அத்தியாயம்: 96
"உனக்கு கன்பார்ம்மா தெரியுமா. இந்த அட்ரஸ் தான் அதுன்னு. " மது சந்தேகமாக கேட்க,
"உறுதியா தான் சொல்றேன். இந்த இடத்த தான் சிக்னல் காட்டுச்சி. " என்றாள் பைரவி.
தீஷித் தந்த ஆஃப் காட்டிய சிக்னலைப் பின் தொடர்ந்து வந்தவன், காரை ஏதோ ஒரு காட்டிற்கு நடுவில் இருக்கும் பூத் பங்களா போல் காட்சி தந்த ஒரு வீட்டின் முன் நிறுத்தி இருந்தான்.
"நம்பவே முடியல. சிக்னல் இத தான் காட்டுதுன்னு… எங்க காட்டு?" என வேகமாக பைரவியின் ஃபோன் வாங்கி பார்க்க,
"சந்தேகம்... எம்மேல உங்களுக்கு எப்பயுமே நம்பிக்கை வராதா. " என முகம் திருப்பினாள்.
"நம்பிக்க வரணும்னா உண்மைய பேசி பழகணும். உனக்கு தான் அதப் பேசி பழக்கம் இல்லயே. அப்றம் எப்படி நம்பிக்க வரும். " என்றான் ஃபோனில் கண்ணைப் பதித்துக் கொண்டு.
" நான் ஒன்னு பொய் சொல்லி உங்க சொத்தலாம் எழுதி வாங்கிடல. எப்பயும் உண்மைய மட்டுமே பேசலன்னாலும் குட்டி குட்டியா தான் பொய் சொல்வேன். சின்ன சின்னதா விளையாட்டுக்கு சொல்றத கூட பெருசா எடுத்திட்டு மூஞ்சி காட்டிட்டு போறது யாராம். பொண்டாட்டியோட பொய்ய ரசிக்கத் தெரிய ஆளு. "
"சின்னது? நம்ம ஹஸ்பெண்ட் அண்டு வைஃப்பா இருந்தப்ப நீ கடைசியா சொன்ன பொய் ரொம்ப சின்னதுன்னு சொல்ல வர்ற. " என்றவன் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவள் இதற்கு மேல் இதைப் பற்றி பேசினால் நிச்சயம் சண்டை போட நேரும் என்பதை உணர்ந்து,
"இது யாரோட வீடு?" என்றாள் கார் நின்றிருந்தது வீட்டை பார்த்து.
" விசாகனோடது. "
"வாட்! அன்னைக்கி நாங்க பெர்த் டே பார்ட்டிக்கு போனது வேற வீடு. இது வேற வீடே? அது சரி அவெ வீடு தான் இதுன்னு எப்படி உங்களுக்கு தெரியும்?"
"விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அவனுக்கு சென்னைல மட்டும் ஆறு வீடு இருக்கு. ஒன்னொன்னையும் ஒவ்வொரு யூஸ்க்காக வச்சிருக்கான். வா உள்ள போய் பாப்போம். " என்றபடி இருவரும் கீழே இறங்க பார்க்க, அப்போது சைரன் சத்தம் காதுகளைப் பிளந்தது.
"அதுக்குள்ள போலிஸ் வந்திடுச்சா? " எனப் பைரவி ஆச்சர்யமாக கேட்க, வந்தது ஆம்புலன்ஸ்.
ஒன்றல்ல இரண்டல்ல அடுத்ததடுத்தாக நான்கைந்து வந்தது. ஏன் என இருவரும் குழம்பி போய் இருக்கும் சமயம், உள்ளே இருந்து ஷீலா வந்தாள். வந்தாள் என்பதை விட தூக்கி வந்தனர் என்று சொல்லலாம். ஆம்புலன்ஸில் இருந்து ஸ்டெக்சரை கீழே இறக்கி கொண்டு வருவதற்குள் ஒரு போர்வையில் அவளைக் கிடத்தி ஆளுக்கு ஒரு பக்கமாக தூக்கி கொண்டு வந்தனர்.
மூக்கில் இருந்து ரத்தம் வடிய கிடந்தவளின் கருவிழிகள் இரண்டும் மேலே உயர்ந்து சுயநினைவை இழந்திருந்தது. வாய் திறந்த படி இருந்தது. அவளைப் பரிசோதித்த ஆம்புலன்ஸ் மருத்துவர் உயிர் உடலை விட்டு சென்று விட்டது என்றார்.
இதை காரில் இருந்து பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி. வேகமாக இறங்கி என்ன நடக்கிறது என்பதை அறியும் பொருட்டு வீட்டிற்குள் செல்ல, அங்கு ஷீலாவை போல் பலர் மூக்கில் ரத்தம் வடிய வாயில் நுரை தள்ள இறந்து கிடந்தனர்.
மது வேகமாக விசாகன் எங்கே எனப் பார்க்க சென்றான். ஓர் அறையில் அவனின் சடலமும் கிடக்க அதற்கு அருகில் கோமதி ஊசலாடும் உயிருடன் மூச்சைக் கஷ்டப்பட்டு இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். மதுவிற்கு பின்னால் வந்து கொண்டிருந்த பைரவி அவரின் கன்னம் தட்டி,
"ம்மா... ம்மா… என்ன பாருங்க. ம்மா… மாமா ப்ளிஸ் ஸ்டெக்ஷர எடுத்திட்டு வாங்க. " என அழுது கொண்டே சொல்ல, மது அதை எடுக்கச் சென்றான்.
"பைரவி…" என்றார் கோமதி ஈனஸ்வரத்தில்.
" ஆமாம்மா. நானே தான். நீங்க எப்படி இங்க? உங்க பையன பாக்க வரமாட்டேன்னு சொன்னிங்களே. அப்றம் எப்டி உங்க பையெ வீட்டுல. " எனகீ கேட்டவளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை அவர். மது அவரைதீ தூக்கி ஸ்டெக்ஸரில் ஏற்றினான்.
அது ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றப்படும் போது பைரவி விஜிக்கு அழைத்தாள், கோமதி மகளுடன் பேச வேண்டும் என்றதால்.
"விஜிம்மா… விஜி. " குரல் எழும்பாது பேச முயல, தாயின் குரல் கேட்டதும்,
"அம்மா நான் வந்திட்டே இருக்கேன். பக்கத்துல வந்திட்டேம்மா. " விஜி அழுதுக் கொண்டே பேசினாள்.
" உம்முகத்த பாக்கணும்மா. விஜி." எனத் திரும்ப திரும்ப அவர் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே விஜியும் அவளின் கணவனும் காரில் வந்திறங்கினர்.
"ம்மா.. " என அலறிக் கொண்டே வந்தவள்,
"என்ன காரியம் பண்ணிட்டம்மா நீ? ஏம்மா? ஏம்மா இப்படி பண்ண? " என்றாள் கண்ணீருடன்.
" இத நான் பல வர்ஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்கணும். செய்யல. ஆனாலும் இப்ப செஞ்சதுல ரொம்ப திருப்தியா இருக்கு. நிம்மதியா சாகப் போறேன்.
கொன்னுட்டேன் விஜிம்மா. செத்துட்டான். பத்து மாசம் நான் தூக்கி சுமந்த பாவத்த எங்கையாலயே கரைச்சிட்டேன். இப்ப அவெ உயிரோட இல்ல. சந்தோஷமா இருக்கு. சிந்து... சிந்து..." என்றவர் உயிர் பறந்து சென்று விட்டது.
அவரின் பேச்சில் இருந்து அவர் தான் அந்தக் கும்பலைக் கொத்தாக அறுவடை செய்தது என்று கணவன் மனைவி இருவருக்கும் தெரிய வந்தது. விஜி கதறி அழ, பைரவி ஒரு கரத்தால் அவளை ஆதரவாக அணைத்தாள். மறுகரத்தை எடுக்க முயற்சிக்கும் போது அது கோமதியின் கரத்துடன் இணைந்திருந்தது.
அதில் ஒரு பை போன்ற கவர் இருந்தது. என்ன அது என்று பிரித்து பார்க்க, அதில் இருந்தது சுடரின் காணாது ஃபோயிருந்த செல்ஃபோன். உடைந்திருந்தது. கூடவே சில மெடிக்கல் ரிப்போர்ட்டுகளும் அவள் கேட்ட, ட்ரக் டீலிங் பற்றிய கோப்புகளும் இருந்தது.
விஜி, " நீ கேட்டதுன்னு அம்மா சொன்னாங்க. "
பைரவி, "அம்மா எதுக்கு இங்க வந்தாங்க விஜி. என்ன ஆனாலும் திரும்ப அவங்க பையன பாக்க போக மாட்டேன்னு சொன்னாங்களே. "
" சொன்னாங்க தான். ஆனா விதி. அந்த அரக்கிக்கு அவளோட தம்பி இறந்ததுக்கு காரணம் விசாகன் தான்னு தெரிஞ்சிடுச்சாம். அதுக்காக அவன பழிங்கணும்னு சிந்துவ… சின்ன பொண்ணு சிந்துவ கொண்ணுட்டா பையூ.
எப்படி என்னோட ரத்த உறவு சாகுற வேடிக்க பாத்தியோ… அதே மாறி உன் ரத்தம் வடியுறத பாருன்னு சொல்லி. ஹாஸ்டல்ல இருந்த சிந்து கையோட இங்க கூட்டீட்டு வந்து… தாம் பொண்ணுன்னு கூட பாக்காம கழுத்தறுத்திட்டா. "
"என்ன சொல்ற விஜி?"
‘நான் என் குழந்தை குடும்பமாக வாழ ஆசைப்படுகிறேன். சிந்துவை ஒதுக்கிய தன் தவறைத் திருத்திக் கொள்ள பார்க்கின்றேன்.’ என இனிக்க இனிக்க தேன் சொட்டும் குரலில் பேசி சிந்துவை அழைத்து வந்துள்ளாள் ஷீலா. அன்னையின் பேச்சை நம்பி அவளுடன் செல்ல தயாராக இருந்தாள் சிறுமி. காப்பகமும் அழைப்பது தாய் என ஷீலாவிடம் சிந்துவை ஒப்படைத்தது. சிந்து உடன் கோமதி செல்ல அவரைப் பாதி வழியிலேயே இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளார் ஷீலா.
தன் பேத்தியை அந்த ராக்சஸி என்ன செய்யப் போகிறாளோ என்ற பயத்தில் மகளுக்கு அழைத்து விசயத்தை சொன்னவர் பேத்தியைத் தேடத் தொடங்கினார்.
விசாகனைப் பழி வாங்குவதாக நினைத்து அவனின் மகளை அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியுள்ளாள் ஷீலா. தாய் தனக்கு சூடு வைத்து அடித்து கொடுமை படுத்துகிறார் என்பதை உணராத சிறுமி மீண்டும் மீண்டும் தாயிடம் ஒன்ற, கொன்று விட்டாள் அந்த பாதகி.
உடலைப் புதைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் சரியாக கோமதி பார்த்துவிட்டார். தான் உயிர் வாழ்வதே அந்த பிஞ்சிற்காகத்தான் என்றவர், சிறுமி இல்லாத உலகில் உயிர் வாழ பிடிக்கவில்லை. அதே நேரம் இதற்கு காரணமான ஷீலாவை உயிரோடு விட மனமில்லாது உணவில் விஷத்தைக் கலந்துள்ளார்.
அனைவரும் உண்ட நிலையில் விசாகன் மட்டும் அவன் அறையில் மயங்கி கிடக்க, அவனை தன் ஆத்திரம் தீர மட்டும் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். அப்போது அவனும் கோமதியை தாக்கியதில் அவரின் உயிர் போனதற்கு காரணமாக அமைந்தது.
விசாகனின் திறந்திருந்த லாக்கரில் சுடரின் ஃபோன் உட்பட அனைத்தும் இருக்க, ஃபோனை சார்ஜ் செய்து ஆன் செய்த போது பைரவிக்கு சிக்னல் சென்றுள்ளது.
"இது விசாகனோட லாக்கர்ல இருந்ததாம். உங்கிட்ட ஒப்படைக்கணும்னு சொன்னாங்க. சுடர் கேஸ்க்கு யூஸ்ஸாகலாம். " என்றவள் ஆம்புலன்ஸ்ஸில் ஏறி அன்னையின் உடலுடன் செல்ல உடன் செல்ல நினைத்த பைரவியை மது தடுத்தான்.
"உன்னோட சேவைய இத்தோட நிப்பாட்டிக்க. போதும். " என்றவனுடன் சண்டை போட, அவளை வீட்டில் சாந்தியிடம் ஒப்படைத்து விட்டு சென்றான் அவன்.
மதுவிற்கு பைரவியின் பாதுகாப்பு முக்கியமாக பட்டது. விஜி தந்த எவிடென்ஸ்களுக்காக பைரவியை யாரும் ஏதும் செய்து விட கூடாது என்பதால் அதை வாங்கி கொண்டு அவளை உடனடியாக அப்புறப்படுத்த நினைத்தான். பாவம் அது வழக்கம் போல் சண்டாகிப் போனது.
"அந்த ஷீலா அரக்கி தான். ஆனா பெத்த பொண்ணயே கொல பண்ற அளவுக்கு போவான்னு நான் நினைக்கவே இல்ல.." சாரு தான் அது. அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவ்வபோது தோழியுடன் பார்க்கும் அந்தச் சிறுமியின் முகம் விழிகளை விட்டு நீங்காமல் இருந்தது.
பைரவி, " என்னாலயும் தான் டி. இப்ப விசாகன் மாதிரியான ஒரு போத கும்பல் ஒழிஞ்சதேன்னு சந்தோஷப்பவா. இல்ல விஜி அம்மாவுக்காகவும் சிந்துக்காகவும் வருத்தப்படவான்னு தெரியல. "
"விஜி கோமதி அம்மாவோட இறுதி சடங்க முடிச்சிட்டு கிளம்பி போய்ட்டாளா என்ன? "
"அவளோட ஹஸ்பெண்ட் இனி இந்தம் பக்கமே தல வைக்க கூடாதுன்னு ஸ்டிட்டா கூட்டீட்டு போய்ட்டாரு. ஐ மிஸ் ஹெர். " என இருவரும் சோகமாக பேசிக் கொண்டிருக்க,
தாமரை, " அவங்க குடுத்த பைய என்ன பண்ணிங்க பைரவிக்கா. "
ராக்கி பாய் ஒரு முக்கிய வேலை காரணமான வெளியூர் சென்றிருப்பதால் தாமரை பைரவியுடன் தான் தங்கி இருக்கிறாள். பகலில் ராக்கியின் வீட்டிற்கு அழைத்து செல்வாள் சாரு.
ஏனெனில் இருவருக்கும் திருமணம் தேதி முடிவாகி இருந்தது. சாரதா வீட்டில் வைத்து பெண் பார்க்கும் படலம் நேற்று தான் நடந்தது. அனைவரும் அதில் மகிழ்ச்சியே.
ராக்கியின் அம்மா, அப்பா, அத்தை அவரின் மகன் என அனைவருடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டாள் தாமரை. ராக்கியின் குடும்பத்திற்கும் தங்கத்தை ஒத்த மகாலட்சுமியை மருமகளாக காட்டத்தான், நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்து வைத்தானோ அந்தக் கடவுள். எல்லாம் நன்மைக்கே என தோன்றியது பெரியவர்களுக்கு. தன் மகனின் மனம் கவர்ந்தவளை வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டனர் ராக்கியின் பெற்றோர்கள்.
மூன்று நாட்கள் முடிந்து விட்டது. விஜியின் அன்னை மறைந்து. பைரவியை வீட்டில் இறக்கிச் சென்ற பின் மதுவிடம் இருந்து பைரவிக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அவளைப் பார்க்கவும் முயலவில்லை. கோபமாக இருக்கிறானாம்.
'அன்னைக்கி ஒரு பேச்சுக்கு சொன்னேன். ஹெல்ப் பண்றேங்கிற பேர்ல வந்து மூஞ்சி காட்டாதிங்கன்னு. அதையே ஃபாலோ பண்ணிட்டு வீஞ்சிட்டு போனா என்ன அர்த்தம். அதா விஜி அம்மா கூட ஆம்புலன்ஸ்ல ஏறாதன்னு சொன்னத நான் சரின்னு கேட்டேன்ல. அப்றமும் கோபமா போனா என்ன பண்றதாம். இதுக்கு முன்னாடி மாதிரி மாமா மாமான்னு பின்னாடியே வருவேன்னு அந்தத் தயிர் சாதத்துக்கு நினப்பு. ' அது கணவனைப் பற்றிய பைரவியின் மைண்ட் வாய்ஸ்.
"பைரவிக்கா… என்னாச்சி. அந்த ஃபோன எங்க? அதுல நிறைய இருக்கும்னு சொன்னிங்க. நீங்க நிச்சது இருந்ததா. "
"அத ரிப்பேராகிருக்கு. அத்தோட ஓப்பன் பண்ண பாஸ்வோர்ட் வேணும். "
" மது அண்ணாக்கு ஓப்பன் பண்ண தெரியும்னு சொன்னிங்க. "
சாரு, "ஆமான்டி. லாப்டாப்பையே அண்ணா தான ஓப்பன் பண்ணாரு. இந்த ஃபோன் லாக்க எடுக்குறதா கஷ்டம். அண்ணாக்கிட்ட குடுத்திருக்கியா. "
"இல்ல. எனக்கு அந்த தயிர் சாதத்தோட உதவி தேவையே இல்ல. நானே எல்லாத்தையும் பாத்துப்பேன்." என ஜாம்பமாக பேசியவள்.
"கிடைச்ச சில மெடிக்கல் ரீப்போட்ட பவதாரணி மேம்க்கிட்ட குடுத்திட்டேன். அரசனூர்ல சிலர தேர்ந்தெடுத்து மெடிக்கல் டெஸ்ட் எடுத்ததாக மெஸ்சேஜர்ல சொன்னாங்களே, அது தான் இதுன்னு நினைக்கிறேன். கேஸ்ல டர்னிங் பாய்ண்ட்டா இருக்காதுன்னாலும். தீர்ப்ப தள்ளிப் போட உதவலாம்னு சொல்லி குடுத்து விட்டேன். அந்த மெடிக்கல் ரிப்போர்ட்ல தெளிவா இருக்கு டெஸ்ட் பண்ண அத்தன பேருக்கும் டியூமர்னு. பட் கதிர்வீச்சால தான் மூளைக்கட்டி வந்ததான்னு இல்ல."
சாரு, "அப்ப மத்த பைஃல்? ஃபோன என்ன பண்ண? "
"பைஃல்ல ஜாயின் கமிஷ்னர் கிட்ட ஒப்படைச்சிட்டேன். அவரோட பொண்ணுக்கு ட்ரக் சப்ளை பண்ணவன கண்டுபிடிக்க யூஸ் ஆகும்னு. அந்த போத கூட்டத்தையே கைது செஞ்சி, அந்தக் கூட்டத்தோட முக்கிய தலைகள பிடிக்க அது உதவியா இருக்கும். கூடவே அத இன்னொரு ஜெராக்ஸ் எடுத்து சுடர் கேஸ்ஸ டீல் பண்ற சீபிஐ கிட்ட குடுத்திருக்கேன்.
அப்றம் ஃபோன். அதுல முதல்ல என்ன இருக்குன்னு பாத்திட்டு அப்றமா சீபிஐகிட்ட ஒப்படைக்கலாம்னு பிரவீன் அண்ணாக்கிட்ட குடுத்து ரிப்போர் பாக்க சொல்லிருக்கேன். அதோட லாக் எடுக்கவும் சொல்லிருக்கேன். " எனப் பைரவி செய்த வேலைகளைப் பற்றி சொல்ல,
"எனக்கு ஒரு டவுட். " என்றாள் தாமரை.
பைரவி, "என்ன டவுட். "
தாமரை, "அந்த ஃபோன் எப்படி சென்னைக்கு வந்தது. "
சாரு, "அதான அது காணம போனது அரசனூர்ல. அப்றம் எப்படி சென்னைல கிடைக்கும். அதுவும் அந்த போத கும்பல் கிட்ட கிடைக்கும். "
" நல்ல கேள்வி தான். பட் பதில் தெரியலயே. அத்தோட விசாகன் கைக்கு எப்படி வந்திருக்கும். அவனே கூலிக்கி அடியாள சப்ளே பண்றவன். சுடரக்கா கேஸ்ல அவனுக்கு மேல யார் இருக்கா."
சாரு, "முதல்ல உனக்கு யாரு சொன்னா ஃபோன் அரசனூர்ல தான் இருக்கும்னு. "
"தீஷ். அவரு தான் சொன்னாரு. "
சாரு, "தீஷித் ஸார் ஏன் பொய் சொல்லிருக்க கூடாது." .
"ஏய். நீ தீஷித்த சந்தேகப்படுறீயா? "
"இப்ப இருக்குற நிலமைய நாம யார வேண்ணாலும் சந்தேகப்படலாம். "
"ஆனா எனக்கு அப்படி தோனலயே. நீ வீணா இமாஜின் பண்ற. "
" ம்ச்… அத நேரடியா இமாஜின்னு சொல்லிட முடியாது. ஆனாலும் அவர் தான ஃபோன் அரசனூர்ல இருக்கும்னு சொன்னது. அப்ப அவர தவிர வேற யார சந்தேகப்பட. "
தாமரை, "ஆனா அவரு அந்த ஃபோன ரொம்ப தீவிரமா தேடுனாரே. நான் நிறைய தடவ பாத்திருக்கேன். ஸ்டோர் ரூம் பரண்னு அங்க இங்க அவரு தேடீட்டே தான் இருந்தாரு. "
"ஆமா சாரு. அவரே ஏங்கூட வந்து சின்சியரா தேடுனாரு. " என்ற பைரவியின் குரலில் சிறு தடுமாற்றம், மனம் தீஷித்தை சந்தேகக் கூண்டில் ஏற்றியிருந்தது.
சாரு, " வேற எதையாது தேடி வந்திருக்கலாம். "
"அரசனூர்ல அப்படி எத தேடி வந்திருப்பாரு. " எனத் தாமரை கேட்டாள்.
இப்போது சந்தேகப் பார்வை முழுதாக தீஷிதனின் மீது திரும்பியது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..