அத்தியாயம்: 109
சாந்தமான…. பேரமைதியான இடமாக இருந்தது அந்தக் குடில் போன்ற வீடு. சுற்றிலும் மரங்களும் அந்த மரத்தை உறைவிடமாக கொண்டிருந்தது. பல பறவைகளின் ஓசையையும் கேட்க முடிந்தது அந்த இடத்தில். மழை, காற்று என எந்தச் சீதோஷ சூழ்நிலையிலும் அணையா விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருந்தது அந்தக் குடிலில்.
தன் கண்முன்னே இறந்த வாணியின் இந்நிலைக்குக் காரணம் தான் தான் என்ற நினைப்பே அப்சத்தை நிம்மதியாக வாழ விடவில்லை. அதனால் தன் மன அமைதிக்காக இந்த இடத்தை உருவாக்கினான்.
அஃது ஓர் அநாதை இல்லம். உறவாக, துணைக்கு, உதவிக்கு என யாரும் இல்லாத சிறியவர்கள், பெரியவர்கள் எனப் பலர் அங்கு உலாவிக் கொண்டு இருக்க, வாணியின் கல்லறையின் முன் அமைதியாக நின்று கொண்டு இருந்தனர் கார்த்திக் தம்பதியினர்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாய் நிமிடங்கள் கழிய முதலில் பேச தொடங்கியது கார்த்திக் தான்.
" ஜோஹிதா.… என்ன நடந்தது. உனக்கும் ஜோதிக்கும் இடைல. " எனக் கேட்டான். ஆனால் அவளோ அமைதியாக நின்றாள். கார்த்திக் நெருங்கி அவளின் முன் வந்து நின்று, அவளை அணைத்துக் கொள்ள,
"எனக்கு உண்மை வேணும் ஜோஹிதா."
" நான் சொல்ல மாட்டேன் கார்த்திக். கடைசி வர அது என்னோடவே இருந்திட்டு போட்டும். " என்றாள் அவனின் அணைப்பில் இருந்தபடியே.
"உன்னைக் கட்டாயப்படுத்த எனக்கு விரும்பம் கிடையாது ஜோஹிதா. ஆனா உன்னோட ஹெல்த்காகவும் என்னோட மன அமைதிக்காவும் கேக்கறேன். நீ வெளில சொல்ல முடியாத வேதனைல இருக்குறதா டாக்டர்ஸ் சொன்னாங்க. எல்லாத்தையும் போட்டு மனசுக்குள்ளயே வச்சிக்கிட்டா அது நல்லது இல்ல ஜோஹிதா. open up." என்று அவளின் உச்சந்தலையில் இதழ் பதிக்க, அவனின் முகம் நிமிர்ந்து பார்த்தவள்.
" உண்மைய சொன்னா நீ என்ன வெறுத்திடுவ. என்னோட ஃபேமிலிய வெறுத்த மாதிரி என்னையும் நீ வெறுத்திடுவ. நான் ரொம்ப கெட்டவ... இரக்கம் இல்லாதவ... சுயநலவாதி… பிடிவாதக்காரி…" எனக் கண்ணீருடன் கூறியவளின் நெற்றியில் முத்தமிட்டவன்.
" But You are my wife johi and my Life also. உன்னை எப்பயும் உன்னை வெறுக்க மாட்டேன். வெறுக்கவும் முடியாது. சொல்லு என்ன நடந்தது. " என்று இதமாய் கேட்க, ஜோஹிதா சொல்லத் தொடங்கினாள்.
ஜோதிவாணி.
எங்கு செல்கிறது என்று தெரியாது கண்முன்னே இருந்த ட்ரெயினில் ஏறி அமர்ந்தவளுக்கு விதி கொடுத்த இடம் சென்னை. தமிழ்நாட்டில் இறங்கியது அவளுக்கும் சிறு மகிழ்ச்சி. இங்கே இருந்தால் என்றாவது ஒரு நாள் கார்த்தியை நேரில் பார்க்கலாம்.
‘அவன் இப்போது ஜோஹிதாவின் கணவன் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நான் அவனைக் காதல் செய்வதை யாராலும் தடை போட முடியாது.’ என்று மனத்தில் சொல்லிக் கொண்டாள் மகிழ்வுடன்.
கூடவே சிவரஞ்சனியின் நினைவும் வந்தது. 'எதாவது உதவி வேணும்னா இந்த நம்பருக்கு நீ தைரியமா கால் பண்ணலாம். இதுல என்னோட அட்ரஸ் எழுதிருக்கேன். ' என ஒரு துண்டு காகிதத்தில் தன் இருப்பிட விலாசம் தந்திருந்தாள் ருத்ராவின் அத்தை.
முதலில் அங்கு தான் சென்றாள். ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை. தன் அண்ணனைக் காண அமெரிக்கா சென்றிருப்பதாக வாட்ச்மென் சொல்ல, மனம் சோர்ந்து போனது. அவளின் வாடிய வதனம் கண்டு அவர்கள் திரும்பி வரும் வரை தங்களுடன் தங்கிக் கொள்ளும்படி கூறினார் வாட்ச்மேனின் மனைவி. இருவரும் வயோதிகர்கள். ரஞ்சனியின் வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்டி கொடுத்து வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருந்தார்.
ஆனால், வாணி மறுத்து அவளுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தரச் சொல்லி கேட்டாள். அவரும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டார். நாள்கள் ஓடியன. வாணி அருகில் இருக்கும் ஒரு விடுதியாய்ப் பார்த்து தங்கி கொண்டாள். ஆனால் தினமும் வந்து அந்த தம்பதியினரிடம் சிவரஞ்சனி எப்போதும் வருவார் என்று கேட்டு மாலை நேரத்தை அவர்களுடம் கழிப்பாள்.
ஒரு முறை முருகு சொன்ன அடையாளங்களை வைத்து முருகுவின் வீட்டை தேடி கண்டு பிடித்தாள். காலை வேளையில் யாரின் பார்வைக்கும் படாத படி நின்று கொள்வாள், கார்த்தியை காணலாம் என்ற ஏக்கத்துடன். அவளை ஏமாற்றாது கார்த்தி அவளின் கண்களை நிறைத்தான். தினமும் அவளுக்குத் தரிசனம் தந்தான் கார்த்தி. இது வாடிக்கையாகிப் போனது.
" நான் பாபா கோயிலுக்குப் போறேன் நீயும் வாயேன். அங்க 9 நாள் விரதம் இருந்து விளக்கு போட்டா நல்லது நடக்கும். நான் போட்டுட்டு தான் இருக்கேன். உனக்கு அப்பப்ப உடம்பு சரியில்லாம போகுதுல. நீயும் வா. " என அவளை உடன் வேலை செய்பவள் கையோடு அழைத்துச் சென்றாள். அவளையும் விளக்கு ஏற்றச் சொல்லி சொல்ல, வாணி சந்தோஷமாக அதை செய்தாள்.
தினமும் இரவு அங்கு சென்று வந்தவளைத் தான் ஜோஹிதா காண நேர்ந்தது. மறு நாள் விளக்கேற்ற வந்தவளின் முன் வந்து ஜோஹிதா நிற்க, வாணி அவளைக் கண்டு கொள்ளாது விலகி சென்றாள்.
"நீ எங்க டி இங்க வந்த? உனக்கு ஓடிப்போக வேற இடமே கிடைக்கலயா?" எனக் கோபமாக கேட்டாள் ஜோஹிதா. வாணி பதில் சொல்லாது நடந்தாள்.
"திமிரு டீ உனக்கு. பல வீட்டு சோத்த சாப்பிட்ட கொழுப்பு. அதா கார்த்திக்க தேடி இங்கயே வந்திருக்க. கார்த்திக் இருக்குற பக்கமே வர மாட்டேன்னு தான காசு வாங்குன. குடுத்த காசு காலியா. இல்ல உங்கூட ஓடி வந்தவெ ஆட்டைய போட்டுட்டு போய்ட்டானா. உன்ன மட்டும் எப்படி விட்டு வச்சான். இன்னும் நிறைய காசு தர்றேன், வாங்கிக்கிட்டு உடனே ஊர விட்டு போய்டு. எவ்ளோ வேணும் உனக்கு.?" என ஏளனமாக பேச, வாணி தன் அருகில் யாரும் இல்லை என்பது போல் நடந்து கொண்டாள்.
அன்று மட்டுமல்ல, அதன் பின் வந்த நாட்களிலும் அப்படித்தான். தினமும் ஓடிப் போனவள் நீ என்றும் இப்பொழுது யாருடன் ஓட இருக்கிருக்கிறாய் என்றும் தரமில்லாத வார்த்தைகளால் ஏசுவாள். ஜோஹிதா, வாணியைக் கண்ட படி பேசினாலும் காதில் வாங்காது போல் இருந்தாள்.
தினமும் " கார்த்திக்க காசுக்கு வித்திட்டேல நீ. உன்னோட காதல் கார்த்தி மேலயா! இல்ல பணத்து மேலயா! அப்படிப் பணம் தான பெருசுன்னா வேற மாதிரி தொழில் செஞ்சிருங்கலாமே!. எதுக்கு எங்கார்த்திக்கிட்ட காதல் நாடகம் ஆடுன.
இப்பயும் ஒன்னும் கொட்டு போகல. உனக்கு நான் அந்த மாறி பணகார பசங்கள அறிமுகம் செஞ்சி வைக்கிறேன். கார்த்திய ஃபாலோ பண்ணாத. எங்கள நிம்மதியா வாழ விடு. இங்க இருந்து போய்டு…. ப்ளிஸ் ." எனக் கரம் குவித்து கேட்க, வாணி எப்பொழுதும் போல் பேசாது நடந்தாள்.
இவளிடம் இப்படி பேசினால் சரிப்படாது எனக் கார்த்திக்கை ஏசத் தொடங்கினாள்.
" உன்னைச் சொல்லி மட்டும் தப்பில்ல. அவனயும் சொல்லணும். அவனுக்கு நான் ஒருத்தி மட்டும் போதாது போல. அதான் வசதியா வாழ என்னையும், உடம்புக்கு உன்னையும் வச்சிக்கலாம்னு நினைக்கிறான். " என்க, வாணி ஜோஹிதாவின் கன்னத்தில் அறைந்தாள்.
"கார்த்திய பத்தி தப்பா பேசாத." என விழிகளில் ரௌத்திரத்துடன், விரல் நீட்டி எச்சரிக்க, ஜோஹிதாவிற்கு கோபம் வந்தது. அதற்கு முன் தினம் தான் இதே வார்த்தைகளைச் சொல்லி கார்த்திக்கிடம் அடி வாங்கியிருந்தாள். இப்போது வாணியிடம்.
இவளைப் பற்றி பேசினால் அவனுக்குக் கோபம் வருகிறது. அவனைப் பற்றி பேசினால் இவளுக்கு ஆத்திரம் வருகிறாதா. தவறு செய்து விட்டு பாதிக்கப்பட்ட என்னிடம் வீரத்தைக் காட்டுகின்றனரா!
கோபமும் ஆத்திரமும் கண்ணை மறைக்க கார்த்திக்குடன் தினமும் சண்டை போட தொடங்கினாள்.
ஒரு கட்டத்தில் கார்த்திக், வாணியைத் தேடுவதை நிறுத்தவில்லை என்பது அறிந்தவளுக்குள் பயத்தை உண்டாக்க தொடங்கியது. தன் கையில் இருக்கும் மிட்டாயை யாரும் பிடிங்கி விடுவார்களோ என்ற பயத்தில் வாய்க்குள் போட்டுக் கொள்ளும் குழந்தை போல், அவனின் மனைவி என்ற பட்டத்தை காப்பாற்ற, அவனின் காதலை பெற அவனிடம் நெருங்கி பழகி மனைவியாக நடந்து கொள்ள முயன்றாள். ஆனால் கார்த்திக் ஜோஹிதாவை அதற்கு அனுமதிக்கவில்லை.
அந்தத் தோல்வி மட்டுமல்லாது, வாணி என நினைத்து அவன் தன்னுடன் கலந்தது அவளுக்கு பெரிய அடியாகி போனது.
மனம் நைந்து தான் போனது. தன்னை மனதார காதலித்தவன். தன்னையே சுற்றி சுற்றி வந்தவன். இன்று யாரோ ஒருத்தியின் நினைப்பில் தன்னுடல் கலந்திருக்கிறான் என்பது அவளின் காதலுக்கு மட்டுமல்லா பெண்மைக்கும் கிடைத்த பேரிடி.
"எந்த இடத்தில தப்பு பண்ணேன்னு எனக்குப் புரியவே இல்ல. அவனுக்கு ஏன் என்னைப் பிடிக்காம போச்சின்னும் தெரியல. அவனோட காதலியா இருக்க எனக்கு தகுதி இல்லையா!" எனப் புலம்பிய படியே கோயில் குளத்தின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் ஜோஹிதா.
கார்த்திக்கைப் பற்றி வீட்டில் யாரிடமும் பேச முடியாது. அவனிடமே அவனைப் பற்றி கேட்டாலும் பதில் இல்லாது போனது. மற்ற யாருக்கும் அவனைப் பிடிக்காது. அவனும் சும்மா இல்லாது அவர்களுடன் மல்லுக்கு நிற்பதால் கணவனுக்கும் குடும்பத்திற்கும் இடையே சிக்கி தவித்தாள்.
ஒரு கட்டத்தில் கணவனின் பக்கம் நின்று அவனுக்கு ஆதரவாய் இருப்போம் என்றால் கார்த்திக் அவளிடம் மனம் திறக்காது இறுகி போய் இருந்தான். அவனின் அன்பை எதிர் நோக்கும் காதலியாய், அந்தக் காதலை பெற வழி தெரியாத மனைவியாய் இருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தாள் வாணி.
"நீ கார்த்திக்க புரிஞ்சிக்கல ஜோஹிதா. அதான் இங்க பிரச்சனையே. "
" ம்ச்… எனக்கு அவனைப் பத்து வர்ஷமா தெரியும். பாத்த முதல் நாள்ல இருந்து காதலிக்கிறேன். என்னை விடவா உனக்கு அவனத் தெரிஞ்சிட போது. "
"இல்ல... நான் கார்த்திய தெரிஞ்சிக்க விரும்பல. புரிஞ்சிக்க தான் சொல்றேன். நீ அவனப் புரிஞ்சிருந்தேன்னா நான் அவனோட லைஃப்ல வந்திருக்கவே மாட்டேன். "
" இப்பயும் நீ அவனோட லைஃப்குள்ள இல்ல. அதத் தெரிஞ்சிக்க. ச்ச... காசுக்காக காதல விட்டுக் குடுத்த நீ கார்த்திக்க பேசுறது தான் எனக்கு வியப்பா இருக்கு. " என எழுந்து செல்ல,
" நான் காசு வாங்கல ஜோஹிதா. கார்த்திய விலை பேசுனது உன்னோட குடும்பம். அத வாங்குனது என்னோட பெரியம்மா. நான் இல்லை. கோடியா கோடியா குடுத்தாலும் நான் கார்த்திக்க விட்டு குடுக்க மாட்டேன். யாருக்கும் குடுக்க மாட்டான்."
" அதான் எனக்குக் குடுத்துட்டியே. இப்ப நான் தான் அவனோட பொண்டாட்டி. அத மாத்த முடியாது உன்னால. " என்றபோது அதில் கர்வம் இருந்தது.
"முடியாது தான். ஆனா கார்த்தி மனசுல எனக்கு இருக்குற இடத்த யாராலயும் அழிக்க முடியாது. உன்னாலயும் முடியாது." அதை கர்வம் வாணியின் முகத்திலும் இருந்தது.
"என்னால முடியும். நான் அவனோட வைஃப். " என்க, சிரித்தபடியே சென்றாள் அவள். அந்தச் சிரிப்பு ஜோஹிதாவின் மனத்தை ஏதோ செய்தது.
' நான் நினைச்சிருந்தா இன்னேரம் நீ அவனுக்கு மனைவியாகிருக்க முடியாது.' என்றிருந்தது அந்தச் சிரிப்பு. ஆனால், அதை அவள் சொல்லவில்லை. கார்த்திக் மனத்தில் வாணிக்கென இருக்கும் இடத்தை நிரப்ப முடியாது என்பதை ஜோஹிதாவே அறிந்து கொண்டாள் வலிக்க வலிக்க, உண்மை அது தான் என்பதை உணர்ந்து கொண்டாள் ஜோஹிதா.
கார்த்திக் மனத்தை வெல்ல, வாணியை கார்த்திக்கின் காதலியாக பார்க்காது ஒரு பெண்ணாக நினைத்து பேச ஆரம்பித்தாள் ஜோஹிதா. ஆனால் வாணி அதை ஊக்குவிக்கவில்லை. ஜோஹிதாவுடன் நட்பு பாராட்ட விரும்பாது விலகியே இருந்தாள்.
எப்பொழுது கோவிலுக்கு வருபவளை அன்று காணாது போக, விடுதிக்கு தேடிச் சென்றாள். அவர்கள் அவள் மருத்துவமனை சென்றதாக சொல்ல, தேடி அங்கும் சென்றாள் ஜோஹிதா.
ஜோஹிதாவை அங்கு பார்த்ததும் வாணி அவளின் கண்ணில் மாட்டாது சென்றாள். ஆனால் ஜோஹிதா பார்த்துவிட்டாள். வாணியின் நடையில் தெரிந்த சோர்வு ஜோஹிதாவை யோசிக்க வைத்தது.
'வரக்கூடாத நோய் எதுவும் வந்திடுச்சோ. ஏன் இப்படி இருக்கு முகம்.' என அங்கிருந்த மருத்துவரிடம் வாணியைப் பற்றி கேட்க, அவர்கள் பெரிய இடியை அவளின் தலை மேல் இறக்கினர்.
வாணி கருத்தரித்துள்ளாள்.
இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியாது அழுதாள் ஜோஹிதா. குழந்த உண்டாகும் அளவுக்கு அவர்கள் நெருங்கி இருப்பார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. மனம் தணலில் இட்ட புழுவாய் வதங்கியது. வாணியைக் கார்த்திக்குடன் சேர்ந்து வைத்து பார்க்கவும் முடியாது, தனியா விட்டு விடவும் முடியாது வாணியைக் காணச் சென்றாள்.
" நீ ப்ரெக்னன்ட்டா இருக்கியா? " என்ற போது ஜோஹிதாவிற்கு குரலே வரவில்லை. அதை வாணியும் உணர்ந்து தான் இருந்தாள்.
" ஸாரி ஜோஹிதா. இத நான் உங்கிட்ட சொல்லிருக்கணும். ஆனா... நீ கார்த்திய இதுல தப்பா நினைக்காத. நான் தான் அவன்ட்ட… உரிமை எடுத்துக்கிட்டேன். ஒரு நாள் தான். ஆனா குழந்த உண்டாகும்னு யோசிக்கவே இல்ல." என ஜோஹிதாவின் முகம் பார்க்க முடியாது தடுமாறியவளை,
"எங்கூட வா." எனக் கரம் பற்றி இழுத்தாள் ஜோஹிதா.
"எங்க?"
" கார்த்திக்கிட்ட."
"எதுக்கு?"
" இது அவனோட குழந்த தான?" எனக் கோபமாக கேட்டாள்.
"ஆமா. " என்றாள் சின்ன குரலில்.
"அப்ப அவெந்தான இதுக்கு பொறுப்பு. நீ வா. முதல்ல அவன பாத்து இதப் பத்தி பேசுவோம்." என்றவனின் உடைந்த குரல் வாணியை எதுவோ செய்ய,
"என்ன பேச?"
"இந்த க்குழந்தைக்கும் அதச் சுமக்குற உனக்கும் ஒரு அங்கீகாரம் வேண்டாமா.? "
"இல்ல… என்னால அவனப் பாக்க முடியாது. "
"ஏன்? "
“உன்னோட ஹஸ்பெண்டா… என்னைப் பார்க்க முடியாம கார்த்தி உடைஞ்சி போறத நான் பாக்க விரும்பல.” என்றவள் அப்பொழுது கார்த்திக்காகப் பேசுவதைக் கண்டு ஜோஹிதாவின் உள்ளம் உடைந்தது.
“அதுக்காக அப்படியே இருந்த முடியாது. உன்னைக் கொண்டு போய் அவன் முன்னாடி நிறுத்தினாத்தான் எதாவது வழி கிடைக்கும்.”
"நான் அவன பாத்தா உங்க வீட்டுல பிரச்சன வரும். வேண்டாம். பாத்து பேசி மட்டும் என்ன பண்ண போறேன்?. "
"உன்னைக் கல்யாணம் பண்ண சொல்லி கேப்போம்." என்றவளைக் கண்டு சிரித்தாள் வாணி.
"ரெண்டு பொண்டாட்டி கதையா? உன்னால இதை ஏத்துக்க முடியுமா?"
"ஜோதி ப்ளீஸ். அவெ மனசுல நான் கிடையாது. நீ தான் இருக்க. பிடிவாதமா நான் அவனக் கல்யாணம் பண்ணிக்க போய் தான் உனக்கு இந்த நிலமை. இதை மாத்த முடியுங்கிறப்ப, ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறதுல என்ன தப்பு இருக்கு. " என்றபோது ஜோஹிதா மனத்தைக் கல்லாக்கி இருந்தாள்.
"கார்த்தி, மனசுல நீ இல்லன்னா உங்கழுத்துலா தாலி கட்டிருக்கவே மாட்டான். இப்ப அவெ உன்னோட புருஷெ. அடுத்தவ புருஷெ மேல ஆசைப் படுற அளவுக்கு நான் மோசமான பிறவி இல்ல. நீ போய் உன்னோட வாழ்க்கைய அவெங்கூட சந்தோஷமா வாழு. அவெ மனசு உன்னை ஏத்துக்க கொஞ்ச டயம் குடு. அது போதும். அவனே மாறுவான். உம்மேல இருக்குற காதல சீக்கிரம் உங்கிட்ட காட்டுவான். அதுவரை சண்டை போடாத அவன் கூட…" என கார்த்திக்குடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தச் சொல்லி அறிவுரைகள் வழங்க,
"அப்ப நீ என்ன செய்ய போற? உன்னோட குழந்தையோட எதிர்காலம் என்ன? கழுத்துல தாலியில்லாமா! வயித்துல குழந்தைய சுமந்தா உன்னைப் பாக்குறவங்க என்ன சொல்வாங்க? இப்ப நீ இருக்குற இடம் உனக்கு நிரந்தரமானதா?” என்றதும் வாணியின் முகம் யோசனையில் விழுந்தது.
ஜோஹிதா கேட்ட அனைத்தையும் நினைக்காமல் இல்லை. வழியும் கண்டறிந்து வைத்திருக்கிறாள் தான். ஆனால் அவளால் அதைச் செய்து விட முடியாது. அதனால்…
" ஜோஹிதா, எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?" எனத் தயக்கமாகக் கேட்டாள் வாணி.
" என்ன?"
"என்னைச் சின்னு கிட்ட சேத்துடுறீயா? அவெ என்னை நல்லா பாத்துப்பான். அவெ இருக்குற ஊருல இதெல்லாம் பெருசா பேச மாட்டாங்க. " எனச் சின்னுவைப் பற்றி சொல்லி, வெளிநாடு சென்று விடுவதாகக் கூறினாள்.
ஜோஹிதாவிற்கு மனம் இல்லை என்றாலும், ’என் வாழ்க்கையில் பங்கு கேட்காது. கார்த்திக்கின் கண்ணில் படாது எங்காவது சென்று வாழ்ந்தால் சரி.’ என்று சுயநலமாய் எண்ணம் தோன்ற, சரி என்றாள் ஜோஹிதா.
" எனக்கு வீசா வாங்க மட்டும் உதவி பண்ணு அது போது. எங்கிட்ட மத்தெல்லாமே இருக்கு. " என பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை காட்டினாள். ஜோஹிதா, வாணியை ருத்ராவிடம் சேர்க்கும் முயற்சியில் இறங்கினாள்.
வீட்டில் மோதல்கள் அதிகமாக கார்த்திக்கைப் பலி வாங்க விகாஸ் டில்லியில் வாணியைத் தேடி முகாமிட்டிருந்தான். அவனுக்கு ஜோஹிதா உடன் வாணி இருப்பது தெரிந்தால் என்ன ஆகும்?
இன்னும் மூன்று எபி மட்டுமே உள்ளது...
உங்களுடைய கருத்துகளை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
தொடரும் ...
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..