அத்தியாயம்: 2
தடக் தடக்கென வந்தவள் செருப்பைக் கலட்டாது தூக்கி வீசி எறிந்து விட்டு கோபமாக வீட்டிற்குள் புயல் போல் பிரவேசித்தாள்.
பைரவி..
அது தான் அவளின் பெயர். இந்த கதையின் நாயகிகளுள் ஒருத்தி. வயது இருபத்தி ஆறு. பார்த்துக் கொண்டிருக்கும் வேலை என்னவென்றால் போலிஸ். எஸ் பையூ ஒரு பெண் காவலாளி. காவல் அதிகாரியாக இப்போது பணிபுரிகிறாள்.
தைரியத்தின் உருவம் என்று சொல்லிட முடியாது. ஆனால் யாரைப் பார்த்தும் பயந்தது இல்லை அவள். தான் என்ன நினைக்கிறாளோ அதை செய்தே பழக்கப்பட்டவள். கட்டாயப்படுத்தும் யாரின் பேச்சையும் கேட்டது இல்லை. அதைத் திமிர் என்றும் சிலர் சொல்வர்.
எதையாவது சாதிக்க வேண்டும், சோம்பிக்கிடக்க கூடாது என்று துடித்த பைரவியின் இளமை காலத்தில் மூளையில் எங்கோ ஓர் ஓரத்தில் ‘நீ போலிஸ் ஆனால் என்ன…’ என்ற ஆசை பிறந்தது. அது வேறு கதை.
வீட்டிற்கு ஒற்றை பெண். செல்ல அதிகம் என்றால்… இல்லை. அவளின் அன்னை சாந்தி. சாந்தமாக அவளின் அதிகப்பிரசங்கித்தையும் திமிரையும் கத்தரித்து விடுவார். அமைதியாக இருந்து கொண்டு, வீட்டை அடக்கி ஆளும் திறமை சாந்திக்கு உண்டு. எங்கும் எதிலும் அவரின் ராஜ்யம் தான் இருக்க வேண்டும். அவரின் முடிவுதான் இறுதியானது. அவரின் குரல் தான் மேலோங்கி கேட்க வேண்டும் என்று எண்ணுபவர்.
தாயை போலவே மகளும் எங்கும் எதிலும் தன் ராஜியம் தான் என்ற நினைப்புடன் வளர, வீடு சந்தையாகியது. வீட்டை பொறுத்த வரை இருவருக்கும் ஏழாம் பொருத்தம் தான்.
மகள் சொன்னாள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார் சாந்தி. அன்னை சொன்னால் அதற்கு எதிராக செய்வதயே பழக்கப்படுத்திக் கொண்டாள் மகள்.
" ம்மா... நான் க்ரூப் எக்ஸாம் எழுத போறேன். "
"எழுதி... "
"போலிஸ் உத்தியோகத்துக்குப் போகப் போறேன். "
" போலிஸ் வேலயா! " என அதிர்ந்தார்.
"ஆமா... " என்றாள் மகள் கூலாக.
"இதோ பாரு ரொம்ப மூளைய போட்டு கசக்கி பிழியுற வேலையெல்லாம் உனக்குச் செட்டாகாது. இப்பத்தான காலேஜ் முடிச்ச. உனக்குச் சம்பாதிக்கணும்னு ஆச வந்தா, பக்கத்துல எங்கயாது கணக்கெழுதுற வேலைக்கி சேத்து விடுறேன். பொழுதும் போகும், வருமானமும் வரும்.
அதுவும் கொஞ்ச நாளைக்கி தான். அப்றம் உனக்குக் கல்யாணத்த பண்ணி அடுத்தவெ வீட்டுக்கு அனுப்பிட்டா, புருஷெ, குழந்த, குட்டி, மாமனார் மாமியாரு, நாத்தனாருன்னு பிஸியாகிடுவ. உனக்கும் பொழுது போகும், எனக்கும் உன்னைக் கர சேத்த நிம்மதி கிடைக்கும்.
நல்ல குடும்பப் பெண்ணா நடந்துக்க முதல்ல அடுப்படிய சுத்தி பாத்து எதெதுக்கு என்னென்ன பேருக்கிறத மனப்பாடம் பண்ற வழிய பாரு. போ… போய் வீட்டு வேலய செய். அது தான் உன் வாழ்க்கைக்கு உதவும்.." என்று சொன்ன அன்னையின் பேச்சிற்கு மாறாக, பரிச்சை எழுதியே தீருவேன் என கோட்சிங் க்ளாஸ் சேர்ந்தாள் பெண்.
வீட்டு வேலைகள் எதையும் கற்றுக் கொள்ளாது, ‘நான் போலிஸ் ஆகியே தீருவேன்’ என்ற முடிவுடன் பரிச்சைக்கு படிக்க,
'இப்படியே போனா நல்லதுக்கு இல்ல. கல்யாணம் பண்ணிக்க சொன்னா வியாக்கியானம் பேசுவா. ஏன் பண்ணணும் எதுக்கு பண்ணணும்னு அகராதியா… சம்பாதிக்கிற திமிருல பேசுவா.. அதுக்குள்ள நாம எதாவது பண்ணணும். வேலைக்கி மட்டும் போய் சம்பளத்த முழுசா கைல வாங்கிடவே கூடாது.' என எண்ணி சாந்தி ஆரம்பித்தார், திருமணம் செய்து கொள் என்று. அப்படி இல்லை என்றால் கோச்சிங் க்ளாஸ் செல்லாதே என்று.
"கல்யாணம் தான. பண்ணிட்டா போச்சி. ஆனா எனக்குப் பிடிச்ச மாதிரி பையன் வேணும்.. " என்க,
"அப்படி ஒருத்தே கிடைச்சிட்டா நீ வேலக்கி போக கூடாது." என்ற சாந்தியை முறைத்துப் பார்த்தவள்,
" முதல்ல அப்படி ஒருத்தன பிடிங்க. அப்றம் கல்யாணம் பண்ணிக்கிறேன். கல்யாண பொண்ணு போலிஸ்ஸாகப் பாக்குறான்னு தெரிஞ்சா அவெ அவெ தெறிச்சி ஓடுவான். அதுல ஒருத்தன… தேடிப் பிடிச்சி… ம்ஹிம்… வாய்பில்லை. " எனச் சம்மதம் சொன்னாள் பெண்.
மிகவும் தீவிரமாக மாப்பிள்ளைத் தேட ஆரம்பித்தார் சாந்தி. அவரின் தேடுதல் வலையில் தானாக வந்து தலையை விட்டவன் தான், இன்று நீதிமன்றத்தைப் பாட்டு பாடி நடமாடும் டீவி சேனலாக மாற்றிய இளைஞன்.
மேட்ரிமோனியில் அவனின் ப்ரெஃபைல் பார்த்ததும் பைரவிக்குப் பிடித்தோ இல்லையோ சாந்திக்குப் பிடித்து விட்டது.
'ரொம்ப நல்ல பையனா இருப்பான் போலயே. ' என அவனுக்கு நல்லவன் பட்டம் சூட்டி மகிழ்ந்தார்.
ஆனால், அந்தத் தங்கமான பையனை லண்டித்தனம் செய்யும் தன் மகளுக்குக் கட்டி வைப்பதா?
"அந்தத் தம்பி எம்மகள கட்டிக்கிறதும் ஒன்னு தான். கல்லக் கட்டீட்டு கிணத்துல குதிக்கிறதும் ஒன்னு தான். " என்ற எண்ணம் அவனைப் பற்றி விசாரித்த பின் தான் தோன்றியது அவருக்கு.
"நாம வேற மாப்பிள்ளைய பாப்போமே. இந்ததீ தம்பி வேண்டாம். " என்றார்.
"ஏன் இவனுக்கு என்ன கொற. நல்ல வேல, நல்ல சம்பளம், பாடி பில்டர் மாதிரி உடம்ப மெயின்டெய்ன் பண்ணி பாக்க அழகாத்தா இருக்கான்." என்றவளுக்கும் அவனை மிகவும் பிடித்திருந்தது. வசீகரனாக தோன்றினான்.
" அப்ப பையூம்மா உனக்கு ஓகேவா!. பேசி முடிச்சிடலாமா?" அவளின் தந்தை சேர்ம துறை சந்தோஷமாகக் கேட்க, கணவனை முறைத்தார் சாந்தி.
" ப்பா பாத்ததும் வர்றது அட்ராக்ஷன். கண்ணுக்கு அழகா தெரியுற எல்லார் மேலயும் அது வரும். அழகா இருக்காங்கிறதுக்கா குணமே தெரியாத அவன் கிட்ட எப்படி என்னோட எதிர்காலத்த ஒப்படைக்கிறது. அப்படி ஒப்படைக்கணும்னா… அதுக்கு பழகணும். அதுக்கு டயம் வேணும். " என்றாள் பையூ.
"எனக்குப் புரிஞ்சிடுச்சி. நீ பேசி பழகி அவுட்டிங்கிற பேர்ல ஊர் சுத்திட்டு… கடைசில பிடிக்கலான்னு சொல்ல போற..
சரியா." எனச் சொல்லி சிரித்தார் சேர்மம். உடன் பைரவியும் சேர்ந்து கொள்ள,
"அப்ப இப்பவே பிடிக்கலன்னு சொல்லிடு." என்றார் சாந்தி
"ஏன் சொல்லணும்? "
"ம்ச்… அந்தத் தம்பிக்கு அப்பா அம்மான்னு யாருமே இல்ல. அக்கா அண்ணே தங்கச்சின்னு கூட பிறந்ததுக கூட இல்ல. சொந்தம்னு சொல்லிக்க மக்க மனுஷனுங்க இருந்தும் தனி மரமால்ல இருக்கான். அப்படி வளருற பையனுக்குக் குடும்ப வாழ்க்க எப்படி செட் ஆகும " என்க, மகள் முகத்தில் சிந்தனை கோடுகள் விழுந்தன.
" அப்ப வேண்டாம் தான… ம்... ம்... " எனச் சாந்தி துடிக்க,
"நான் யோசிக்கிறேன். " எனச் சொல்லி சென்றாள் பைரவி. அவள் சென்றதும் ஃபோனை வேகவேகமாக எடுத்தார் அவர்.
"சாந்தி என்ன பண்ண போற."
"நல்ல குணமான பையனா இருக்கான். அவன எப்படி விடுறது. நாட்டுல நல்ல பசங்களுக்குப் பஞ்சம் வந்திடுச்சி. அதுனால நான் அந்தத் தம்பிய எந்தங்கச்சி மக ஊர்மிளாக்குப் பேசலாம்னு இருக்கேன்." என்க, அவரின் முன் கோபமாக வந்து நின்றாள் பெண்.
"ம்மா நீ என்ன பைத்தியமா. ஊர்மிக்கி இப்பத்தா பதினெட்டு வயசு ஆகுது. காலேஜ் போக ஆரம்பிச்ச பச்ச மண்ணுக்கு கல்யாணமா. அதுவும் இவெ கூட. இப்ப தான சொன்ன தனியா வளந்த பையனுக்கு குடும்பத்த எப்படி சமாளிக்க தெரியும்னு. "
"அதெல்லாம் ஊர்மி பாத்துப்பா.. உன்னை விட ஊர்மிக்குப் புத்திசாலித்தனம் ஜாஸ்தி. அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிக்கிற மாதிரி நிச்சயம் வச்சி கல்யாணத்த உறுதி படுத்திக்குவோம். எந்தங்கச்சிக்கு நல்ல மருமகெ கிடைக்க போறான். " எனச் சாந்தி மகிழ, பைரவிக்குப் புரிந்து போனது,
'அம்மாக்கு அவெங்கூட எங்கல்யாணம் நடக்குறது பிடிக்கல. அப்ப எனக்கு பிடிச்சிருக்கு. நான் அவன தான் கல்யாண பண்ணுக்கணும். ' என நினைத்தவள்.
நேரில் அவனைப் பார்க்க செல்ல, மற்றது தானாக நடந்தது. அவன் பார்த்துக் கொண்டான். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் முடிந்தது.
பாவம் சாந்தி..
எந்தக் குழியில் சிக்கி விடாது அவனைக் காப்பாற்ற நினைத்தாரோ… அந்தக் குழியில் தானாக வந்து குதித்து மருமகனான். இப்போது காப்பாற்றுங்கள் என வெளியே வர கை நீட்டவும் பிடித்து இழுத்து போட்டு விட்டார்.
பைரவிக்கும் கணவன் மீது கோபம் தான். தன்னைப் புரிந்து கொள்ளாது சண்டை போடுகிறான். பிரிந்து செல்ல நினைக்கிறான். ‘விவாகரத்து தானே... பண்ணிட்டா போச்சி’ என்று தான் நினைத்தாள். ஆனால் அடுத்தவர்கள் சொல்லி செய்ய கூடாது. அவளாக முடிவெடுக்க வேண்டும். அதனால் தான் கோர்டில் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினாள்.
'எனக்காடா டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்புற. இனி நீ நிம்மதியா இருக்க கூடாது..' என்பதற்காக அவள் பல வேலைகள் செய்கிறாள், அவனை வெறுப்பேற்ற..
'அப்படி அந்தம்மாக்கு என்ன காண்டு.. ஸ்கூல் ல ஆரம்பிச்சி போலிஸ்ஸாகுற வர எதுலயுமே என்னோட விரும்பம் தான்.. மத்த எந்த விசயத்துல இல்லன்னாலும் இந்தக் கல்யாண விசயத்துல அவங்க பேச்சத்தானக் கேட்டு, அவன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்றம் ஏன் அவங்க அவனுக்கு சப்போட் பண்றாங்க.
அவங்களுக்கு எனக்கு ஆகாது தான்.. அதுக்குன்னு நான் அவங்க பொண்ணு இல்லன்னு ஆகிடுமா. அம்மா இல்லன்னும் ஆகிடுமா. எப்ப பாரு அவன புகழ்ந்து பாடிக்கிட்டே திரியுறாங்க. ' எனப் புலம்பியபடி வந்தவளை, கையில் தினசரி நாளிதழுடன் எதிர் கொண்டார் சேர்மதுரை.
"என்னம்மா இன்னைக்கி ஸ்டேஷனுக்கு போகலயா.. லீவா.. " எனக் கேட்க, 'வீட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாம டம்மியாக மிச்சர் சாப்டுட்டு இருக்காரே இவர. ' என நொந்து கொண்டு தலையில் அடித்துக் கொள்ள,
"என்னாச்சி ம்மா… தலை வலியா... நான் போய் மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கிட்டு வரவா. " என அக்கறையுடன் தான் கேட்டார் அவர். ஆனால்,
"ப்பா... கொஞ்சம் சும்மா இருங்க. வீட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாம. ச்ச.. இந்தக் குடும்பத்துக்குத் தலைவர் நீங்களா... இல்ல அம்மாவா…" எனக் கோபமாக கேட்டாள்.
"ஹாஹ்ஹா... தலைவர் நான் தாம்மா... தலைவரோட பெண் பால் தலைவி… அப்படி பாத்தா உங்கம்மா தான் இந்தக் குடும்பத்து தலைவி. " என்க, மகள் திட்டித் தீர்த்தாள் அவரை..
" ப்பா கொஞ்சமாச்சும் பொறுப்போட நடந்துக்கங்க. ஆம்பளையா லட்சணமா உங்க பொண்டாட்டாய அடக்கி வைங்க. உங்கப் பேச்ச அவங்க கேக்கணும். நீங்க அவங்க பேச்ச கேட்டு தலைய மட்டும் ஆட்டக் கூடாது. "
"ஆனா முப்பது வர்ஷமா நான் அத மட்டும் தானம்மா செய்றேன். இப்ப அதையும் செய்ய கூடாதுன்னா… என்ன பண்ணணும்னு நீயே சொல்லி குடுத்திட்டு போம்மா..."
" ஐய்யோ அப்பா... இன்னைக்கி உங்க மகளோட வாழ்க்கையே போயிடுச்சி. அத அவங்க அங்க கொண்டாடிட்டு இருக்காங்க. பொண்டாட்டிய எதிர்க்கலைன்னாலும் பரவாயில்ல. ஒரு அப்பாவா எனக்கு நீங்க சப்போட் பண்ணிருக்கலாம்ல. "
"உனக்கு சப்போட் பண்ணாலே அது என்னை எதிர்க்கிற மாதிரி தான்." என்ற படி வந்தார் சாந்தி...
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..