அத்தியாயம்: 25
மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும்.
வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம்.
கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.
அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை.
வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ஜனமும் கண்ணாயிரத்தின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய முன்வரவில்லை. அப்போது வேலாயுதம் தான் பணம் தந்து தன் ரத்தத்தையும் தந்து தம்பியின் உயிரைக் காத்தார்.
இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்த காரணத்தினாலேயே அவரின் மீது நன்றி உணர்வானது மேலோங்கி இருந்தது. மாமியாரின் மறைவுக்குப் பின் சொத்தைப் பிரிக்கும் போது இருந்த ஒரே வீட்டையும், தரவேண்டிய பணத்திற்கு ஈடாக வேலாயுதம் கேட்க, அதை விட்டு கொடுத்து விட்டு, ஓட்டு வீட்டில் வசிக்கிறது கண்ணாயிரத்தின் குடும்பம்.
ஏனெனில் வேலாயுதத்தின் பணக் குணம் தெரியும் ஆதலால் பிரச்சனை வரக்கூடாது என வீட்டைப் பங்கு கேட்கவில்லை. ஆனால் அவரின் பார்வை பிரித்து கொடுத்த நிலத்திலும் பட்டு கபளீகரம் செய்ய நினைத்தது.
பல வருடங்களுக்கு முன். அப்போது சிராஜ்ஜின் நிறுவனம் ஒன்று அந்த ஊரில் நிலம் தேடிக் கொண்டிருந்தது.
நாங்கள் தருகிறோம் எனச் சிராஜ் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு எதற்காக நிலம் வேண்டும்? அங்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்பது பற்றி எதுவும் கேட்காது வேலாயுதம் மட்டுமல்ல பலர் தங்களின் நிலங்களை சிராஜ்ஜிடம் லீஸ்ஸூக்கு விட்டனர்.
'விவசாயம் தான் பொய்த்து வருகிறதே. பிழைக்க என்ன செய்ய போகிறீர்? தற்கொலை செய்து கொள்வதற்குப் பதில் குத்தகைக்கு விடலாம்.' எனப் பலரை மூளையை சலவை செய்து அவர்களின் நிலத்தையும் குத்தகைக்கு பேசி கமிஷன் வாங்கிக் கொண்டார் வேலாயுதம்.
ஐம்பது ஆண்டுகள் போடப்பட்ட ஒப்பந்தத்தில் வேலாயுதம் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு கண்ணாயிரத்தின் நிலத்தையும் தன் நிலமாக காட்டிக் குத்தகைக்கு விட்டு பணம் வாங்கியுள்ளார்.
தம்பியிடம் அதை சொல்லாது, " அந்த கம்பெனிக்காரெ செல்ஃபோன் டவரு மாதிரி இன்டர்நெட் கிடைக்க எதோ கட்ட போறானாம். அதுனால நம்ம ஊருக்கு லாபம்ன்னு சொன்னான். ஒன்னில்ல நிறைய கட்ட போறானாம். அதுக்கான ஜாமா வைக்க உன்னோட இடத்த உபயோகிக்க சொல்லிருக்கேன். அதுக்கு வேணும்னா பணம் வாங்கி தாரேன்." என்க,
"அதெல்லாம் வேண்டாம்ண்ணே. அங்க வர்ற டவர்னால நம்ம ஊருக்கு நல்லது நடந்தா சரி." எனப் பணம் ஏதும் வாங்காது. குத்தகைக்கு விடப்பட்டதும் தெரியாது. வேலாயுதத்தை நம்பினார். ஊரின் வளர்ச்சிக்காக என்பதால்.
புதிதாக ஒரு தொழிற்சாலை வந்தாலே அதன் மூலம் பலர் நலன் பெறுவர். டீக்கடையில் தொடங்கி போக்குவரத்து, உணவு, லார்ஜ் போன்ற சின்ன சின்னதாக கடைகள் முளைத்து பலரின் வாழ்வாதாரத்திற்கு அது உதவும்.
அதுபோல் தான் அந்த டவரில் இருந்து கிடைத்த அதிவேக இணைய சேவை காரணமாக பல புதிய நிறுவனங்கள் முளைந்தனர். பலர் அந்தக் கிராமம் தேடி வர, ஊரில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் இருந்து ஊர் பிரபலமடைந்தது. டெவலப் ஆனது.
சிறு சிறு ஐடி நிறுவனமும், பலர் தனியார் நிறுவனங்களும் வந்து பல பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.
சில ஆண்டுகளுக்குப் பின், வளர்ச்சி என்ற பெயரில் தங்களின் ஊர் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எப்போது கண்ணாயிரம் அறிந்தாரோ! அப்போதே அந்த டவர் வேண்டாம் என மூடச் சொல்லி போராடத் தொடங்கிவிட்டார்.
அந்த நிறுவனத்தின் மீது கேஸ் போடப்பட்டு, இன்றும் விசாரனை நடந்து கொண்டு தான் வருகிறது. அந்த நிறுவனத்தின் குற்றங்கள், தங்கள் ஊர் அந்த நிறுவனத்தால் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டுள்ளது என அனைத்தையும் ஆதாரமாக மாற்றி வைத்துள்ளார் கண்ணாயிரம்.
சிராஜ்ஜும் பல வழிகளில் முயன்றுள்ளான். ஏன் போலிஸ்ஸை விட்டு அடித்துக் கூட பார்த்தான். கண்ணாயிரம் அவனை எதிர்ப்பதில் உறுதியுடன் இருக்கிறார்.
அவரிடம் உள்ள ஆதாரங்கள் வேண்டும். அதைப் பொய்யாக்கி விட்டால் கண்ணாயிரத்தால் எதுவும் செய்ய இயலாது.
அவன் தங்களின் மேல் போட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்பதால் ஊர் இளைஞர்களைத் தூண்டி விட்டான், ஐடி நிறுவனத்தை மூடியதன் மூலம்.
மறுபுறம் குத்தகைக்கு விட்ட நிலத்தைத் தானே வாங்கி கொள்வதாகவும் தற்போதைய நிலத்தின் மதிப்பை விட இருபது மடங்கு அதிகமாக தருவதாகவும் ஆசை காட்டி அதற்கு பதில் கண்ணாயிரம் போட்ட கேஸ்ஸை வாபஸ் வாங்க செய்ய வேண்டும் எனக் குத்தகைக்கு நிலத்தைத் தந்தவர்களை ஏற்றி விட்டான்.
இருபது மடங்கு… அப்பா! எவ்ளோ பணம் என ஒவ்வொருவராக வந்து கண்ணாயிரத்திடம் பேசி பேசி ஏமாற்றத்துடன் செல்கின்றனர். கூடவே தன்னை ஏமாற்றி நிலத்தைக் குத்தகைக்கு விட்டதற்காக வேலாயுதத்தின் மீதும் ஒரு வழக்கு.
கண்ணாயிரத்தின் ஒரே குறி அந்த டவர் அங்கு இருக்க கூடாது என்பதாகும். அதனால் டெல்லி வரை முன்னெடுத்து தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார். இப்போது அவருக்குப் பல சமூக அமைப்புகளின் ஆதரவும் கிடைத்தது வருவதால், அந்த வழக்கில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
"நீங்க ஒன்னும் கவலப்படாதிங்க ஸார். போட்ட கேஸ்ஸ அவெங்கையாலயே திரும்ப வாங்க வைக்க வேண்டியது எம் பொறுப்பு. " எனச் சிராஜிஜிடம் கூறிய வேலாயுதம், அந்த டவரால் ஊருக்கு கிடைத்த பெயர், புகழ், வசதி, வளர்ச்சிகளை எடுத்து சொல்லி ஊர் பெரிய மனிதர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு நித்தமும் சண்டை போடுகிறார் வேலாயுதம்..
இன்று கண்ணாயிரம் அந்த நிறுவனத்தின் குற்றங்கள் பற்றி ஊர் முழுவதும் போஸ்ட்டர் அடித்து ஒட்டி உள்ளார். வேலாயுதத்தின் வீட்டு வாசலிலேயே இரண்டை ஒட்ட, ஆத்திரமடைந்தவர் கண்ணாயிரம் வீட்டு வாசலில் வந்து நின்று சத்தமிட்டு கொண்டிருக்கிறார்.
"இந்தா பாரு உம்புருஷெ மோதுற இடம் பெருசு. நாடு முழுக்க செல்வாக்கு இருக்குற அவனுங்களுக்கு. இந்த கேஸ்ஸெல்லாம் எம்மாத்திரம். இப்படிங்கிறதுக்குள்ள ஒன்னு இல்லன்னு ஆக்கிடுவானுங்க." வேலாயுதம்.
" ஒன்றுமில்லாத கேஸ்ஸுக்கு உங்க முதலாளி ஓராயிரம் பேர தூது விடுறானாக்கும். நிலத்துக்கு அத்தன லட்சம் தர்றேன்னு சொல்லும் போதே தெரிய வேண்டாம் தப்பு நடந்திட்டு இருக்குன்னு. அத மறைக்க பணத்தால வாயடைக்க பாக்குறான். நீங்களும் ஆன்னு வாயத்திறந்திட்டு நிக்கிறீங்க. " என்றான் பாண்டி.
" நீ சொல்ற மாதிரில்லாம் கிடையாது பாண்டி. அந்தத் தம்பி ரொம்ப நல்லவரு. தப்போ சரியோ அந்த டவரால நாங்க நிம்மதியா கஞ்சி குடிச்சிட்டு கெடக்கொம். அது பொறுக்கலயாப்பா. " என்றார் ஒரு வயோதிகர். அந்த டவருக்கு வாட்ச் மேன் அவர் தான்.
" நீ இருப்ப. ஆனா நீ மட்டும் தான் இருப்ப. உனக்கு அடுத்து யாரும் இருக்க மாட்டாங்க. பொட்ட பாலைய மாறிடும் நம்ம ஊரு. நெல்லு மாதிரி பண பயிர் மொளைக்கலன்னாலும், சின்ன சின்ன காய்கறி வளருது. நீ சொன்ன அது இருந்தா புல்லு கூட முளைக்காது." என்றான் பாண்டி.
" ஏலே பாண்டி! நீ என்னத்துக்குடா இவனுங்க கிட்ட விளக்கம் சொல்லிக்கிட்டு கிடக்க. இவனுங்களுக்குப் பணம்னு ஒரு பேப்பர்ல எழுதி குடுத்தா போதும். கழுதையாட்டம் அதத் தின்னுட்டு பொதி சுமப்பானுங்க." என்றாள் அரசி.
"ஏய் புள்ள வார்த்தைய அளந்து பேசு. இல்லன்னா." வேலாயுதம்
"இல்லன்னா என்ன பண்ணீடுவீரு. பாய்ஞ்சி வந்து குத்துவீகளோ. அப்புட்டு வீரம் உனக்கு ஏது உம்மகிட்ட? அது இருந்திருந்தா பொற வாசல் வழியா ஏன் நுழையிறீரு? எங்க நிலத்த உன்னுதா கணக்கு காட்டி பிரக்கி திங்கும் போதே தெரியும்ய்யா உன் வீரம் என்னன்னு." என்க, வேலாயுதம் கண்கள் சிவக்க கோபமாக அவனை முறைத்தார்.
" ஆமா இப்படி வந்து கூவ எவ்வளவு வாங்குனீரு அந்த கம்பெனி காரெங்கிட்ட." எனப் பாண்டி எகத்தாளமாக வேட்டியை மடித்துக் கொண்டு வந்திருப்பவர்களை கேட்க, அவர்கள் சலசலக்க, என இடம் சந்தைக்காடாக மாறியது.
அப்போது கண்ணாயிரம் வந்தார்.
பச்சை நிற சட்டையும் வெள்ளை வேட்டியுமாக, பாதிக்கும் மேல் நரைத்திருந்த முடி அவரின் வயதைச் செல்ல, பூமியில் கால் ஊன்றி அவர் நடந்த நடையின் அழகு, 'யாருக்கு டா வயசாகிடுச்சின்னு சொல்ற?' எனக் கேள்வி கேட்பதாக இருக்கும். அந்த உறுதி உடலில் அனைத்து பாகத்திலும் உண்டு. குறிப்பாக முகத்திலும் மனத்திலும்.
அதிகமாகப் பேசாது அனைத்திற்கும் சரி சரி எனத் தலையசைத்து அமைதியாக அனுசரித்து செல்பவர்கள் எல்லாம் எமாளிகள் என்ற எண்ணம் இருந்தால் அதை உடனே அழிந்து விடுங்கள். அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கைக்கு அளவே கிடையாது. எத்தனை எடுத்து கூறி, வாதங்கள் பல செய்தாலும் தங்களின் கருத்தை அவர்கள் மாற்றிக் கொள்ளவோ! தடைகள் வந்து விட்டது என்று தங்களின் முயற்சியைக் கை விடவோ மாட்டார்கள்.
அதற்காக ஆர்ப்பரித்து செல்லும் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கி ஓடாமல், நிதானமாக உதித்து நண்பகலில் தன் உக்கிரத்தைக் காட்டும் பகலவன் போன்றவர்கள் அவர்கள்.
கண்ணாயிரம் அப்படித்தான்.
பேசிக் கொண்டிருந்த அத்தனை வாயும் அமைதியாகிப் போனது. அது அந்த ஊரார் அவருக்கு கொடுக்கும் மரியாதை. புறம் பேசினாலும் நேரில் பேச யாருக்கும் துணிவு இல்லை. வேலாயுதத்தை தவிர.
"இங்க பாரு கண்ணா உன் நிலத்த லீஸ்ஸூக்கு விட்டதுக்கு காச திருப்பி தாரேன். எம்மேல நீ போட்ட கேஸ்ஸ வாபஸ் வாங்க வேண்டாம். ஆனா அந்த கம்பெனி மேல போட்ட வழக்க திரும்ப வாங்கு. " என உத்தரவிட்டார் வேலாயுதம்.
அதற்கு கண்ணாயிரம் சிரித்துக் கொண்டே, " அது எப்படிண்ணா முடியும்! கிட்டத்தட்ட ஏழு வர்ஷத்து முன்னாடி போட்ட கேஸ் அது. முடியுற நேரத்துல திருப்பிலாம் வாங்குனா எப்படி. யாரு பக்கம் நியாயம் இருக்குன்னு கோர்ட்டு சொல்லட்டும். எதுவா இருந்தாலும் ஏத்துக்கிறேன்." என்க,
"கண்ணா இப்ப என்ன தா சொல்ற? அவனுங்க மோசமானவனுங்க. உன்ன ஒன்னும் பண்ண மட்டானுங்க. உங்க குடும்பத்து மேல தான் கண்ணா இருப்பானுங்க. ஒரே ஒரு கையெழுத்து தான், கேஸ்ஸ வாபஸ் வாங்க. போட்டன்னா நிம்மதியா இருக்கலாம். இல்லன்னா." என வேலாயுதம் மிரட்ட,
"இல்லன்னா என்ன நடந்திடும். எதுவா இருந்தாலும் நாங்க பாத்துப்போம்."
"பாத்துப்பிங்க பாத்துப்பிங்க. இப்படி வெறச்சி பேசி பேசியே ஒரு பொட்ட புள்ள உசுர விட்டுச்சி. அதையும் பாத்திட்டு தானா இருந்திங்க. அந்தப் பொண்ணு எப்படி இறந்ததுன்னு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.
ஏன்னா அதோட மரணம் அப்படி. வீட்டுல பொட்ட புள்ள வச்சிருக்குற அத்தன பேரையும் கதிகலங்க வச்ச சாவாச்சே அது. உனக்கு ஒன்னு இருக்கில்ல. நாளைக்கு அதுக்கு அந்த நிலம தான்... " என பேசி முடிக்கும் முன்னரே பாண்டி, வேலாயுதத்தின் நெஞ்சி கால் ஓங்கி மிதித்தான். கூடவே அறுப்புக்கு வைத்திருக்கும் சிறிய அறிவாளை எடுத்து வேலாயுதத்தின் கழுத்தில் வைத்து அழுத்தி,
" எங்க வந்து என்ன பேசுற! இனி பேசவே கூடாது டா நீ." என்றவன் ஆத்திரம் பொங்க நிற்க, மற்றவர்கள் வந்து விலக்கி விட்டாலும் விலக மாட்டேன் என்பது போல் நின்றான் பாண்டி.
"எங்க போறிங்க? உங்க அண்ணே உசுர காப்பாத்தாவா. எம்மகெ ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை. அந்தாள பலி போட்டாத்தான் நிம்மதி." எனக் கணவனின் கரத்தைப் பற்றித் தடுத்தவள்,
"எலே பாண்டி. நம்ம வீட்டு லெட்சுமிய பழிச்ச அவெ நாக்க அறுத்தெரியாம விட்டுடாதடா. வெட்டுடா அவெ நாக்க." எனக் கத்தினாள் அரசி..
வேலாயுதத்தின் மகன் வேறு வந்து மல்லுக்கு அருவாளுடன் நிற்க, அங்கு மூண்ட சண்டையை அணைக்க காவலர்கள் களம் இறங்கி மொத்தமாக அள்ளிக் போட்டு சென்றனர்.
"கேஸ் முடியிற வர எந்த ஒரு கோக்குமாக்கான வேலையையும் செய்ய கூடாது." எனக் காவலர்கள் இரு தரப்பையும் எச்சரித்து மாலை அனுப்பி வைத்தனர்.
அரசி தான் கத்திக் கொண்டே இருந்தார். " கொல்லைல போறவெ. எம்மகளப் பாத்து அப்படி சொல்லிட்டான். அவெ கண்ண ரெண்டயும் அவிச்சி வாருகால்ல தூக்கி வீச, காலும் ரெண்டும் புண்ணு வந்து புளுத்து போக, அந்த வாய மட்டும் மீன ஒரசுன மாதிரி உரசி உரிச்சு எடுத்திடணும். எடுபட்ட பயெ… என்ன வார்த்த சொல்லிட்டான். உருப்புடுவானா. வெளங்க மாட்டான். கட்டைல போற பயெ. நடு ரோட்டுல நாய் மாதிரி செத்து கிடக்கணும்." என இன்னும் பல சாபங்களை வழங்கினார்.
தாயாய் அவர் கோபத்தில் நியாயம் உள்ளது. ஏனெனில் அந்தப் பெண்ணின் மரணம் அப்படி. கல் நெஞ்சமாக இருந்தாலும் கண்கலங்க வைக்கும் அளவுக்குக் கொடூரமானது நிகழ்ந்த மரணம்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

kannan tha hero of this story pola ay sis
பதிலளிநீக்கு🤣🤣🤣🤣அப்போ மது???
நீக்கு