அத்தியாயம்: 14
முதலீட்டாளர்கள் ஈர்ப்பு மாநாடு. அதாவது எங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள். உங்களுக்கான வசதி வாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்தி தருகிறோம் என்று முதலீட்டாளர்கள் அதாவது உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விட்டுத்துள்ளார் நம் முதலமைச்சர். அந்த மாநாட்டில் பங்கு கொள்ள எனப் பல பெரும் நிறுவன உரிமையாளர்கள் தமிழ்நாடு வந்திறங்க உள்ளனர். அவர்களில் சிலருக்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பு சிதம்பரம் நடத்தும் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு முன் இது போல் நடந்த ஒரு மாநாட்டில் பங்கு பெற்ற வந்த ஒரு முதலீட்டாளர், ‘தன் தொழில் ரகசியங்களை யாரோ திருடி விட்டனர். தனக்குக் கோடிக்கணக்கில் நட்டம் வரப் போகிறது’ என்று கதறி, அதற்கு மதுவின் கவனக்குறைவு தான் காரணம் எனக் குற்றம் சுமத்தினார். அதை விசாரிக்க போய்த்தான் பைரவிக்கும் மதுவிற்கும் பெரும் சண்டை மூண்டது.
இப்போது குற்றம் சுமத்திய அதே மனிதன், இம்முறையும் மதுவின் செக்யூரிட்டி தான் வேண்டும் என்று கேட்க, சிதம்பரம் அவனிடம் கவனமாக இருக்கும் படி அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்தார்.
"நெக்ஸ்ட் மன்த் சிட்டி அவுட்டர்ல ஒரு மீட்டிங்க இருக்கு. அதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடியே அவங்க வந்திடுவாங்க. நீ போய் அவரு தங்கப்போற ஹோட்டல், போற வழின்னு எல்லாத்தையும் கவர் பண்ணிடு. சரியா!
நடந்ததை எல்லாம் மறந்திட்டு அவரு நம்ம கிட்டயே வந்திருக்கிறது நம்மோட தப்பத் திருத்திக்கிறதுக்கான ஒரு வாய்ப்பு.
நம்ம தொழில்ல வீஐபிங்க நம்ம மேல வைக்கிற நம்பியும் நாணயமும் முக்கியம். போன தடவ மாதிரி இந்தத் தடவை எதுவும் ஆகிடக் கூடாது. நீ கொஞ்சம் அதிக கவனத்தோட இருக்கணும்." எனக் கடுமையாக கூறினார்.
மது வாய் திறக்காது அமர்ந்திருந்தான். ஆனால் கோபத்துடன் தான். ஏனென்றால் கவனமின்றி அலட்சியமாக இதுவரை இருந்தே இல்லை அவன். அனைத்திலும் சிரத்தையுடன் தான் இருப்பான். அப்படி இருக்க, தன் மேல் குற்றம் சாட்டிய அவன் மீதும், அதை விசாரிக்க எனக் காக்கி உடையில் வந்த தன் மனைவி மீதும் அத்தனை கோபம் அவனுக்கு. அவனின் அவமானம் அது.
தன் அவமானங்களை அவன் எளிதில் மறக்க மாட்டான். இரும்பு பட்டறையில் அனலில் வைத்திருக்கும் இரும்பை போல் தன் அவமானங்களை மறக்காது வெந்து கொண்டே இருப்பான். தன் விரல்களை மடக்கி தன்னுள் எழுந்த கோபத்தை அடக்கினான் மது.
"அதெல்லாத்தையும் நம்ம தம்பி நல்லா பாத்துக்குங்க. அந்தக் கவலய விட்டுட்டு சாப்பிட வாங்க. " எனப் புன்னகையரசி போல் வாய் நிறைய பல்லுடன் வந்தாள் ஜெயஸ்ரீ.
மனைவியின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து சிதம்பரம் எழ, மது கிளம்புவதாக சொன்னான்.
" என்ன மதுசூதனா நீ! வந்ததும் வராததுமா கிளம்புறேன்னு சொல்ற. உனக்காக நான் விருந்தே ஏற்பாடு பண்ணிருக்கேன். ஒரு வாய் சாப்டுட்டு போ." எனக் கட்டாயப்படுத்தினார் ஜெயா.
அவன் தன் சிறிய தகப்பனின் முகம் பார்த்தான். அவரும் ‘வா.’ எனச் சொல்லி நடக்க மது பேசாது பின் தொடர்ந்தான்.
சிதம்பரம் மதுவின் தனிப்பட்ட எந்த முடிவிலும் தலையிட மாட்டார். ஆலோசனை என்று கேட்டு வந்தால் மட்டுமே அறிவுரை செய்வார். மற்றபடி அவனின் வாழ்க்கையை அவனே வாழட்டும் என்று விட்டு விடுவார். அதே நேரம் தொழிலைப் பாதிக்கும் படி எதையாவது செய்தால் கடுமையாகி விடுவார். இந்தக் குணங்கள் மதுவிற்கு அவரின் மேல் ஒரு மதிப்பே தந்தது. மறு பேச்சு பேசாமல் தலை அசைக்கும் அளவுக்கு அவரின் பேச்சில் நம்பிக்கை வந்தது.
"இந்தா போட்டுக்க. வெஜிடபிள் குருமா. இன்னைக்கி காலைல உங்க சித்தப்பா உனக்கு ஃபோன் போட்டதுமே நான் இதைச் செய்ய சொன்னேன். நல்லா சாப்பிடு மது. " எனப் பார்த்து பார்த்து பரிமாற, மது போதும் என மறுத்து, தட்டில் உள்ளதை உண்ணத் தொடங்கினான்.
ஏனோ ஜெயாவின் அன்பு இப்பொழுதெல்லாம் அவனுக்கு நடிப்பாகவே பட்டது. இந்த வீடு நாடக கொட்டகையாகத் தெரிந்தது. கல்லூரி முடிந்த நாட்களில் அவர் காட்டும் அன்பு மழையை அனுபவித்தவன் தான். இப்போது தன்னைப் பார்க்கும் போது ஜெயாவிடம் இருந்து வரும் வலுக்காட்டாயமானச் சிரிப்பிற்குப் பதிலாக, தானும் சிரிக்க வேண்டுமா என்ற எண்ணம் எழ தொடங்கும் அளவுக்கு போலியாக தெரிந்தது அந்த அன்பு.
ஆனாலும் தனக்கு உறவு என்று இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லயே. அதனால் இந்த நாடகத்தை அமைதியாகவே சகித்துக் கொள்வான். தனக்கென இருக்கும் ஒரே உறவுகள் இவர்கள் என்பதால்.
"ஊர்ல இருந்து ரூபி வர்றங்க. இன்னைக்கி சாயங்காலம் நீ போய் அவளைப் பிக்கப் பண்ணிட்டு வா மது. நீன்னா அவளுக்குக் கொல்ல பிரியம். உன்னப் பாக்கத்தா வர்றா." என்க, மது அவரை நிமிர்ந்து பார்த்தான். சரி என்க வில்லை மறுக்கவும் இல்லை.
அவனின் பார்வை ஜெயாவிற்குப் புரிந்தாலும், அவனைக் கருத்தில் கொள்ளாது, " ரூபியோட அப்பா… அதா எங்கண்ணே எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு கேட்டாரு. நாந்தா முதல்ல பேசி பழகட்டும்னு ரூபிய வர சொன்னேன்."
"கல்யாணமா! யாருக்கு? " சிதம்பரம் தான் அதிர்ந்து போய் கேட்டார்.
மது எதிர்பார்த்தான், ஜெயா இதைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார் என்று.
" நம்ம மதுக்கும் ரூபிக்கும் தாங்க. முந்தாநேத்தே நம்மல பிடிச்ச பிடைய தல மூழ்கியாச்சில்ல." என ஜெயா சந்தோஷமாக சொல்ல, மதுவிற்கு எரிச்சலாக வந்தது.
"இப்பதான விவாகரத்து ஆகிருக்கு. கொஞ்ச நாள் போகட்டும். அடுத்து இதப் பத்தி பேசலாம்." எனச் சிதம்பரம் சொல்ல,
"ஏன்? இப்ப பேசுனா என்ன! ரூபி நல்ல பொண்ணு. அந்த போலிஸ்காரிய விட அடக்கமான பொண்ணு. திமிருங்கிறது கிடையவே கிடையாது. மது பேச்சிக்கி எதிர் பேச்சி பேசவே மாட்டா. மதுவுக்கு நல்லதுன்னா உடனே செஞ்சிட வேண்டியது தான." என்க,
"ஆனாலும்…" என யோசித்தார் அவர். மது இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் உணவை உண்ண, அதைப் பார்த்த சைந்தவிக்கு காண்டாகியது. அவனைக் காண்டாக்கி பார்க்கும் எண்ணம் வந்தது.
"அப்பா எதுக்கு தயங்குறீங்க? அண்ணாக்கும் அந்த பைரவிக்கும் இடைல நடந்தது கல்யாணமே இல்ல. நம்ம வீட்டுல இருக்குற ஆடம்பர வசதிக்கு ஆசப்பட்டு அண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டா.
அண்ணா நம்ம வீட்டுக்கு கூட்டீட்டு வரமா. ஆஃபீஸ்க்கு மேல இருக்குற வீட்டுக்கு கூட்டீட்டு போனதும், அவளோட சாயம் வெளுத்து அண்ணனுக்கு அவளக் காட்டி குடுத்திடுச்சி.
அவ ராசியேல்லாத அதிஷ்டக்கட்ட. அவளக் கல்யாணம் பண்ணதுனால, நல்லா இருந்த மது அண்ணாக்கு இப்படி ஒரு கெட்ட பேரு. போதா குறைக்கி அண்ணன வேற ஜெயில் தூக்கி வச்சிருக்கா." என அழுத்தி சொன்னாள் சைந்தவி. இதைச் சொன்னால் தான் மதுவிற்கு கோபம் ஏறும். அந்தக் கோபத்தில் தான் தங்களின் பேச்சை கேட்பான். அவனைச் சூடாகவை வைத்திருப்பது தான் நமக்கு நல்லது என பைரவியுடன் அவனுக்கு இருக்கும் மன கசப்புகளை நினைவு படுத்திக் கொண்டே இருப்பாள் சைந்தவி.
" பொம்பளயா நடந்துக்க தெரியாதவ. ஊருப்பட்ட ஆம்பள கூட சிரிச்சி சிரிச்சு பழகீட்டு திரியுற லோலாயி. நாங்கல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் புருஷெ பேச்ச கேட்டு அடங்கி தான நடக்குறோம். ஆனா அவ… நம்ம மதுவ சம்பாதிக்க வக்கில்லாதவன்னு ஊருகே சொல்ற மாதிரி வேலைக்கி போனதோட மட்டுமில்லாம, குத்தவாளி மாதிரி ஜெயிலுக்குள்ள வச்சிருக்கா.
இனி நம்ம மதுவோட வாழ்க்கைல மகிழ்ச்சி வேணும்னா அத ரூபியால மட்டும் தான் தர முடியும். ஆஃபிஸ்ல சின்ன இடத்துல தங்காம நம்ம கூடவே நம்ம வீட்டுல இருப்பான். ரூபி வந்து விளக்கேத்துனாத்தா இந்த வீடே நிறைஞ்ச மாதிரி இருக்கும். அடுத்த வாரமே நாம இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சி, அந்த போலிஸ்க்காரி மூஞ்சில கரிய பூசணும்." எனப் பேசிக் கொண்டே போக, மது எழுந்து விட்டான்.
"என்னாச்சி மது? ஏன் பாதிலயே எழுந்திட்ட?" ஜெயா பதறிப்போய் கேட்க,
" எனக்குப் பிடிக்கல சித்தி. சாப்பாடு மட்டுமில்ல, நீங்க எனக்குப் பண்ற தா சொன்ன கல்யாணமும்."
"அதான் அந்த சனியெ தொலஞ்சிடுச்சே. இன்னமும் என்ன? " என்றவரை முறைத்தான் மது.
" அசிங்கப்படுத்தின அவ கூடவே திரும்ப போய் வாழ்ந்தாலும் வாழ்வான்ம்மா. இப்ப கூட அவ கூட தான் ஸ்கூட்டீல வந்தான். சோ ரொமாண்டிக்கா… வெட்கமே இல்லையாண்ணா உனக்கு. ஆம்பளயா நிமிந்து நிக்க தெரியாதா. பொண்டாட்டி காசுல உக்காந்து திங்கிறான்னு ஊரே பேசுச்சே நியாபகம் இல்ல." எனச் சைந்தவி, வார்த்தைகளை வன்மத்தோடு கக்க,
"சைந்தவி, போதும்... என்ன பேச்சு இது." எனச் சிதம்பரம் கடிய, மது மீண்டும் டைனிங் டேபிளுக்கு வந்தான். கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்வான் என்று மகிழ்ந்து போயினர் இருவரும்.
இதுபோல் தான் பேசி பேசி பைரவியுடன விவாகரத்திற்கு அடி போட்டனர், 'உன்ன அவமானப்படுத்தி விட்டாள். அறைகுறை உடை அணிந்து நம் குடும்பத்து மானத்தை வாங்கி விட்டாள்.' என பைரவியைப் பற்றி எதையாவது ஓதிக் கொண்டே இருப்பர்.
ஒரு கட்டத்தில் மதுவின் மூளையில் மொத்தமாக அது ஏற, தலை தானாக அசைந்தது. ஆடு தலையை அசைத்ததும் ஒரே வீச்சில் வெட்டி விடுவது போல், உடனே விவாகரத்து காகிதத்தை நீட்டி கையெழுத்து வாங்கி, என அனைத்தையும் முன் நின்று செய்தனர் இருவரும். இன்றும் ஆவலுடன் அவன் வாய் பார்க்க,
" நாளைக்கி பரேடு இருக்கு சித்தப்பா. மறந்தீடாங்க." எனச் சொல்லி டேபிளில் இருந்த கோப்புகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
"இவனுக்குத் திமிர பாத்தியாம்மா. நாம எதைப் பத்தி பேசுறோம் தெரிஞ்சும் நமக்கு ரெஸ்பான் பண்ணாம போறான்." சைந்தவி.
"அதான… ஏங்க நீங்க அவங்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க. ரூபி நல்ல பொண்ணு. இவெ போட்ட எல்லா கன்டிஷனுக்கும் ஒத்துவர்ற பொண்ணு. நீங்க சொன்னா கேப்பான்." என்றார் ஜெயா சிதம்பரத்திடம்.
"அவனோட வாழ்க்கை அவந்தா முடிவெடுக்கணும்.. நீங்க டைவர்ஸ் பேப்பர நீட்டுனதே எனக்குப் பிடிக்கல. இதுல கல்யாணம். இத விட்டுடுட்டு போய் வேற வேலைய பாருங்க. " என எழுந்து செல்ல,
" என்னம்மா அப்பா இப்படி சொல்றாரு?"
" கவலப்படாத… நான் பாத்துக்கிறேன். அவெ தனி மரமா நின்னா கூட எனக்குக் கவல இல்ல. ஆனா பிள்ள குடும்பம்னு வாழக்கூடாது. அப்ப தான் நமக்கு சொந்த மொத்தமும் வந்து சேரும். " என்றார்.
"அதுவும் சரிதான்." என்றாள் மகள்.
தாயும் மகளும் பற்ற வைத்த மதுசூதனன் என்ற வெடி, அவனின் வீட்டில் வெடித்துக் கொண்டிருந்தது. கோபமாகக் கதவைத் திறந்தவன், காலணிகளை கலட்டி அதன் இடத்தில் வைத்து விட்டு திரும்ப, வீடு முழுவதும் பைரவி நிறைந்து இருப்பது போல் ஒரு பிரம்மை வந்தது..
அது காதலைத் தராது ஆத்திரத்தைத் தந்தது.
' பொண்டாட்டி உழச்சி அதுல சோறு திங்க போறீயா. பொட்டப்பயலா நீ.' எனச் சுற்றி நிற்கும் அனைவரும் அவனைக் கேலி செய்வது போல் தோன்ற, கோபம் கொண்டு கத்தினான் மதுசூதனன்.
" எல்லாம் உன்னால தான்டி. இன்னைக்கி மட்டுமில்ல, இதுக்கு முன்னாடி நான் பட்ட அவமானம் எல்லாத்துக்கும் நீ ஒருத்தி மட்டும் தா காரணம்.. **** " எனக் கத்தியவன் கண்களுக்கு மீன் தொட்டி தெரிந்தது.
அது எப்படி இங்கு வந்தது என்ற கதையைச் சொல்ல, மதுவிற்கு ஆங்காரம் ஏறியது.
ஒருமுறை மழையில் நனைகிறது என்று சொல்லி இரு பூனை குட்டிகளைத் தூக்கி வந்திருந்தாள் அவன் மனைவி. தன் படுக்கையில் வைத்து அதைக் கொஞ்சி கொண்டு இருந்தவளைக் கோபமாக பார்த்தான் மது.
" மாமஸ்... இது பாவம்.. மழைல…" என அவள் பேசத் தொடங்கும் முன்னரே,
"Get out of my room... " எனக் கத்தினான் அவன். ஏன் என்று அவன் மனைவி தெரியும். ஆனாலும் பாவமாக இருந்த ஜீவனை விட மனமில்லாது தவிக்க,
"அதுகள இப்பவே நீ வெளில விட்டு வந்தா என்னோட வீட்டுல இருக்கலாம். இல்லன்னா நீயும் சேந்தே வெளில போலாம். " என்க, பைரவி அவன் கோபம் கண்டு அந்த பூனையைக் கீழே செக்யூரிட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வந்தாள்.
வந்தவள் கணவனுக்கு முதுகைக் காட்டி படுத்துக் கொள்ள, அவன் கரம் அவளின் இடையணைத்தது. ஒரு பூனை வளர்க்க கூட தனக்கு உரிமை இல்லையா என்ற ஆற்றாமை எழ, கரத்தைத் தட்டி விட்டாள் பைரவி.
"ம்ச்… என்ன டெடி நீ. கம்... " என அவளை நெருங்கி முகம் காட்டாது படுத்திருந்தவளை தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கி அணைக்க, பெண்ணவள் அவனின் மார்பில் கடித்து வைத்தாள்.
" பாவமா இருந்ததுன்னு தான்னா சொன்னேன். அதுக்குப் போய் இவ்ளோ கோபமா கத்துறீங்க." என முறையிட,
"அத நீ எம்பெட்டுல போடாமா இருந்திருக்கணும்." என்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் அவள். கோபத்தால் சிவந்திருந்த விழிகளில் தன் இதழ் பதித்தவன், தன் மேல் இருந்தவளை மெத்தையில் கிடத்தி, அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான், தன் தேடலை தொடங்கிய படியே.
"இது என்னோட பெட்… நமக்கான பெட்... அதுல கொண்டு வந்து அந்த பூனைய ஏன் வச்ச.. ம்… எனக்கு பெட் அனிமல் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும் தான. ம்... " எனக் கழுத்தில் இருந்து இறங்கி, சின்ன சின்ன முத்தமிட்டுக் வினவா.
' ஒரு நாள் கூட எனக்காக விட்டுக் குடுக்க மாட்டிங்களா?' என்ற கேள்வி கணவனின் மோகத்தீயில் சாம்பலாகி இருந்தது.
நிமிடங்களைக் கடந்த அவனின் தேடல் பூர்த்தியடைய, கூடல் அத்தனை நிறைவாக இருந்தது. மறுநாள் வீட்டில் பெரிய மீன் தொட்டி ஒன்றை வாங்கி வைத்தவன், அதில் எத்தனை வண்ணங்கள் கிடைக்குமோ அத்தனையும் வாங்கி விட்டான். தனக்காகக் கணவன் செய்த செயலை நினைத்தவள் பாய்ந்து வந்து தன்னவனை அணைத்துக் கொண்டாள்.
ஒவ்வொரு வாரமும் அதை சுத்தம் செய்கிறேன் என்று இருவரும் கொஞ்சி குழாவி பேசிய காதல் மொழிகளும், செல்லச் சண்டையும், பின் செய்யும் கட்டில் சமாதானமும் நினைவு வர,
ஓங்கி அந்த மீன் தொட்டியைக் குத்தினான் மது. அது சில்லு சில்லாக உடைந்து விழுந்தது.
தரையில் விழுந்த மீன் போல் அவளுடனான தன் நினைவும் துள்ளியது. சில நிமிடங்கள் உயிர் வாழ போராடும் அதன் தவிப்பையும் துடிப்பையும் பார்த்தவன், அத்தனையையும் எடுத்து சிறிய நீர் நிரப்பிய வாளியில் பத்திரபடுத்தினான்.
பைரவியுடனான் அவன் வாழ்க்கையும் அப்படித்தான்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

madhu pannurathu pudikala
பதிலளிநீக்கு😄😄😄🥰😄😄😄😄
நீக்கு