அத்தியாயம்: 53
தான் குறிபார்த்து எய்தும் திறமை கொண்டவன் என்றதை நிறுபிக்க நல்ல இடம் அது.
அஃது ஒரு பார்.
உள்ளே சரக்கை இறக்கிக் கொண்டு, தன் குறிபார்க்கும் திறமையை வெளிக்காட்ட அங்கு ஒரு வட்ட வடிவிலான ஃபோர்டு தொங்க விடப்பட்டிருந்தது. பலர் அதன் நடுவில் இருக்கும் சிறிய சிவப்பு நிற வட்டத்திற்குக் குறி வைத்துத் தோற்றுப் போயினர்.
இப்போது கார்த்திகேயனின் முறை. ஐந்து கத்திகள் தரப்பட்டன. முதலாவதாக ஒன்றை வீச, அது ஃபோட்டை விட்டுப் பல கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்று விழுந்தது.
" என்ன மச்சான் உனக்குக் கண்ணுல எதுவும் பிரச்சனையா?. இல்ல சரக்க உள்ள விட்டுட்டியா.? இருக்காதே நீ அந்தத் தீர்த்தத்த கைல தொட மாட்டியே. அப்றம் ஏன் ஸ்டெடி இல்லாம வடக்க இருக்குற ஃபோர்டுக்கு நீ மேற்க குறி வைக்கிற. எனக்குத் தெரியாம உள்ள இறக்கிட்டியா. " முருகு. ஆல்ரெடி இரு க்ளாஸ் காலியாகி விட்டன.
அஃது அந்த மாதத்தின் இறுதி நாள். சொல்ல வேண்டும் என்றால் அது முருகுவின் நாள். அன்றைய நாள் மட்டும் முழுதாக உள்ளே இறக்கிக் கொள்ள உஷா சம்மதித்து இருந்தார். மற்ற நாள்களில் கையில் தொட்டால் கை உடலை விட்டுத் துண்டிக்கப் படும். வெறும் வாய் வார்த்தையாகக் கூறவில்லை. போதையில் தள்ளாடிக் கொண்டு வந்த முருகுவின் கையில், பென்சில் கொண்டு ஸ்கேலில் கோடு போடுவது போல் ஸ்கேலுக்குப் பதிலாக கத்தியை வைத்து நேர் கோடு போட்டு விட்டுட்டார் உஷா.
" உங்கூட காலம் முழுக்க ரொம்ப நாள் வாழணும்னு ஆசைப் பட்டு உன்ஐன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ அல்ப்பாயூஸ்ல போற வழிய பாக்குறியா. டெய்லி குடிக்கிறதுனால உன்னோட உடம்பு மட்டுமில்ல என்னோட எம்பிள்ளையோட வாழ்க்கையும் கெட்டு போய்டும்.
குடிச்சி குடிச்சி நீ எப்படியும் சாகத்தான் போற. ஆஸ்பத்திரி காரனுக்கு காச குடுத்துட்டு சாகுறதுக்கு பதிலா நானே உன்னைக் குத்திக் கொன்னுடுறேன். " எனக் கத்தியுடன் மனைவியை எதிர்கொண்டவருக்கு மாதம் ஒரு நாள் மட்டும், அதுவும் மாலை நேரத்தில் மட்டும் என நல்ல நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறாள் உஷா.
அவரைப் பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு கார்த்திக்கேயனுடையது. அவனுக்கு அந்தப் போதை சாமாச்சாரங்கள் பிடிக்காது. முன்பு எடுத்துக் கொண்டவன் தான். திருமணத்திற்குப் பிறகு விட்டு விட்டான்.
" என்ன மச்சான் நீ… இம்சை அரசன் வடிவேலு மாதிரி அம்பு விடுற. கொண்டா நானே எல்லாத்தையும் குத்துறேன். " எனப் போதையில் எழுந்த முருகுவை எழ விடாது செய்தவன்,
" உன்னோட வீரம் எனக்குத் தெரியும் மச்சி. நீ குறி பார்த்து அடிக்கிறதுல பெரிய கில்லி தான். ஆனா எனக்கும் ஒரு வாய்ப்பு குடு. நானும் உன்னை மாதிரி ஆக வேண்டாமா. " என்க,
" என் ஆசிர்வாதங்கள் என்றும் உமக்கு உண்டு. இந்தா வாங்கிக்க ஆசிய. " எனக் கோப்பையில் இருந்த மதுவை தன் கையில் ஊற்றி, கார்த்திக்கின் தலையில் தெளிக்க, சிரித்துக் கொண்டே அடுத்த கத்தியை எய்தான். பாவம் அதுவும் மிஸ்.
" ஐய்யையோ... மிஸ் ஆகிடுச்சு. உனக்குப் போய் என்னோட ஆசிய குடுத்தேன் பாரு. என்னைச் சொல்லணும். திருப்பிக் குடுடா. திரும்பிக் குடு. என்னோட ஆசிய. " என எழுந்து நிற்கக் கூட முடியாத அளவுக்குக் குடித்திருந்தார் முருகு.
" ம்ச்… வாய மூடு மச்சி. ரெண்டு தான மிஸ்ஸாச்சி. அடுத்தது மிஸ் ஆகாது. இப்ப பாரு. " எனக் குறிபார்க்க, அது ஃபோர்டை விட்டு விட்டு அதன் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரின் பியர் க்ளாஸை சுக்கு சுக்காக உடைத்தது.
" ஐய்யையோ... ஐய்யையோ… உடச்சிட்டான். தீர்த்தத்த தட்டி விட்டு அவமதிச்சிட்டானே. கடவுள் உன்னை மன்னிக்கவே மாட்டார். தண்டிக்கப் போறார். ஐய்யோ... ஐய்யோ... " முருகு தான். யாரோ ஒருவரின் க்ளாஸ் உடைந்ததற்கு அவர் செய்யும் கலாட்டாக்களுக்கு அளவு இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கார்த்திகேயன் அவனை அடக்கப் படும் பாடைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது.
"என்ன மிஸ்டர் கார்த்திகேயன்… குறி மிஸ்ஸாகும்னு கேள்வி பற்றிடிருக்கேன். பட் இங்க எது குறின்னே தெரியாம கத்தி வீசுற மாறி இருக்கு. " என்றபடி வந்தான் ருத்ரதேவ்.
" ஆஃபிஸ்ஸர்... நீங்களா ஆஃபீஸ்ஸர். என்னோட மச்சான் தெரியாம அவரோட தீர்த்தத்த வேஸ்ட் பண்ணிட்டான். நல்ல வேள அந்தக் கத்தி அந்த மொட்டையனோட கழுத்துல சொறுகல. நான் சொல்லிட்டேன். இனி இப்படி தப்பு தப்பா கத்தி வீசமாட்டான். தீர்த்த க்ளாஸ உடச்சக் குத்தத்துக்காக என்னோட ஆருயிர் நண்பன ஜெயில்ல பாத்ரூம் க்ளின் பண்ண விட்டுடாதீங்க ஆஃபீஸ்ஸர். எனக்கு ஊருல எக்கச்சக்கமான ஃப்ரெண்டு இருக்கு. பட் இந்த நாட்டுல இவெ மட்டும் தான் ஃப்ரெண்டு ஆஃபீஸ்ஸர். ப்ளிஸ்... பாவம் பாத்து அவன விட்டுட்டு போய்டீங்கன்னா உங்களுக்கு நான் ஒரு பாட்டில் நிறைய தீர்த்தம் வாங்கி தர்றேன் ஆஃபீஸ்ஸர். நல்ல வெளிநாட்டு தீர்த்தத்தம். " எனப் போதையில் ருத்ராவை போலீஸ்ஸாக நினைத்து உலற, ருத்ரா புன்னகைத்தான்.
அவனுக்கெனத் தனிப்பட்ட நண்பர்கள் கிடையாது. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உயிர் நண்பர்கள் கிடையாது. எல்லாரும் பிஸ்னஸ் ஃப்ரெண்ஸ். பேச்சும் பிஸ்னஸ் சம்மந்தமாகத் தான் இருக்கும். அதைத் தாண்டி யாருடனும் பழகமாட்டான். அவனுக்குக் கார்த்திகேயனை விட்டுக் கொடுக்காது பழகும் முருகு உஷா ஜோடியைப் பிடித்திருந்தது.
"நீங்கக் கவலப்படாதீங்க ஸார். உங்க நண்பன் மேல இப்போதைக்கி கை வைக்கிற எண்ணம் இல்ல. பட் வைக்கவே கூடாதுன்னா உங்க நண்பன்ட்ட நான் சொன்னத செய்யச் சொல்லுங்க. அது போதும். " என மிரட்டும் தோனியில் ருத்ரா பேச,
" என்ன!! நீ என் நண்பன் மேல கை வைக்கப் போறியா. ஹா...ஹா... " எனச் சிரித்தார் முருகு. அது கார்த்திகேயனையும் தொற்றிக் கொள்ள, இருவரும் ருத்ராவைக் கேலி செய்து சிரித்தனர்.
" டேய் பொடிப்பைய்யா!. அவெ யாருன்னு தெரியுமா? உன்னால அவனோட சட்டை காலர கூடத் தொட முடியாது. முடிஞ்சா முதல்ல அவனோட உசரத்துக்கு வளர்ந்து காட்டு. அப்றம் கை வைக்கிறத பத்தி ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணுவோம். " என்றார் முருகு.
ஏனெனில் நம்ம கார்த்திகேயன் ஆறடி உயரத்திற்கு மேல் வளர்ந்த மனிதன். நம் ருத்ராவோ சராசரி உயரம் தான். ஐந்தே முக்கால் அடி என்று சொல்லலாம். கார்த்திகேயனின் முகம் பார்க்க வேண்டும் என்றால் சில கோணங்களுக்குக் கழுத்து உயர்த்த வேண்டும். அதை மட்டும் சொல்லவில்லை முருகு. பலத்திலும் ருத்ராவிற்கு சளைத்தவன் அல்ல கார்த்திகேயன். இந்த வயதிலும் தன்னை திடகாத்திரமாகத் தான் வைத்திருக்கிறான்.
"பொடிப்பயனா!! நானா!!. எக்ஸ்கியூஸீ மீ… நீங்க என்னையா சொல்றிங்க. " தேவ் ஆச்சரியமாகக் கேட்க,
"ஆமாண்டா... எங்கூர்ல உன்னை மாதிரி டவுசர் போட்ட பயலுகல நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம். அதுமட்டுமில்ல நீ எனக்கு மகெ. அதுனால உன்னை அப்படி கூப்பிட எனக்கு உரிம இருக்கு. எப்படின்னு தெரியுமா? இதோ இவெ எனக்கு மச்சான். அப்ப இவெ பொண்ணு எனக்கு மருமக. அப்ப இவெ பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போற நீ… எனக்கு மகெ மொற தான. வாவ்... எவ்ளோ பெரிய அறிய கண்டுபிடிப்ப நான் கண்டு பிடிச்சிருக்கேன். எங்க அந்த டயம்ஸ் பத்திரிக்க. வரச் சொல்லு மச்சி அவனுங்களுக்கு ஒரு பேட்டி குடுப்போம். " என மீண்டும் கண்டதையும் உலற, கார்த்திகேயன் மீண்டும் கத்தியை ஓங்கினான்.
" உங்க டார்கெட்ட நீங்க முடிவு பண்ணிட்டீங்களா மிஸ்டர் கார்த்திகேயன். " எனத் தேவ் கேட்க,
"ம்... முடிவாவே பண்ணீட்டேன். " என அழுத்தமாகக் கூறினான்.
" அப்ப அத மாத்திக்க மாட்டீங்க. " இருவரும் பொடிவைத்து எதையோ பேசுவதாகப் பட்டது.
"ம்… இதுவர எடுத்த முடிவுல இருந்து நான் பின் வாங்குனதே கிடையாது. " என்றவன் கத்தியை வீச அது சரியாக மையப் புள்ளியில் பதிந்தது.
"இந்த வயசுலயும் உங்க பிடிவாதம்… பிடிச்சிரு மிஸ்டர் கார்த்திகேயன். பட், நானும் விட்டுக் கொடுக்க மாட்டேன். " என்றவன் கார்த்திக்கின் கையில் இருந்த கடைசி கத்தியை வாங்கி வீச, அது கார்த்திக் வீசிய கத்தியைக் கீழே தள்ளி விட்டுக் குத்தி நின்றது.
" இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. பார்க்கலாம் யாரோட பிடிவாதம் வெல்லும்னு. " என்று சொல்லிச் சென்றான் தேவ். செல்லும் அவனின் முதுகையே வெறித்துப் பார்த்தான் கார்த்திகேயன்.
அவனின் பார்வை ‘இந்தக் கொசு இன்னும் நம்மலயே சுத்தி சுத்தி வருதே. விரட்டி விட்டாலும் போக மாட்டேங்கிதே. ' என்பது போல் இருந்தது.
"ஐய்யையோ... மச்சான். யாரோ எம்மகெ வீசுன கத்திய சுத்தி சிவப்பு கலர்ல வட்டம் போட்டு வச்சிருக்காங்க. " எனப் போதையில் உலறிய முருகுவைத் தூக்கி காரில் போட்டுக் கொண்டு வீடு திரும்பியவனின் நினைவு சிவாஸ் பேலஸ் நடந்த உரையாடலில் நின்றது. அதன் தாக்கம் அவன் ஓட்டிச் சென்ற காரின் வேகத்திலேயே காண முடிந்தது.
அன்று காதல் பண்ணியது.
உந்தன் கன்னம் கிள்ளியது.
அடி இப்போதும் நிறம் மாறாமல்.
இந்த நெஞ்சில் நிற்கிறது.
அது ரிங்க டோன். வாசுவுடையது. வெகுநேரமாக அடிக்கிறது. ஆனால் எடுக்கத் தான் மனம் இல்லை அவளுக்கு. ஏனெனில் அது டேனியலின் அழைப்பு.
"என்னடா வேணும் உனக்கும். நான் தான் கால் பண்ணாதன்னு சொன்னேன்ல இப்ப என்ன வந்ததுன்னு ஃபோன் மேல ஃபோன் போட்டு எவ்வுயிர எடுக்குற. ச்ச... ஒருத்தே பேசமாட்டானானு நான் தவிக்கிறேன். இன்னொருத்தே பேசாம இருந்தாலே போதும்னு தவிக்கிறேன். ரெண்டு பேருமே என்னை நிம்மதியா இருக்க விட மாட்டேங்கிறாங்க. " எனக் கத்த,
"பாத்தியா உனக்குக் கூட நான் வில்லனாவே தெரியுறேன். " என்றவன் குரலில் போதையே உணர முடிந்தது.
" ம்ச்… குடிச்சிருக்கியா. "
" ம்... என்னோட கஷ்டத்த புலம்பக் கூட யாரும் எம்பக்கத்துல இல்ல. என்னைப் பெத்தவனுங்க சரியா இருந்தா நானும் உன்னை மாதிரி நல்ல பிள்ளையா வளந்திருப்பேனோ என்னமோ. "
"ம்ச்… எங்க இருக்க. "
"பப்ல தா. வேறெங்க போக. "
"உடனே எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வா. " என்றவள் டேனியலை காணச் சென்றாள். ருத்ராவால் அவனுக்கு வேலை தர யாரும் முன் வரவில்லை. அப்படி வேலை கிடைத்தாலும் ஒரு வாரம் கூடத் தாக்குபிடிக்காமல் துரத்தி விடுகின்றனர். என்ன செய்ய?
"அப்ப இந்த வேலையும் போச்சா. " என்றாள் வாசு விழி விரிய… அவளுக்குத் தெரிந்த ஒரு கடையில் வேலை வாங்கி தந்திருத்தாள் வாசு.
‘அதெப்படி ருத்ரா இருக்கும்போது டேனியலுக்கு வருமானமா! கிடைக்க கூடாதே. அதான் துரத்தி விட்டு விட்டான்.’
" ஆமா வாசு. அந்தாளு எனக்குச் சம்பளம் கூடத் தரல. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கூட வெறும் விரல் தான் இருக்கு. மோதிரம் இல்லாத விரல்கள். " என்று உலற,
"உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியாலயே. "
"தெரியலயா!!!. உன் பாய் ஃப்ரெண்ட் பண்ற வேலை இதெல்லாம். அவனால தான் என்னோட ஜாப் போச்சி. கேமரா போச்சி. இப்ப ஹோம்லஸ் மேனா நான் வீதில திரிஞ்சிட்டு இருக்கேன். அவெந்தா காரணம். " எனப் புலம்ப, வாசுவிற்கு ஒரு கணம் அவனின் இடத்தில் தன்னை வைத்து பார்க்கத் தோன்றியது.
'ஒருவேள நம்மலையும் இப்படி புலம்ப விட்டுடுவானோ. ' என யோசிக்க வைத்தது.
" வாசு, உன் ஆளுக்கிட்ட சொல்லி என்னோட கேமராவ மட்டும் வாங்கி தரச் சொல்லேன். அதோட வேல்யூ 700 டாலர். என்னோட பைக் காருன்னு எல்லாத்தையும் வித்து வாங்குனேன். லக்கி கேமரா. வாசு... ப்ளிஸ். " எனக் கெஞ்ச,
"இப்ப உன்னோட நிலமைல தான் நானும் இருக்கேன். " என டாக்குமெண்ட் காப்பியை காட்டினாள்.
" ஒன் மில்லியன் டாலர். என்னோடது பரவாயில்லை போலயே." என அதை புரட்டிப் புரட்டி பார்த்தான் அவன்.
"ஆமாம், அந்த ருத்ரா எதோ ப்ளான் பண்ணி அவன வேண்டாம்னு சொன்னதுக்காகப் பழி வாங்குறான்னு தோணுது. "
" இப்ப என்ன பண்ண போற? கார்த்தி அங்கிள் என்ன சொன்னாருற"
"அவருக்கிட்ட ருத்ரா பண்ண இந்த வேலைய எதுவும் சொல்லல. வீணா ப்ராப்ளம் தான் க்ரியேட் ஆகும். அதுனால. "
"அதுனால…"
"நான் மறுபடியும் வேலைல ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன். இவெங்கிட்டேயே. கம்மிங்க மண்டேல இருந்து. உனக்கும் வழி இருக்கு. "
"நோ… என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஒரு கல்யாணத்துனால நான் பட்ட அனுபவம் ரொம்ப பெருசு. அதுனால எவ்வுயிரே போனாலும் நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். "
" அப்ப நான் உன்ன உன்னோட இறுதி சடங்கப்ப வந்து பாக்குறேன். " எனச் சொல்லி எழுந்து செல்ல,
" வாசு, அதுவரைக்கும் எனக்குப் பசிக்குமே. வேலைக்கி ஒரு வழி சொல்லிட்டு போ. " எனக் கத்தினான் டேனியல்.
"கார்த்திப்பாட்ட வந்து பேசு. உனக்கு வேலை கிடைக்கும். பட் எந்தப் பொண்ணு கூடவாச்சும் நீ கடல வறுக்குறத நான் பாத்தேன். "
"என்னைய வறுத்தெடுத்துடுவ. சரியா. "
"நான் செய்யணும்னு அவசியம் இல்ல. ருத்ரா பாத்துப்பான். " என்றாள் கூலாக.
"ஆல் தி பெஸ்ட். அவெங்கூடவே இருந்து வறுபட போற என்னோட குட்டி கடலை ஃப்ரெண்டுக்காக நான் தேவனை வேண்டிப்பேன். " என கேலியாகச் சிரிக்க,
"யாரு வறுபட போறான்னு பாத்து தெரிஞ்சிக்க. " என்றவளுக்கு பயம் இருந்தது உண்மை. இது வெறும் வாய்ச்சவுடால் தான்.
பார்க்கலாம் யார் யாரை வறுக்கப் போகிறார்கள் என்று.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..