அத்தியாயம்: 83
உங்கள் ஊரில் அடிகுழாய் உண்டா.? அதில் தண்ணீர் அடித்த அனுபவம் உண்டா? நீளக் கைப் பிடியைக் கொண்ட அதைச் சிறு வயதில் இரண்டு பேர் மூன்று பேருடன் சேர்ந்து அடித்த நியாபகம் இருக்கிறது. இன்றும் பல கிராமங்களில் நீருக்கு இதுவே ஆதாரம்.
அதை அடித்து நீர் இறைப்பது என்பது சுலபமான காரியம் இல்ல. அதிலும் நீரற்ற வறண்ட பகுதிகளில் பல மணி நேரம் போராடினால் தான் தண்ணீரைப் பார்க்க முடியும். நீரில்லாது போக அடிக்க கணமாக இருக்கும் அது எம்பி நம்மைத் தள்ளி விடும். டமடம என இரைச்சலுடன் இருக்கும் அதில் நீரைக் கொண்டு வர வைத்து ஒரு குடம் நீரை அடித்து பிடிப்பது என்பது பெரிய டாக்ஸ் தான்.
அந்த டாஸ்கை தான் பைரவி செய்ய முயன்று கொண்டிருக்கிறாள். கைப் பிடியை எப்படி பிடித்து அடிப்பது என்றே தெரியவில்லை அவளுக்கு. அதைக் கீழே இறக்கி மேலே உயர்த்துவது. ம்ஹிம்... முடியாது முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.
"என்னடி பண்ணிட்டு இருக்க?" சாருவின் குரல் அதிர்ச்சியுடன் வந்தது. ஏனெனில் குழாயின் கைப் பிடியைக் காலுக்கு அடியில் வைத்து கடோத்கஜன் போல் நின்று கொண்டிருந்தாள்.
"ஏய்… ஏய்… சாரு. இங்க பாரேன். நான் கால எடுத்ததும் அந்தக் கைப் பிடி எவ்ளோ வேகமா மேல வருதுன்னு. " எனக் காலை எடுக்க, ஆளை அடித்து விடும் வேகத்தில் உயர்ந்தது அது. (பல தடவ அந்த கை பிடியால் எனக்கு நாடில அடி பட்ட அனுபவம் உண்டு)
" லூசா டி… அங்க என் மாமியரு பொங்க வைக்க தண்ணி வேணும்னு கத்திட்டு கெடக்கு. நீ என்னடான்னா இது கூட விளையாண்டுட்டு இருக்க. "
"விளையாடல சாரு. தண்ணி எடுக்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனா ரெண்டு அடி அடிச்சதும் என்னோட கை ரெண்டும் பயங்கரமா வலிக்கிது. " எனப் பாவமாக சொல்ல,
"உனக்கெல்லாம் யாரு டி போலிஸ் வேலை குடுத்தா. "
"ஏன் இந்த திடீர் சந்தேகம்?"
"நீ பிஸிக்கல் டெஸ்ட்டுல பாஸ்ஸானியா இல்ல லஞ்சம் குடுத்து கரெக்ட் பண்ணிட்டியான்னு தெரிஞ்சுக்க."
"ஏய் யாரப்பாத்து என்ன வார்த்த பேசுற. நான் நீதி தவறாத போலிஸ். கையூட்டெல்லாமா வாங்க மாட்டேன். குடுக்கவும் மாட்டேன். கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரின்னா அது நாந்தா. எங்க பேர்ஜ்லயே செக்கேண்டு ரேங்க்கு தெரியுமா. "
"எதுல பின்னங்கால் பிடறில அடிச்சி தல தெரிக்க ஓடுறதுலயா. "
"இல்ல. கயிறு ஏற்றதுல. லாங் ஜம்ப். ஹை ஜம்ப். புஷ்ஷப். அது நான் எவ்ளோ எடுப்பேன்னு தெரியுமா. "
" அவ்ளோ திறம இருக்குறவ இந்த குழாய அடிச்சிருக்க வேண்டியது தான. "
"இப்ப வீக் ஆகிட்டேன்டி. ஹி.. " என அசடு வழிய சிரிக்க,
"நீ வேலைல சேந்து ஒரு வர்ஷம் கூட ஆகல. அதுக்குள்ள வீக் ஆகிட்டேன் சொல்ற. " என்றவள் பைரவியின் கரத்தில் இருந்த குழாயை வாங்கி அடிக்க,
"நீ அடிச்சா மட்டும் பொதுபொதுன்னு விழுது. " என ஆச்சர்யமாக கேட்டாள் பைரவி.
"வீக்கானவங்கல்லாம் அடிச்சா தண்ணி வராது. சத்தம் நான் வரும். ஆமா எப்படி செக்கேண்ட் வந்த. "
" ஃபஸ்ட் வேற ஒருத்தி வந்துட்டதுனால நான் செக்கேண்ட் வந்தேன். " என்றவளை முறைக்க,
"சரி சரி காண்டாகாத. அப்ப இருந்த ஒரு வேகத்துல… எப்படியாது போலிஸ் ஆகிடணுங்கிற வெறில. கடுமையா பயிற்சி எடுத்துக்கிட்டேன். எனக்கு அப்ப எதுவும் பெருசா தெரியல. "
"இப்ப… "
"இப்ப இந்த அளவுக்கு வெறி இல்ல. "
"ஏன் லீவ் விட்டுட்டியா?” என்றவளை அவள் முறைக்க,
“அப்ப மட்டும் அந்த கொல வெறி. "
"அது... அந்த தயிர்சாதத்து கூட சண்ட. அத மனசுல நினைச்சிட்டே. அதோட மூஞ்சில கறிய பூசனுங்கிற வெறில எல்லாம் பண்ணேன். அதுனால தான் வேல கிடைச்சது. "
"அப்ப இப்பயும் அண்ணாவ நினைச்சிட்டே அடி. "
"ஆனா அவெந்தா இல்லையே. "
"அப்படியா… அப்ப அங்க வர்றது யாருன்னு பாரு?" எனக் கண்களால் பின்னே திரும்பி பார்க்கச் சொல்ல, பைரவியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
அங்கு மதுசூதனன் பார்த்திபன் ஸ்டீயில்லில் நடந்து வந்து கொண்டிருந்தான். அதாவது வெற்றி கொடி கட்டு படத்தில் கையில் அரிவாளுடன் வடிவேலுவை ஆடாக்கி அழைத்து வருவாறே அது போல். ராக்கியின் கழுத்தை தன் கரம் கொண்டு இறுக்கிய படி நடந்து வந்து கொண்டிருந்தான்.
"இவெ எதுக்கு இங்க வந்திருக்கான்."
" என்னடி டி டப்புன்னு அவெ இவென்ட்ட. இத்தன நாளா அவரு இவருங்கிவ. அப்படி இல்லன்னா மாமா தயிர் சாதம்னு கொஞ்சமாச்சும் மரியாத இருந்தது. இப்ப என்னடான்னா ஸ்டெயிட்டா தர லோக்கலுக்கு இறங்கிட்ட. "
"அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே. இனி எதுக்கு இவனுக்கு மரியாத... எதுக்கு வந்திருக்கான்?"
"எனக்கு எப்படித் தெரியும்! வா போய் கட்டி அணச்சி வரவேற்று விவரத்த தெரிஞ்சிப்போம். நீ கட்டி பிடி. நான் வரவேற்குறேன். " எனச் சாரு முன்னே செல்ல, பின்னே செல்ல வேண்டிய பைரவி சாருவைத் திரும்பியும் பார்க்காது நடக்கத் தொடங்கினாள், வீட்டை நோக்கி. சாரு கத்தியும் பலன் இல்லாது போக, மதுவை நோக்கி சென்றாள்.
"பாத்தியா நான் சொன்னது நடந்திடுச்சி. உனக்கு செக்கேண்ட் சான்ஸ் குடுக்க மாட்டான்னு நான் சொன்னது உண்மையாகிடுச்சி. உன்ன பாக்க விரும்பாம தலைதெறிக்க போற பாரு எந்தங்கச்சி. " என்ற ராக்கியின் வயிற்றில் குத்தி,
மது, "எல்லாம் உன்னால தான்டா. நீ மட்டும் நடுவால குட்டைய குழப்பாம இருந்திருந்தா எல்லாம் சரியாகிருக்கும். " என்றான்.
"நீ குழம்புனத விடவா! நான் குழப்பிட போறேன். " என ராக்கியும் ரோசமாக பதிலுக்கு பதில் பேசினான்.
"வாங்கண்ணா. " எனப் புன்னகையுடன் வரவேற்றாள் சாரு.
"ரொம்ப சந்தோஷம் சாரு. உனக்கு மேரேஜ் ஆனது இப்ப தான் எனக்கு தெரிஞ்சது. வாழ்த்துக்கள். " எனக் கரம் நீட்ட,
"தேங்க்ஸ் ண்ணா. " என அவள் ஏற்கும் முன் ராக்கி அதைப் பிடித்து தட்டி விட்டான்.
" எதுக்கு தேங்கஸ். இவெ என்னைக் கொல்ல போறதுக்கா. "
"கொலையா!. என்னாச்சி பாய்?" சாரு.
" என்ன நொன்னாச்சி! கருப்பசாமிக்கி அறுக்கப் போற ஆடு மாறி கூட்டு வந்திட்டு இருக்கான். நீ பாத்திட்டு சும்மா நிக்கிற. உன் நாத்தனாருக்கு வாழ்க்கை குடுக்கப் போறது யாரு?"
"நீங்க தா பாய்."
"அப்ப ஏன் என்னைப் போட்டுக்குடுத்த?"
"என்ன பாய் சொல்றிங்க! நான் போட்டுக் குடுத்தேனா? என்னென்னு? யாருக்கிட்ட?"
"இந்த மல மாடுகிட்டத்தான். டேய் ப்ளே பண்ணு டா அத. " என மதுவின் கரத்தில் இருந்து விடுபட்டவன், மதுவிற்கு உத்தரவு போட்டான். அவன் பாயை முறைக்க, பாய் அவனை முறைக்க,
"என்ன பிரச்சனை பாய்? சொல்லுங்க பஞ்சாயத்து பண்ணிடலாம். " என்றாள் சாரு.
"அப்ப வா நல்ல ஆலமரமா பாத்து உக்காருவோம். உம்புருஷன் அப்படியே அவனோட தங்கச்சின்னு எல்லாத்தையும் கூப்பிடு. காப்பாத்த வசதியா இருக்கும். "
"யார் காப்பாத்த?"
"என்னத்தாம்மா. "
"யாருக்கிட்ட இருந்து? "
"இவெங்கிட்ட இருந்து தான். "
"ஏன் பாய்?"
"ஹய்யோ... அதிகமா கேள்வி கேட்காம போம்மா." எனத் துரத்த, ஆரமரத்திற்கு வெகு தூரம் செல்ல வேண்டி இருந்த காரணத்தால் கிடைத்த ஒரு புளிய மரத்தின் அடியில் பஞ்சாயத்து நடந்தது. அதுவும் பாண்டியும் தாமரையும் குலதெய்வ வழிபாட்டில் பிஸியாக இருக்க, பஞ்சாயத்து தலைமை பொறுப்பிற்காக சாரதாவையும் அரசியையும் அழைத்து வந்தாள் சாரு.
"என்னாச்சி மது?" என அவர் கேட்டது தான் தாமதம், மது ராக்கியைக் கண்ட படி திட்டிக் கொண்டே அடிக்க, அரசி தன் வருங்கால மருமகனுக்கு ஆதரவாக வாதாடினார்.
"இந்தாப்பு என்ன நடந்ததுன்னு சொல்லு. வாய் பேசுறதுக்கு முன்னுக்க கைட்ட பேசுறது தப்பு. " என்க, ராக்கி நன்றியுடன் பார்த்தான் அவரை.
"எனக்கும் பைரவிக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சி தான். அதுக்கா இவெ எப்படி அவளுக்கு அடுத்த கல்யாணத்துக்கு மாப்ள பாக்கலாம். பத்தாததுக்கு அவாகிட்ட வேற என்னைப் பத்தி இல்லாதத எல்லாம் சொல்லி வச்சிருக்கான். இவன…" என அடிக்க வர,
"இல்லாதத யாரும் சொல்ல. நீங்க தான் ரூபிய கல்யாணம் பண்ணிக்க போறிங்கள்ல. அப்றம் என்ன? எங்க பைரவி யார கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு என்ன வந்தது?. அவளுக்கும் எனக்கும் அண்ணனா எங்க பாய் தான் இருக்காரு. அவரு அவளுக்கு மாப்ள பாக்காம வேற யாரு பாப்பா. " சாரு. தோழியின் கண்ணீருக்கான காரணமும் வலியும் தெரியும் அல்லவா. அதான் மறுமணத்திற்கு ஆதரவாக பேச, ‘அதான’ என சாரதாவும் தலை அசைத்தார்.
'நீயே ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகும் போது. உன்ன நினைச்சிட்டே அவ வாழணும்னு நீ நினைக்கிறது தப்புப்பா. ' என்பது போல் சாரதாவும் பேச,
'ஆஹா. ஆஹா. மாதர் குலத்தோட ஒட்டு மொத்த ஆதரவும் நமக்கு தான் போலயே. ' எனப் பெருமையும் ராக்கி நின்றான்.
" ரூபி கூட மேரேஜ்ன்னு இவெ சொன்ன பொய்ய நம்பிட்டு இப்படி பேசுறிங்களா?" என்றான் காட்டமாக,
"பொய்யா. " எனச் சாரு அதிர்ந்து போய் பார்க்க,
"ஆனா எங்கேஜ்மெண்ட் நடக்க இருந்தது நிஜம். இவெ செக்கேண்ட் மேரேஜ்க்கு ரெடியானதும் நிஜம். " என்றான் ராக்கி.
"ம்ச்... அது எதுவும் நிஜம் இல்ல."
"சரி... பொய் தாம்பு. நீ கல்யாணம் பண்ணிக்க ரெடியால்ல. அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற? நீ தான வேண்டாம்னு கோர்ட்டு வாசல்ல குத்தாட்டம் போட்டு வழி அனுப்பி வச்சிட்டேல்ல. இனி அவ வாழ்க்கைய அவளே பாத்துப்பா. மறுபடியும் உனக்கும் உங்குடும்பத்துக்கு வந்து சேவ செய்ய மாட்டா. " என்ற ராக்கியின் வாதம் சரியாக இருக்க, அவனை அடிக்க முடியாது கடுப்புடன் நின்றான் மது.
" நீங்க ரெண்டு பேரும் எதுனால பிரிஞ்சிங்கன்னு எனக்குச் சரியான காரணம் தெரியாது தம்பி. ஆனா அதுல எம்பொண்ணும் காரணமும்ன்னு தெரியும். அடுத்தவங்க மேல இருக்குற கோபத்துல…"
மது, "உங்க பொண்ணு செத்து ரெண்டு வர்ஷம் ஆச்சி. அதுனால தான் நான் பைரவிய விவாகரத்து பண்ணணும்னா எப்பவோ பண்ணிருப்பேன். "
"அவா வேலைக்கி போனது தான காரணம். கல்யாணத்துக்கு நீங்க போட்ட கண்டிஷன ப்ரேக் பண்ணிட்டா அதான. " என்றாள் சாரு.
"ஒரு விசயத்த நல்லா தெரிஞ்சுக்கங்கண்ணா. ஒரு பொண்ணு வேலைக்கி போக முடிவெடுத்தா அது அந்த வீட்டு ஆம்பளைங்கள அசிங்கப்படுத்துக்காக இல்ல. சிலருக்குப் பணத் தேவ. ஆனா பலரும் பணம் சம்பாதிக்க வேலைக்கி போகல. " என்றாள் சாரு ஆவேசமாக.
"அப்ப எதுக்காம். அவளோட சின்ன சின்ன தேவைய கூட பாத்து பாத்து செஞ்சிட்டு தான இருந்தேன். எனக்கு பாஸ்ட் ஃபுட் பிடிக்காது தான். ஹெல்தியானததா சாப்பிடுணும்னு எதிர்பாப்பேன். கேக், ஸ்வீட், பர்கர்னு ஜங்புட் சாப்பிட மாட்டேன். பட் அவளக் கூடாதுன்னு நான் சொல்ல. என்னோட விருப்பத்த எதையுமே நான் அவா மேல தினிச்சது இல்ல.
ஒன்னே ஒன்னு தான் செய்யச் சொன்னேன். வேலைக்கி போகக் கூடாதுன்னு. தனியா யாருமில்லாம வளந்த எனக்கு வீட்டுல எனக்காக ஒரு ஜீவன் காத்திருக்கணும்னு நினைச்சது தப்பா. ஒரு ஃபேமிலிய எதிர் பாத்தேன். தப்பா. " என்றவனின் கேள்வி நியாயம் தான்.
இருவருக்கும் இடையே சண்டை பல காரணங்களால் வரும். திருமணம் ஆன முதல் நாள் தொடங்கி அவள் கோச்சிங் சென்ற போது வரை சண்டை வந்தது நிஜம்.
வரும் சண்டையை சமாதானம் செய்யும் வழிகளை இருவரும் அறிவர். இறங்கியும் செல்வார். ஒரிரு நாள்களிலோ வாரத்திலோ சமாதானமும் ஆகியிருக்கின்றனர்.
ஆனால் பிரிவு வேலைக்கு எனக் காக்கி உடை அணிந்து கொண்டு நின்றதால் வந்தது. அதைத் தான் மது குறிப்பிடுகிறான்.
அடித்து உதைத்து கொடுமைப்படுத்தும் கணவன்களுக்கு மத்தியில் மது பொக்கிஷம் தான். ஆனால் இந்தப் பொக்கிஷத்தை விடுத்து வேலைக்கு சென்றது ஏன் என்று கேட்காது விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்று விட்டான். இல்லை செல்ல வைத்து விட்டனர்.
"ம்… பணத்துக்காக இல்லன்னா வேற எதுக்கு வேலைக்கி போகணும். " என நக்கலாக மது கேட்க.,
"நிம்மதிக்காக போகலாம். தனிமைல வீட்டுல இருக்க முடியாம தவிக்கிற தன்னோட மன ஆறுதலுக்காக போலாம். பாத்த முகத்தையே பாத்து சளிச்சி போய் ஒரு மாறுதலுக்காக போகலாம். தன்னோட திறமைய மெருகேத்திக்கவும் அதிகமாக்கிக்கவும் போகலாம். வீண் வாதத்தையும் குடும்ப பிரச்சனைகளயும் தவிர்க்குறதுக்கு போகலாம்.
உனக்கு என்ன தெரியும்னு மட்டம் தட்டுற கணவன் கிட்ட தன்னாலயும் முடியும்னு சாதிச்சி காட்ட போகலாம். என்ன அண்டி, நான் குடுக்குற காசுல தான் நீ வாழணும்னு சொல்ற ஆணாதிக்கத்துக்கிட்ட இருந்து விடுபட்டு பொண்ணுங்களும் சொந்த கால்ல நிக்க முடியும்னு இந்தச் சமூகத்துக்கு சொல்ல போகலாம்.
எல்லாத்துக்கு மேல. இந்த வீடடக் கூட்டி துடைக்க குழந்த பெத்துக்க மட்டும் தான் கல்யாணம் நடந்ததுங்கிற மாதிரி பேசுற சொந்தங்க கிட்டை இருந்தும் கணவன் கிட்டையும் இருந்தும் தன்னோட சுயமரியாதைய காப்பாத்திக்க போகலாம்.
இப்படி நிறைய காரணங்கள் இருக்கு தம்பி. பணம் மட்டும் தான் குறின்னு இல்ல. மேல சொன்ன எல்லா காரணங்கள்லயும் புருஷெ பொண்டாட்டிக்குள்ள புரிதலும் ஆறுதலும் இருந்தா பிரிவு வரவே செய்யாது. " என்றார் சாரதா.
அவர் கடையாக சொன்ன காரணம் சுயமரியாதை. அது மதுவை சிந்திக்க தூண்டியது. இதைப் பைரவி அடிக்கடி கூறுவதுண்டு. சில நேரங்களில் அது வேடிக்கையாக விளையாட்டாக வந்தாலும், பல நேரங்களில் அது வலியுடன் வரும். கண்ணீருடன் வரும். அப்போதெல்லாம் மது அவளைக் கோபமாக புறக்கணித்தானே தவிர, ஆறுதல் கூறி புரிந்து கொள்ளவோ! புரிய வைக்கவோ தவறி விட்டான். என்பது தான் உண்மை.
"வீட்டுல தான இருக்க. இத கூட செஞ்சி வைக்க மாட்டியா!"
"என்னை மாறி உனக்கு என்ன வேலையா! வெட்டியா!. வீட்டுல சாப்டு சாப்டு சுகபோகமா வாழ்ற. " என்ற பேச்சு ஒரு பெண்ணிற்கு எத்தனை வலிகளைத் தரும் என்று ஆண்களுக்கு புரியாதல்லவா!
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..