அத்தியாயம்: 106
வெள்ளை நிற உறையில் சிவப்பு கலர் ரிப்பன் கட்டி விடப்பட்டிருந்தது அங்கிருந்த அனைத்து நாற்காலிகளுக்கும். வட்ட வட்ட மேஜைகளுக்கும் உடை மாட்டி விட பட்டிருந்தது. பப்பே முறையில் உணவு என்பதால் வேண்டிய உணவைத் தட்டில் நிரப்பிக் கொண்டு இதுவரை கடந்து வந்த தங்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் அந்த முன்னாள் மாணாக்கர்.
"இது என்னோட வைஃப்."
" அது உன்னோட குழந்தயா?"
" இது என்னோட பேத்திடா."
"எனக்கு எதுவும் செட்டால. இப்ப வர நான் சிங்கிள் தான். " என ஒவ்வொருவரும் தங்களின் சொந்தங்களை அறிமுகம் செய்து கொண்டும்,
"உனக்கு அந்த கிரிக்கெட் மேட்ச் நியாபகம் இருக்கா?"
" லாஸ்ட் இயர்ல என்னென்ன பண்ணோம்னு நினைவு இருக்கா?"
"உங்கிட்ட செக்கேண்ட் இயர்ல லவ்வ சொன்னானே அவனுக்கு இப்ப ரெண்டு பேபிஸ் இருக்காம்."
" உன்னோட முன்னாள் காதலி இப்ப பெரிய வீட்டு மருமகளாம் டா. "
" நாம சோடாபுட்டி ப்ரபசர்ட்ட மாட்டிக்கிட்டோமே. கூப்பிட்டு வச்சி நாலு பீரியடும் அட்வைஸ் பண்ணி கழுத்தறுத்திட்டாரே. " எனக் கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்த படி இருந்தனர்.
ஒரு மேஜையில் மட்டும் எந்த வித பேச்சும் இல்லாமல், யாரிடமும் பேசாது அமைதியாக இரு ஜீவன்கள் அமர்ந்து தட்டில் உள்ள உணவைக் காலி செய்வதில் குறியாக இருந்தனர். அது வாசுவும் தன்யாவும்.
"ம்… செம்ம காரமா இருக்கு. பட் சூப்பரா இருக்கு. ஐ லவ் இட். " என விரும்பி உண்டு கொண்டிருந்தாள் வாசு. அவளுக்குத்தான் காரமான உணவு பிடிக்குமே. புகுந்து விளையாடிக்கொண்டிருந்தாள் அவள்.
'எம்மா நீ எதுக்கு இங்க வந்த. உங்கப்பாவையும் அம்மாவையும் பாக்கத்தான. வந்த வேலைய விட்டுட்டு வேறென்னத்தையோ பண்ணிட்டு இருக்க. '
'என்ன வேலை இருந்தாலும் சாப்பாடு தான் முதன்மையான வேலை. ம்... ஒவ்வொரு நாட்டுலயும் ஒவ்வொரு ருசி. ' எனத் தட்டைக் காலி செய்து விட்டு அதை நிரப்ப எழுந்தாள்.
அனைத்திலும் சாம்பிள் பார்ப்பது போல் கொஞ்சம் கொஞ்சம் தான் எடுத்துவைத்தாள். ஆனால் தட்டு நிறைந்து விட்டது.
" ச்ச... இவ்ளோ ஐட்டத்த கண்ணு முன்னாடி வச்சிட்டு சின்ன தட்டா குடுத்துட்டாங்க. இந்த ஃபங்ஷன ஏற்பாடு பண்ண இடியட் யாரு?”
"அந்த இடியட் உன்னைக் கட்டிக்க போறவெந்தான். அவெந்தான் இந்த காலேஜ்ஜ வாங்கிருக்கான். " என்றாள் தன்யா.
"நிஜமாவா!. இத எங்கிட்ட சொல்வே இல்ல. "
" அவனுக்கு அடுத்தவங்க கிட்ட தான் பண்ணப்போறத பத்தி சொல்லுற பழக்கம் எல்லாம் கிடையாது. தோனுனத பக்காவா ப்ளான் போட்டு செய்வான். அவன் சொல்ற எல்லாத்தையும் முழுசா நம்பிடாத. அவனுக்கு ஆதாயம் இல்லாம யார் கிட்டயும் எதையும் சேர் செய்ய மாட்டான். கல்யாணம் ஆனாலும் அவெங்கிட்ட கவனமாவே இரு. " என்க வாசு எல்லாம் புரிந்ததது என்பது போல் தலையசைத்தாள்.
" வந்ததுல இருந்து தின்னுக்கிட்டேத்தா திரியுறோம். வேற எதுவும் பண்ணல. எல்லா டேபிளும் கூட்டம் கூட்டமா இருக்கு. நம்ம கிட்ட தான் பேச யாருமே வரல. உனக்கு யாரையாது தெரியுமா? " எனத் தன்யா கேட்க,
"இல்லை. எனக்குத் தெரிஞ்ச மாதிரி இங்க யாருமே இல்ல. " என்றவளின் பார்வை முரளியின் மீது இருந்தது. அந்தப் பார்வை அனல் பார்வையாக இருந்தது.
முரளி ராஜி மூலம் வாணியின் திருமண ஏற்பாட்டையும் அவள் வீட்டை விட்டு சென்றது வரையும் அறிந்தவளுக்கு ஆத்திரமாக வந்தது. எவ்வளவு பெரிய துரோகத்தை வாணிக்கு செய்திருக்கிறார்கள் இவர்கள் என்று.
ராஜியின் கோபம் இன்னும் கார்த்திக்கின் மீது தான் இருந்தது. அவன் மட்டும் வாணியின் வாழ்க்கையில் வராவிட்டால் என்ற நிலையிலேயே இருந்தாலே தவிர, அந்த வயோதிகனை திருமணம் செய்ய சொல்லி சொன்னது தவறாக படவில்லை அவளுக்கு. திருந்தாத தன்னைத் திருத்திக்க விரும்பாத ஜென்மம். முரளியும் அப்படித்தான்.
ஆனால், காலம் அதற்கு தக்க தண்டனை கொடுத்தது என்றே சொல்லலாம். வாணியைத் திருமணம் செய்ய முன்வந்த வயோதிகன், திருமணம் நின்றதால் ஜோஹிதா குடும்பம் கொடுத்த பணத்தைச் சுப்புவிடம் இருந்து அடித்து பிடுங்கிச் சென்றான். அத்தோடு வீட்டையும் தான்.
ராஜி முரளி திருமணம் முடிந்த சில நாட்களிலேயே விபத்து ஏற்பட்டு, ராஜி கால்களை இழந்ததும் பிழைக்க வலி தெரியாது சொந்த ஊருக்கு சென்றனர். இதுவரை வெயிலே படாது நிழலில் இருந்தவனைச் சூரிய ஒளிக்கு கீழ் நிற்க வைத்தது போல், உழைக்காது ஊர் சுற்றிய முரளி வேலைக்காகதீ தெரு தெருவாக நாய் போல் அழைந்து நோயில் படுத்த பெற்றோருக்காக, நடக்க இயலாத தன் மனைவியை காப்பாற்ற எனப் பல போராட்டங்களைச் சந்தித்து வந்த போது தான் ருத்ரா வாணியை பற்றி இவர்களிடம் விசாரித்தான்.
அவனுக்கும் ஆத்திரம் தான். ஆனால் கார்த்திக்கை இந்தியா வர வைக்க இவர்கள் உதவலாம் என்று தான் வாசுவை இவர்களுடன் பழக அனுமதித்தான். ரோகிணி கூட அவர்களின் மகள் அல்ல. தத்தெடுத்து வளர்க்கின்றனர்.
அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்டவள், "எங்கார்த்திப்பா சொன்னது தான். எங்கண்ணு முன்னாடி வராதீங்க. இல்லனா எங்கார்த்திப்பா கொலகாரனா மாறவேண்டி வரும். ருத்ரா ப்ளீஸ் அவங்கள இங்க இருந்து அனுப்பு. நான் இவங்கள பாக்க விரும்பல. " எனக் கத்த, சோர்வுடன் வெளியே சென்றனர்.
வாசு, வாணிக்காக அழுதாள். அவளுக்குக் கார்த்தியின் மீது கோபம் வரவில்லை. ஜோஹிதாவின் மீதும் தான். விதியின் மீது தான் கோபம். அழுது கொண்டிருந்தவளின் கண்ணீரைத் துடைத்த ருத்ரா அவளைத் தன்னோடு அணைத்தான்.
"கார்த்திப்பா… அவங்க கூட சேந்திருக்கலாம். ஸ்டேஷன்ல சந்திச்சிருந்திருக்கலாம். " என்று விடாது புலம்பினாள்.
" ஸ்வீட்டி, நடந்த எதையும் நாம மாத்த முடியாது. இனி நடக்க வேண்டியத பாப்போம். " எனச் சொல்லி அவளின் முன் உச்சியில் முத்தமிட்டான்.
"வாணி எங்க போனாங்கன்னு எதுவும் தெரியலயா?"
"எனக்குத் தெரியாது. ஆனா ஒருத்தருக்குத் தெரியும்? "
"கார்த்திப்பாவுக்கா! வாணியக் கண்டு பிடிச்சாரா?. " எனத் தலை தூக்கி கேட்க,
" இல்ல... "
"அப்ப யாரு? "
"அப்சத்… அவரு தான் உங்கப்பாவ இங்கக் கூட்டீட்டு வர சொன்னாரு. அவருக்குத் தெரியும். அவருக்கு மட்டும் தான் தெரியும். வாணிக்காக்கு என்ன நடந்தது. எங்க போனாங்க இப்ப எங்க இருக்காங்க. இல்ல…." என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
" நமக்குப் படிச்சவங்க நம்மல விட்டுடு எங்கயும் போக மாட்டாங்க ருத்ரா. எதாவது ரூபத்துல நம்ம கூடவே தான் இருப்பாங்க. " என்று சொல்லி நெஞ்சில் சாய்ந்து கொள்ள,
" ம்… இருக்காங்க. உன்னோட ரூபத்துல நான் அவங்களப் பாக்குறேன். நான் மட்டுமில்ல மிஸ்டர் கார்த்திகேயனுக்கும் அப்படித் தான் தெரியுற. "
"என்னை மாதிரியேவா இருப்பாங்க அவங்க?"
"100% அப்படி சொல்லிட முடியாது. சில ஒற்றுமை இருக்கு. இந்தக் கண்ணு... அப்றம் நெத்தி... மூக்கு... அதுல நீ போட்டிருக்குற மாதிரிச் சின்ன மூக்குத்தி... உன்னோட உதடு அப்படிக் கிடையாது தான்." என ஒவ்வொரு பாகமாக தன் சுட்டு விரலால் சுட்டிக்காட்டி கொண்டே வந்தவனின் விரல்கள் பெண்ணவளின் உதட்டை ஆசையுடன் வருடி முத்தமிட்டது.
"பட்… சிரிப்பு அவங்கள மாதிரி இருக்கும். உன்னோட பேச்சு. சில மேனரிஷம். இந்த கழுத்து… அப்பறம் அதுக்கு கீழ... " என முத்த வேட்டையைத் தொடர,
" போதும்... " என ருத்ராவின் முகத்தை விலக்கிப் பிடித்தாள் வாசு.
"ம்ச்… நீ தான கேட்ட… முழுசாச் சொல்ல விடு ஸ்வீட்டி. " என முன்னேற, குறுகுறுத்த மீசை அவளின் ஹார்மோன்களில் மத்தாப்பை பூக்கச் செய்தது. அதன் தாக்கம் தாளாது அவள் தடுத்து அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள். ஆனால் ருத்ராவிற்குத் தான் வெற்றி. அவளின் இரு கரத்தையும் தன் கரத்தால் பிடித்து தலைக்கு மேல் உயர்த்தி, மற்றொரு கையால் அவளின் இடையணைத்து தன்னோடு இணைத்திருந்தவன், உதடுகளால் அவளின் சங்கு கழுத்தில் கோலமிட்டு கீழிறங்க,
"ருத்ரா வேண்டாம்… அப்படி பண்ணாதா... ருத்ரா…. ருத்ரா... " எனக் கத்த,
" கத்தாதடி…” என்றபடி அவளின் வாயைப் பொத்தியவன்,
“அந்த மலை பாம்பு வந்திடப்போது. " என அவன் சொல்வதற்கும்.
தன்யா, " என்னத்தா மறைமுகமா நீ பாம்புன்னு சொன்னீயா தேவ். " என்றபடி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
" நேரடியாவே சொல்லுவேன். பொத்து ஓட்டைல இருந்து எட்டிப்பாக்குற விஷப்பாம்பு. நீயே தான். உன் தொந்தரவு இல்லாம இருக்கலாம்னா விட மாட்டியே." என்க,
" மாட்டேன். தேவ் பாம்புன்னா படையை நடுங்குமாம். ப்புஸ்ஸ. " என பாம்பு போல் தெளிய. தலையில் அடித்துக் கொண்டு வெளியேறினான்.
"ரெடியா இருங்க. சிக்ஸ் ஓ க்ளாக்கு கார் வரும். " என்றபடி சென்றவன் தான், பின் பார்க்கவே இல்லை.
இவர்கள் மட்டும் விழாவிற்கு வந்துள்ளனர். விழா தொடங்குவதற்கான அறிகுறியாக நாற்காலிகள் போடப்பட்டன. சில ஆசிரியரும் நிர்வாகிகளும் வந்து அமர்ந்தனர்.
"குட் ஈவ்னிங் ஜென்டில்மேன். உங்க எல்லாரையும் இங்க பாக்குறதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. " என ஒருவர் பேச தொடங்க,
"இவரு மைக்க பிடிக்கிற ஸ்டைல்ல பாத்தா ரொம்ப நேரம் பேசுவாரு போலயே. நீ என்ன நினைக்கிற வாசு. ஏய் வாசு... " எனத் தன்யா வாசுவைச் சுரண்ட, வாசுவோ சுற்று முற்றிலும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" ஏய் என்னத்தடி பாக்குற?. "
"தன்யா ஃபங்சன் ஸ்டாட் ஆகி ரொம்ப நேரம் ஆச்சி. கார்த்திப்பா இன்னும் காணும். அவராது ஃப்ளைட் பிடிச்சி வர லேட்டுன்னு சொல்லலாம். ஆனா இந்த ஜோஹிம்மா எங்க போனாங்க?. முருகு மாம்ஸ் காலேஜ்ஜிக்கு வர பயந்திட்டு வேற எங்கயும் உஷா ஆன்டிய தள்ளிட்டு போய்ட்டாரோ. " எனக் கண்களால் அந்த ஹாலை அலசியபடி கேட்டாள்.
" வருவாங்க வாசு. நீ அமைதியா இரு. நீ தான் இங்க வர்றத பத்தி ஃபோன்ல சொல்லிட்டியோ அப்றம் என்ன!. தேவ் ஸ்டேஜ்ல உக்காந்திருக்கான் பாத்தியா?" என்க, அப்போது தான் அவனைக் கவனிக்கவே செய்தாள் வாசு.
ருத்ரா மெல்லிய கோபத்துடன் அவளை முறைக்க, அவள் ' ஸாரி .' எனக் காதைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டாள்.
அவள் எதிர்பார்த்தது போல் ஜோஹிதாவும் முருகுவும் வந்து விட, வாசு கையசைத்தாள். அவள் விளையாடுகிறாள் என்று நினைத்திருக்க, உண்மையா வந்தமர்ந்திருந்த வாசுவைக் கண்டதில் அதிர்ச்சியுடன் அவளின் அருகில் வந்து அமர்ந்தனர்.
" உன்ன யாருடீ இங்க வர சொன்னா!. யாரு கூட வந்த?. " என உஷா திட்ட தொடங்கிவிட்டார்.
" பிள்ளைய திட்டாதடி. எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம். " என்ற முருகுவை நன்றியுடன் பார்த்தாள் வாசு.
ஜோஹிதா எதுவும் பேசாது அமைதியாக வாசுவின் முகம் பார்த்தாள். வாசு, அன்னையின் அருகில் சென்று தோளில் சாய்ந்து கொண்டாள். வாசுவின் கரம் இதமாய் ஜோஹிதாவின் முதுகை தடவிக் கொடுத்தது.
நிர்வாகிகள் பேசி... பின் ஆசிரியர்கள் பேசி... பின் மாணவர்கள் ஒரு சிலர் எழுந்து தங்களுக்கும் அந்தக் கல்லூரிக்கும்மானப் பந்தத்தை மைக் பிடித்து பகிர்ந்துக் கொண்டனர்.
சிலரின் பேச்சு சுவாரசியமானதாக இருந்து. சிலரின் பேச்சு நகைச்சுவையாக இருந்தது. சிலரின் பேச்சு உணர்ச்சிகரமானதாக இருந்தது. அனைத்தையும் வாசு ஜோஹிதாவின் கரத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு கேட்டு ரசித்தாள். ஜோஹிதாவிற்கு அது ஆறுதலாக இருந்திருக்க.
இந்த இடம் ஜோஹிதாவின் மனத்திற்குள் பாறாங்கல்லை வைத்தது போல் கனமானதொரு உணர்வை உணர வைத்தது. பழைய நினைவுகளில் அவள் இருக்கு, அந்த அரங்கில் பிரவேசித்தான் கார்த்திக்.
வந்தவன் நேராக பேசிக் கொண்டிருந்தவரின் மைக்கை வாங்கி பேச தொடங்கினான். கார்த்திக் அந்தக் கல்லூரியில் ரேங்க் ஹோல்டர். அத்தோடு ஸ்போர்ட்ஸ் அக்டிவிட்டியும் உண்டு என்பதால் மாணவர்கள் மத்தியில் பிரபலமானவன்.
" குட் ஈவ்னிங் எவ்ரி ஒன்... இன்னைக்கி இங்க நான் வருவேன்னு நினைக்கவே இல்ல. ஏன்னா இந்தக் காலேஜ் எனக்குப் பல சந்தோஷத்தையும்.. பல கஷ்டத்தையும் ஒன்னாத் தந்திருக்கு. இந்தக் காலேஜ்ஜிக்கும் எனக்குமான உறவு ரொம்ப வித்தியாசமானது. இங்க வச்சி தான் நான் என்னோட ஜோவ பாத்தேன். பழகுனேன்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. ஜோதிவாணி. இந்த காலேஜ் தான்… " எனத் தொடங்கி இருவருக்கும் இருந்த உறவைச் சொல்ல, பலர் சலசலத்தனர். ஆனால், கார்த்திக் எதையும் கண்டு கொள்ளாது ஜோதியைப் பற்றி பேசி முடித்தான்.
பின் அவளின் சான்றிதழை ருத்ரா தர வாங்கி கொண்டு புன்னகையுடன் விடை பெற்று கீழே இறங்க, வாசு ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் கார்த்திக்கை.
"ஸாரி கார்த்திப்பா… வெரி வெரி ஸாரி. நான் உங்க கிட்ட அப்படி பேசிருக்க கூடாது. ஸாரி... " என அழுது கொண்டே அணைக்க,
அவளை ஹாலைவிட்டு வெளியே அழைத்து வந்தவன், மகளின் கண்ணீரை துடைத்துவிட்டு அணைத்தான். மகளை உச்சி முகர்ந்தவனுக்கு மனத்தில் பெரும் நிம்மதி. ஜோதியின் கடைசி ஆசையையும் நிறைவேற்றியதால் வந்ததது அது.
"கார்த்திப்பா நான் ஒரு லூசு. உங்ககிட்ட விளக்கம் கேட்காம. என்னையும் கஷ்டப்படுத்தி உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன். ஸாரி கார்த்திப்பா. என்ன மன்னிச்சிடுங்க ப்ளிஸ்… ஸாரி. " என்றவள், வாணியின் ஜாடையில் இருந்த வாசுவைப் பார்த்து சிலர் எதுவோ சொல்ல,
" வாசு, உன்ன யாரு இங்க வர சொன்னா?. " எனக் காட்டமாக கேட்டான் கார்த்திக்.
" நான் தான் கூட்டீட்டு வந்தேன். " என்ற ருத்ராவை முறைத்தான் அவர்.
"நீங்க திரும்பி வர்ற வர வாசு என்னோட பொறுப்பு தான. அதான் பொறுப்பா கூடவே கூட்டீட்டு வந்தேன். அப்றம் வாணிக்காவ பத்தி நீங்க குடுத்த ஸ்பீச் நல்லா இருந்தது. "
"உன் பாராட்டுக்காக இத நான் பண்ணல." என்றவனுக்குள் எரிச்சல் மண்டிக்கிடந்தது. வரவே கூடாது என்றிருந்தவனை இழுத்து வந்ததால் இருக்கும்.
வந்நு இறங்கியதில் இருந்து அவனின் ஜோவின் நினைவுகள் அலை போல் முட்டித் தள்ள, இதற்கு மேல் இருக்க முடியாது என வாசுவின் கரத்தைப் பற்றி கொண்டு நடக்க,
" கார்த்தி. " என்ற குரல் நிறுத்தியது அவனை…
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..