அத்தியாயம்: 21
ஆர்த்தி, கையில் பெரிய
உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த
வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில்
கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக்
கொண்டிருந்தாள்
அவள் தன்னைத் தேடி
வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட
உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.
எங்கே அவளைத் தொட்டால்
கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத்
தொடங்கினான்.
வழமை போல் தூக்கிச்
சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று
அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக
சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…
முகம், கை, கணுக்கால்களை
மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தான் தர்மேந்திரன்.
கண் சிமிட்டினால் கூட மறைந்து விடுவாளோ என்ற அச்சம் வேறு இருந்தது.
கலவையில் கலக்க நிறமிகளை
எடுக்க வேண்டி திரும்பியவள், சுவரில் சாய்ந்து நின்ற தர்மேந்திரனைக் கண்டு விட்டாள்.
ஒரு நொடி திகைத்தவள், மெல்லிதாக இதழ்களை இழுத்து,
"அது... நாளைக்கு
ஹர்ஷிதாக்குப் பிறந்த நாள்... காலைல சர்ப்ரைஸ்ஸா வெட்ட கேக்கை என்னோட கையால செய்யலாம்னு…"
என்றவள் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே,
"அதுக்குத்தான்
வந்தீங்களா?" என்றான் சின்னப் புன்னகையுடன். இல்லையெனத் தலையசைத்தவளிடம்,
“அப்புறம் எதுக்கு
வந்தீங்க?” என்று வினவ, அவள் கோபமாக முகம் தூக்கி,
"ஏன் என் கிட்ட
எதுவும் சொல்லாம வந்தீங்க? என்னையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்லன்னு உங்க கூட சண்டை
போடலாம்னு தான் வந்தேன். நீங்க வீட்டுல இல்லை." என்றபோது அவன் அடைந்த ஆனந்தத்திற்கு
அளவு இல்லை.
தன் தலையில் தட்டியபடி
சின்னச் சிரிப்புடன், “நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா எங்கேயும் போயிருக்க மாட்டேன்…
இட்ஸ் ஓகே… இப்ப கூட சண்டை போடலாம்… சட்டைய பிடிச்சாக் கூட நான் எதுவும் சொல்லமாட்டேன்.”
என்க, அவன் சொன்னதை செய்து விடும் உத்வேகம் வந்த போதும்,
"அத்தை சொன்னாங்க…
நடந்ததை..." என்றாள் சின்னக் குரலில்.
"அதுக்கு உங்க
ரியாக்ஷன் என்ன?"
"நமக்குள்ள என்ன
உறவு இருக்குன்னு அத்தைக்கிட்ட விவரமாச் சொல்லிட்டேன்." என்றவளின் நாணம் ததும்பும்
பார்வை சொன்னது, 'உனை என் கணவன் என்றேன்.' என்று.
அடுத்த நொடி வேகமாக
அணைத்துக் கொண்டான் தன்னவளை. எங்கே அவர்கள் சொன்னது போல் அவனின் காதல் நடிப்பாகத் தான்
ஆர்த்திக்கும் தெரிந்திருக்குமோ என்று பயந்தது அவனுக்கு மட்டுமே தெரியும். அவள் அவ்வாறு
நினைத்திருப்பாளோ என்ற அச்சத்தில் அவளின் முகம் பார்க்காது வந்திருந்தான்.
அது இல்லை, அவள் தன்னை
உணர்ந்திருக்கிறாள், என்னை நம்பியிருக்கிறாள் என்பது ஆர்த்தி மீது கொண்ட நேசத்தை சிகரம்
தொட வைத்தது.
தன் இறுக்கமான அணைப்பின்
மூலம் தன் காதலை வலிக்க வலிக்க வார்த்தைகள் இல்லாது சொல்லியவன், தியாவின் மீதிருந்த
காதலின் முறிவையும், அவளின் மீது கொண்ட காதலையும் ஆர்த்தியின் காதில் சொல்லி முடித்தான்.
"அவங்களுக்கு
நம்மள பத்தி தெரியுமா? எப்ப இருந்து? நீங்க சொல்லலன்னு சொன்னீங்க!" என்றாள் வியப்புடன்
அணைப்பில் இருந்து விலகாது.
"நான் சொல்லல.
ஆனா என்னோட ரூம்மெட்ஸ் சொல்லிட்டானுங்க. என் கிட்ட கோபப்பட்டு ஏன் என்னை ஏமாத்தினன்னு
கேட்டு சண்டை போட்டிருந்தா கூட அவளோட காதல் உண்மைன்னு நம்பிருப்பேன். ஆனா அவ அதைத்
தனக்குச் சாதகமாக யூஸ் பண்ண நினைச்சா. என்னை ப்ளாக்மெயில் பண்ணி என்னை அங்க வரச் சொல்லி
டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டா. எந்தக் காதலியும் தன்னோட காதலனை இன்னொருத்தரோட கணவனா
பார்க்க விரும்ப மாட்டா. ஆனா தியா..." என்றவன் சில நொடி இடைவெளி விட்டு தியாவின்
பேச்சை நினைவிற்கு கொண்டு வந்தான்.
"டைவர்ஸ் எதுவும்
கொடுக்காத இந்தர். ஏற்கனவே உங்கண்ணன் வைஃப்ன்னு அவளுக்கு சொத்துல ஒரு பங்கு இருக்கும்.
இப்ப திட்டம் போட்டு உன்னைத் தாலி கட்ட வச்சி மொத்த சொத்தையும் எழுதி வாங்க நினைக்குது
அந்தக் குடும்பம். நீ இங்க வந்திடு. அவ எக்கேடு கெட்டா உனக்கு என்ன? கட்டாயப்படுத்தி
கல்யாணம் பண்ணி வச்சதுக்கு அவளை உன் குடும்பமே வாழா வெட்டியா வச்சி அழகு பார்க்கட்டும்."
என்று சொல்லும் போது கூட அவன் தியாவை வெறுக்கவில்லை. ஆனால்…
"உனக்கும் அவளுக்கும்
இடைல எதாவது பிசிக்கல் ரிலேஷன்ஷிப் இருக்கா… இருந்தாலும் பரவாயில்லை. அவளுக்கு ஆம்பளைச்
சுகம் என்ன புதுசா. யூஸ் பண்ணிக்க." என்றதும், பெண்ணா இவள் என்று நினைக்கத் தோன்றியது.
சுலேகா கூட அன்று இதற்காகத்தான்
அவனைத் திட்டினாள். விதவைகள் மற்றும் விவாகரத்து ஆன பெண்களை யூஸ்ட் மெட்டிரியல் என்றும்
இரண்டாம் தரம் என்றும் எண்ணி, பல ஆண்கள் அவர்களை வெறும் உடல் தேவைக்கு பயன்படுத்திக்
கொண்டு கை விட்டு விட்டுச் சென்று விடுவதைச் சொல்லி, தர்மாவிடம் ஆர்த்தியை மனைவியாக
ஏற்கச் சொன்னாள்.
தியாவின் சுயநலமும்
ஆர்த்தியைப் பழித்து பேசிய பேச்சும் தர்மா தியாவை உதறித் தள்ள வைத்தது.
"இல்லை... அவளுக்கு
என் மேல காதல் இருந்ததே இல்லை. வெளிநாட்டு மேல தான் இருந்திருக்கு. லட்சம் சம்பாதிக்கிற
ஆண் மேல தான் காதல். இப்ப அவளுக்கு ஏத்த மாதிரி துபாய்ல செட்டில் ஆன ஒருத்தனைக் கல்யாணம்
பண்ணிக்கப் போறா." என்றவன் அலைப்பேசியில் அவளின் நிச்சயதார்த்த புகைப்படங்களைக்
காட்டினான்.
தர்மா சொன்னது போல்
ஆர்த்தியைச் சென்னைக்கு அழைத்து வந்தது… இல்லை அவனுக்கும் ஆர்த்திக்கும் இடையே திருமணம்
நடந்ததே அவளுக்குத் தெரியும். அவன் அவனின் குடும்பத்தின் மீது வெறுப்போடு இருக்கிறான்
என்பதும் தெரியும். அதைப் பயன்படுத்தி அவனை நிரந்தரமாக வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று
விடலாம் என்று திட்டமிட்டிருந்தாள்.
ஆதலால் அவனின் திருமண
விடயம் தெரிந்ததைப் போல் காட்டிக் கொள்ளாது, பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
அதைத் தர்மா மறுக்கவும் தற்கொலை நாடகம் வேறு போட்டாள்.
'உனக்காக நான் காத்திருக்கிறேன்.'
என்று தர்மா செய்து கொடுத்த சத்தியத்தை வாங்கிக் கொண்டு சென்றவள், அதைச் சொல்லிச் சொல்லியே
அவனை வீசா எடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாள். அப்பொழுது அவன் மறுக்கவும் ஆர்த்தியுடன்
நடந்த திருமணத்தைச் சொல்லி, கிட்டத்தட்ட மிரட்டவே தொடங்கி விட்டாள்.
அவளின் தேள் பேச்சுக்கள்
தர்மாவிற்கு வேதனையைத் தந்தது. முகம் சுருங்க தியாவின் நினைப்பிலேயே நின்றான்.
தன் இணையின் வேதனையை
உணர்ந்த ஆர்த்தி, அவனின் மார்பில் தலை சாய்த்து, ஆதூரமாக அணைத்துக் கொண்டாள்.
ஒருவரின் அணைப்பு மற்றவர்களுக்கும்
தேவையானதாய் இருக்க, காதல் காமம் அற்ற நிமிடங்கள் நீட்டித்தது அங்கு.
அவன் எவ்வாறு தன் மனம்
திறந்து தியாவைப் பற்றிக் கூறினானோ… அதே போல் மகேந்திரனுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையைப்
பற்றி அவனிடம் சொல்லிவிட எண்ணி,
"மாமா... நான்...
நான்... ஏற்கனவே கல்யாணம் ஆனவ... கன்னித்தன்மை இல்லாதவ... எனக்கு... எனக்கு..."
என்று திக்கித் திணறி ஆரம்பித்தவளின் கன்னங்களை ஏந்தி முகத்தை உயர்த்தியவன், இதழைத்
தன் இதழ் கொண்டு மூடினான்.
"வேண்டாம்ங்க...
எந்த விளக்கமும் வேண்டாம்ங்க. இப்ப இந்த நொடி உங்க மனசு முழுக்க நான் மட்டும் தான்
இருக்கேன். என்னோட மனசுல நீங்க மட்டும் தான். இது போதும்ங்க நாம நம்ம உறவை உறுதிப்படுத்திக்க."
என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையிலும் அணைப்பை இறுக்கி, கன்னத்தில் முத்தமிட்டு,
மெல்லிடையை அளந்தபடியே சொல்ல, வார்த்தைகள் மட்டுமல்ல, சகலமும் அடங்கிப் போனது ஆர்த்திக்கு.
அவள் வேண்டும் தர்மாவிற்கு…
எச்சில் பாத்திரமாக அல்லாது தன் அட்சயப் பாத்திரமாக அவளை எண்ணி தன் அளவில்லா சந்தோஷங்களை
அவளிடமிருந்து அள்ளிக் கொள்ளத் தொடங்கினான்.
அவனின் சட்டையை அணிந்து
அழகோவியமாய்த் தன் முன் இருப்பவளின் அண்மையில் தாபம் கூடியது ஆடவனுக்கு.
அணைப்பை இறுக்கியவன்,
சட்டை இடைவெளியில் கரம் கொடுத்து வெற்றிடையைப் பற்றித் தூக்கினான். அவளை மேடையில் அமரவைத்து,
தாபத்துடன் முன்னேற, பாத்திரங்கள் பறந்து கீழே விழுந்தன. யானை ஒன்று வெண்கலக் கடைக்குள்
புகுந்தது என்று ஒரு பழமொழி இருக்கும். அதற்கு உதாரணமாக இருவரும் நடந்துக் கொள்ள,
"ஆர்த்திம்மா
இன்னும் ஏன் சமையல்கட்டுக்குள்ள சத்தம் கொடுத்துக்கிட்டு இருக்க? வந்து தூங்கலாம்ல!"
என்று கேட்டபடி வந்த அமுதாவைக் கண்டு, தர்மா பட்டென விலகி நின்றான்.
தன்னைக் கண்டு சட்டைப்
பட்டனை அணிந்தபடி, சமையல் மேடையில் அமர்ந்திருந்தவளின் கோலமும், தலையில் தட்டிக் கொண்டு
சமையலறையை விட்டு வெளியேறவனின் வெட்க முகத்தையும் கண்ட அமுதாவிற்கு என்ன நடந்திருக்கும்
என்று தெரியாதா என்ன...
தாயின் முகம் பார்க்க
முடியாது சமையலறையைக் காலி செய்தான்.
கூடத்தில், "தினமும்
இப்படித்தான் லேட்டா வருவியா ப்பா?" என்றபடி எழுந்து அமர்ந்தார் நெல்லையப்பன்.
கதவைத் திறந்தவன் ஹாலில்
உறங்கிக் கொண்டிருந்த தாயையும் தந்தையையும் கவனியாது அடுப்படிக்குள் சென்றிருக்கிறான்.
"இல்லப்பா...
இன்னைக்கு வேலை இருந்தது." என்று அசடு வழிந்து விட்டு அறைக்குள் சென்று மறைந்தான்.
உள்ள வந்ததும், “துண்டை
எங்கங்க வச்சீங்க?” என்று குரல் கொடுக்க, ஆர்த்தி பேந்த பேந்த முழித்த படி அமுதாவின்
முன் நின்றாள்.
"என்ன நிக்கிற!
அவனுக்குத் துண்டெடுத்திட்டுப் போ. சமைச்சது எல்லாத்தையும் கொட்டி விட்டுட்டீங்களா
இல்ல இருக்கா..." என்றபடி சமையலறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்.
கதவைத் திறந்துக் கொண்டு
அறைக்குள் துண்டுடன் வந்தவளை, பிடித்திழுத்து கதவைச் சாத்தி அதன் மேலேயே சாய்த்து வைத்தவன்,
தன் கைச்சிறைக்குள் இருந்தவளிடம், "அம்மா அப்பா வந்திருக்காங்கன்னு ஏங்க சொல்லல?"
எனத் திட்ட,
"பின்ன உன்னைய
பார்க்கணும்னு அழுதவளைத் தனியாப் போன்னு பஸ்ஸ ஏத்தி விடச் சொல்றீயா?" என்ற நெல்லையப்பனின்
குரல் கேட்க, ஆர்த்தி இதழ் மடித்துச் சிரித்தாள்.
"மாமனார் மாமியார்
நாத்தனாருன்னு எல்லார் சப்போர்ட்டும் மருமகளுக்கு மட்டும் தான் போல..." என்று
கையணைவில் இருந்தவளின் மதி முகத்தில் கோலமிட்டு கிறக்கத்துடன் சொல்ல,
"ஆர்த்திம்மா,
ட்ரெஸ்ஸை மாத்திட்டு வந்து சாப்பிடச் சொல்லு அவனை. வெறும் வயித்தோட இருக்கீங்க. அவன்
வந்தாத்தான் சாப்பிடுவேன்னு இவ்ளோ நேரமாவா பட்டினி இருக்குறது. வந்து சாப்பிட்டுட்டு
அடுத்த வேலையப் பாருங்க." என்று அமுதா உத்தரவிட்டார்.
"சாப்பிடலையாங்க
நீங்க?" என்று அவன் ஆர்த்தியின் முகம் பார்க்க, அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.
வேகமாக கை கால்களைக் கழுவி விட்டு, உடை மாற்றி விட்டு வந்தவன் அவளுடன் சாப்பிட்டு முடித்தான்.
"அவன் தான் முட்டாள்
மாதிரி கல்யாணத்தை விளையாட்டா நினைச்சு பண்ணான்னா உனக்கு எங்க போச்சு புத்தி. உன் கிட்ட
தெளிவாச் சொல்லிட்டு தானே கல்யாணம் பண்ணிருக்கான். அப்பவே என் கிட்டச் சொல்றதுக்கு
என்ன? சென்னைக்கு வான்னு உன்னைக் கூப்பிட்டப்பவாச்சும் அவனுக்கு ஒரு காதலி இருக்காங்கிற
விசயத்தைச் சொல்லிருக்கலாம்ல." என்று பலவாறு திட்டித் தீர்த்தார் அமுதா. கர்ணனும்
அதையேத்தான் கேட்டான்…
அவன் திட்டம் போட்டால்
நீ ஏன் அதற்கு வளைந்து கொடுத்தாய் என்று. அனைத்திற்கும் மேலாக இசக்கிமுத்து ஆத்திரம்
கொண்டு தர்மாவை அடிக்கப் புறப்பட்டு விட்டார்.
ஆனால், அனைத்தையும்
அமைதியாகக் கேட்டு
முடித்தவள், அனைவரிடமும் கூறியது, "நான் ஆர்த்தி தர்மேந்திரன்..." என்ற
ஒரு வார்த்தை தான்.
அதைக் கூறும் போதே
அவளின் முகத்தில் உண்டான வெட்கம் அமுதாவிற்கு அவளின் மனத்தைச் சொல்ல, உடனே அழைத்து
வந்து மகனின் கரத்தில் ஒப்படைத்தும் விட்டார்.
எங்கே மகேந்திரனை மனத்தில்
வைத்துக் கொண்டு, பழங்கதைகளைப் பேசி தன் வாழ்க்கையை நகர்த்தாது அங்கேயே நின்று விடுவாளோ
என்று பயந்தவருக்கு ஆர்த்தி கூறிய செய்தியில் அத்தனை தித்திப்பு.
தர்மா இங்கு ஆர்த்திக்காகப்
புலம்பியதை நிலவன் அமுதாவிடம் சொல்ல, மகனின் மனத்திலும் மாற்றம் வந்திருப்பதை உணர்ந்திருந்தார்.
இப்பொழுது ஆர்த்திக்குப் பரிமாறி அவள் உண்டு முடிக்கும் வரை பொறுமையாக அமர்ந்திருந்து,
அவளுடன் சேர்ந்து பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு அறைக்குள் சென்றவர்களின் திருமண
வாழ்க்கை என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டியபடி உறங்கினார்.
என்றுமில்லாத திருநாளாய்
புதிய வெட்கத்துடன் அறைக்குள் வந்தவளை அள்ளிக் கொள்ளும் பார்வை பார்த்தவன், இரு கரத்தையும்
விரித்து அவளை வரவேற்க, வேகமாகச் சென்று அதில் தஞ்சமடைந்துக் கொண்டாள் அவனின் மனைவி.
அவன் எப்போதும் ரசிக்கும் அந்தக் குழந்தை முகத்தில் குமரிக்கான நாணத்தைக் கண்டவன் பெண்ணவளின்
அதரத்தில் முத்தமிட்டு கலவியின் முதல் அடியை எடுத்து வைத்தான். முத்தங்கள் பல இட்டு தொடங்கிய அவர்களின் தாம்பத்தியப்
பாடம், விடிந்த பின்னும் முடிவில்லாது தொடர்ந்தது.
இதுவரை மனத்தால் கலந்த
இருவரும், உடலால் இணைந்து தங்களின் உறவை புதுப்பித்துக் கொண்டே இருந்தனர்.
நன்றி...
சுபம்…

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..