அத்தியாயம்: 87
மனிதன் அணியும்…
கொடூர முக மூடிகளில்…
ஒன்று பொறாமை…
அது நற்குணத்தை…
அழிக்கும் நோய்...
பொறாமை தான். பைரவி மீது சைந்தவிக்கு இருப்பது பொறாமை தான். முதலாவது பைரவியின் அழகு. அது பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கின் குளுமையான சுடரை ஒத்தது. அதைப் பார்ப்பவர்கள் யாரும் அவளைப் பார்த்து புன்னகைக்காது சென்றதே இல்லை. அதன் மீது பொறாமை.
தான் பத்து வார்த்தை பேசினால் தான் ஒரு வார்த்தை வரும் தந்தையின் வாயில் இருந்து. ஆனால் சிதம்பரத்திடம் பைரவி காட்டிய உரிமை அவளுக்கு எனசீ சிதம்பரம் மனத்தில் தனி இடத்தைத் தந்திருந்தது. குறும்பு சிரிப்புமாக குழந்தைதனம் மாறாத அவளின் பேச்சிற்கு அவரும் ரசிகர் தான். அதுவும் பொறாமையைக் கிளப்பியது.
எப்பொழுதும் சிடுசிடு என இருக்கும் மதுசூதனனின் முகம் பைரவி காணும் போது காதல் அலைகளை வீசுவதைப் பார்க்கையில் பற்றி எரிந்தது. அவன் தன் மனைவியைக் காதலுடன் கவனித்துக் கொள்வதை பார்க்கையில் மனம் தானாகவே தன் கணவனுடன் தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமை கொண்டது பைரவியின் மீது. அவளை அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்பது அதில் எண்ணெய் ஊற்றியது.
உருவக்கேலியில் தொடங்கி பைரவியின் ஸ்டேட்ஸ் வரை அனைத்தையும் இகழ்ந்தவளின் பொறாமைக்கு மட்டும் முற்றுப்புள்ளி என்பது கிடைக்கவில்லை.
"எனக்கு பசிக்கிது. " என நடு இரவில் கணவனை எழுப்பி விட்டாள் பைரவி.
"இப்ப தான டின்னர் முடிச்ச. " என்றான் உறக்க கலக்கத்தில்.
"அது டின்னரா. ரெண்டு சப்பாத்தி. அதுக்கு தொட்டுக்க நூறு மில்லி லிட்டர் குருமா. குருமால கேரட்ட தவிர எதுவுமே இல்ல. கேட்டா கண்ணுக்கு நல்லதுன்னு அத மட்டும் தான் தட்டுல எடுத்து வைக்கிறா. மத்த எல்லாத்தையும் அவளே முழுங்கிட்டா போல. அதுல ஒன்னு ரெண்டு உருக்கிழங்க கூட இருந்தது. அத கார்போஹைடிரேட்ன்னு சொல்லி எடுத்துக்கிட்டா. " எனக் குற்றப்பத்திரிகை வாசிக்க,
"இப்ப அவளப் பத்தி கொற சொல்லவா என்னை எழுப்பின. தூங்கு டெடி. காலைல வேலை கிடக்கு. அகாடமி கன்ஸ்ரெக்ஷன் வேற நடந்திட்டு இருக்கு. பர்மிட், எக்யூப்மெண்ட் வாங்குறதுன்னு வேலை தலைக்கு மேல இருக்கு. ப்ளீஸ் என்னைத் தூங்க விடு. நீயும் தூங்கு." எனப் படுத்துக் கொள்ள,
"தூங்குன்னா எப்படி தூக்கம் வரும். எனக்கு பசில காது ரெண்டும் அடக்க ஆரம்பிச்சிடுச்சி. இப்படியே விட்டா நான் காலைலக்குள்ள செத்து போய்டுவேன். எனக்கு இப்பவே செத்துப் போன எங்க பாட்டி கண்ணுக்கு தெரியுறாங்க. என்னைக் கூட்டீட்டுட்டு போகப் போறதா சொல்றாங்க. " என வழக்கமான வசனத்தை பேசி நடிக்க, அவன் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டான். அதை வேகமாக விலக்கியவள்.
"நீங்க நிம்மதியா தூங்குங்க. நான் எப்படி போன உங்களுக்கு என்ன. ம்… நாளைல இருந்து அகாடமி வாசல்ல படுத்து தூங்குங்க. வீட்டுக்கு வராதிங்க. நான் உங்க தங்கச்சி கூட குடும்ப நடத்திக்கிறேன். " எனக் கடுப்பு சொல்லி எழுந்து செல்ல,
"ம்ச்… இப்ப என்னடி வேணும் உனக்கு. " என்றபடி பின்னாலேயே செல்வான் அவன்.
" பசிக்கிது. " எனப் பாவமாக வயிற்றில் கையை வைத்துக் கொண்டு சொல்ல,
"ஒகே நான் உனக்கு சாலட் பண்ணி தர்றேன். "
"நான் ஆடு மாடு கிடையாது. எல்லாத்தையும் பச்சையா சாப்பிட. மனுஷி... உயிருள்ள மனுஷி. " எனக் கரங்களை கட்டிக் கொண்டு கோபமாக மொழியும் மனைவியின் மீது கோபம் தான் வருவதில்லை அவனுக்கு. அவளை வாரி அணைத்தவன்.,
"ஓகே... என்ன வேணும்னு சொல்லு நானே சமச்சி தர்றேன். " என நெற்றி முட்டி கொஞ்சல் மொழியில் பேசினான்.
"மேகி…" என விழி விரிய கேட்கும் போது சமயல்காரனாக மாறிப் போனான் மது. அடுப்பை பற்ற வைக்கும் முன்,
"இன்னைக்கி ஒரு நாளுக்கு மேகி ஓகே. பட் இது அன்ஹெல்த்தி. பாக்கெட் பண்ண ஃபுட்ல பிரிசர்வேட்டிவ்காக அதிகமா கெமிக்கல் சேப்பாங்க. " எனப் பாடம் நடத்த,
" அப்ப நான் எத சாப்பிட? ரெண்டு சப்பாத்தி. அதுவும் காலைல மாலைல ராத்திரின்னு மூணு வேளயும் என்னால அத முழுங்க முடியாது. நானா சமச்சாலும் கொண்டு போய் குப்பைல கொட்டிடுறா. எப்படி தான் சாப்பாட வேஸ்ட் பண்ண மனசு வருதோ. " எனச் சிணுங்கியவளிடம்,
"நம்ம வயிறும் குப்ப தொட்டி கிடையாது டெடி. வேஸ்ட் ஆகிடும்னு சொல்லி எல்லாத்தையும் உள்ளுக்குள்ள தட்ட. " என்ற கணவனை முறைத்து பார்த்தாள் பைரவி.
தன் ஆசை மனைவியின் கோபம் கூட அழகாய் தெரிய அவளைத் தூக்கி சமையல் மேடையில் அமர வைப்பான் மது. பவுலுக்கு மாற்றிய நூடுல்ஸை அவனே ஊட்டி விட்டு சுவைக்க என இரவு தூங்கா இரவாகும். இது தினசரியாகிப் போனது. இரவு நேர உறக்கம் அது அதிகாலையில் கோழி கூவிய பின் தான்.
தினமும் இப்படி துரித உணவு நல்லது அல்ல என்றவன் நூடுல்ஸ் மிஷினை வாங்கி வைத்தான்.
"இதுல நாமலா செஞ்சி சாப்பிடலாம். வீட், பாஸ்தா, ஸ்பெகட்டி, நூடுல்ஸ், எல்லாமே குட் ஃபார் ஹெல்த்." என்பவன், இன்னும் பல எளிய சமையல் செய்யும் பொருட்களை வாங்கி குவித்தான்.
ராக்கிக்கு ஃபோன் செய்து, "மச்சி, உன்னோட அம்மாவ எக்ஸ்ட்ரா ஒரு டிப்பன் பாக்ஸ் பேக் பண்ண சொல்ல முடியுமா. நான்-வெஜ்ஜா இருந்தா பெட்டர். " என மனைவிக்கு மதிய உணவை ஏற்பாடு செய்வான். அவனே சில ப்ரஷ்ஷான இறைச்சியை ராக்கி வீட்டிற்கு வந்து சேரும் படி ஆன்லைனில் ஆர்டரும் செய்வான்.
அப்படி வரும் உணவை ராக்கியும் பைரவியும் ஏஜென்ஸியில் உள்ள கேன்டீனில் பேசி சிரித்த படி உண்டு கழிப்பர். அசைவமாக இருந்தால் மது பக்கத்தில் இருக்க மாட்டான். சைவமாக இருந்தால் மூவரும் ஒன்றாகத்தான் இருப்பர்.
அது எப்படி சைந்தவிக்கு பொறுக்கும். பைரவியும் மதுவும் சந்தோஷமாக இருக்கின்றனர். அதிலும் ராக்கி உடன். அதனால் ராக்கியிடம் சென்று, " ரொம்ப இசியுற. அவள அவ்ளோ பிடிச்சிருக்கா உனக்கு." என ராக்கியின் முன் வழி மறித்து நின்று கொண்டு கத்த, அவன் கண்டுகொள்ளாது விலகி நடந்தான்.
தன் பின்னே பல்லைக் காட்டி நின்றவன். தன் அன்னை நிபந்தனை விதித்ததும் திரும்பி பார்க்காது சென்றவன். இப்போது அடுத்தவளுடன் நிற்கிறான், எனக் கடுகடுப்பு ராக்கி மீது எப்போதுமே உண்டு அவளுக்கு.
"எங்கண்ணனோட பைக்கு திங்ஸ் எல்லாத்தையும் உன்னோட தான் எடுத்து யூஸ் பண்ற மாறி... அவளயும். " எனப் பேசி முடிக்கும் முன் சைந்தவியின் கன்னம் பழுத்திருந்தது. ராக்கி அவளைக் கன்னத்தில் அடித்து விட்டான்.
அதைப் பெரிதாக்கி விட்டாள் சைந்தவி. ஜெயாவும் ராக்கியை வசைபாடி வேலையை விட்டு துரத்திவிடச் சொல்ல, வேலையை விட்டு செல்ல இருந்தவனை மது தான் தன் அகாடமி பார்ட்னராக்கி பொறுப்புகளை ஒப்படைத்தான். அன்றிலிருந்து ராக்கியின் வருகையும் இல்லாது போனது.
பைரவிக்கு தான் அடைத்து வைக்கப்பட்ட அறையின் ஜன்னல் மூடப்பட்டதாக தோன்றியது.
இதற்கிடையே சைந்தவியின் மகப்பேறு வேறு. பாவமாக இருந்தது பைரவியைப் பார்க்க. கணவனிடமும் புலம்புவதில்லை. புலம்பினாலும் எந்த பயனும் இல்லை. அனைத்தையும் தன்னிடத்தே அடக்கி வைத்துக் கொண்டாள்.
அன்று சைந்தவிக்கு வளைகாப்பு. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் தாய் வீட்டிலேயே இருந்த அவளை மீண்டும் தாய் வீட்டிற்கு வரவேற்க அந்த விழா எதற்கு என்று தோன்றினாலும், அதை வெளியே சொல்ல முடியாது அல்லவா. புறப்பட்டு சென்றாள் மதுவுடன்.
"என்னதிது. ஏ இப்படி கண்றாவியா சேல உடுத்துற. என்னையும் பார் என்னோட முன்னழகையும் பாருங்கிற மாறி. ஒழுக்கம்னா என்னன்னு தெரியாதா உனக்கு. " எனச் சின்ன சின்னதாக ஆறேழு மடிப்பு வைத்து அவள் கட்டும் சேலையின் மடிப்பை நான்காக மாற்றி விட்டு சென்றார் ஜெயா.
"அடுத்த மொற சேல கட்டும் போது லோ நெக்லாம் வச்சி ஜாக்கெட் தைக்காத. பாக்கவே சகிக்கல. அங்கங்க பிதுங்கிக்கிட்டு. கையா இது. இருக்கா இல்லயான்னு தேடுற மாதிரி சின்ன தான் இருக்கு. முழங்கை வர நீளமா தைக்கச் சொல்லு. எங்க பையெ நல்லா சம்பாதிக்கிறான். உன்னோட கஞ்ச புத்திய ஜாக்கெட்டு துணில காட்டாத. " என உத்தரவு வேறு இட்டார் அவர்.
கண்ணாடியில் பார்க்கும் போது பழங்காலத்து ப்ளாக் அண்டு வொய்ட் நாயகி போல் மாற்றி இருந்தார் பைரவியை. எண்ணெய் தேய்த்து இழுத்து சீவப்பட்ட சிகை, புருவங்களுக்கு மத்தியில் இல்லாது நெற்றி நடுவே ட்ராஃபிக் சிக்னல் போல் பொட்டு.
அலங்கார க்ரீம்கள் பூசக் கூடாது. இடை தெரியக்கூடாது. கை தலையணை உறை போல் முழுங்கை வரை நீளமாக இருக்க வேண்டும். கழுத்தை நெறிக்கும் அளவுக்கு ஜாக்கெட் ஏற்றி இருக்க வேண்டும். வேலை பார்க்கும் பெண்கள் அணிவார்களே அது போல் தான் தினமும் உடை அணிய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தி விட்டு சென்றவரின் மகள்களுக்கு அந்த மாதிரி எந்த விதிமுறைகளும் இல்லை போலும்.
"ஏன் உன்னோட டேஸ்டு இவ்வளோ மட்டமா இருக்கு. இன்னும் நீ அந்த வீட்டாளாத்தா இருக்க. இந்த வீட்டு மருமகளா எப்ப மாறுவ. " எனச் சைந்தவி அவள் அணியும் உடைகளை பற்றி கமெண்ட் அடிக்கும் போதும். அதுவும் மதுவின் முன்னாலேயே பேசும் போதும்.
'அது அவளின் விருப்பம். ' எனத் தனக்கான ஒரு வார்த்தை பேச மாட்டானா என்ற ஏக்கம் இருக்கும். அது ஏமாற்றத்தில் தான் முடியும். இப்படி தினம் தினம் எதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
பைரவிக்கு யாரும் பேச சொல்லித்தர தேவையே இல்ல. ஆனாலும் மௌனியானால் அவர்கள் முன். ஏனெனில்…
" டெடி எனக்கு தெரியும் உனக்கும் எங்க சித்திக்கும் செட்டாகலன்னு. பட் அவங்க இல்லன்னா இன்னேரம் நான் கிடையாது. சோ, அவங்க எது சொன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க. ஏற்கனவே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்குற என்னோட சித்தப்பா குடும்பத்து உறவு ஒரேயடியா அந்து போகுறத நான் விரும்பல. " எனத் திருமணமான முதல் நாளே பைரவியின் இதழுக்கு தன் சித்தியை எதிர்த்து பேசக் கூடாது என்ற பூட்டை போட்டு விட்டதால் அவளாலும் என்ன செய்ய முடியும்.
கணவனின் சொல் அதற்கு மதிப்பு கொடுக்க எண்ணினாள். அத்தோடு தனிகுடித்தனம். எதற்கு அவர்களை எதிர்த்து பேசி! சண்டை உண்டாக்கி குடும்பத்தைப் பிரிக்கவா என கண்டு கொள்ளாமல் இருக்க முயன்றாள்.
எனினும் மது மனைவிக்கு ஆதரவாக ஒரு சொல் சொல்லியிருந்தால் ஜெயாவின் குத்தல் பேச்சும், சைந்தவியின் இளக்காரமான செயலும் குறைந்திருக்கும். அவளின் மனதும் கணவனின் ஆதரவு தனக்கு உண்டு என்ற திடமும் வந்திருக்கும்.
அவனும் பேசாது. அவளையும் பேச அனுமதியாது இருக்க பைரவியின் மனத்தில் ஒருவித இறுக்கம் உண்டானது. பைரவிக்கு திருமண வாழ்க்கை ஆறே மாதத்தில் புளிக்க, அதைக் கனிய வைத்து இனிப்பு சுவை ஏற்ற என இறைவனாய் பார்த்து சிலரை அனுப்பி வைத்தார்.
"கமான் பையூ. நீ இல்லாம பார்ட்டியா? கம்… எனக்கு இப்ப இருக்குற ஒரே ஃப்ரெண்ட்டு நீ தான. உன்ன விட்டா யாரு இருக்கா எனக்கு?" எனக்
கொஞ்சி கெஞ்சி கேட்டாள் நிவி.
ராக்கியுடனான திருமணம் நின்ற போது நிவியின் மீது பயங்கர கோபத்தில் தான் இருந்தனர் தோழிகள் இருவரும். விஜியும் பைரவியும் தான் அந்த இருவர்.
"கொல பண்ணிடுவேன். ஏற்கனவே நீ பண்ணி வச்ச வேலைக்கி உம்மேல நான் செம்ம கோபமா இருக்கேன். இதுல உனக்கு கல்யாணம். அதுக்கு பார்ட்டி ஒரு கேடு. வை டி ஃபோன. இனி எனக்கு கால் பண்ணாத. " எனத் தன் பேச்சுலர் பார்ட்டிக்கு தோழிகளை அழைத்த நிவியிடம் விஜி கோபமாக பேசி காலை கட் செய்து விட்டு நிவி நம்பரை ப்ளாக் செய்து விட்டாள்.
"என்னடி கொற எங்கண்ணனுக்கு. உன்னால எப்படி டி மண்டபத்துல இருந்து ஓட மனசு வந்தது. உன்னால ராக்கி அண்ணாக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா. அவரு ரொம்ப வருத்தத்துல இருக்குறதா என்னோட வீட்டுக்காரர் கூட சொல்லி ஃபீல் பண்ணாரு. நீ பண்ண தப்புக்கு உங்கூட நான் இவ்வளோ நேரம் பேசுனதே தப்பு. வை ஃபோன. " எனப் பைரவி கத்த,
"பையூ... பையூ… ஒரு நிமிஷம். நான் சொல்றது மத்தவங்களுக்கு புரியாது. ஆனா உனக்கு புரியும். ஏன்னா உனக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சி. ஆறு மாசம் முழுசா முடிஞ்சிடுச்சி. இன்னேரம் உன்னோட ஹஸ்பெண்ட் வீட்டில இருக்குறவங்க குணம் உனக்கு புரிஞ்சிருக்கும். என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் மனசாட்சிய தொட்டு பதில் சொல்லு. எப்படி இருக்கு உனக்கும் உன்னோட மாமியாருக்குமான உறவு. ஓப்பனா சொல்லு. " எனக் கேட்க,
"ம்ச்... நீ பண்ண தப்ப நியாயப்படுத்தாத நிவி. "
" நான் நியாயப்படுத்தல. ஏன்னா நான் தப்பே செய்யல. முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. " என்க பைரவி யோசித்தாள்.
"பதில அவ்ளோ ஈசியா சொல்லிட முடியாது. கொஞ்சம் காம்ப்ளிகேட் தான். சுருக்கமா சொல்லணும்னா மூச்சு முட்டிடுது டி. " என்றாள் பைரவி.
"பாத்தியா! தனிக்குடித்தனம் பண்ண உனக்கே இவ்ளோ டார்ச்சர்னா. கட்டிக்கிட்டு பக்கத்துலயே வச்சிருந்தா எப்படி இருக்கும்? அதுலயும் இந்த ஆம்பள பசங்க பெரியவர்களுக்கு ரெஸ்பெக்ட் குடுக்குறேன்னு சொல்லி, நம்மல தான் அடக்குவானுங்க. அவனுங்க ரிலேஷன்ஸ எதுவும் சொல்ல மாட்டானுங்க. நம்மலயும் சொல்ல விட மாட்டானுங்க.
புருஷெங்கிட்ட இடி பட்டு மாமியார் கிட்ட தம்மோட சுயமரியாதைய இழந்திட்டு வேலக்காரி மாதிரி வீட்டு வேல பாத்திட்டு கிடந்தா எப்படி சந்தோஷமா வாழ முடியும். " என்றவள் சொன்னது என்னவோ உண்மை தான்.
ஆனால் உருகி உருகி காதலித்த ஒருவனை ஏமாற்றி விட்டு, அடுத்த மாதமே வேறு ஒருவனின் மனைவியாக ரெடியாக இருப்பது எந்த விதத்தில் சரி. அப்போ காதல் நாடகமா? அது நம் பைரவியின் புத்திக்கு அப்போது எட்டவில்லை. மாமியாரை குறை சொன்னதும் கொஞ்சம் குளுகுளுவென இருக்க, நிவியின் போதனைகளுக்கு செவி சாய்க்கத் தொடங்கினாள்.
"இப்ப பாத்திருக்குற பையன் வீட்டுக்கு ஒரே பையன். நாத்தனார் பிடுங்கள் இருக்காது. சம்பாத்தியம் முழுக்க எனக்கு மட்டும் தான். மாமியார் மட்டும் தான். அதுவும் ஆஸ்ரமத்துல தான் ரொம்ப நாளாவே இருக்கு. வெளிநாட்டு வேலை. க்ரீன் கார்டு வச்சிருக்கான். இன்டிவிஜ்வல் ஹவுஸ். காருன்னு சகளமும் இருக்கு அவன்ட்ட.
இன்னைக்கி நைட் பேச்லர் பார்ட்டி. உன்னோட ஃப்ரெண்ட்ஸ இன்வைட் பண்ணுன்னு சொல்லி பெரிய பார்ட்டி ஹாலையே எனக்காக புக் பண்ணிருக்கான். நாலு பேர் மட்டும் இருந்தா நல்லாவா இருக்கும். ப்ளீஸ் டி. எனக்காக வா. " எனக் கெஞ்சி கெஞ்சி பைரவியைச் சம்மதிக்க வைத்தாள் நிவி.
முதல் மோதலுக்கான வித்து.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..