அத்தியாயம்: 31
"சாரு நீ ரெடியா? பத்து மணிக்கு வந்திடுவோம்னு மெஸ்சேஜ் பண்ணா லோட்டஸ். சீக்கிரம் ரெடியாகு. சீக்கிரம்… சீக்கிரம்…" என ராகம் பாடிய படி பாத் ரூம் கதவைத் தட்ட, கடுப்புடன் கதவைத் திறந்தாள் சாரு.
"அறிவிருக்காடி உனக்கு! பாத்ரூம்ல தான இருக்கேன் பாரின்லயா இருக்கிறேன். இந்தக் கத்து கத்துற. உனக்குத் தாமரைய பாக்கணும்னா நீ போய் பாக்க வேண்டியது தான. என்னை ஏன் கூப்பிடு? அதுவும் லீவ் போட்டுட்டு உங்கூட ஊர் சுத்த." என்க,
"சாரு ஊர் சுத்தலாம் இல்ல. நாம ராக்கி பாய்க்குப் பொண்ணு பாக்க கூப்பிடுறேன்."
"என்ன?"
"ம்… எவ்ளோ நாள் தான் ராக்கி பாய்யும் பேச்சுலராவே சுத்துவாரு. அவரையும் ஃபேமிலி மேனா மாத்தி நாம பட்ட கல்யாண கஷ்டத்த அவரையும் பட வைப்போம். அதுமட்டுமில்லாம அவருக்குத் தங்கச்சின்னு இப்ப நாம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம். நாம போய் அந்த லோட்டஸ்ஸையும் அவளோட அண்ணனயும் சிறப்பா, தரமா கவனிச்சாத் தான், நம்ம ராக்கி பாய் மனசுல மலர்ந்த லோட்டஸ் அவரோட கைச் சேர உதவியா இருக்கும். வா… " என அவசரப்படுத்தினாள் பைரவி.
கூடவே சாருவின் அனுமதி ஏதும் இன்றி அவளின் அலுவலகத்திற்கு விடுமுறை வேண்டி ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டு, அவளின் உடமைகளை ஒரு ஹண்ட் பேக்கில் போட்டுக் கொண்டு, அதைச் சாருவின் தோளில் கோர்த்து வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்ததோடு மட்டுமில்லாமல் கதவையும் பூட்டி விட்டு தன் சாப்பரையும் எடுத்து வர சென்று விட்டாள்.
"இம்ச… நாம சொல்ற எதையாது கேக்குறாளான்னு பாரு. கேக்கவே மாட்டா. பாவம் மது அண்ணா. எப்படித்தான் இவ கூட நாலு வர்ஷம் குடும்ப நடத்தினாரோ. அவரையும் இப்படித் தான் இம்ச படுத்திருப்பா. அதா போதும்டா சாமின்னு தல தெறிக்க ஓடிட்டாரு போல. " என நினைத்தவளை நிற்க கூட விடாது தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றாள் பைரவி.
எங்கே என்றால் சாரதா ஹோம்க்கு…
மதுரையில் இருந்து ஒன்பது மணி போல் வந்திறங்கிய பாண்டியும் தாமரையும் சாரதா ஹோமிற்கு ஆட்டோவில் வந்து விடுவதாக சொல்லியதால் அவர்களைப் பார்க்கத்தான் சாருவுடன் சென்று கொண்டிருக்கிறாள்.
கூடவே அதன் உரிமையாளர் சாரதாவின் பிறந்த தினம். ஹோமில் உள்ளவர்களுக்கு மதிய உணவை அவள் செலவில் விருந்தாகத் தர எண்ணி, கேட்டரிங் சென்டரில் ஆர்டர் கொடுத்த கேரியர் சாப்பாட்டு தயாரா என்று பார்த்து விட்டு செல்ல வேண்டும். அதற்குத் தான் சாருவை இழுத்து செல்கிறாள்.
" இதோ பாரு என்னால முழு நாளும் இருக்க முடியாது. சாப்பாட்டு வந்ததும் சாரதாம்மாவ பாத்து விஷ் பண்ணிட்டு ஆஃப்டர்னூன் கிளம்பிடுவேன். உன்னோட சாப்பர் எனக்கு வேணும். குடுக்க மாட்டேன்னு சொல்ல கூடாது. ஓகேவா... " எனச் சாரு டீல் பேச,
"ஓகே... ஓகே... எல்லாம் ஓகே. நீ மட்டும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிருந்தேன்னா இந்த டிராஃபிக்குள்ள மாட்டிருக்க மாட்டேன். உனக்கு பன்சுவாலிட்டின்னா என்னனு தெரியுமா?"
"யாரு நீ பன்சுவாலிட்டி பத்தி பேசுறியா! எட்டு மணிக்கு ரெடியா இருன்னு சொன்னா எட்டு மணிக்கு தான் எந்திரிக்கவே செய்வ. நீ எனக்குப் பாடம் நடத்துறது அதிசயமா இருக்கு! "
"அப்ப உன்னோட மது அண்ணெங்கிட்ட படிக்கிறியா. பன்சுவாலிட்டிய பத்தி நல்லா தெரிஞ்ச ஆள் அந்த curd rice தான். "
" அண்ணாவ பத்தி பேசாத. ஆமா, நீ எனக்கு மட்டும்தான் பாத்ரூம உடைக்கிற மாதிரி தட்டுவியா… இல்ல… அவருக்கும் இப்படித் தான் தட்டுவியா?" எனக் காலையில் இருந்து வண்டாக குடைந்த தன் கேள்வியைச் சாரு கேட்க,
" உனக்கு ஒரு ரகசியம் சொன்னா நீ அத யார்க்கிட்டையும் சொல்ல மாட்டேல்ல. " எனப் பீடிகையுடன் சொல்ல, அப்படி என்னத்த சொல்லப்போறா எனக் காதுகளை கூர்மையாக்கி கொண்டு,
" என்னதது."
"எங்க வீட்டு பாத்ரூம்க்குத் தாழ்ப்பாளே கிடையாது. அத நான் எப்பையோ உடச்சிட்டேன். ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அத மாத்த வேண்டிய அவசியமே வரல. ஆனா அந்தத் தயிர் சாதம் நான் வேலைக்கி போக ஆரம்பிச்சதும். ஒரு வீட்டுக்குள்ளயைத் தனி குடித்தனம் பண்ண ஆரம்பிச்சி எல்லா லாக்கையும் மாத்திடுச்சி. வீட்டோட மெயின் என்ட்ரன்ஸ் லாக்க கூட மாத்தி பெரிய சைல திண்டுக்கல் பூட்டு வாங்கி போய்டுச்சி." எனக் கணவனைத் திட்டினாள் பைரவி.
'பின்னே குரங்கு மாதிரி நீ சுவர் ஏறி குதிச்சி அவனப் பாக்குறேன்னு கண்ட நேரத்துல அவனுக்கு தெரியாம வந்து இறங்குனா அப்படித் தான் பண்ணுவான்.' என்ற மனசாட்சியை அடக்கி வாய்ப்பூட்டு போட்டு விட்டாள்.
"தனிக் குடித்தனமா! நீங்க ரெண்டு பேர் மட்டும் தான டி வீட்டுல இருக்கிங்க. அதுக்குள்ளயே தனிக் குடித்தனமா?"
"எஸ்… எல்லாமே தனி தனி. பெட்ல இருந்து தட்டு வரைக்கும்."
"சாப்பாடு."
"காலைல நான் சமைப்பேன். நைட் அவரு. சில நேரம் அவரு வர டயம் ஆகும். அப்ப வெளிலயே சாப்பிடுட்டு வந்திடுவாரு. எனக்கு வாங்கிட்டு வர மாட்டாரு. அதுனால நானா சமைக்க வேண்டிய இருக்கும். அதுக்குப் பழி வாங்க ஒரு வாரத்துக்குக் காலை உப்புமா தான் போடுவேன். ஏழு நாள் ஏழு வகை உப்புமா."
"ஏழு வகையா! எனக்குத் தெரிஞ்சது ரவா உப்புமா மட்டும் தான்டி. நீ என்னென்னமோ சொல்ற. "
"மன்டே - கோதும உப்புமால ஸ்டார்ட் பண்ணி ரவா உப்புமா, ராகி சேமியா உப்புமா, ஓட்ஸ் உப்புமா, அவல் உப்புமா, ஐவ்வரிசி உப்புமா... சன்டே மட்டும் நான் லீவ்ப்பா.. " எனப் பெருமையாக சொல்ல,
"அந்த ஒரு நாள் மட்டும் தான் அண்ணனுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்னு சொல்லு." என்றவளைக் கண்ணாடி வழியே முறைத்து பார்த்த படி வந்து சேர்ந்தனர் ஹோமிற்கு.
பல முதியவர்களும் இளைஞர்களும் காணப்பட்டாலும் அது அநாதை இல்லமோ, முதியோர் இல்லமோ கிடையாது. அந்த ஏரியாவில் இருக்கும் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறு தொழில் செய்ய வழிகாட்டும், பொது சேவை செய்யும் ஒரு நிறுவனம். வெள்ளம் பஞ்சம் போன்ற இடர்பாடுகளிலும், சில அநாதை இல்லங்களுக்கு உணவு, கல்வி, வேலை உள்ளிட்ட உதவிகளை செய்யும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.
விருப்பத்தின் பெயரில் சேவை செய்ய வந்திருக்கின்றனர் இளைஞர்கள். வயோதிகர்கள் சிலர் பிள்ளைகளால் துரத்தி விடப்பட்டவர்களாக இருந்தும்,
'என்னால இந்த வயசுக்கு அப்றமும் யார் உதவியும் இல்லாம வாழ முடியும். உன் காசு தேவையில்லை போடா.' என வீராப்பாய்ப் பிள்ளைகளிடமும் பேரன் பேத்திகளிடமும் சவால் விட்டு வந்தவர்கள் எனப் பலர் வந்து சேவை செய்வர்...
இன்றும் விதை பந்து தயாரித்துக் கொண்டிருந்தனர் அங்கிருந்தவர்கள். அதை மாலையில் கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் வீசி, கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த உள்ளனர்.
" என்ன வேலுச்சாமி! இன்னைக்கி பாக்க ஹேன்சம்மா இருக்க. மூஞ்சிக்கி மட்டும் ஸ்பெஷல் பவுடர் போட்ட மாதிரி இருக்கு. என்ன ரெண்டாது கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா? " என அங்கிருந்த ஒரு வயோதிகரிடம் வம்பு பேசியபடி இறக்கினாள் பைரவி.
" ஹாஹ்ஹா... பொண்ணு கிடைக்கலன்னா என்ன நீ தான் இருக்கேல்ல." என அவரும் அவளிடம் வம்பு பேச,
" என்ன சொன்ன வேலுச்சாமி. " எனக் கோபமாக இடையில் இரு கரத்தையும் வைத்து கடோத்கஜன் போன்று அவரின் முன் முறைத்துக் கொண்டே நிற்க,
" நீ பாத்து தரமாட்டியான்னு சொல்ல வந்தே தங்கம். எனக்கும் வாழ்க்கைய நிம்மதியா வாழணாம்னு ஆச இருக்கும்ல." என்க,
" இவள கட்டிக்கிட்டா இத்தன வயசுக்கப்றம் இருக்குற நிம்மதியும் போய்டும்னு இலைமறை காய்மறைவா சொல்றிங்க. சரியா தாத்தா." எனச் சாரு சொல்ல இருவரும் ஹைபைவ் கொடுத்துக் கொண்டனர்.
பின்னாலேயே ஒரு ஆட்டோவில் அவர்கள் ஆர்டர் செய்த உணவும் வர, அதைத் தூக்கி கொண்டு உள்ளே சென்றாள்.
அங்கு ஐம்பது வயதை ஒத்த பெண் சுடரின் புகைப்படத்திற்கு முன் நின்று கொண்டிருந்தார். அவர் தான் சாரதா. தான் பெற்ற மகளைப் பூமித்தாயிடம் பறி கொடுத்த வேதனையில் அவரின் இதயம் கொதித்து, விழிகள் வெந்நீரை கன்னத்தில் வடிந்தோடச் செய்தது கொண்டிருந்தது. சாரதாவின் மகள் தான் சுடர் விழி.
பிறந்த நாள் என்ற ஒன்றை கொண்டாடும் ஆசை கொண்டவர் அவர் கிடையாது. ஆனால் ‘அதைக் காரணமாக வைத்து சிலருக்கு உதவி செய்ய முடியும் என்றால் அந்த நாளை கொண்டாடுவதில் தவறு இல்லையே’ என்ற தன் மகள் சுடரின் பேச்சிற்கு இணங்கி சம்மதம் சொன்னவர்.
இருபத்தி ஏழு ஆண்டுகளில் சுடர் இல்லாத பிறந்த நாள் கொண்டாடியது இல்ல. மகளின் குரல் கேட்காது ஒரு நாள் கூட இருந்தது இல்ல.
சாரதாம்மா… சாரதாம்மா... சாரதாம்மா... எனச் சாந்தமாக, கோபமாக, குழைவாக வரும் மகளின் குரல் கேட்காது இந்த இரண்டு ஆண்டுகள் ஏன் உயிருடன் இருக்கிறோம் என்ற எண்ணம் சதா சர்வ காலமும் தோன்றிக் கொண்டே இருக்க, எங்களுக்காக வாழுங்கள் என்று சொல்வது போல் இருந்தது பைரவியின் குரல்.
"என்றும் இளைமையுடன் இருக்கும், வயோதிக கன்னி, எங்கள் கனவு மன்னி, சாரதாம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். " எனக் கலர் கலர் காகிதங்களைச் சிதற விட்ட படி வந்தாள் பைரவி.
அவளுடன் மற்றவர்களும் இணைந்து கொள்ள கேக் வெட்டப்பட்டது. ஆசையுடன் தன் சாரதாம்மாவிற்கு ஊட்டி விளையாடினாள் பையூ. சாந்தியைக் காட்டிலும் சாரதா பையூவின் ஃபேவரைட் என்று சொல்லலாம்.
"ம்மா, ஒரு வாரம், அந்தச் சுத்து வட்டாரத்துல மெடிக்கல் கேம்ப் நடக்கப்போது. நீங்க வர்றீங்க ரிப்பன் கட் பண்ணி அதத் தொடங்கி வைக்கிறீங்க. எல்லா ஏற்பாட்டையும் பக்கவா முடிச்சி வைச்சிட்டேன். ஓகேவா… " என்றாள் பைரவி.
"எதுக்கு உனக்கு இந்த வேல. வேண்டாம்மா இந்த மாதிரி வேலையெல்லாம் என்னோடவே போகட்டும். நீ இதெல்லாம் பண்ணாத." எனப் பைரவியின் கன்னத்தில் கை வைத்து வாஞ்சையுடன் தலை தடவி அவர் சொல்ல,
"ம்ச்… நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா!"
"இதப் பாக்கத்தான் போலிஸ்க்கு படிச்சியா?"
"நான் போலிஸ்ஸான கத உங்களுக்கு தெரியாதாக்கும்." என்க,
"போலிஸ்ஸான கத மட்டுமில்ல, உன்னோட விவாகரத்து கதையும் தெரியும். நான் மதுசூதனன் கிட்ட பேசவா. நான் சொன்னா கண்டிப்பா கேப்பான். "
"ம்மா... நானோ அவரோ சின்னப் பிள்ளைங்க கிடையாது. எங்களுக்குள்ள நடந்தது குழந்தை திருமணமும் கிடையாது. எங்களோட பிரச்சனைகள நாங்களே பாத்துப்போம். நீங்க எங்களுக்கு வழி காட்டுங்க வேண்டாம்னு சொல்லல. நாங்க எப்படி வாழணுங்கிற முடிவுகள நீங்க எடுக்காதிங்கன்னு தான் சொல்றோம்.
இப்ப நீங்க போய் பேசி, அத அவெ கேட்டு, மனசு மாறி, நாங்க ஒன்னு சேந்தா… அது உங்களோட உபதேசத்துக்காக மட்டுமாத் தான் இருக்கும். மறுபடியும் நாங்க பிரிஞ்சு போக நிறைய வாய்ப்பு இருக்கு. அவனா என்னைப் புரிஞ்சிட்டு வந்தா பிரிவு, சண்டன்னு எதுவும் வராது.
ஆல் ரெடி அவெ ஒரு கீ குடுக்குற பொம்மையாத் தான் இருக்கான்னு நான் சண்ட போட்டுட்டு இருக்கேன். நீங்க வேற புதுசா கீ குடுக்குறேன்னு சொல்றீங்க.
அவங்க சித்தி திருகுற சாவிக்கி தான் என்ன டைவர்ஸ் பண்ணான். நீங்க கீ குடுத்தா வந்து சேந்துக்குவான். அப்றம்... அப்றம்... யாரு கீ குடுத்தா எப்படி நடந்துப்பானோ! எதுவா இருந்தாலும் அவனா முடிவு பண்ணி எங்கிட்ட வரணும். சோ, எங்க லைஃபா நாங்க ரெண்டு பேரும் பாத்துக்கிறோம்."
"முடிவா என்ன தா சொல்ல வர்ற?" சாரதா.
"எங்கள சேத்து வைக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்ன்னு சொல்றேன்." என்க, அவளை முறைத்தார் அவர். சுடருக்குப் பின் பைரவி தான் அவரின் மகள். அவளின் வாழ்க்கை நன்றாக இருக்க நினைத்து பேச, பையூ வேண்டாம் என்று நிற்கிறாள்.
" இருந்தாலும் நீ பிடிவாதகாரி டி. "
"இவா அளவுக்கெல்லாம் இல்ல." எனச் சாருவைக் கைக் காட்டினாள் பைரவி.
" ஏய்… இப்ப நீ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்குற. நான் சும்மாத்தான நிக்கிறேன். நான் என்ன உன்னை மாதிரியா! கைக்குக் கிடைச்ச வெண்ணெய்ய நெய்யாக்காம்மா விட." என்க,
"க்கும் நெய் ஆக்கிட்டாலும்… ம்மா, நானும் இவளுக்கு ஏத்த மாதிரி பையன இன்டர்வியூ எடுத்து கூட்டீட்டு வந்தேன். இவ பாக்க கூட மாட்டேங்கிறாம்மா. எனக்கு தெரிஞ்சி இவ கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு சாமியாரினியா மாறப் போறா போல." என்க, சாரதா புன்னகைத்தார்.
" நான் எப்ப வேண்டாம்னு சொன்னேன். பிடிச்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். அப்படி ஒருத்தே எப்ப வருவானோ." என்பதற்கும் பாண்டி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
சாரதா, பைரவிக்கும் சாருவிற்கும் அவனை அறிமுகம் செய்து வைக்க, பொதுவான பேச்சுக்கள் தொடர்ந்தது பைரவிக்கும் பாண்டிக்கும் இடையே. சாரு அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள். உள்ளே நுழையும் போது பாண்டியின் முகம் பார்த்தவள் தான். பின் மறந்தும் பாண்டியின் பக்கம் கூட திரும்பவில்லை. ஏன் என்று அவளுக்கு தான் தெரியும். இல்லை பாண்டிக்கும் தெரியும். இருவருக்குள்ளும் எதுவோ உள்ளது.
"எனக்கு டயம் ஆச்சி பையூ. நான் வேலைக்கு போகணும்." என்றவள், 'சாப்பிடலப்பா நீ.. ' என்ற பைரவியின் பேச்சைக் காதில் வாங்காது சாவியை வாங்கிக் கொண்டு சென்றே விட்டாள்.
"என்னாச்சி இவளுக்கு!" எனத் தாடையில் கைவைத்து யோசித்தவள், பாண்டியிடம் தாமரை எங்கே எனக் கேட்டாள்.
"பின்னாடி இருக்கா." என்றதும் வந்த வேலையைப் பார்க்க போலிஸாக மாறிச் சென்றாள்.
அவளுக்கு வேண்டிய தகவல்களைத் தாமரையிடம் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றாள் பைரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..