அத்தியாயம்: 12
இங்கு, மொட்டை மாடியில்
நிலவனுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான் தர்மா.
"என்ன சீனியர்
இதெல்லாம்? ஏன் இப்படிப் பண்ணி வச்சிருக்கீங்க?" என்று ஆத்திரம் பொங்கக் கத்தினான்
அவன்.
அவனுக்கு வீட்டை அலங்காரம்
பண்ணியது மட்டுமல்ல, இருவரையும் ஆலம் சுற்றி வரவேற்றது பிடிக்கவில்லை. ஆர்த்திக்கு
கோவிலில் வைத்து தாலி கட்டி தம்பதியினராக வீட்டிற்கு அழைத்து வந்த போது கூட, தர்மா
ஆலம் சுற்றுவது போன்ற சடங்குகளை நிராகரித்திருந்தான்.
அந்தச் சடங்குகள் எல்லாம்
ஆர்த்தியைத் தன் மனத்தில் மனைவியாக உருவகப்படுத்தி விடுமோ என்ற பயத்தின் காரணத்தால்.
ஆர்த்தியை மனையாளாக
ஏற்க கூடாது என்று பிடிவாதத்துடன் இருப்பனுக்கு, இன்று நிலவன் செய்தது உவர்ப்பாக இல்லை.
‘எப்படி ஆர்த்தியை
எதிர்கொள்வது. நண்பன், நட்பு என்று சொல்லித் தானே இங்கு அழைத்து வந்தேன். என் நட்பு
வட்டம் இப்பொழுது என்னையும் ஆர்த்தியையும் கணவன் மனைவி போல் பார்ப்பதும், பேசுவதும்…
ச்சே …’ என்று மனம் தீயாய்ச் சுட்டது.
அவனின் நண்பர்களுக்கு
எதுவும் தெரியாமல் இருந்திருந்தால் கூட ஆர்வக்கோளாறு என்று ஏற்றிருப்பான். அவர்களுக்கு
அனைத்தும் தெரியும்.
தியா மீதான காதல் முதல்,
ஆர்த்தியுடன் நடந்த கல்யாணம், அவளை அழைத்து வந்த சூழ்நிலை வரை அனைத்தையும் அவர்களிடம்
பகிர்ந்திருக்கிறான்.
அவனே சூழ்நிலைக் கைதியாக
சுழன்றுக் கொண்டிருக்கும் போது ஆர்த்தியை அவனின் மனைவியாக்க முயலும் இவர்களின் பேச்சு
வலியைத் தந்தது.
தன்னை ஏமாற்றிய தன்
குடும்பம் போல், இவர்களும் அந்தக் கல்யாணத்தை ஏற்கச் சொல்வது மனத்தில் பாரம் ஏற்றியதைப்
போல் இருந்தது.
"என்னால அவங்கள
மனைவியா ஏத்துக்க முடியாதுன்னு நான் அவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க இந்த மாதிரி ஏன்
ஏற்பாடு பண்றீங்க சீனியர்?" என்று கடிந்துக் கொண்டிருக்க,
"எத்துக்க முடியாதவன்
எதுக்கு இங்க கூட்டிட்டு வரணும்?" என்றபடி வந்தாள் லூர்து. அவனுக்கு நிகரான கோபம்
அவளிடம் இருந்தது. அவளிடம் மட்டுமல்ல சுலேகாவிடமும் தான்.
"ப்ளாக்மெயில்
பண்ணி, விருப்பமில்லாம வேணும்னா நீ ஆர்த்திக்குத் தாலி கட்டிருக்கலாம். ஆனா இப்ப இங்க
விருப்பப்பட்டு தான் நீ அவளைக் கூட்டிட்டு வந்திருக்க. வேற யார் சொல்லியும் இல்ல."
எனச் சுலேகாவும் மல்லுக்கு நிற்க,
"விருப்பப்பட்டுலாம்
கூட்டிட்டு வரல மச்சி.”
“அப்புறம்…”
“அனுதாபப்பட்டு."
“அது எதுக்கு நீ அவ
மேல படணும். நீயே சூழ்நிலை கைதி தானே. விட்டா போதும்னு ஓடி வந்திருக்க வேண்டியது தானே.
எதுக்கு அவ மேல அனுதாபப்பட்டு கூட்டிட்டு வரணும்?”
“மச்சி... அதை உங்கிட்ட
எப்படிப் புரிய வைப்பேன்.” என்று தர்மா திணற,
"அனுதாபமோ! அக்கறையோ!
எது வேணாலும் பட்டுக்க தர்மா. இப்ப ஆர்த்தி உன்னோட பொறுப்பு. உங்க ரெண்டு பேருக்குள்ள
இப்ப கணவன் மனைவிங்கிற உறவு இருக்கு. அந்த உறவுக்கு மதிப்பு கொடு." என லூர்து
கட்டளையாகச் சொல்ல,
"ஐயோ... எத்தனை
தடவைச் சொல்லறது. அவங்கள என்னோட மனைவியா ஏத்துக்க முடியாதுன்னு." எனக் கத்தியே
விட்டான் தர்மா.
பிறகு ஏன் அவளை அழைத்து
வந்தாய் என்ற வினாத் தொடுத்து நின்றனர் மூவரும்.
ஏனெனில் முதல் திருமணம்
நூறு நாள்களுக்குள் முடிவுக்கு வந்து விட்டது. இரண்டாவதாக செய்து வைத்த திருமணத்தில்,
தர்மா, ஆர்த்தியைத் தள்ளி வைத்து விலகி இருந்தாலே முடிவுக்கு வந்திருக்கும்.
'தாலி கட்டினவன் இவளைத்
திரும்பிக் கூடப் பார்க்காம பட்டணத்துக்குப் போய் உட்கார்ந்துக்கிட்டான்.' என ஊர் வம்பு
பேசினாலும் இருவரின் உறவையும் ஒட்டு மொத்தமாக வெட்டி விட்டிருக்கும்.
அதை விடுத்து, இவன்
ஆர்த்தியை அழைத்து வந்திருக்கிறான் என்றால், அது ஆர்த்தியின் ஒழுக்கத்தைத் தான் குறை
சொல்லும்.
“இவளுக்கு கட்டுனவனை
திருப்திப் படுத்த தெரியாது போல. அதான் குடும்பம் நடத்தி பார்த்திட்டு தேறாதுன்னு விட்டுட்டு
போய்ட்டான்.” என்று தானே ஊர் சொல்லும்.
அவர்களிடம் சென்று
நாங்கள் நட்பாக, நண்பர்களாக எவ்வித உடல் ரீதியான தொடுகை இல்லாது வாழ்ந்தோம் என்று அவர்களின்
உறவை யாரிடம் சென்று விளக்கினாலும் சேற்றைத்தான் வாரி இறைக்கும். அதுவும் இருவரின்
மீது அல்ல. ஆர்த்தி மீது மட்டும் தான் கறை படியும். அதைத் தான் மூவரும் வேறு வேறு விதமாகக்
கூறினார்.
"அவங்க வீட்டுல
இருக்குற ஆளுங்க அவங்கள ராசி இல்லாதவனு சொல்லிச் சொல்லியே முடக்கப் பார்க்குறாங்க மேரி.
தற்கொலை பண்ணிக்கத் தூண்டுறாங்க. அவங்க அதுல இருந்து வெளிய வரணும்னு தான் அழைச்சிட்டு
வந்தேன். அவங்களப் படிக்க வச்சி, அவங்களுக்குன்னு சொந்தமா முடிவெடுக்குற தைரியத்தை
வளர்த்து விட்டுட்டு, அப்புறம் அவங்க வீட்டுலயே கொண்டு போய் விட்டுடுவேன்." என்று
ஆர்த்தியிடம் கூறியதை இவர்களிடமும் கூறினான்.
"கொண்டு போய்
விட்டுடுவீயா! அப்புறம் அந்தப் பொண்ணோட நிலைமை. இருபது வயசுல தனி மரமா நிப்பாளே அவ.
அதுவும் அத்தனை பேரோட ஏச்சுப் பேச்சையும் கேட்டுட்டு." என லூர்து ஆதங்கத்துடன்
பேச,
"அப்படிலாம் விட்டுட
மாட்டேன் மேரி. நல்ல பையனா பார்த்து… கல்யாணம் பண்ணி வைப்பேன்." என்றவனைப் பைத்தியமா
நீ என்பது போல் பார்த்தனர் மூவரும்.
"கல்யாணம் பண்ணி
வைக்கப் போறீயா? அதுக்கு நீ அவளை இங்க கூட்டிட்டு வராம இருந்திருக்கணும். 'எப்படியும்
போ.'ன்னு ஊர்லயே விட்டிட்டு வந்திருந்தா ‘செத்துப் போன மகேந்திரனோட பொண்டாட்டிய ஏத்துக்கிட்டு
வாழ மனசில்லாம விட்டுட்டு போய்ட்டான்’ங்கிற குத்தல் பேச்சோட முடிஞ்சிருக்கும்."
என்றாள் மேரி.
"இவரு கார் பிடிச்சி
கூட்டிட்டு வருவாராம். ஆறு மாசம் ஒன்னா தங்கியிருந்து, படிப்பு சொல்லிக் கொடுத்திட்டு
திருப்பி அனுப்புவாராம். கூடவே நல்...ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பானாம்.
கேலிக் கூத்தா இல்ல இது? எவன் ஏத்துப்பான் ஆர்த்திய?" என்று சுலேகா கோபமாகச் சொல்ல,
"ஏத்துக்கிற மாதிரி
ஒருத்தனை கல்யாணம் பண்ணி வைப்பேன். அதுவும் அவங்க விருப்பப்பட்ட பையன் கூடத் தான் நடக்கும்…”
என்றவனின் மீதிருக்கும் பார்வையை மூவரும் மாற்றாது பார்க்க,
“வர்ற பையன் கிட்ட
நடந்த எல்லாத்தையும் சொல்லி, ரெண்டு வீட்டு சம்மதத்தோட நடத்தி வைப்பேன்." என்றான்
தர்மா சிறிய குரலில்.
அதுவே சொல்லியது அது
அரங்கேறாது என்று.
"ஒரு ஆம்பள கூட,
அதுவும் அண்ணன் கூடச் சில நாளே வாழ்ந்த ஒருத்திய, தம்பியான நீயே மனைவியா ஏத்துக்க தயங்கும்
போது… அண்ணன் தம்பின்னு ரெண்டு பேரும் கட்டி விட்ட தாலிய கழட்டிக் கொடுத்திட்டு மூனாவதா
கட்டுற தாலிய ஏத்துக்கிட்டு, அவன் கூட எந்தவிதமான உறுத்தலும் இல்லாம குடும்பம் நடத்தச்
சொல்றீயா?
அவன் ஆர்த்திய ஏத்துப்பான்னு
எப்படி நம்புற தர்மா? அவன் கூட ஆர்த்தி சந்தோஷமா வாழ்வானு உன்னால உத்திரவாதம் தர முடியுமா?"
எனப் பெண்கள் இருவரும் தர்மாவைச் சரமாரியாகக் கேள்விகளால் தாக்குதல் நடத்தினர்.
அப்பொழுதும் அவன் ஆர்த்திக்குப்
பொருத்தமான ஒருவனைக் கொண்டு வருவேன் என்று வாதாட, அவர்களும் ஆர்த்தியை ஏன் உன் மனைவியாக
ஏற்க மறுக்கிறாய் என்று வாதாடினர்.
“இங்க மறுமணம்கிறதே
பெரிய புரட்சி தான் தர்மா. ஆணுக்கு அது ரொம்ப ஈசியா நடந்திடும். ஏன்னா அவன் ஆம்பள.
அவன்கிட்ட இந்தச் சமூகமும் அவனைக் கட்டிக்கிற பொண்ணும் செக்ஸ்வல் ஸ்டேட்டஸ் பார்க்காது.
ஆனா ஒரு பொண்ணுக்கு… ஏற்கனவே ஒருத்தன் கூட படுத்தவ தானேன்னு யூஸ் பண்ணிக்கத்தான் பார்க்குமே
தவிர, கௌரவமா வாழ வைக்காது. வாழவும் விடாது. ஆயிரம் குத்தல் பேச்சு வரும். அந்தப் பேச்சு
பேசுறதை அவளுக்கு தாலி கட்டின புருஷனா கிடைச்சா… வேதனை தர்மா. இதுக்கு நீங்க அவளை சாகட்டும்
விட்டிருக்கலாம்.” என்றாள் சுலேகா. கனத்த மௌனம் நிலவ,
"உங்களுக்குத்
தியாவைப் பத்தித் தெரியும் தானே. அவ எம்மேல வச்சிருக்க காதலுக்காகக் கைய அறுத்திட்டு
சூசைட் வரைக்கும் போனவ. அவளை எப்படி விட்டுட்டு வரமுடியும்." என்க,
"தியா, உன்னோட
காதலி தர்மா. ஆனா ஆர்த்தி, உன்னோட மனைவி. அதை ஞாபகம் வச்சுக்க." என்று விட்டு
பெண்கள் கோபமாகக் கடந்துச் செல்ல,
"எல்லாக் காதலிக்கும்
மனைவிங்கிற அங்கீகாரம் கிடைச்சிடாது தர்மா. ஆனா எல்லா மனைவிக்கும் கணவனோட காதலிங்கிற
அங்கீகாரம் கிடைச்சே தீரணும். அப்பத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். நானும் காதலிச்சிருக்கேன்
தான். ஆனா ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டிட்டு வேற ஒருத்திய காதலிக்க மாட்டேன்."
என்று விட்டு நிலவன் சென்றான்.
யாருமற்ற மொட்டை மாடி,
அவனுக்கு ஆயாசத்தைத் தந்தது.
அவர்களின் கூற்றில்
இருக்கும் சில நியாயங்கள் அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது.
ஆனாலும்…
என்ன முடிவு எடுப்பது
என்று தெரியாமல் தானே அவன் திண்டாடிக் கொண்டிருக்கிறான். இதில் அவனின் குடும்பம் மட்டுமல்லாது,
நண்பர்களும் சேர்ந்துக் கொண்டது வருத்தம் தான். ஆயினும் ஆர்த்திக்கும் தனக்குமான உறவு
என்னவென்பதற்கான முடிவைச் சட்டென எடுக்க விரும்பாது அதைக் காலத்திடம் தூக்கிக் கொடுத்து
விட்டு கீழே இறங்கினான்.
வீட்டை அடைந்த போது,
மூவரும் ஆர்த்தியின் கை மணத்தைப் பாராட்டியபடி உண்டுக் கொண்டிருந்தனர்.
மூவரையும் சின்னக்
கேலிச் சிரிப்புடன் பார்த்தவன், நிலவனுக்கு அருகில் வந்து அமர்ந்தான்.
"கோபிச்சிட்டு
போய்டுவீங்கன்னு நினைச்சேன். இப்படிச் சாப்பாட்டுக்கு முதல் ஆளா வந்து உட்கார்ந்திருப்பீங்கன்னு
நினைச்சு பார்க்கல சீனியர்!" எனக் கேலி செய்ய,
"உம்மேல கோபமாத்தான்
இருக்கோம். ஆனா ஆர்த்தி பாவம். நாளைக்கு அவளை கை விட்டுட்டு தியா பின்னாடியே போய்ட்டாலும்
அவளுக்கு நாங்க இருப்போம். அண்ணனா... அண்ணியா… அக்காவா... உங்க உறவுல மாற்றம் வந்தாலும்…
எங்க உறவுல எந்த மாற்றமும் இருக்காது." என்றான் நிலவன் நக்கலாக.
அவன் கூறியது போல்
மூவரும் ஆர்த்தியுடன் நன்கு அளவளாவி விட்டு இவனிடம் மட்டும் உஷ்ணப் பார்வையைப் பரிமாறி
விட்டுச் சென்றனர்.
வீடு இப்பொழுது இருவருக்குமானதாய்
மாறியது.
அறையில் ஆர்த்திக்கான
மெத்தையைப் போட்டவன், ஹாலில் தனக்கானப் பாயை விரிக்க, அவள் சமையலறையை ஒதுக்கிக் கொண்டிருந்தாள்.
எட்டி பார்த்தான்...
அவள் ஈரத் துணியால் மேடையைத் துடைத்து எடுத்து, துணியை அலசி அங்கிருந்த கம்பியில் உலரப்
போட்டு விட்டுத் திரும்பினாள்.
அவன் நிற்பதைக் கவனியாது
திரும்பியவள், அவனைக் கண்டதும் சின்னப் பயத்துடன் தலை தாழ்த்திக் கொண்டாள்.
"கர்ணாக்கு கால்
பண்ணீங்களா?" என்றபடி அவளைக் கடந்துச் சென்று டம்பளரில் தண்ணீரைப் பிடித்துத்
தொண்டைக்குள் சரிக்க, அவளிடம் பதில் இல்லை.
"ஒரிஜினல் கூட
அப்பறமா கொரியர் அனுப்பச் சொல்லுங்க. இப்போதைக்கு மார்க் ஷீட் போட்டோ வேணும். டிசி
வேணும்." என வரிசையாக கல்லூரியில் அவளைச் சேர்ப்பதற்கான சான்றிதழ்களை அடுக்க,
"காலைல... கால்
பண்ணி... பேசவா? இப்ப எனக்கு டயர்டா இருக்கு…" எனத் தட்டுத் தடுமாறி சொல்லி விட்டாள்.
அவன் அவளை முறைத்துப் பார்க்க, அவள் அவஸ்தையாய் முழித்தாள்.
“நிலவன் கிட்ட மட்டும்
முகம் கொடுத்து நல்லா பேசுனீங்க. ஏன் எங்கிட்ட மட்டும் நிமிரவே மாட்டேங்கறீங்க?” என்ற
சந்தேகத்தைக் கேட்டு விட்டான். சில நிமிடங்கள் பதில் இல்லாது போக, அவன் வழியை மறைத்தபடி
நின்றுக் கொண்டு, பதில் கொடுத்தால் பாதை கிடைக்கும் என்ற ரீதியில் நின்றுக் கொண்டான்.
“அது… அது… அவரு அண்ணா…”
“அப்ப நான்…” என்றபோது
அவனின் குரலில் சுவாரஸ்யம் கூடி இருந்தது.
அவளின் தயங்கிய பேச்சும்,
பதறி உருட்டி முழிக்கும் முழியும், அவனுக்கு அவளைச் சீண்டத் தூண்டியது.
"அது…" என்று
இழுவையுடன் அவள் ஆரம்பிக்கும் பேச்சு, ரசிக்க வைத்தது.
“ம்… சொல்லுங்க… நான்…”
“அது… ஃப்ரெண்ட்டு…”
என்றாள் சத்தம் வராத குரலில். மெல்லச் சிரித்தவன்,
“தெளிவாத்தான் இருக்கீங்க.
நாம தான் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே. ஃப்ரெண்ட்ஸ் சகஜமா பேசிப்பாங்க. நீங்களும் என்கிட்ட சகஜமா
பேசலாமே!”
“அது... அண்ணாக்கிட்ட
பேசுறது தான் பிடிச்சிருக்கு.”
“அப்ப ஃப்ரெண்டு கிட்ட?”
“எனக்கு ஃப்ரெண்ட்ஸ்
கிடையாது. அதுவும் பசங்க ஃப்ரெண்டா... கிடையவே கிடையாது.”
“அப்பாடா இதுலயாவது
உங்களுக்கு நான் தான் ஃபர்ஸ்ட்டா இருக்கேன்.” என்றதும் மனம் சட்டென சுருங்கியது ஆர்த்திக்கு.
கணவனாக அவனை ஏற்காத
போதும் அவள் கழுத்தில் தொங்கும் தாலி அவனைத் தான் கணவனாக அடையாளப்படுத்தியது.
அதை ஏற்பதா வேண்டாமா
என்ற இரட்டை நிலையில் இருப்பவளுக்கு, தர்மாவின் 'இதுலயாவது நான் தான் ஃபர்ஸ்ட்டா இருக்கேன்.'
என்ற பேச்சு சுருக்கென்றது.
'எங்கழுத்துல ரெண்டாவதா
தாலி கட்டுனதைப் பத்தித்தான் குத்திப் பேசுறாரோ…' என்று உள்ளுக்குள் நினைக்க, அதைப்
படித்தவன்.
“ஸாரிங்க… நான் எந்த
அர்த்தத்தையும் மறைச்சி வச்சி பேசல. உங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு கிடைத்ததுங்கிற
மீனிங்ல தான் சொன்னேன். உங்கள காயப்படுத்திருந்தா சாரி…” என்றவனுக்கு ஏன் மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரியாது
தானாக வந்து விழுந்தது வார்த்தை.
அவளின் வாட்டம் அவனுக்குள்
வலியைத் தர, அவளிடம் அக்கறையை அதிகமாகக் காட்டினான்.
காதலின் முதல் நிலை,
ஏனென்றே தெரியாத… முன் பின் அறிந்த, அறியாத… பேசிப் பழகிய, பழகாத… நபரின் மீது முளைக்கும்
காரணமற்ற அக்கறை தான்.
அந்த அக்கறை தர்மாவிற்கு
ஆர்த்தியின் மீது அதிகமாகவே இருந்தது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..