அத்தியாயம்: 10
"நான் உங்கள மேற்கொண்டு
படிக்க வைக்கலாம்னு இருக்கேன்." என்றதும் ஆர்த்திக்கு வெடவெடத்து விட்டது.
"கல்யாணத்துக்காக
நீங்க காலேஜ்ஜை டிஸ்கண்டின்யூ பண்ணதா வெண்மா சொன்ன ஞாபகம். உங்க அண்ணனுக்கு கால் பண்ணி
உங்க சர்டிஃபிகேட்டை கொரியர் அனுப்பச் சொல்லுங்க. இங்கப் பக்கத்துல இருக்குற காலேஜ்ல
சீட்டுக்கு ஏற்பாடு பண்றேன். நிலவனோட ஃப்ரெண்டு, அந்த காலேஜ் மேனேஜ்மென்ட்ல தான் வேலை
பார்க்குறாரு. அதனால சீட் கண்டிப்பா கிடைச்சிடும். பி.எஸ்.ஸி பாட்டனி தானே நீங்க?" என்று பேசிக் கொண்டே
முன்னே செல்ல, இவள் பேந்த பேந்த முழித்தபடி நின்றாள்.
ஏனெனில் அவளுக்குப்
படிப்பு, வேம்பு போன்றது.
"குட்டிம்மா,
என்ன பண்ற நீ? வீட்டுக்கு வந்ததும் வீட்டு வேலை பார்க்காத." என்று சமையலறையில்
கரண்டியுடன் நிற்பவளிடம் கரண்டியை வாங்கிக் கொள்வான் கர்ணன்.
"முதல்ல படிப்பைக்
கவனி குட்டிம்மா. இதெல்லாம் செய்ய சித்தி இருக்காங்க. அவங்களால முடியலன்னா ஆள் ஏற்பாடு
பண்ணுவோம். இனி நீ வீட்டு வேலை பார்க்க கூடாது." என்றதற்கு,
"வேற யாரு செய்வாண்ணா?"
என்பாள் ஆர்த்தி.
"சரி... அப்படியே
செய்யணும்னா படிக்க வேண்டியதை முடிச்சிட்டு வந்து செய்." என்று கர்ணா அறிவுரை
வழங்கிய போது ஆர்த்தி பள்ளி இறுதியில் இருந்தாள்.
மங்கை, காலையில் எழுந்ததில்
இருந்து இரவு தூங்கும் வரை அவளை அதைச் செய் இதைச் செய் என்று தொணதொணத்துக் கொண்டே இருப்பார்.
இவளும் நம் வீட்டு வேலைகள் தான் என்று அவருக்கும் அவரின் மகன் மற்றும் மகளுக்கும் சேவகம்
செய்வாள்.
மங்கையின் மகள் பிருந்தாவின்
திருமணத்தில் ஓடியாடி, உட்காரக் கூட விடாது வேலை வாங்கியதையும், மறு வீட்டிற்கு என்று
வந்தளுக்கு விருந்தாக்கிப் போடவென்றும், ஆர்த்தியைச் செக்கு மாடாய் வேலை வாங்கியதைக்
கண்டவன், தங்கையைக் கண்டிக்கத் தொடங்கி விட்டான்.
அளவாக வேலை செய். முதலில்
படிப்பைக் கவனி என்று.
அவனிடம் சரி சரி எனத்
தலையை அசைத்து வைப்பவள், வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாகத் தன் சித்திக்கு காப்பி
கலந்து கொடுத்து சமையலறையிலேயே முடங்கி விடுவாள்.
அவருக்கு நான்கு வேளை
உணவும் சூடாக இருக்கவேண்டும். அவ்வப்போது அவர் கேட்கும் பதார்த்தங்களையும் உடனேயே செய்து
கொடுக்க வேண்டும். இல்லையேல் அவளின் அதிர்ஷ்டத்தைத் தான் குற்றம் சொல்வார்.
அதில் சுணங்கிப் போகும்
ஆர்த்தி, அவரின் பேச்சு சத்தத்திற்கு, மிக்ஸி கிரைண்டர் சத்தமே மேல் என்று சமையலறைக்குள்
இருந்து கொண்டு தலையைக் கூட வெளியே நீட்ட மாட்டாள்.
"ஏன் அவ்வாறு
இருக்கிறாய்?" என்ற கர்ணனிடம், "நான் எதுக்கு அண்ணா படிக்கணும். காரணம் சொல்லு
பார்ப்போம்." என்பாள் இடையில் கை வைத்து ஜம்பமாக.
"படிச்சாத்தான்
நல்ல வேலை கிடைக்கும் குட்டிம்மா. புத்திசாலித் தனமா நடந்துக்க முடியும்."
"என்னோட புத்திசாலி
தனத்துக்கு எந்தக் குறையும் இல்ல. அத்தோடு நான் எதுக்கு வேலைக்கு போகணும். அதுக்கு
தான் என்னோட புருஷன் இருப்பாரே. அவரு வேலையப் பார்ப்பாரு. நான் அவரைப் பார்த்திட்டே,
வீட்டைப் பார்த்துப்பேன்.
அவரு கொண்டு வர்றதை
வச்சித் தான் சந்தோஷமா குடும்பம் நடத்தணுமாம். அது தான் பொண்டாட்டி லட்சணமாம். அது
தெரியாம இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்படணுமாம். அதுக்குத் தான் சித்தி எனக்கு
ட்ரெயினிங் கொடுக்குறாங்க. நேத்து அப்பாக்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க.
அதுனால அவரு வேலைக்கு
போவாரு... நான் ஜாலியா வீட்டுல இருக்குற வேலையப் பார்த்திட்டு நல்லாத் தூங்கி எழுவேன்."
என்றாள்.
திருமண வாழ்க்கையில்
மனைவியின் பங்கு வீட்டு வேலைகளைச் செய்து, கணவனுக்குப் பணிவிடை செய்வது மட்டுமே என்று
நினைக்கும் பக்கா ஹோம் மேக்கர் அவள்.
அதற்காகவே அவளின் சித்தி
அவளைப் பயிற்றுவித்திருக்கிறார்.
வீட்டு வேலைகளுக்காவே
தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டவள் +2 வில் எடுத்த மதிப்பெண்கள் சொற்பமே.
கல்லூரிக்குச் செல்லவே
பிடிக்கவில்லை அவளுக்கு. ஆனால் வீட்டில் இருந்தால் மங்கைக்கு முழு நேர வேலைக்காரியாக
மாறி விடுவாள் என்று கர்ணன் வற்புறுத்தி கிடைத்த பிரிவில் சேர்த்து விட்டான்.
ஆறு மாதங்கள் வேண்டா
வெறுப்பாக கல்லூரிக்குச் சென்று வந்தாள். அந்த செமஸ்டரில் அவள் வைத்த அரியரைக் கண்டு
அரண்டு தான் போனான் கர்ணன்.
"என்ன குட்டிம்மா
இது? வெறும் 8 மார்க் தான் வாங்கிருக்க." என்று அவளின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்துவிட்டு
வாயடைத்துப் போனான் அதிர்ச்சியில்...
'வர்றதை தானே எழுதி
வைக்க முடியும். எழுதுனதுக்குத் தான மார்க்கு வரும்.' என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு
கர்ணனை ஏறிடாமல் இருக்க,
அவளின் சித்தி மங்கையோ,
"வெட்டிச் செலவு செஞ்சி இவளைப் படிக்க வைக்கிறேன்னு காலேஜுக்கு அனுப்புறதை விட,
எவன் தலைலயாச்சும் கட்டி வைக்கிறது தான் நல்லது." என்று பொறும, ஆர்த்திக்கு மாப்பிள்ளைப்
பார்க்கப்பட்டது.
"குட்டிம்மா...
இந்த வயசுல கல்யாணம் குடும்பம்னு எதுக்குப் பாரத்தை தூக்கிச் சுமக்க விரும்புற. வேண்டாம்.
நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு. அண்ணே உனக்கு இருக்கேன்." என்க,
"போண்ணா... எனக்கு
அந்த காலேஜுக்கு போக பிடிக்கல. நானே அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாருன்னு
சந்தோஷமா இருக்கேன். நீ ஏன் ண்ணா அதை கலைச்சி விடுற." என்று சண்டைக்கு நின்றாள்.
கல்லூரியா! கல்யாணமா!
என்றதற்கு... கல்யாண வாழ்க்கையே சிறந்தது என்று திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து செய்துக்
கொண்டாள்.
மகேந்திரனை அவள் தாம்பத்திய
சுகத்திற்காக திருமணம் செய்யவில்லை. அவனின் குடும்பத்தையும் அதில் அவளிடம் பாசம் காட்டி
அன்பைப் பொழியும், அவனின் உறவுகளுக்காகவும் தான் செய்துக் கொண்டாள். அதனால் தானோ என்னவோ
அவனின் இழப்பை விட, தற்பொழுது தர்மா அவனின் குடும்பத்தை விட்டு கூட்டி வந்தது அதிகம்
பாதித்தது அவளை.
அத்தோடு சில நாள்கள்
மட்டுமே வாழ்ந்த தாம்பத்தியம் அவளுக்குச் சுகிக்கவில்லை. ஏன் நினைவில் கூட இல்லை. அது
வெறும் உடல் இச்சை. அதுவும் முழுதாகத் தீர்ந்ததா! இல்லை. அந்த இச்சையும் வேட்கையும்
அவனிடம் மட்டுமே இருந்ததே தவிர, அவளுக்குள் தூண்டப்படவே இல்லை என்பது தான் உண்மை.
அவளைப் பொருத்தவரை
அவளின் ராஜ்ஜியம் அவள் இருக்கும் வீடு. அதில் அவள் தான் ராணி. தன் கொற்றவனுக்காகக்
காத்திருக்கும் மகாராணி.
அந்தப் பேரரசை நிர்வகிக்கும்
திறமையை வளர்த்துக் கொண்டவளுக்கு, ஆளும் திறமையானப் படிப்பு வரவில்லை. அவ்வளவு தான்.
எதை விட்டுத் தூரமாகச்
செல்ல வேண்டும் என்று நினைத்தாளோ... இப்பொழுது அதுவே தர்மாவின் வடிவில் திரும்பி பவுன்ஸாகி
வரும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
"என்ன நின்னுட்டீங்க?
வாங்க..." என்று அவளை முன்னே நடக்கச்
சொல்லி கைகளைக் காட்டியவன்,
"எப்படி உங்க
அண்ணனை கான்டாக்ட் பண்றதுன்னு யோசிக்கிறீங்களா?" என்க, அவள் ஆம் என்பது போல் தலை
அசைத்தாள்.
அவளின் கையில் ஒரு
ஆன்ராய்டு ஃபோனை திணித்து,
"இப்போதைக்கு
என்னால இது தான் வாங்க முடிஞ்சது. கொஞ்ச நாள் போனதும் நல்ல ப்ராண்டடு ஃபோனா வாங்கித்
தர்றேன்." என்றதும் முகம் மலர்ந்து அந்த ஃபோனை வாங்கிப் பார்த்தாள் ஆவலாக.
'தன்னை நம்பி இத்தனை
விலையுள்ள பொருளைக் கையில் கொடுத்திருக்கிறாரே.' என்ற பூரிப்பு அவளின் முகத்தில் அப்பட்டமாகத்
தெரிந்தது.
ஏனெனில் கர்ணன் வாங்கிக்
கொடுத்த ஃபோனை, "இவளுக்கு எதுக்கு இது. யூஸ் பண்ணவேத் தெரியாது இவளுக்கு. அத்தோடு
எப்படி யூஸ் பண்ணணும்னு சொல்லிக் கொடுத்தாலும் இவளுக்குப் புரியவே புரியாது."
என்று மட்டம் தட்டி பிடுங்கிக் கொண்டு, குறைந்த விலையுள்ள பட்டன் டைப் ஃபோனை ஆர்த்தியிடம்
கொடுத்தாள் பிருந்தா.
பிடுங்கப்பட்டது அது
மட்டுமல்ல, ஆயிரங்களைத் தாண்டிய விலையில் ஆர்த்திக்காக வாங்கப்படும் உடை, நகை உட்பட
அனைத்தும் தான்.
இப்பொழுது ஆறாயிரத்திற்குத்
தர்மா வாங்கித் தந்த ஃபோன் லட்சம் ரூபாய் மதிக்கத்தக்கது போல் இருந்தது ஆர்த்திக்கு.
"அது… இதுல யூட்யூப்
வருமா? அண்ணா ஃபோன்ல நான் நிறைய சமையல் வீடியோ பார்த்திருக்கேன். அதே வீடியோவை இதுலயும்
நான் பார்க்கலாமா?" எனக் கேட்க, அவளின் வெகுளித் தனத்தை ரசித்தவன்,
"ம்... பார்க்கலாம்.
ஆனா ஒரு கண்டிஷன்." என்க,
"என்ன?"
என்பது போல் புருவம் சுருக்கினாள் ஆர்த்தி.
"என்னைச் சோதனை
கூடத்து எலியா யூஸ் பண்ணக்கூடாது." என்றதும் சில நொடிகள் பிடித்தது ஆர்த்திக்குப்
புரிய.
"நீங்க சமைக்கிறதுல
எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனா அதைச் சாப்பிடச் சொல்லி மட்டும் என்னைக் கட்டாயப்படுத்தக்
கூடாது. நான் உயிர் வாழணும்ல." என்றதும் புரிந்துக் கொண்டவள் பக்கென சிரித்து
விட்டாள்.
"அந்த அளவுக்கு
மோசமா இருக்காது. நல்லாதத் தான் சமைப்பேன். ஆனாலும் நிச்சயமா உங்களுக்குக் கொடுக்கு
மாட்டேன். நிலா அண்ணாவையும் லூர்து அண்ணியையும் வச்சிக்கிறேன்... இல்லன்னா உங்க மச்சி…
எலிகளா மாத்திக்கிறேன்..." என்றாள் சிரித்தபடி.
"அப்ப உங்களுக்கு
இந்த ஃபோன் யூஸ் பண்ணி பழக்கம் இருக்கு."
"ம்..."
என்று விரிந்த புன்னகையை,
"இப்பவே கால்
பண்ணி உங்க அண்ணன்கிட்ட பேசுங்க. சர்டிஃபிகேட்டை ஃபோட்டோ எடுத்துக் கூட அனுப்பினா போதும்.
சீனியர் பார்த்துப்பாரு." என்று வடிந்தோட வைத்தான்.
"என்ன?"
"கர்ணனுக்கு கால்
பண்ணச் சொன்னேன்."
"நம்பர்?"
"நம்பர் தெரியாதா?"
என்றதற்கு, இல்லை என்று தலையசைத்தாள் பெண். அவளை உற்று நோக்கி அவன் பார்க்க, ஆறு இலக்கத்தில்
ஒரு எண்ணைச் சொல்லி,
"இது கடை நம்பர்.
எதுன்னாலும் அதுக்குத் தான் கூப்பிடணும்னு சித்தி சொல்லிருக்காங்க. நெல்லை மாமா நம்பர்
தவிர, மத்த நம்பர் நினைவுல இல்ல. நான் மனப்பாடம் பண்ணல." என்றதும், ‘இப்பொழுது
வீட்டிற்கு நான் தான் அழைத்து பேச வேண்டுமா?’ என்று அவன் தலையில் அவனே தட்டிக் கொள்ள,
"ஐயோ... உங்கள
நீங்களே அடிச்சுக்காதீங்க."
"நான் அடிக்கிறேன்னு
சொல்ல வர்றீங்களா?" என்றதும் "இல்லை" என்றவள்,
"அது… அண்ணா ஒரு
டைரி கொடுத்திருக்காரு. சின்னது. அதுல எனக்குத் தெரிஞ்சவங்க நம்பர் எல்லாத்தையும் எழுதி
வச்சிருக்கேன். வீட்டுல... என்னோட பெட்டில இருக்கு அது."
"அப்ப வீட்டுக்குப்
போய் கால் பண்றேன்னு சொல்றீங்க!" என்றதற்கு ஆம் எனப் பெரிதாகத் தலை அசைத்து விட்டு
ட்ராலியைத் தள்ளிக் கொண்டு நகர்ந்தாள்.
குழலி நம்பரைக் கொடுத்து
கர்ணனின் நம்பரை வாங்கச் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் நடையின் வேகம் கூடியது.
அவன் கவனம் அரிசி உள்ளிட்ட
அத்தியாவசிய பொருள்கள் பக்கம் திரும்பியதும், அப்போதைக்குத் தப்பித்து விட்ட நிம்மதியில்
பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டாள் ஆர்த்தி.
ஏனெனில் திருமணமான
புதிதில், "எங்க சின்னண்ணே சூப்பரா படிக்கும். சூப்பரா விளையாடும். ஃபுட் பால்...
பெரிய அண்ணனும் சின்ன அண்ணனும் சேர்ந்து நம்ம ஊருலேயே நிறைய போட்டில கலந்துப்பாங்க.
கப்பு கப்பா வாங்கி அடுக்கி வச்சிருக்காங்க. பாருங்க..." என்று குழலி தன் அண்ணன்களின்
மலரும் நினைவுகளையும், சாதனைகளையும் எடுத்துரைத்துப் புகைப்படங்களையும் காட்டினாள்.
அப்போது தர்மேந்திரனின்
10 மற்றும் +2 மதிப்பெண்கள் கண்ணில் பட்டது. மொழி பிரிவு தவிர்த்து மற்ற அனைத்திலும்
சதமடித்திருந்தான் தர்மா.
'அடியாத்தி... சின்ன
மாமா பயங்கர படிப்ஸ்ஸா இருப்பாப்ல போலயே. இவுக கிட்ட இருந்து தூரமா இருக்குறது தான்
நமக்கு நல்லது. இல்லன்னா குழலிக்கு டியூஷன் எடுக்குற மாதிரி தலைல தட்டி, என்னையும்
புக்கோட உட்கார வச்சிடுவாரு.' என நினைத்துக் கொண்டாள்.
தர்மா ஊருக்கு வரும்
போதெல்லாம் குழலிக்குப் பாடத்தில் இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பது வழக்கம்.
தலையில் தட்டித் தட்டி
சொல்லிக் கொடுப்பவனைப் பார்த்து மிரண்டு ஓடியிருக்கிறாள் அவள்.
இப்பொழுதும் ஓடிக்
கொண்டு தான் இருக்கிறாள் அவனின் பின்னால் தான்.
"சமையலுக்கு என்னென்ன
பாத்திரம் வேணும்ங்க. அங்க ப்ளாஸ்டிக் டப்பாக்கள் இருக்கு. அங்க குக்கர், தட்டு, கடாய்னு
சமையல் பாத்திரம் இருக்கு." என்று ஆர்த்திக்குக் கைக் காட்ட,
"ஆறு மாசம் தானே
இருக்கப் போறேன்... ரொம்பல்லாம் வேண்டாம். தேவைக்கு மட்டும் வாங்கிக்குவோம்."
என்றவள் அவனுக்குச் செலவுகளை இழுத்து வைக்காது, சிக்கனமாகப் பார்த்து பார்த்து மசாலாப்
பொருள்களைப் போட்டு வைக்க சில பல டப்பாக்களை எடுத்து வைத்தாள். கூடவே இருவருக்கு மட்டும்
பண்ட பாத்திரங்களை எடுத்து வைத்தாள். தேவைக்கு மீறி எதுவும் எடுக்கவில்லை.
அது விலையில் குறைந்த
போதும், தரத்தில் நன்றாக இருந்ததைக் கண்ட தர்மா, அவளை மெச்சிக் கொண்டான்.
வாங்கியப் பொருட்களுக்குப்
பணத்தைக் கட்டி விட்டு, ட்ராலியில் உள்ள பொருள்களை காரில் ஏற்றினர் இருவரும்.
அருகில் உள்ள உணவகத்தில்
உணவிற்காகச் சென்று அமர்ந்தனர்.
முழுச் சாப்பாட்டை
ஆர்டர் செய்து விட்டு, ஆர்த்தியின் எதிரில் அமர்ந்த தர்மா, ஃபோனில் தியாவுடன் சாட்
செய்யத் தொடங்கினான்.
காலையில் இருந்து கிடைக்கும்
நேரத்தில் எல்லாம் குறுஞ்செய்திகளுடன் தன் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறான் போலும்.
அவனின் முகம் பார்ப்பதும்
பின் குனிந்துக் கொள்வதுமாக ஆர்த்தி இருக்க,
"ஆர்த்தி..."
என்று அழுத்தமாக அழைத்தான் தர்மா.
முதல் முறை அவளின்
பெயரைச் சொல்லி அழைக்கிறான். அது ஒரு வித சிலிர்ப்பைத் தந்தது அவளுக்கு.
விருட்டெனத் தலை தூக்கியவள்,
என்ன என்பது போல் பதற, ஃபோனை அணைத்து மேஜையில் வைத்தவன்,
"எதுவா இருந்தாலும்
என்னோட முகம் பார்த்து தைரியமா பேசணும். எனக்கு இது வேணும், வேண்டாம்னு உங்க மனசுல
படுறதை என் கண்ணைப் பார்த்துச் சொல்லணும். என்ன நினைக்கிறீங்கன்னு எங்கிட்ட ஷேர் பண்ணணும்.
இதை நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் உங்க கிட்ட." என்றான் மெல்லிய குரலில் அழுத்தமாக.
பின், "என்ன கேட்கணும்?"
என்று மென்மையாகக் கேட்க,
"அது... சமைக்க
பாத்திரம் வாங்கியாச்சி. பலசரக்கு வாங்கியாச்சு. காய்கறி..." என்று இழுக்க, அவன்
சிரித்தான்.
ஏனெனில் அங்கு இருந்த
காய்கறிகளை அவன் காட்டிய போது, "அது… இது எதுவுமே நல்லா இல்ல. பழசா இருக்கு. ஃப்ரெஷ்ஷான
காய்கறி கிடைக்காதா? இதை வாங்குனா காசு தான் வேஸ்ட் ஆகும். கூடவே நம்ம ஹெல்த்தும் வேஸ்ட்டாகும்."
என்று வாங்க மறுத்து விட்டாள்.
இப்பொழுது இரவு உணவிற்கு
வேண்டுமே என்று அவள் கேட்க,
"இங்க ஈவ்னிங்
சந்தை போடுவாங்க. வாரத்துல ரெண்டு நாள் நடக்கும். ஃப்ரெஷ்ஷாவே வாங்கிக்கலாம்."
"ம்..."
என்றாள் புன்னகையுடன்.
சில நொடிகளில் உணவு
பரிமாறப்பட, ஆர்த்தி அதை வாயில் வைத்து மெல்ல அசை போட்டு சுவைத்து உண்டாள்.
நேற்று இரவும் அப்படித்தான்
உண்டாள். மெதுவாக... ஒரு ஒரு கவளம் உணவாக மெல்ல சுவைக்கப்பட்டது, உள்ளிறக்கியது, அவளின்
உதடுகள்.
இதற்கு முன் இப்படி
மெதுவாக உண்டு, மகேந்திரன் அவளைத் திட்டியது நினைவிற்கு வந்தது.
“எப்பவுமே இப்படித்
தான் சாப்பிடுவீங்களாங்க?” என்றதற்கு,
“ம்…” என்றவள் அந்த
உணவில் என்னென்ன சேர்த்திருக்கின்றனர் என்பதைச் சுவையை வைத்து துல்லியமாகக் கூறினாள்
அவள். அது அவனின் புருவங்களை உச்சு மேட்டிற்கு ஏற்றி வியப்பைத் தந்தது.
சமையலில் அவளுக்கு
உள்ள ஈடுபாட்டை உணர்ந்தவன்.
“சமைக்க அவ்வளவு பிடிக்குமாங்க?”
“ம்… அதை விட என் சாப்பாட்டை
யாராவது விரும்பி சாப்பிட்டா… சாப்பிடுறவங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” என்றவள், தான்
என்னென்ன சமைப்பேன் என்பதை பட்டியல் போட்டுக் கூறி, அதன் சுவையையும் விளக்கமாக கூறினாள்.
அனைத்தும் கொங்கு மற்றும்
நெல்லை பக்கத்து உணவுகள். மேலை மற்றும் வட நாட்டு உணவுகள் சமைக்க ஆவல் என்று தன் விருப்பத்தைக்
கூற, அதைத் தன் மனத்திற்குள் குறித்துக் கொண்டான்.
சில பல பேச்சுக்களுக்குப்
பின் மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்களை வரவேற்கவென
ஹர்ஷிதாவும், வினய் என்ற சிறுவனும் காத்துக் கொண்டு நின்றனர்.
காரில் இருந்ததை வீட்டிற்கு
எடுத்துச் செல்ல நிலவன் உதவிக்கு வந்தான்.
“நீ ஏம்மா தூக்குற…
அதுக்கு இந்தத் தடிமாடு இருக்கான். டேய் தூக்கிட்டு போடா…” என்று தர்மாவிற்கு உத்தரவு
போட,
“இதெல்லாம் ரொம்ப ஓவர்
சீனியர்.” என்று முணுமுணுத்துக் கொண்டே எடுத்துச் சென்றான் தர்மா.
மூவரும் வாங்கி வந்ததை
அதனதன் இடத்தில் வைக்க,
வீடு இப்பொழுது ஒழுங்கு
படுத்தப்பட்டது.
பேச்சுலர் வீடு… ஃபேமிலி
மேனுக்கான வீடாக மாற்றம் கண்டது.
அதே மாற்றம் அவனின்
வாழ்க்கையிலும் வருமா??
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..