வைத்துக் கொண்டு, நெருங்கினால் கழுத்தை அறுத்துக் கொள்வேன், என்று கழுத்தில் கத்தியை வைத்தபடி மிரட்டிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக்கைக் கண்டதும். "கார்த்திக். " என எழப்பார்த்து கீழே விழ, அவளைத் தாங்கி பிடித்தவன், மெத்தையில் கிடத்தினான். ட்ரீட்மெண்ட் பார்க்க மருத்துவர்கள் அருகில் வர, அப்போதும் மறுத்து தெம்பில்லாத கைகளால் கத்தியின் கூர் முனையை அழுத்திப் பிடிக்க, உள்ளங்கையிலும் ரத்தம் வடிந்தது.
" ஜோஹிதா ஏன் இப்படில்லாம் பண்ற?. ட்ரீட்மெண்ட் பாக்கவிடு." கார்த்திக் அதட்டலாக சொல்ல,
"என்னை மன்னிச்சிடு கார்த்திக். இவங்க பேச்ச கேட்டு நான் உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன்." என்றவளின் குரலில் சத்தம் என்பது இல்லை.
"பேசாத ஜோஹிதா. கத்திய கீழ போடு. டாக்டர்ஸ் ட்ரீட்மெண்ட் பாக்கட்டும். என்னைப் பாத்திட்டு இருக்கீங்க வாங்க. " என மருத்துவர்களைப் பார்த்து கத்தியவன், அவளின் கையில் இருந்த கத்தியை வாங்க பார்க்க,
"நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல. "
"இல்ல ஜோஹிதா. அப்படில்லாம் இல்ல. " என்றவன் கத்தியை அவளிடம் இருந்து வாங்க முயற்சிக்க, அதை அழுத்தி பிடித்திருந்தாள் அவள்.
"அப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" எனக் கேட்டதும் கார்த்திக் ஒரு நொடி தயங்கினான்.
பின்….
"பண்ணிக்கலாம். இப்ப ட்ரீட்மெண்ட் பாக்க அலோ பண்ணு. " என அவளின் உயிரைக் காக்க வேண்டும் என்று கூற…
"அப்பா கேட்டிங்களா?. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கார்த்திக் சொல்லிடான். " எனத் தந்தையைப் பார்த்து சொன்னாள் ஈனஸ்வரத்தில்.
" அதா தம்பி சொல்லிடுச்சில்ல. கத்திய குடுத்திடுமா. " என அவளின் தாய் கொஞ்சினார்.
"அப்ப இப்பவே பண்ணிக்குவோம். " என்க, கார்த்திக் யோசித்தான்.
"யோசிக்கிற பாத்தீயா!. நீ என்னைச் சமாளிக்க பொய் தான சொன்ன. கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு விருப்பம் இல்லல்ல. எப்படி விருப்பம் வரும். நான் உன்னை அவ்ளோ காயப்படுத்திட்டேன். என்னை நீ வெறுத்திருப்ப. ஆனா நான் உன்னை வெறுக்கல கார்த்திக். இப்பவும் லவ் பண்றேன். ஆனா உனக்கு தான் என்னைப் பிடிக்கலயே. அப்றம் ஏன் உயிரோட நான் இருக்கணும். நீ போ… என்ன விட்டு அப்படியே போ. எனக்கு இது தான் சரியான தண்டன. " எனத் தன் பலம் கொண்டு அவனைத் தள்ள, கையில் இருந்த ரத்தம் அவனின் சட்டையில் அவளின் கை ரேகையைப் பதித்தது.
அவளிடம் பேசிப் பார்ப்பதில் பலன் இல்லை என்பதை உணர்ந்தவன். " இல்ல ஜோஹிதா நான் இப்பவும் உன்னை விருப்புறேன். கல்யாணம் தான நீ முதல்ல ட்ரிட்மெண்ட் எடுத்துக்க. அப்றமா…. பத்திரிக்கை அடிச்சி, மாலை மாத்தி, மண்டபத்துல வச்சி, தாலி கட்டி பண்ணிக்கலாம். " என்றான் சமாதானமாக.
" மேளத்தை விட்டுட்ட. நிறைய பட்டு புடவ எடுக்கணும். அத நீ சொல்லவே இல்ல. உனக்கு அரக்கு கலர் பிடிக்கும்ல. அந்த கலர்ல தான் முகூர்த்த புடவ எடுக்கணும். சரியா?" இரத்தம் அதிகமாக வெளியேறியதன் காரணமாக பித்துபிடித்தவள் போல பேசினாளே தவிர மருத்துவர்களை அருகில் நெருங்க சம்மதிக்கவில்லை.
" ஸார்… ஏற்கனவே ப்ளட் நிறைய லாஸ் ஆகுடுச்சி. இன்னும் நீங்க லேட் பண்ண பண்ண அவங்கள உயிரோட பாக்கவே முடியாது ஸார். மணிக்கட்டு பக்கத்துல கிழிச்சிருக்காங்க. ப்ளிஸ் எது பண்றதா இருந்தாலும் சீக்கிரமா எதாவது பண்ணுங்க. " என டாக்டர் விகாஸ்ஸிடம் சொல்ல, அவன் சென்று மருத்துவமனை அருகில் இருந்த கோயிலில் இருந்து மஞ்சள் கயிற்றை எடுத்து வந்தான்.
" கார்த்தி இத இப்பவே உனக்குக் கட்டி உன்னை பொண்டாட்டியா ஏத்துப்பாம்மா. அப்றமா நீ சொன்ன கலர்லயே புடவ எடுத்து, தங்கத்துல தாலி செஞ்சி ஊரறிய கல்யாணம் பண்ணிக்கிவான். இதெல்லாம் நடக்கணும்னு நீ இப்ப ட்ரிட்மெண்ட் எடுத்துக்கணும். " என விகாஸ் ஜோஹிதாவிடம் சொல்லி கார்த்திக்கிடம் தாலியைத் தர, கார்த்திக்கின் உலகம் இருண்டு போனது.
உறைந்து போய் நின்றவனின் கையில் தாலி கயிற்றைக் குடுத்து விகாஸ்ஸே அவனின் கரத்தை ஜோஹிதாவை நோக்கி தள்ளி விட்டான். அவனின் தயங்கிய முகத்தைக் கண்டவள்,
"உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலயா கார்த்திக்" என அழுது கொண்டே கேட்க, கார்த்திக் அவளின் முகத்தையும் ரத்தம் வடிந்து கொண்டிருந்த கையையும் பார்த்தான். நொடியும் தாமதிக்காது.
" எம்மனசுல எப்பையும் நீ இருக்க ஜோஹிதா. அத மாத்தவே முடியாது." எனச் சொல்லி தாலியைக் கட்டினான். அதன் பின் தான் மருத்துவர்களை அருகில் அனுமதித்தாள் அவள்.
கார்த்திக்கின் மனைவி. ஜோஹிதா கார்த்திகேயன் நான். என்ற நினைப்பே அவளுக்கு உயிர் வாழும் தெம்பைத் தந்தது. மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டாள் ஜோஹிதா.
ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டாள் என்பதையும், அவள் உறங்கிக் கொண்டிருப்பதையும் உறுதி செய்துவிட்டு, அறையை விட்டு வெளியே வந்தான். அவளின் அன்னையிடம் சொல்லிவிட்டு செல்ல பார்க்க,
"எங்க கிளம்பிட்ட. " என வழி மறித்து நின்று மிரட்டலாக கேட்டான் விகாஸ். ஜோஹிதாவின் பிடிவாதத்திற்காக இந்தத் திருமணம் நடந்தாலும் கார்த்திக்கை அவனுக்கு என்றும் பிடிக்காது.
'இனிமே தான்டா உனக்கு இருக்கு. எந்தங்கச்சி மனச தற்கொலை பண்ண வைக்கிற அளவுக்கு நீ தூண்டி விட்டிருக்க. அப்பன் சரியால்லாம, வரைமுறை இல்லாம பிறந்த உனக்கு எங்க தங்கச்சி கேக்குதோ. ' என வன்மமாக நினைத்தான் விகாஸ்.
விறைப்புடன் நின்ற அவனைப் பொருட்படுத்தாது அவனை விலக்கி விட்டு கார்த்திக் ஸ்டேஷனுக்கு சென்றான். விகாஸ், அப்சத்திற்கு ஃபோன் செய்து கார்த்தியின் கண்களில் அவனின் காதலி படக்கூடாது என்றும் அவளைத் தன்னிடம் அழைத்து வா என்றும் கட்டளையிட்டிருந்தான்.
அவன் கார்த்கிக்கின் மீதிருக்கும் கோபத்தை ஜோதியிடம் தீர்த்துக் கொள்ள நினைக்கிறான் என்பது அப்சத்திற்குப் புரிந்தது. அவனுக்கு ஜோதியின் மீது கருணை முளைத்தது. ஆனாலும் ஜோஹிதாவைத் தான் கார்த்திகின் மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்திருந்தான். ஆதலால் ஜோதியை விரட்டி விட்டான். கார்த்திக் ஜோஹிதாவின் வாழ்க்கைக்குள் நுழையாத இடத்திற்கு துரத்தப் பார்த்தான். அவ்வளவே…
" அப்சத்... ஜோ வந்தாளா?" எனக் கண்கள் அலைபாய நண்பனிடம் கார்த்திக் கேட்க,
" இல்ல கார்த்தி. வரலயே அவ. " என்றவன் கார்த்தியுடன் சேர்ந்து தேடுவது போல் நடித்தான்.
"ம்ச்… உன்ன யாரு உள்ள வந்து நிக்க சொன்னா? வாசல்ல தான உன்ன இருக்க சொன்னேன்... ச்ச. " என அங்கும் இங்கும் தேடி அலைந்தான் கார்த்திக்..
"கார்த்திக், ஜோஹிதா எப்படி இருக்கான்னு நீ சொல்லவே இல்ல. "
"அவளுக்கு என்ன நல்லாத்தா இருக்கா. நீ முதல் ஜோவ தேடு. "
" ஒரு வேளை வீட்ட விட்டு வர முடியாம போயிருக்குமோ!. அவங்க பெரியம்மா பாத்த பையங்கூட கல்யாணம் ஆகிருந்தா? " என்க.
"கல்யாணமா! யாருக்கு?" என அதிர்ச்சியுடன் கேட்டான் கார்த்திக். அவனுக்குத் தெரியாதே வாணியின் வீட்டில் நடந்தது.
"அது... அது... வீட்டுல விசயம் தெரிஞ்சிடுச்சின்னா கைக்கு கிடச்சவனுக்கு கல்யாணம் தான் பண்ணி வப்பாங்க. அதா சொன்னேன். " என மலுப்பலாகப் பதில் சொல்ல, கார்த்திக்கிற்கு சந்தேகம் வந்தது. ஆனாலும் இப்போது ஜோதியைத் தேடுவது தான் முக்கியம். அவ்வபோது ஜோஹிதாவைப் பற்றி அவளின் அன்னையிடம் கேட்க தவறவில்லை.
நேரம் சென்று கொண்டே இருக்க, கார்த்தி அவளின் வீடு சென்று பார்த்தான். வீடு தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஒருவேளை அப்சத் சொன்னது போல் யாரையும் பிடித்து திருமணம் செய்து வைத்துவிட்டனரோ என்ற கலக்கம் வந்தது. கூடவே அப்படி இருந்தாலும் நான் அவளை மீட்டு என்னுடனே வைப்பேன். என்ற எண்ணமும் வந்தது.
ஆனால் அது தேவையற்றது என உள்ளிருந்து கேட்ட குரல் சொல்லியது. சுப்புவின் குரல் தான்.
வீட்டிலும் இல்லை என்னைப் பார்க்கவும் வரவில்லை என்றால் எங்கு சென்றிருப்பாள் எனத் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தான் அவன். முருகுவிற்கு ஃபோன் செய்து நடந்ததைச் சொல்லி அவனைப் புறப்பட்டு வரச் சொன்னான். மூன்று நாட்களாக தேடுதல் படலம் நடந்தது.
ஆனால் தேடுதலுக்குப் பலன் மட்டும் பூஜ்ஜியமாக இருக்க, சோர்வுடன் வீட்டிற்கு சென்றபோது அவனின் வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பன் மூலம் வாணி எழுதிய கடிதத்தையும் பிற பொருட்களையும் கார்த்தியின் கையில் சேர்த்தான் அப்சத்.
வெறுத்து ஒதிக்கி விடுவான் என்று நினைக்க, மாறாக நம்ப மறுத்து தேடிக் கொண்டே இருந்தான். இரு வாரங்கள் சென்றிருக்கும்.
"மச்சா எதாவது தகவல் தெரிஞ்சதா?. " என ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான் கார்த்தி.
சென்னையில் இருக்கிறான். ஜோஹிதாவுடன் அவளின் வீட்டில்.
இருவரின் திருமணத்திற்காக வேலைகள் ஜோராய் நடந்து கொண்டு இருந்தன. அங்கு டில்லியில் அவனின் நண்பர்கள் மூலம் தேடிக் கொண்டு இருக்கிறான்.
" நீ கவலப்படாத கார்த்தி. கண்டிப்பா அவள நாம கண்டுபிடிச்சிட்டலாம். அவளோட ஃபேமிலி வந்து நம்ம காலேஜ்ல சண்ட போட்டுட்டு போனதா பேச்சி. யார் கூடவோ ஊரைவிட்டு ஓடிட்டதா சொல்லி நம்ம காலேஜ் முழுக்க பேசிக்கிறாங்க. " என்றான் அவனின் நண்பன்.
அவன் சொல்வது உண்மையும் கூட. சுப்புலட்சுமியை ஏமாற்றி விட்டுச் சென்ற வாணியின் பெயரை ஊர் முழுக்க நாரடித்து விட்டார் சுப்பு. கல்லூரியில் சென்று அவள் ஆடிய ஆட்டத்தில் நிர்வாகம் ரஞ்சினிக்கி ஃபோன் செய்தது.
" மேடம், நீங்க சொன்னீங்கன்னு தான் அந்தப் பொண்ண இங்க சேத்தோம். அந்தம்மா என்னடான்னா கலவரம் நடந்தப்ப காலேஜ்க்கு வந்ததா சொல்லுறாங்க. ரெக்கார்டுல அந்தப் பொண்ணு இங்க வந்ததா இல்ல. இப்ப வேற வந்து காலேஜ்ஜ மீன் மார்க்கெட் மாறி ஆக்கிட்டு போறாங்க. போலிஸ் கேஸ்ன்னு நிறைய பேசுறாங்க. எங்க சைடு நாங்க உறுதியா இருக்கோம். ஆனா இந்த மாதிரி *** பொண்ணுங்க எங்க காலேஜ்ல படிக்கிறதும். படிச்சதா சொல்றதும் எங்க ரெப்யூட்டேஷன பாதிக்கும். ஏன் மேம் இந்த மாதிரி பொண்ணுங்கெல்லாம் நீங்க சீட் கேட்டிங்க?" என்று காட்டமாக திட்டயது நிர்வாகம்.
"இவங்க சொல்ற மாதிரில்லாம் கிடையாது ஸார் வாணி. இவங்க அவளுக்குக் கல்யாணம் பண்ண நினைச்சிருக்காங்க. அதா கோபத்துல எங்கையாது போயிருப்பா. நீங்க அவளோட டிசில ப்ளாக் மார்க் வச்சிடாதீங்க. ப்ளீஸ். " எனக் கேட்டுக் கொண்டார்.
அவருக்கும் இவர்கள் கூறுவது போல் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊரை விட்டு சென்றிருக்க மாட்டாள் என்றே தோன்றியது. என்ன நடந்திருக்கும்? எங்கே சென்றாள்? என அவரும் போலிஸின் மூலம் தேட ஏற்பாடு செய்தார்.
கேஸ் கொடுக்கப்பட்டது. வீட்டில் இருக்கும் நகை பணம் என அத்தனையும் தூக்கி கொண்டு காதலனுடன் ஓடி விட்டாள். அவளைக் கண்டுபிடித்து தரும்படி கேஸ் கொடுக்கப்பட்டது. சுப்பு தான் தந்தது
" அந்தப் பொம்ளபல அப்படி கேஸ் போடலன்னாத்தா ஆச்சரியம். நீ விடாத மச்சி. தேடிட்டே இரு. " என ஃபோனை வைத்தான் கார்த்திக்.
அப்போது ஜோஹிதா வந்தாள், " கார்த்திக் இந்த பைஜாம உனக்கு நல்லா இருக்கும். என்னோட சேலைக்கி மேச்சா இருக்கும். ம்… ட்ரெய் பண்ணிப்பாரு. " என்று ஒரு கவரை நீட்டி அணிந்து பார்க்கச் சொல்ல, எதுவும் சொல்லாது அதை அணிந்து காட்டினான்.
" சூப்பரா இருக்க. ராஜா மாறி. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு கார்த்திக். அதுக்குள்ள எல்லாத்துக்கும் பத்திரிக்கைத் தரணும். இது உன்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க. நூறு போதுமா!. இல்ல இன்னும் வேணுமா கார்த்திக்?" என கேட்டாள்.
"ம்… போதும். நான் நாளைக்கி நம்ம காலேஜ்க்கி போய் பத்திரிக்க வச்சிட்டு வாரேன். "
"நானும் வாரேன். " என்றாள் ஒரு மார்க்கமாக.
"வேண்டாம். நான் மட்டும் பாத்துக்கிறேன். "
"ஏன்… ஏன் நான் வரக்கூடாது. " என விழி உருட்டி கோபமாகவும் அவனைச் சந்தேகமாகவும் கேட்க,
"இல்ல. நான் மட்டும் போய். ஹோட்டல்ல வேலை பாத்த எல்லாத்தையும் பாக்கணும். கொஞ்சம் அழையிற மாதிரி இருக்கும். நீயும் வந்தா உன்னையும் இழுத்திட்டு போறது. சரியா இருக்காது. " எனப் பலவாறு காரணங்களைச் சொல்லி விட்டு கிளம்பினான். விகாஸ் அவனைக் கண்கானிக்க அப்சத்தையும் உடன் அனுப்பினான்.
முருகு, அங்கு தான் உள்ளான். ஜோதியைத் தேடுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இன்னொரு ஜீவன் அவன் தான்…

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..