அத்தியாயம்: 16
மனத்தின் எங்கோ ஓர்
ஓரத்தில் அவனின் மனைவிக்கான ஆசைகள் என்று ஒதுக்கிய இடத்தில் வெளிச்சம் படரத் தொடங்கியது
போல் இருந்தது.
பெரிதானது கிடையாது
அவனின் மனைவிக்கான ஆசைகள். தனக்கு வரவிருக்கும் மனைவி தன்னுடனும், தன் குடும்பத்துடன்
ஒன்றிப் போக வேண்டும் என்பதே அவனின் அதிகபட்ச ஆசைகள்.
அந்த வீட்டு மருமகளாக
ஆர்த்தி வளைய வந்த நாள்களைக் கண்டவன், "ரொம்ப அழகா பொருந்தி இருந்தாங்க தியா,
என்னோட குடும்பத்துல. பார்க்க பார்க்க அவ்ளோ ஆசையா இருந்தது. வெண்மா கூட ஒரு நல்ல ஃப்ரெண்டா
கலகலத்து, அப்பா சாப்பாட்டு விசயத்துல மிரட்டி, அம்மாவோட மிரட்டலுக்கு பயந்துன்னு பக்காவா
எங்க வீட்டுக்கு ஏத்த மருமகள்ன்னு பேர் வாங்கிட்டாங்க. நீயும் அது மாதிரி என்னோட வீட்டுல
ஒரு ஆளா பொருந்திட்டா போதும் தியா. என்னோட லைஃப் முழுக்க சந்தோஷமா இருக்கும்."
என்று தன் எதிர்பார்ப்பைத் தியாவிடம் கூறியதற்கு, ‘அவளைப் போல் நானா!’ என உள்ளுக்குள்
உண்டான கடுப்பை மறைத்து,
"என்னை யாரு கூடவும்
கம்பேர் பண்ணாத இந்தர். நான் உங்க கூட பொருந்தி இருந்தா மட்டும் போதும்." என்று
கொஞ்சும் குரலில் மறுப்பைத் தந்தாள் அவள்.
"கல்யாணம் பண்ணிக்கிறது
நீயும் நானும் வாழத்தான். அவங்க கூட அனுசரிச்சி நான் என்ன சாதிக்கப் போறேன்... எனக்கு
நீ மட்டும் போதும்." என்றவள் அவனுக்கு நல்ல காதலியாக இருந்தாள் தான்.
ஆனால்... மனைவி?
காதலிக்கும் போது அவன்(ள்)
மட்டும் தான் தெரியும். ஆனால் அதைத் தாண்டிய ஒன்று தான் அந்தக் காதலை வெற்றிக்கு இழுத்துச்
சொல்லும்.
அவளின் பதிலிலேயே தெரிந்து
விட்டது அவள் தன் குடும்பத்துடன் ஒன்ற மாட்டாள் என்று. ஆனாலும் தனக்காக அவர்களை ஏற்றுக்
கொண்டு, முடிந்தவரை இணக்கமாக இருப்பாள் என்று நினைத்தவனுக்கு தியாவின் வெளிநாட்டு அழைப்பு,
அப்படி இல்லை என்று பதில் சொல்லியது.
அவன் திடீரென வானத்தில்
இருந்து இறங்கி வந்த தேவதூதனா! யாருமற்று உலாவ.
எங்கு எவ்விடம் சென்றாலும்
அவன் நெல்லையப்பனின் மகன். அமுதாவின் புதல்வன். குழலியின் அண்ணன். இத்தனை பொறுப்புகள்
இருக்கும் போது. அனைத்தையும் உதறிவிட்டு தன் மனைவி... இல்லை காதலி மட்டும் போதும்
என்று சுயநலமாய் முடிவெடுக்க முடியவில்லை அவனால்.
நாளை காதலியே மனைவியாகலாம்.
வாய்ப்புகள் இருந்தது. காதலியாக இருக்கும் போதே இத்தனை தூரம் தன்னை ஆட்டுவிப்பவள் மனைவியானப்பின்
என்னென்ன செய்வாள் என்ற எண்ணம் வேறு வலுப்பெற்றது.
மனைவி இன்றியமையாதவள்
தான். அவளுக்குத் தான் ஒரு கணவன் முதலுரிமை கொடுக்க வேண்டும்.
ஆனால் மனைவியாக மாறும்
முன்னரே கொடுக்க முடியுமா? அத்தோடு அந்த உரிமையை அவனாக கொடுக்க வேண்டுமே தவிர, கொடு
என்று பிடுங்கக் கூடாது என்று நினைத்தவன் தியாவிற்கு மறுப்பை உறுதியாக்கி ஒரு குறுந்தகவலைத்
தட்டி விட்டு விட்டான்.
அவளின் காதலை ஏற்ற
நொடியில் இருந்து அவளைத் தன் உடமையாக நினைத்தவனுக்கு வேதனை கூடியது. உள்ளம் ஆர்த்தியின்
அருகாமையில் அமைதியடைவதைப் போல் ஒரு பிரம்மை. இல்லை உண்மை.
தன் தலையில் இருந்த
நீரைத் துண்டால் துடைத்தபடி, “இப்படியே இருந்தா காலைல கண்ணு பூத்து நிக்கும். தண்ணியா
வடியும். சளிப் பிடிக்கும். காய்ச்சல் வரும்.” என வரவிருக்கும் பிணிகளை அடுக்கியபடி
அழுத்தி துடைத்தெடுத்தாள் கேசத்தை.
"காபி வேண்டாம்...
நான் சுக்கு காபி போட்டு எடுத்திட்டு வர்றேன்." என்று மீண்டும் சமையலறைக்குள்
சென்றாள்.
ஆர்த்தி காட்டிய அன்பு,
தர்மாவை அவளிடம் அடிமையாக இருக்க சாசனம் எழுதித்
தர வைத்தது.
திகட்டத் திகட்ட தன்
அன்பைப் பொழிந்து தியாவை மறக்க வைத்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.
தன் தலையை எக்கி நின்று
துடைத்தவளின் மார்பில் குதித்தாடிய தங்கத் தாலி, ‘உனக்கு அவளிடம் எல்லா உரிமையும் உள்ளது.
நீ அவளின் கணவன்’ என்றது.
மனம், உணர்வுகளின்
பிடிக்குள் உலைகலனாகிப் போக, அதைக் குளிரச் செய்யும் முயற்சியில் இறங்கியவன் தன் பக்கத்தில்
அமர்ந்த ஆர்த்தியின் நிர்மலமான முகத்தைப் பார்த்தான்.
மழையில் போட்ட ஆட்டத்தால்
முகம் திலகம் இல்லாது வெறுமையாய் இருந்தது. அது அவனுக்குள் சிறு கோபத்தைத் தர,
"நெத்தில பொட்டில்லைங்க."
என்றான் ஒரு வித காட்டமானக் குரலில்.
"இல்லையா..!"
என நெற்றியில் கை வைத்துப் பார்த்தவள், "கீழ விழுந்திருக்கும் போல... இருங்க...
இதோ வச்சிட்டு வர்றேன்." என்று விட்டு எழ, அவனும் அவள் பின்னோடேயே சென்றான்.
அங்கு இடைக்கு மேல்
தெரியும் வண்ணம் பொருத்தப்பட்டிருந்த இரண்டடி நீளக் கண்ணாடியில் ஒட்டி வைத்திருந்த
பொட்டை எடுத்தவளிடம், "இனி பொட்டில்லாம இருக்காதீங்க." என்று உத்தரவிட்டான்.
பின் அவளைத் தன் பக்கம் திருப்பி, அவளின் கையில் இருந்த பொட்டை வாங்கி, அவளைத் தீண்டாது,
அவளின் பிறையகன்ற நெற்றியில் வைத்தான்.
சரியாக இரு புருவங்களுக்கு
மத்தியில் அரக்கு நிறத்தில் வட்ட வடிவில், மில்லிமீட்டர் அளவு கொண்ட பொட்டு, பெண்ணவளின்
வசீகரத்தை முழுமையடையச் செய்வது போல் இருந்தது அவனுக்கும்.
"தேங்க்ஸ்...
உங்களுக்கும் பொட்டில்லாம இருந்தா பிடிக்காதா? எங்கப்பாக்கும் நான் பொட்டில்லாம இருந்தா
பிடிக்காது. திட்டுவாரு. அதுனால எப்பவும் நெத்தில இருக்குற மாதிரி பார்த்துப்பேன்.
இன்னைக்கு மழைல போட்ட ஆட்டத்தால விழுந்திடுச்சி போல. இனி கவனமா பார்த்துக்கிறேன்."
என்று வளவளத்தபடி, தர்மா வைத்தப் பொட்டு சரியான இடத்தில் தான் உள்ளதா என்று கண்ணாடியில்
முகம் பார்த்து சொல்ல, இருவரின் பிம்பத்தைக் கண்டவனுக்குள் மென் புன்னகை விரிந்தது.
அது ஞாயிறு என்பதால்
மாலை பொழுதில் அவளுடன் கடற்கரைக்குச் சென்றான்.
எப்பொழுதும் ஆர்த்தியின்
வால் என்று சொல்லும் ஹர்ஷிதாவை இன்று பிடித்துக் கொண்டாள் சுலேகா.
"அவங்களே புருஷன்
பொண்டாட்டியா பைக்ல போறாங்க. நீ ஏன் டி தொத்து வால் கணக்கா தொத்திக்கிட்டு." என்று
இருவரின் உடன் செல்கிறேன் என்ற மகளை இழுத்துக் கொண்டாள்.
எப்பொழுதும் சுலேகாவின்
'புருஷன் பொண்டாட்டி...' என்ற வார்த்தையைக் கடந்துச் செல்பவனால் இன்று ரசிக்க முடியாது
இருக்க முடியவில்லை.
தன் மனைவி இவள் என்ற
பெருமிதம் உண்டாக, திரும்பி ஆர்த்தியைப் பார்த்தான்.
"பாப்பாவையும்
கூடக் கூட்டிட்டுப் போலாமே. ப்ளீஸ்..." என்று ஆர்த்தி கெஞ்சினாள்.
இதற்கு முன் என்றால்
சரி என்று சிறுமியையும் அழைத்துச் சென்றிருப்பான். ஆனால் இம்முறை ஆர்த்தியுடன் பைக்கில்
தனியாகச் செல்ல வேண்டும் என்றது மனம். ஆதலால் மாட்டேன் என்று அவளை மட்டும் அழைத்துச்
சென்றான்.
தன் பேச்சைக் கேட்காததால்
சிறு கோபத்துடன் அவனின் பின் ஏறி அமர்ந்தவள் எதுவும் பேசாது வர,
"நீங்களும் தான்
எம்பேச்சை எப்பவுமே கேட்க மாட்டேங்கிறீங்க. நானும் இதே மாதிரி பேசாம இருக்கவா..?"
என்க,
"நான் எப்ப உங்க
பேச்சைக் கேட்காம இருந்தேன்?" என்று ரோசமாக சொல்லியவளை, பைக்கை ஓட்டியவாறே கழுத்தை
வளைத்து திரும்பிப் பார்த்தான்.
"அப்ப நாளைக்கே
உங்க சர்டிஃபிகேட் என் கைல இருக்கும். சரியா?" என்க, அவள் இதழ் கடித்து,
"பைக்கை ரோட்டைப்
பார்த்து ஓட்டணும். பேசிட்டே ஓட்டுனா விழுந்திடுவோம். அதுவும் நீங்க ஹெல்மெட் போட்டுக்கிட்டே
பேசுறது எனக்கு காதுல விழல." என்றதும், தலைக்கவசத்தைக் கழட்டி வைக்கப் போக, அதைத்
தடுத்தவள், "முன்னாடி பார்த்து போங்க." என்று அதட்டவும் குதுகலமாக ஓட்டினான்.
பல குடும்பங்கள் விடுமுறையைக்
கழிக்க கடற்கரையில் கூடி இருந்தனர். அவர்களுடன் இவர்களும் ஜோடியாக இருக்க வேண்டி, அவளின்
கரம் பற்றி அழைத்துச் சென்றான். இருவரும் காலார கடல் நீரில் நடந்தது எல்லாம் தர்மாவிற்கு
சொர்க்கத்தைக் கண்ணில் காட்டியது போல் இருந்தது.
நேரங்களை இப்படியும்
அணு அணுவாக பிரித்து ரசித்து அனுபவிக்க முடியுமா என்றிருந்தது அவனுக்கு. போட்டிங் சென்று
வந்தனர். கடலில் பிடிபட்ட மீன்களை தரம் பிரிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
எத்தனை மீன்கள் என்று சிறு வியப்புடன் பார்த்தவளின் பார்வை, ஒரு சிறிய படகின் ஓரத்தில்
சிறு நாய்க்குட்டி ஒன்று அடிப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டது.
வேகமாக அதைத் தூக்கிக்
கொண்டவள், நாய்க்குட்டியின் ரத்தம் கண்டு, “கால்ல அடிப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்
மாமா. இதை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாமா…” என்று சொல்லும் போதே அவளுக்கு கண்ணீல்
நீர் தேங்கி நின்றது.
அவளுக்கு மகேந்திரனின்
நினைவு தான் வந்தது. அவனைக் கடைசியாக ரத்த வெள்ளத்தில் நேரில் கண்டதைப் போல் இருக்க,
நாய்க்குட்டியை காப்பாற்றி விடச் சொல்லி துடித்தது இதயம். தர்மாவிடம் இறைஞ்சத் தொடங்கினாள்.
அழைத்துச் சென்றான்.
குட்டி உடல் நலன் தேறியது. இரு நாள்கள் அந்த நாய்க்குட்டியைக் கவனிப்பதிலேயே அவள்
குறியாய் இருக்க, சிறு பொறாமை வந்தது தர்மாவிற்கு.
படுக்கையில் அவளின்
அருகில் படுத்துறங்கும் போதும், உதடு சுருக்கி மூக்கோடு மூக்கு உரசி அதைக் கொஞ்சும்
போதும், அவனின் உணர்வுகள் அனாமத்தாக உருளத் தொடங்கின. ஆனாலும் அவள் சந்தோஷமாக இருக்கிறாள்
என்பது அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
அன்று மாலை வெயில்
மங்கிக் கொண்டிருந்த நேரம், நிலவன் அழைத்ததன் பேரில் கேபினுக்குள் சென்றான் தர்மா.
அங்கு நிலவன் லூர்துவுடன்
ஃபோனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாக நிற்க, அவனிடம் ஃபோனை நீட்டிப் பேசச்
சொன்னான் நிலவன். குழம்பியப் பார்வையுடன் வாங்கி காதில் வைத்தான்.
"தர்மா, ஆர்த்திக்கு
என்னாச்சுன்னு தெரியல. பாக்கியம் ஆன்ட்டிக்கு சாப்பாடு கொடுத்திட்டு வர்றேன்னு ரெண்டு
மணி போல வீட்டுக்குப் போனவ... திரும்பி வரல. நான் கால் பண்ணேன். ஃபோனை என்னோட வீட்டுல
வைச்சிட்டு போய்ட்டா போல. அது இங்கயே அடிச்சிட்டு இருந்தது. வீட்டுக்குப் போய் பார்த்தேன்.
பூட்டி இருந்தது. கதவை தட்டி பார்த்தேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்ல. ரொம்ப நேரமா வாசல்ல
நிக்கிறோம் தர்மா. எனக்குப் பயமா இருக்கு. நீ உடனே வாயேன்." என்று மேரி படப்படப்போடு
சொல்ல, அது அவனையும் தொற்றிக் கொண்டது.
"நீ போ தர்மா.
நான் சொல்லிக்கிறேன்." என்று உயர் அதிகாரியாக நிலவன் சொல்ல, தர்மா அடித்து பிடித்து
வீடு வந்து சேர்ந்தான்.
அவன் குடியிருப்பு
வாயிலில் பாக்கியமும் மேரியும் கலக்கத்துடன் நின்றுக் கொண்டிருந்தனர்.
தன்னுடன் உணவருந்தி
விட்டு வீட்டிற்குச் சென்றவள் தான். பின் திறக்கவே இல்லை என்று பாக்கியம் புலம்ப, தர்மாவிற்குள்
பயப்பந்து உண்டானது.
காரணம் அந்த நாய்க்குட்டி.
மருத்துவமனைக்குச்
சென்றதன் காரணமாகவும் மருந்தின் வீரியத்தாலும் சுறுசுறுப்பாக இருந்த அது, இன்று காலையில்
சோர்வுடன் நொண்டியது.
“இது ஏன் மறுபடியும்
சோர்ந்து போய் படுத்துக்குது மாமா?" என்று குட்டியைத் தூக்கி பால் புகட்டியபடி
கவலை நிறைந்த குரலுடன் தர்மாவிடம் கேட்க,
"ஈவ்னிங் ஹாஸ்பிடல்
கூட்டிட்டு போய் கேட்போம். கவலைப்படாதீங்க. சரியாகிடும். சீக்கிரமா வர ட்ரை பண்றேன்."
என்றவனுக்கு அந்தக் குட்டி தேறும் என்ற நம்பிக்கை இல்லை. கண்களின் ஒளி மங்கிக் கொண்டே
போனது அதற்கு.
நாய்க்குட்டிக்கு என்ன
ஆனாலும் தர்மாவிற்கு கண்டிப்பாக கவலை கிடையாது. ஆனால் அதை மகேந்திரனுடன் ஒப்பிட்டு
பார்த்து காப்பாற்றத் துடித்தவளின் கண்ணீரை அவனால் தாங்கிக் கொள்ள முடியாதே.
"ஆர்த்தி... ஆர்த்தி
என்ன பண்றீங்க? கதவைத் திறங்க." என்று உரத்தக் குரலிட்டுக் கதவைத் தட்டினான்.
அவனுக்கு அருகில் இருவரும் ஆர்த்தியின் நலன் அறிய வேண்டி பரிதவிப்புடன் நின்றிருந்தனர்.
கதவு திறக்கப்படாததால்
தன்னிடம் உள்ள சாவியால் திறக்க, நிசப்தம் நிலவியது வீட்டில்.
அவன் எதிர்பார்த்தது
போல் நாய்க்குட்டி இறந்து போயிருந்தது.
கூடத்தில் அதன் உடல்
கிடக்க, ஆர்த்தியைக் காணவில்லை.
கழிவறையின் மூளையில்
விட்டத்தை வெறித்தபடி முடங்கிக் கிடந்தாள் பெண். அவளின் கன்றிச் சிவந்த கண்களும் வீங்கியிருந்த
முகமும் அவள் அழுதிருக்கிறாள் என்று சொல்ல, அவளின் கன்னம் தட்டி சுயத்தை மீட்க முயன்றாள்
லூர்து.
ஆனால் ஆர்த்தி அசையவில்லை.
தர்மாவிற்குள் இன்னும் இன்னும் பயம் கூடிக் கொண்டே சென்றது. ஏனெனில் மகேந்திரனின் இறுதி
காரியத்தின் போதும் அவள் கோடிட்ட கண்ணீருடன் இலக்கில்லாது வெறித்தபடி தான் அமர்ந்திருந்தாள்.
கதறவில்லை. உள்ளக் குமுறலைச் சொல்லி கதறாததால் சித்தம் இறுகி பித்து நிலைக்குச் சென்றிருந்தாள்.
எதிலிருந்து மீண்டு
வரவேண்டும் என்று அவளை சென்னை அழைத்து வந்தானோ அந்தப் புள்ளிக்கே அவள் சென்று அமர்ந்து
விட்டதைப் போல் இருந்தது.
துப்புரவாளர்களுக்குத்
தகவல் சொல்ல, இறந்த நாய்க்குட்டியின் உடல் பாதுகாப்பாக அகற்றப்பட்டு வீடு சுத்தம் செய்யப்பட்டது.
ஆனால் ஆர்த்தியை அசைக்கத்
தான் முடியவில்லை. உண்டாளா உறங்கினாளா என்று உணராது கிடந்தவளைப் பார்க்க பார்க்க மனம்
கசங்கியது.
அவள் கதற வேண்டும்.
உள்ளுக்குள் அடக்கி வைத்திருக்கும் மொத்த அழுத்தத்தையும் கொட்டித் தீர்க்க வேண்டும்.
அவளை வாய்த் திறக்க வைக்க வேண்டும் என்ற முடிவுடன் அவளின் அருகில் அமர்ந்தவன், அவளின்
தளிர் விரல்களைப் பிடித்துக் கொண்டு, "அது நாய்க்குட்டிங்க... அதோட ஆயுள் அவ்வளவு
நான். அதுக்காக கவலைப்பட்டு கண்ணீர் சிந்திட்டு உட்கார்ந்திருந்தா… அது திரும்பி வந்திடாது.”
என்றவன் யாரைக் குறிப்பிடுகறான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
“உங்களுக்கு வேணும்னா
இப்பவே நாம அது மாதிரி ஒன்ன வாங்கி வளர்க்கலாம்." என்று விரலை அழுத்த, அவள் இவனைக்
கண்டு பயந்து ஒதுங்கினாள்.
மனத்தில் சுள் என்று
வலி.
"வராதீங்க...
என் பக்கத்துல வராதீங்க... நான் உங்களைக் கொன்னுடுவேன். வராதீங்க என் பக்கத்துல..."
என்று அலறியவளைக் கண்டு பதறியவன், அவளைப் பிடித்திழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
"உங்க பக்கத்துல
நான் வராம வேற யாருங்க வருவா? நம்ம உறவு அப்படியானது. அழாதீங்க ப்ளீஸ்." என்றவனின்
அணைப்பில் இருக்க பிடிக்காது திமிறியவள்,
"இல்ல... கொன்னுடுவேன்...
என்னோட அம்மாவைக் கொன்ன மாதிரி... மகேந்திரன் மாமாவைக் கொன்ன மாதிரி... என்னோட வயித்துல
இருந்த குட்டிப் பாப்பாவைக் கொன்ன மாதிரி... இன்னைக்கு நாய்க்குட்டியக் கொன்ன மாதிரி...
உங்களையும் நான் ஒரு நாள் கொன்னுடுவேன். நானே உங்களைக் கொன்னுடுவேன். கூடாது... அது
நடக்கக் கூடாது... நான் இங்க இருந்தாத் தானே அதெல்லாம் நடக்கும். வேண்டாம். நான் ஊருக்குப்
போறேன்... ஐயோ அங்க போனாலும் என்னோட தரித்திரம் அவங்களையும் ஒட்டிக்குமே. வேண்டாம்...
யாருக்கும் பாரமா இருக்க வேண்டாம்... நான் செத்துப் போறேன்... நான் செத்துட்டா எந்தப்
பிரச்சனையும் இருக்காது. எல்லாரும் நல்லா இருப்பாங்க..." என அவனின் மார்பில் கரம்
வைத்து தள்ளிவிட்டு, பைத்தியம் போல் உளறியவளின் கன்னங்கள் இரண்டையும் பற்றியவன்,
"என்னைப் பாருங்க
ஆர்த்தி... ஆர்த்தி..." என உரக்க கத்தி, தன் முகத்தைப் பார்க்க வைத்தான். அவளின்
விழிகளைத் தன் விழியோடு கலக்க வைத்தான். முதலில் பார்க்க மறுத்து அலைப்புற்ற கண்கள்,
அவனின் பிடிவாதத்தால் அவனின் கருமணிகளில் நிலை கொண்டன.
"ஒரு விஷயம் நல்லா
தெரிஞ்சுக்கோங்க நீங்க யாரையும் கொலை பண்ணல. உங்களால கொலை பண்ண முடியாது. அவங்க ஆயுள்
அவ்ளோ தான். அதுனால தான் இறந்து போனாங்களே தவிர, உங்களாலயோ! உங்க ராசியோ காரணம் இல்ல...
நீங்க செத்துப் போறதுனால எந்தப் பிரச்சனையும் முடிஞ்சிடாது ஆர்த்தி. அல்பாயுசுல போய்ட்டான்னு
அப்பவும் உங்கள ராசியில்லாதவனு தான் பேசும். நல்லா வாழ்ந்தாலும் ராசியப் பத்தி பேசும்...
வாழலைனாலும் பேசும். முட்டாள் தான் நடக்குற எல்லாத்துக்கும் காரணம் கற்பித்து அதை ராசிமேல
தூக்கிப் போடுவான்.
உண்மைல ராசின்னு ஒன்னு
இல்லவே இல்லை. ஒருத்தரோட ராசி நம்மளச் சுத்தி நடக்குற எல்லாத்துக்கும், நல்ல நேரமோ,
கெட்ட நேரமோ காரணம் இல்லை." என்று விளக்க முயல, கன்னம் பற்றியிருந்தவனின் கரத்தின்
மேல் தன் சில்லிட்டிருந்த விரல்களை வைத்தவள்,
"வேண்டாம் மாமா...
எங்கிட்ட இப்படி அன்பா பேசாதீங்க. இதுக்கு முன்னாடி எங்கிட்ட அன்பா இருந்த எல்லாரும்
என்னைய விட்டுட்டு போய்ட்டாங்க. நீங்களும்..." என்று சிறுமி போல் இதழ் வளைத்துச்
சொல்லி அழ, அவளின் அதரங்களை விரல்களால் மூடியவன்,
"மாட்டேன்...
உங்களை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். நான் உங்கப் பக்கத்துல இருக்கற வரை நான்
நல்லா இருப்பேன். நான் வாழணும்னு நீங்க நினைச்சீங்கன்னா என் கூடவே இருங்க." என்றவன்
அவளின் கன்னத்தில் கரம் பதித்து, பெண்ணவளின் மதி முகத்தைத் தன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டான். அவனின் இதயம் சொல்லியது அவளின் கண்ணீர் அவனுக்கு கொடுத்திருக்கும் வலியை.
"எந்த நேரத்துல
வந்து பிறந்து தொலைச்சியோ.... பிறக்கும் போதே ஆத்தாளை முழுங்கிட்ட... வளருறப்ப அப்பங்காரன்
தொழிலை தூக்கி சாப்பிட்டுட்ட... கட்டுன எடத்துலயாவது அடக்கமா இருந்தீயா... உம்மாமியா
கூடச் சேர்ந்திட்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி புருஷனைத் தூக்கிக் குடுத்திட்ட... பிள்ள...
அது உன் வயித்துல இருக்குறதை பாவம்னு நினைச்சி காணாமலேயே போயிடுச்சி. இப்படி ஒன்னத்துக்கும்
உதவாம *** அதிஷ்டக் கட்டையாப் பிறந்து எங்க எல்லாரையும் சீரழிக்கிறதை விட, சந்தோஷமா
செத்துப் போக வேண்டியது தானே டி..." என்ற மங்கையின் குரல் நினைவு வந்தது.
குழந்தை கலைந்து விட்டது
என்ற சேதி அறிந்து அவர் கூறிய ஆறுதல் வார்த்தைகள் தான் அது. அது ரணமாய் இப்பொழுது வரை
உள்ளுக்குள் இருக்க, அதற்கு மருந்திட்டான் தர்மேந்திரன்.
அவனின் பேச்சில் உள்ள
முரண்பாடுகள் அவளின் காதிலேயே ரீங்காரமிட, மீண்டும் கலங்கிய முகத்துடன் தலை தூக்கினாள்.
ஆனால் அவனோ, நெற்றி உச்சியில் இதழ் பதித்தெடுத்து, "வேண்டாம்ங்க... இப்ப எதையும் யோசிக்க வேண்டாம். சாப்பிட வாங்க..." என்றவன் அவளைத் தன் கைவளைவிலேயே வைத்திருந்தான்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..